55. பாரதியாரும் கண்ணதாசனும் கூட்டு சேர்ந்து போட்ட பாட்டு!
பாரதியாரும் கண்ணதாசனும் கூட்டாச் சேர்ந்து ஒரு பாட்டு எழுதினாங்க! :-)
என்ன.......அது ஆப்பரேஷன் கில்மா-ன்னு நினைக்கறீங்களா?
இல்லை இல்லை! அது எல்லாம் நம்ம வெட்டிப்பயல் தான் பதிவு போடுவாரு!
நான் சொல்வது உண்மை, உண்மை, உண்மையைத் தவிர வேறு ஒண்ணுமே இல்லீங்கோ!
கண்ணன் என் சேவகன் பாட்டு, பாரதியார் எழுதினார்.
ஆனால் அதைச் சினிமாவிற்கு அப்படியே எடுத்தாள முடியாது!
வரகவி கண்ணதாசனுக்கு, கண்ணன் மேல் இல்லாத உரிமையா?
பாரதியையும் கண்ணனையும் கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் உலவ விட்டுவிட்டார், நம்ம கவிஞர்!
மொதல்ல பாரதி பாட்டைக் கொஞ்சம் தொட்டுக்குவோம்!
ஹூம்......இந்தக் காலத்துல எங்க நல்ல வேலைக்காரங்க கிடைக்கறாங்க?
அப்படியே கிடைச்சாலும் "வேலைக்காரங்களையும் ட்ரைவர்களையும் வேலைய விட்டுத் தூக்கவே முடியாது...அப்பிடி ஒரு பாசம்"-னு நம்ம கவுண்டமணி ஒரு படத்துல மந்திரவாதியா அருள்வாக்கு டயலாக் கொடுப்பாரு!
ஆனா எல்லாக் காலங்களிலும் நெலமை, இதே தான் போலும்!
பாரதியாரே புலம்புவதைப் பாருங்க! :-)
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக்கு இங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊர அம்பலத்து உரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்;
சோர்ந்தான் பாரதி....வந்து சேர்ந்தான் கண்ணன்!
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
.....
காட்டுவழி யானாலும், கள்ளர் பயமானாலும்;
இரவிற் பகலிலே எந் நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன், தங்களுக்கோர் துன்பமுறாமல் காப்பேன்;
கற்ற வித்தை ஏதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
......என்று கண்ணன் தன் பாட்டுக்கு அடுக்குகிறான்!
கண்ணனுக்கு இடம் கொடுத்த பாரதியின் கதி என்னவாயிற்று?
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
......
நண்பனாய், மந்திரியாய், நல் ஆசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!
கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!
இதைச் சினிமாவிற்கு அப்படியே போட்டா,
மினிமா ஆக வேண்டியது தான்:-)
பாருங்க, கண்ணதாசன் கலக்கும் சுவையான காப்பியை!
இதைக் காப்பின்னு சொல்லுறதே பெருங்குற்றம்...ஆனாலும் சுவைக்காகச் சொல்கிறேன்....
பாரதியை டிகாஷனில் இறக்கி, மணக்க மணக்க, ஏ.ஆர்.ரகுமான் தந்த லியோ காப்பியைப் போல் கொடுக்கிறான்!
படிக்காத மேதை படத்தில் ரங்காராவின் கவலையும் துக்கமும், சிவாஜியின் குணங்களையும் மனசு முன்னால கொஞ்சம் ஓட விட்டுக்குங்க!
ஓடலைன்னா....இருக்கவே இருக்கு youtube காட்சி....பதிவின் இறுதியில்!
சீர்காழியாரின் உருக்கும் குரலில், இதோ கேளுங்கள்!
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
கண்ணன்...
(எங்கிருந்தோ வந்தான்)
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
கண்ணன்...
(எங்கிருந்தோ வந்தான்)
பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் - கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் ...
மந்திரியாய் ...
நல்லாசிரியனுமாய் ...
(யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய தத் ஆத்மானம் ச்ருஜாம் அகம்)
பண்பிலே தெய்வமாய் ...
பார்வையிலே சேவகனாய் ...
ரங்கன்.....
எங்கிருந்தோ வந்தான்
ரங்கன் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா!
படம்: படிக்காத மேதை
இசை: K.V.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்


