75. வீரமணியும் கோவி.கண்ணனும் "நைசாக" பாடிய கண்ணன் பாட்டு!
நம்ம கோவி.கண்ணன் அண்ணாச்சி, தலை குனிந்த வண்ணம், வெட்கத்துடன், ஒரு கண்ணன் பாட்டை மனமுருகப் பாடினார். அதுவும் வீரமணி ஐயாவின் ஊக்கத்தால்!
பாரதப் போர் முடிச்ச கண்ணன், பெரிய மீசையுடன் காட்சி தரும் திருவல்லிக்கேணி கோயில் பற்றி ஒரு அற்புதமான பாட்டு!
அடங் கொக்கமக்கா! கோவி எப்போ ரகசியமா ட்ரிப்ளிக்கேன் கோயிலுக்குப் போனாரு?
திருவல்லிக்கேணி தான் ட்ரிப்ளிக்கேன்-ன்னு வழக்கு மாறிப் போச்சு, சரி! எங்க கோவி எப்போய்யா வழக்கு மாறினாரு? சொல்லவே இல்ல!
சிங்கையின் சிங்கங்களுக்குக் கூடத் தெரியாதேப்பா! டிபிசிடி...ஒங்களுக்கு ஏதாச்சும் வெவரம் தெரியுமுங்களா?
SK ஐயா, நீங்கனாச்சும் கோவியை ட்ரிப்ளிக்கேன் மார்க்கெட்ல பாத்தீங்களா?
பாட்டு பாடி முடிஞ்சதும், கண்ணன் அருளால், கோவி கண்ணனுக்குக் கை மேல பரிசு!
என்னடா இது கலியுக கப்ஸா-ன்னு நினைக்கறீங்களா? :-)
மேல படியுங்க! ஓவர் டு கோவி அண்ணா!
கண்ணன் பாட்டு இடுகைகளைத் தொடர்ந்து படித்து ரசித்து வரும் வாசகன் என்ற முறையில் எனக்கும் அவர்களைப் பாராட்டும் வண்ணம் ஒரு இடுகை எழுத ஆவல் தான்.
வெறும் இடுகையாக எழுதாமல் நான் அறிந்த கண்ணன் பாடல்கள் பலவற்றில் ஒன்றை இந்த இடுகையில் சிறப்பிக்கலாம் என்று கருதி இதனை எழுதுகிறேன்.
கண்ணன் பாடல்கள் பதிவு குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.
சிறுநகரங்களில் வளர்பவர்களுக்கே கிடைக்கும் சில அனுபவம் எனக்கும் கிடைத்தது. சிறுநகரத்தில் சிறுவயதில் வாழ்ந்து வளர்ந்ததால் மார்கழிக் குளிரினையும் சோம்பலையும் விரட்டும் அதிகாலை வேளை, கோவில்களில் போடப்படும் பக்திப் பாடல்களை கேட்டும், பரங்கிப் பூவில் அலங்கரிக்கப்பட்ட வண்ணக் கோலங்களைப் பார்த்தும் வளர்ந்தவன் என்ற முறையில் மார்கழி மாதத்தில் எனக்கு நெருக்கம் அதிகம்;
கூடவே எனது பிறந்த நாள் மார்கழியில் வந்து செல்கிறது என்பதால் தமிழ் மாதத்தில் மார்கழி மீது தனிப்பட்ட ஈர்ப்பு :)
இனி இடுகைக்கு.
கருப்புச் சட்டைக்காரர் K.வீரமணி என்றாலே இருவர் தான் நினைவுக்கு வருவர் :-)
அதில் ஒருவர் தமிழ்ப் பற்றாளர்.
இன்னொருவர் இறைப் பற்றாளர். இரண்டாமவர் பாடிய ஐயப்பன் பாடல்கள் நினைவுக்கு வராமல் இருக்குமா?
ஐயப்பன் பாடல்களால் அவர் புகழ்பெற்றாரா? அவரால் ஐயப்பன் பாடல்கள் புகழ்பெற்றதா? என்றால் நான் சொல்வது இரண்டாவது தான்.
கார்த்திகை - மார்கழி மாதங்களில் அந்த குரல் கேட்காத தமிழகக் கோவில்களே இல்லை எனலாம். ஐயப்பன் பாடல் மட்டுமின்றி அவர் மனைவி ராதாவுடன் இணைந்து பாடிய அம்மன் பாடல்கள், கண்ணன் பாடல்கள் மிகவும் பரவசமூட்டுபவை.
எங்கள் வீடு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ளதால், மார்கழி மாதம் முழுவதும் காலை 4 மணி முதல் காலை 8 மணி வரையிலும் அதே போன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்திப் பாடல்கள் நாள் தோறும்!
கேட்டு மனப்பாடமே ஆகி இருக்கிறது; திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்களின் வசனங்கள் மனப்பாடம் ஆனது. கார்த்திகை ஒண்ணாம் தேதியில் தொடங்கி காணும் பொங்கல் வரை, நாள் தோறும் இருமுறை ஒவ்வொரு பாடல்களையும் கேட்டு வ(ளர்)ந்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட பாடலில் ஒன்றாக K.வீரமணி - அவரது துணைவியார் பாடிய
கண்ணன் பாடல்களில் ஒன்றான 'பாரெல்லாம் புகழ்ந்திடும் சாரதி' என்ற பாடல் மிகவும் பிடித்த பாடல்.
ஏழாம் வகுப்பு படிக்கும் போது பாட்டுப் போட்டி நடக்கிறது என்று பெற்றோர்களிடம் சொல்ல, இந்த பாடலைப் பள்ளியில் பாடச் சொல்லி பயிற்சி கொடுத்தார் அப்பா.
வீட்டில் நன்றாகப் பாடினாலும் பள்ளியில் பலர் முன்னிலையில் பாடுவதற்கு கூச்சமாகத் தான் இருந்தது. இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் வாய்பாட்டாகப் பாடவே ஐந்து நிமிடங்கள் பிடிக்கும் நீளமான பாடல்.
எவர் முகத்தையும் பார்க்காது தரையைப் பார்த்து வெட்கத்துடன் நடுக்கத்துடன் பாடியது நன்றாக நினைவிருக்கிறது. பாடி முடித்ததும் பலத்த கைத்தட்டுகள் கிடைத்தது;
அதன் பிறகு ஒவ்வொரு வகுப்பிற்கும் அழைத்துச் சென்று பாடச் சொன்னார்கள். நன்றாகப் பாடினேன்.
ஆண்டுவிழாவில் முதல் பரிசு என்று அறிவித்து. நூல் ஒன்றைப் பரிசாக கொடுத்தார்கள்.
இந்த பாடலின் சிறப்பு பன்னிரெண்டு மாதமும் கண்ணுக்கான உற்சவங்களைக் குறிப்பிட்டு பாடுவது...சித்திரை முதல் பங்குனி வரை நடக்கும் சிறப்பான உற்சவங்களைத் தொட்டு எழுதப்பட்ட பாடல். வீரமணி அவர்கள் கண்ணனைக் குறித்து பாட, ராதா அவர்கள் கண்ணனின் தேவியரின் உற்சவங்களைக் குறிப்பிட்டு பாடுவார்.
பன்னிரெண்டு மாதங்களில் மார்கழி குறித்துப் பாடும் போது பூபாள ராகத்தில் பாடி அசத்தி இருப்பார்கள்.
பதினேழு வருடங்களுக்கு முன்பு மறைந்து போன தந்தையை என் அருகில் கொண்டு வரும் பக்திப் பாடல்கள் பலவற்றில் இதுவும் ஒன்று. கொஞ்சம் பெரிய பாட்டு தான்!
கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.
இதோ சுட்டி

பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி
எங்கள் சாரதி பார்த்த சாரதி
எங்கள் சாரதி பார்த்த சாரதி
பார்த்த சாரதி பார்த்த சாரதி
(வீரமணி)
தேரோடும் வீதியாம் திருவல்லிக் கேணியிலே
தேரோடும் வீதியாம் திருவல்லிக் கேணியிலே
ஈராறு மாதங்களும் இன்பமான திருவிழா.
ஈராறு மாதங்களும் இன்பமான திருவிழா.
சித்திரை மாதத்தில் தேவகி மைந்தனுக்கு
பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா
கருட வாகனத்தில் காட்சி தரும் கண்ணன்
அருள் தந்து நமைக் காப்பான் அனுமந்த வாகனத்தில்...
வைகாசி மாதம் தன்னில் வரதராஜ பெருமாளும்
மனம் மகிழ்ந்து பவனி வரும் அலங்காரத் திருவிழா
(ராதா)
ஆனி மாதம் லட்சுமி நரசிம்மன் அழகோடு
ஆனந்தக் காட்சி தரும் அரியதோர் திருவிழா
ஆனந்த முகில் வண்ணன் மாதேவியருடனே
ஆனந்த ஊஞ்சல் ஆடும் ஆனித் திருவிழா
சூடிக் கொடுத்த சுடர் கொடிக்கோர் திருவிழா
ஆடி மாதம் அன்னை ஆண்டாளின் திருவிழா
பாடினள் பாசுரங்கள் பரந்தாமனைப் புகழ்ந்து
நாடினள் நாரணனை நாயகனாய் கொண்ட
ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாளின் திருவிழா
(வீரமணி)
ஆயர்குலத்துதித்த அரசன் நம் கண்ணனுக்கு
ஆவணி பிறந்ததும் அவன் லீலை புரிவதற்கு
உரலிலே கட்டுண்ட உத்தமன் மாயனுக்கு
உறியடித் திருவிழா உயர்ந்த ஓர் திருவிழா
(ராதா)
வன்னிமரப் பார்வேட்டை கண்டருள வலம் வரவே
மன்னவனும் எழுந்தருள்வான் புரட்டாசி மாதம் தன்னில்
அவனியெல்லாம் காக்கும் அன்னை வேதவல்லிக்கு
அலங்காரம் ஒன்பது நாள் நவராத்திரி நன்னாள்
புரட்டாசித் திருநாள்... புரட்டாசித் திருநாள்
(வீரமணி)
கைத்தல சேவையாம் ஐப்பசத் திங்களில்
இத்தரை மீதில் எங்கும் காணாத சேர்வையாம்
வித்தகன் வேதப்பொருள் வேணுவி லோலனை
பக்தி கொண்டே பணியும் தீபாவளித் திருநாள்
கார்த்திகை மாதம் தன்னில் கார்முகில் வண்ணனும்
ஊர்வலம் வந்து வன போஜனமே கண்டருளி
சீர்மிகும் வனம் தன்னை சிறப்புடன் வலம் வந்த
சாரதியாம் கண்ணனுக்குத் தைலக்காப்பு திருவிழா
![]() | ![]() |
(பூபாளம்...)
மார்கழி மாதத்தில் துவாரகை மன்னனாம்
பார்த்தனின் சாரதிக்கு பகல் பத்து திருநாளாம்
காருண்ய சீலனின் இராப் பத்து உற்சவத்தில்
நாரணன் ஏகாந்த சேவையைக் காணலாம்
(ராதா)
வங்கக்கடல் கடைந்த மாயனை மணம் முடித்த
மங்கை திருப்பாவை ஆண்டாளும் மனம் மகிழ
மங்கலத் திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா
எங்கும் திருப்பாவை இசைத்திடும் தனுர் விழா
(வீரமணி)
காளிங்க நர்த்தனனாய் திருக்கோலம் கொண்ட கண்ணன்
தாள் பணிந்தோரை என்றும் தயவுடன் காப்பவன்
தர்ம மிகும் சென்னையில் ஈக்காடு கிராமம் சென்று
சர்வ நிலம் பார்க்கும் தர்மத்தின் தலைவனுக்கு
தைமாதத் திருவிழா தைப்பூசத் திருவிழா
(ராதா)
கேசவனாம் ஸ்ரீமன்னாதன் பிருகு மகள் வேதவல்லியை
மாசிமாதம் துவாதிசியில் மணம் புரிந்த திருவிழா
வாசுதேவன் மகிழ்ந்திடவே மாசியில் வரும் விழா - நல்
ஆசி தந்து மாதவனும் அருள் புரியும் திருவிழா
அப்பனுக்குப் பாடம் சொன்ன ஆறுமுகன் மாமனுக்கு
தெப்போற்சவத் திருவிழா திருவிழா
(இருகுரல்)
நம் இராமருக்கு
வரதராஜரருக்கு
பார்த்த சாரதிக்கு
நரசிம்மனுக்கு
ஸ்ரீமன்னாதருக்கு
தெப்போற்சவத் திருவிழா...திருவிழா
(வீரமணி)
மங்கல வாழ்வழிக்கும் மன்னன் ஸ்ரீராமனுக்கு
பங்குனி மாதத்தில் பாரெங்கும் திருவிழா
(இருகுரல்)
திங்கள் முகத்தானுக்கு திருவல்லிக் கேணியிலேயே
சிங்காரத் திருவிழா ராமநவமி திருவிழா
பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி
எங்கள் சாரதி பார்த்த சாரதி
எங்கள் சாரதி பார்த்த சாரதி
பார்த்த சாரதி பார்த்த சாரதி
குரல்: வீரமணி, ராதா
வரிகள்: K சோமு
இசை: சோமு, கஜா
இராப் பத்து திருநாளில்,
இனிய பாட்டை தட்டச்சும் செய்து, பதிவும் அளித்த கோவி அண்ணாவுக்கு,
கண்ணன் பாட்டு அன்பர்களின் சார்பாக எங்கள் நன்றி!
கண்ணன் பாட்டில் இது 75 ஆம் பதிவு!
இதோ...கோவி சொன்ன திருவல்லிக்கேணி விழாவின் அசைபடம் ஒன்று! சித்திரைப் பிரம்மோற்சவத்தில் - கருட சேவை!


