ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
திருமுருகன் மீதே நிறைய பாடல்களைப் பாடியிருக்கும் கே.பி. சுந்தராம்பாள் அம்மா திருமலைத் தெய்வம் என்ற இந்த திரைப்படத்தில் திருமால் மீதான அருமையான இப்பாடலைப் பாடியிருக்கிறார். திருமுருகன் என்றாலே நினைவில் முன்னிற்கும் நம் அருமை நண்பர் திருமுருகன் அன்பர் முருகனருள் அன்பர்களில் முதல்வர் இராகவப் பெருமாள் இப்பாடலை நின்குழலில் வலையேற்றியிருக்கிறார். இன்று காலையில் தான் அதனைக் கண்டேன். உடனே கண்ணன் அன்பர்கள் இப்பாடலைக் கேட்டு இன்புற கண்ணன் பாடலில் இடுகிறேன்.
ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
ஏழு ஏழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழு)
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழு)
கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது!
(ஏழு)
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன்பிறப்பானான்!
தான் சுவைத்தப் பழங்களையே தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமிலை தலைவனே எமை ஆதரி!
(ஏழு)
திரைப்படம்: திருமலைத் தெய்வம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: முருகனருள் கே.பி. சுந்தராம்பாள்
வலையேற்றியவர்: முருகனருள் கோ. இராகவன்
23 comments :
சிறு வயதில் மிகவும் இரசித்து மனப்பாடம் பண்ணீய பாடல் அதிலும்
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே உனை ஆதரி என்ற வரிகள் அடியேனுக்கு மிகவும் பிடித்த வரிகள்.
நன்றி குமரன்
நன்றி கைலாஷி ஐயா.
சூப்பரோ சூப்பர்!
எங்க ராகவப் பெருமாள் இது போல இன்னும் பல கண்ணன் பாட்டுக்களைப் பிரத்யேகமா ஏத்திக் கொடுத்திருக்காரு நின்குழல்-ல!
நேற்று முன் தினம் தொலைபேசிய போது கூட, நடு இரவில், அவர் அறையில் "நாராயணா ஹரி நாராயணா"-ன்னு பாட்டு ஒலிச்சுது! ஆகா! அடியேன் கேட்டு மயங்கியே விழுந்தேன்! :)
//வலையேற்றியவர்: முருகனருள் கோ. இராகவன்//
கண்ணன் பாட்டில் அவர் பேரை இப்படித் தான் போடணும்-ன்னு உத்தரவு-ல்ல?
இந்தப் பதிவை அவர் இட்ட பதிவாகவே எடுத்துக் கொள்கிறேன்! அணுகில் அணுகும்!
அகலிலும் அணுகும்! :))
கேபி சுந்தராம்பாள் அம்மா எம்பெருமான் கண்ணன் மேல் இன்னும் பல பாடல்கள் பாடி இருக்காக! அதே திருமலை தென்குமரி படத்தில் நாராயணியம்மாவா நடிப்பாங்க! அதுல இன்னொரு பாட்டு!
"நாளெல்லாம் உந்தன் திருநாளே - மலை
நாடாளும் ஏழுமலைப் பெருமாளே"-ன்னு பாட்டு!
எலே ராகவப் பெருமாளே! இதையும் வலையேத்து லே! :)
// திருமுருகன் என்றாலே நினைவில் முன்னிற்கும் நம் அருமை நண்பர் திருமுருகன் அன்பர் முருகனருள் அன்பர்களில் முதல்வர் இராகவப் பெருமாள் இப்பாடலை நின்குழலில் வலையேற்றியிருக்கிறார். இன்று காலையில் தான் அதனைக் கண்டேன். //
இன்னைக்குத்தான் இதை வலையேத்துனேன். அன்னைக்கே கண்டுபிடிச்சி பதிவும் போட்டுட்டீங்களே. ரொம்பவே வேகம். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
நேற்று முன் தினம் தொலைபேசிய போது கூட, நடு இரவில், அவர் அறையில் "நாராயணா ஹரி நாராயணா"-ன்னு பாட்டு ஒலிச்சுது! ஆகா! அடியேன் கேட்டு மயங்கியே விழுந்தேன்! :) //
அடடே மயங்கி விழுந்துட்டீங்களா... அப்ப இனிமே கேக்காது. :) மறுபடியும் மயங்கி விழுந்துட்டீங்கன்னா!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//வலையேற்றியவர்: முருகனருள் கோ. இராகவன்//
கண்ணன் பாட்டில் அவர் பேரை இப்படித் தான் போடணும்-ன்னு உத்தரவு-ல்ல?
இந்தப் பதிவை அவர் இட்ட பதிவாகவே எடுத்துக் கொள்கிறேன்! அணுகில் அணுகும்!
அகலிலும் அணுகும்! :)) //
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல் வேந்தர் சேர்ந்தொழுகுவார் :)
// Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கேபி சுந்தராம்பாள் அம்மா எம்பெருமான் கண்ணன் மேல் இன்னும் பல பாடல்கள் பாடி இருக்காக! அதே திருமலை தென்குமரி படத்தில் நாராயணியம்மாவா நடிப்பாங்க! அதுல இன்னொரு பாட்டு!
"நாளெல்லாம் உந்தன் திருநாளே - மலை
நாடாளும் ஏழுமலைப் பெருமாளே"-ன்னு பாட்டு! //
திருமலைத் தென்குமரி இல்ல... திருமலைத் தெய்வம்.
நாளெல்லாம் உந்தன் திருநாளேயோட மூலப் பாட்டு நாளெல்லாம் பூசம் திருநாளே. அதை சினிமாவுக்காக குன்னக்குடி உந்தன் திருநாளேன்னு போட்டாரு.
// எலே ராகவப் பெருமாளே! இதையும் வலையேத்து லே! :)//
என் பேர் ராகவன்.
why your so called Ezumalai is not helping any of them innocent civilions in srilanka ?
what the heck are you writing your baja govingam baja govindam bajanai ?
i am sick about your mindset.
let people die, but i have my curd rice and bajan.
is that your god teaching you ?
sorry forgot my name. i am suda.
why there is no answer from you?
tell me now. what your elumalai did for us?
so, you dont have மனக்கவலை?
//G.Ragavan said...
அடடே மயங்கி விழுந்துட்டீங்களா... அப்ப இனிமே கேக்காது. :) மறுபடியும் மயங்கி விழுந்துட்டீங்கன்னா!//
அடடே! நான் விழக்கூடாது-ன்னு அம்புட்டு அக்கறையா ராகவப் பெருமாளுக்கு? :)
விழுந்தேன்-ன்னு தான் சொன்னேன்!
பழம் நழுவிப் பாலில் விழுந்"தேன்"!
பலா நழுவித் தேனில் விழுந்"தேன்"!
அதுனால உங்க அறையில் இனிமே கேட்கணும்! :)
//G.Ragavan said...
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல் வேந்தர் சேர்ந்தொழுகுவார் :)//
அகலாது அணுகாது தீக்காய்வார் = அது இகல் வேந்தரைச் சேர்ந்தொழுகும் போது தான்!
இது இம்மைக்கும் மறுமைக்கும் இனியதான இளங் காதல் கண்ணனைச் சேர்ந்தொழுகும் கண்ணன் பாட்டு!
அதனால் இங்கு அணுகில் அணுகும்!
அகலிலும் அணுகும்! :))
//G.Ragavan said...
திருமலைத் தென்குமரி இல்ல... திருமலைத் தெய்வம்.//
மன்னிச்சிக்கோங்க! ஒரு வேகத்துல வந்துருச்சி! திருமலைத் தெய்வம் தான்! குமரனும் சொல்லி இருக்காரே!
//நாளெல்லாம் உந்தன் திருநாளேயோட மூலப் பாட்டு நாளெல்லாம் பூசம் திருநாளே. அதை சினிமாவுக்காக குன்னக்குடி உந்தன் திருநாளேன்னு போட்டாரு//
ஆனா அது மறைஞ்சி போயி, இது ஹிட் ஆயிரிச்சி பாத்தீங்களா? :)
//
எலே ராகவப் பெருமாளே! இதையும் வலையேத்து லே! :)//
என் பேர் ராகவன்
//
அதைக் குமரன் கிட்டப் போயி சொல்லுங்க! அவர் பதிவில் இப்படித் தான் போட்டிருக்காரு! நாங்க பதிவில் இருக்கிறபடித் தான் கூப்புடுவோம்! :)
// Anonymous said...
why your so called Ezumalai is not helping any of them innocent civilions in srilanka ?
what the heck are you writing your baja govingam baja govindam bajanai ?
i am sick about your mindset.
let people die, but i have my curd rice and bajan.
is that your god teaching you ?//
சுதா,
வணக்கம்-ங்க.
பதிவாசிரியர் குமரன் வந்து உங்களுக்குப் பதில் சொல்லும் முன்னர், உங்கள் ஆதங்கத்தில் கலந்து கொண்டு நானும் சிலது சொல்ல அனுமதி தாருங்கள்!
மாறாத சோகத்தில் இருக்கும் போது, கண்ணில் எதிர்படுபவரை எல்லாம், "நீங்க எங்களுக்காக என்ன செஞ்சீங்க? அந்தக் கடவுள் தான் என்ன செஞ்சான்?" என்று கேட்பது உளக் குமுறல் தான்! மிகவும் நியாயம் தான்!
இத்தனைக்கும் ஈழத்திலேயே இருக்கிறான் கதிர்காமம் முருகப் பெருமான்! அவன் என்ன சாதித்துக் கிழித்தான்-ன்னு கேட்கத் தோனும் தான்! இல்லை-ன்னு சொல்லலை!
ஆனால் மற்ற சக நண்பர்களும் உங்களைப் போலவே ஈழம் குறித்த கவலையில் தான் இருக்கிறார்கள்! நீங்கள் கேள்வி கேட்ட குமரன் அவர்களின் பதிவு முகப்புக்குச் சென்று பாருங்கள்! மேல் பட்டையில் ஈழம் பற்றி என்ன எழுதி இருக்கிறார் என்று பாருங்கள்!
http://koodal1.blogspot.com
இல்லையா, அடியேனின் இந்தப் பதிவுகளைப் பாருங்கள்!
http://madhavipanthal.blogspot.com/2009/04/blog-post_24.html
http://sivanpaattu.blogspot.com/2008/10/blog-post.html
ஒத்த சிந்தனைகள் கொண்ட ஈழத் தமிழ் உணர்வாளர்களை, சோகத்தின் மேலீட்டால், தெரிந்தோ தெரியாமலோ, வார்த்தையால் குத்திக் கிழிக்கக் கூடாது என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!
இறைத் துதி செய்வதால், ஏதோ பொழுது போக்கு பஜனை செய்கிறார்கள் என்று அர்த்தம் ஆகி விடாது! இப்படி எதிர்க் கேள்வி கேட்பதனாலேயே ஈழத் துயரமும் ஓய்ந்து விடாது! அதற்குப் பதில் நான் காட்டியுள்ள சில பதிவுகளில்...No Fire Zone-இல் அகப்பட்டுள்ள தமிழர்களை எப்படியெல்லாம் விடுவிக்க முடியும் என்று நீங்களும், நானும், எல்லோரும், ஆளுக்கொரு யோசனை சொல்லலாமே! ஏதாச்சும் ஒன்று திருவினை ஆக்கும் அல்லவா? தங்கள் புரிதலை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!
------------------------------
//why your so called Ezumalai is not helping any of them innocent civilions in srilanka ?//
நீங்களும் நானும் வாயால் தான் பேசிக் கொண்டு இருக்கிறோம்! ஆனால் நமக்கு முன்னரே இறைவன் ஈழத்தில் இருந்து உதவி செய்து கொண்டு தான் இருக்கின்றான்!
அணைச் சுவர் உடைபட்டு அத்தனை பேர் உயிராவது பிழைக்க முடிந்ததே! யாரால்?
ஐ.நா, இந்தியா, மற்ற நாடுகள், அரசியல்வாதிகள் கேட்டுக் கொண்டதால் அணைச்சுவர் உடைபட்டதா?
இல்லை பாதக மனம் கொண்ட இராஜபக்ஷே ரொம்ப தான் இரக்கப்பட்டு, மக்களைக் காப்பாத்தணுமே-ன்னு உடைச்சாரா?
அவர் உடைச்ச நோக்கம், சல்லடை போட்டு தேட...
ஆனால் அதையே மாற்றிக் காட்டி, அதை தப்பும் வழியாகச் செய்வித்தது இறையருள் அல்லவா? இத்தனை பேர் தப்புவார்கள் என்று அந்த இராஜபக்ஷேவே எதிர்பார்க்கவில்லையே?
முப்பத்து மூவர் அமரர்க்கு, முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்!-ன்னு பாட்டு! பாசுரம்!
இந்த ஹோமம், தேவர்கள், பூஜை, புனஸ்காரம், குறுக்குத் தந்திரம், ஐ.நா, அரசியல்வாதிகள் என்று அத்தனை பேருக்கும் முன்னாடியே, முன் சென்று, கப்பம் தவிர்ப்பான் இறைவன்! அதை உணர்ந்தால் போதுமானது!
ஆனால் ஒரேயடியாக மேஜிக் ஷோ போல, ஓர் இரவில் மாயம் செய்யவும் முடியாது அல்லவா? மனிதன் தன் சுய அதிகாரப் பேராசைகளில் ஏற்படுத்திய பிரச்சனைகளை, மனிதனும் தன் பங்குக்கு களைய வேணும் அல்லவா?
அதற்குத் தான் ஆளுக்கொரு யோசனை தாருங்கள்!
வீட்டுக்கொரு பிள்ளையைக் கூட அனுப்ப வேணாம்! ஆளுக்கொரு யோசனை தாருங்கள்! No Fire Zone-இல் அகப்பட்டுள்ள தமிழர்களை எப்படியெல்லாம் விடுவிக்க முடியும் என்று ஆளுக்கொரு யோசனை தாருங்கள்!
கப்பல் மூழ்கும் போது, குற்றம் குறைகளைப் பேச மாட்டார்கள்! முடிந்த அளவு Life Boat எடுத்து வீசுவார்கள்! நாமும் வீசலாமா?
நான் முதன்முதலில் இப்போது தான் இந்தப் பாடலைக் கேட்கிறேன் கைலாஷி ஐயா. எல்லாம் இராகவப் பெருமாளின் திருவருள்.
இராகவன் பேருக்கு முன்னாடி முருகனருள்ன்னு போட்டது இராகவன் காட்டிய வழி தான் இரவி. அவர் தான் சுந்தராம்பாள் அம்மையாரின் பெயருக்கு முன்னால் முருகனருள்ன்னு போட்டிருந்தார். அதே வழியில் நானும் அவர் பெயருக்கு முன்னால் முருகனருள்ன்னு போட்டேன். :-)
உங்க நின்குழல் பதிவுகள் எல்லாம் உடனே எனக்குத் தெரிந்துவிடும் இராகவன். Subscribe பண்ணியிருக்கேன். அதுல தான் தெரிஞ்சது. கேட்டுப் பார்த்தேன். பதிவு போடற அளவுக்கு நேரமும் கிடைச்சது. உடனே போட்டாச்சு. அம்புட்டு தான். :-)
சுதா. உங்கள் கேள்விகள் எல்லாம் நல்ல கேள்விகளே. நானும் உங்களுடன் சேர்ந்து அதே கேள்விகளை இறையிடம் கேட்கிறேன். வேதனைகள் உண்டு; அந்த வேதனைகளுக்கு வடிகால் என் போன்றோருக்கு இறைவனை வேண்டுவதே. வேதனைகள் இருப்பதால் உண்ணாது, உறங்காது, உறவாடாது இருப்பதில்லை; அது போல் கோவிந்தனையும் திருக்குமரனையும் இறைவனின் எல்லா உருவங்களையும் அருவங்களையும் வணங்காது இருப்பதில்லை. அது தங்களுக்கு மேலும் வேதனையளிக்கிறது என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த வகையில் இறைவனை வேண்டிக் கொண்டே தான் இருக்கிறேன்.
நேற்று உங்கள் பின்னூட்டங்கள் மின்னஞ்சலில் வந்திருந்ததைப் படித்தேன். இன்று தான் விடை சொல்ல இயன்றது. காலதாமதத்திற்கு மன்னியுங்கள்.
கேபி சுந்தராம்பாள் அம்மா எம்பெருமான் கண்ணன் மேல் இன்னும் பல பாடல்கள் பாடி இருக்காக! அதே திருமலை தென்குமரி படத்தில் நாராயணியம்மாவா நடிப்பாங்க! அதுல இன்னொரு பாட்டு! "நாளெல்லாம் உந்தன் திருநாளே - மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே"-ன்னு பாட்டு! எலே ராகவப் பெருமாளே! இதையும் வலையேத்து லே! :)