ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
திருமுருகன் மீதே நிறைய பாடல்களைப் பாடியிருக்கும் கே.பி. சுந்தராம்பாள் அம்மா திருமலைத் தெய்வம் என்ற இந்த திரைப்படத்தில் திருமால் மீதான அருமையான இப்பாடலைப் பாடியிருக்கிறார். திருமுருகன் என்றாலே நினைவில் முன்னிற்கும் நம் அருமை நண்பர் திருமுருகன் அன்பர் முருகனருள் அன்பர்களில் முதல்வர் இராகவப் பெருமாள் இப்பாடலை நின்குழலில் வலையேற்றியிருக்கிறார். இன்று காலையில் தான் அதனைக் கண்டேன். உடனே கண்ணன் அன்பர்கள் இப்பாடலைக் கேட்டு இன்புற கண்ணன் பாடலில் இடுகிறேன்.
ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
ஏழு ஏழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழு)
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழு)
கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது!
(ஏழு)
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன்பிறப்பானான்!
தான் சுவைத்தப் பழங்களையே தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமிலை தலைவனே எமை ஆதரி!
(ஏழு)
திரைப்படம்: திருமலைத் தெய்வம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: முருகனருள் கே.பி. சுந்தராம்பாள்
வலையேற்றியவர்: முருகனருள் கோ. இராகவன்
