Showing posts with label *மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி. Show all posts
Showing posts with label *மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி. Show all posts

Wednesday, August 28, 2013

கண்ணன் பிறந்த இரவு: நாத்திக ஆராரோ!

கண்ணன் பிறந்த இரவு - இன்று! (Aug-28-2013)

எத்தனையோ தாலாட்டுகள் பின்னாளில் பாடினாலும், குழந்தையின் முதல் தாலாட்டு = மோகனத் தாலாட்டு அல்லவா?
அதுவும்... அதை நாத்திகக் கருத்து கொண்டவர் எழுதினால்?:)

அனைவரையும் வம்பிழுக்க வந்த குழந்தைக்கு = ஆத்திகமாவது? நாத்திகமாவது? எல்லாருமே அதற்கு "வெண்ணெய்" தான்! :)


இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு!
* சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்...
* பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது!

உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை,
இன்று, தானே பயணிக்கிறது!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர..
விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!!

இன்று கண்ணக் குழந்தைக்குத் தாலாட்டு பாடுபவர் யார்?
= கவிஞர். பெரியாழ்வார்;  படம்: பெரியாழ்வார் திருமொழி:)
= கவிஞர். வைரமுத்து;       படம்: சிப்பிக்குள்-முத்து


முதலில்: ஆத்திகத் தாலாட்டு

பாடுவது:  தமிழ் மொழியில், பிள்ளைத் தமிழ் உருவாக வித்திட்ட பெரியாழ்வார்! என் தோழியின் தந்தை!

உலக அம்மை-அப்பனான, சிவபெருமானே வந்து தாலாட்டுறாராம்;
பாடுவது பெரியாழ்வார்:
பாடப்படுவது: "தேவகி சிங்கம்"; யசோதை இளஞ்சிங்கம் அல்ல:)

உலக முதல்வனையே, "நாராயணா அழேல்" -ன்னு பாட, இவருக்கு எம்புட்டுத் துணிவு இருக்கணும்?
கடவுளை மற, மனிதனை நினை -ன்னு இவரு தான் உண்மையான  நாத்திகரோ?:))

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி 
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் 
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் 
மாணிக் குறளனே, தாலேலோ 
வையம் அளந்தானே, தாலேலோ (1) 

உடையார் கன மணியோடு  ஒண் மாதுளம்பூ 
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு 
விடையேறு கபாலி  ஈசன் விடுதந்தான் 
உடையாய் அழேல் அழேல் தாலேலோ 
உலகம் அளந்தானே, தாலேலோ (2)

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் 
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும் 
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் 
செங்கண் கருமுகிலே தாலேலோ 
தேவகி சிங்கமே தாலேலோ (4)

இந்தப் பாட்டை, அரங்கனின் அரையர் ஸ்ரீராம பாரதி அவர்கள், மிக உருக்கமாகப் பாடுவார்கள்!
நான், இங்கு, உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடியதை மட்டும் குடுக்கின்றேன்!




அடுத்து: நாத்திகத் தாலாட்டு:

கவிஞர் பகுத்தறிவுக் கவிஞர் தான்! ஆனால் பாசத்தில் குறை வைத்தாரில்லை!

* தன்னையே தாயாக்கிக் கொள்கிறார், பெரியாழ்வார் வழியில்!
கெளசல்யை நானே! யசோதை நானே! மலையன்னை நானே! பார்வதியும் நானே!

* தன்னையே அடியார் ஆக்கிக் கொள்கிறார்!
= ஆழ்வாரும் நானே! கம்பநாடன் நானே! வால்மீகி நானே! தியாகய்யர் நானே!

இதே பாடல், ஸ்வாதி முத்யம் என்ற தெலுங்குப் படத்திலும் சிறப்பாக இருக்கும்!
சுசீலாம்மாவின் தேன் குரலில், இன்று கண்ணக் குழந்தை பயணக் களைப்பு தீரத் தூங்கட்டும்!

படம்: சிப்பிக்குள் முத்து
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா

லாலி லாலி லாலி லாலி!
லாலி லாலி லாலி லாலி!

வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே!
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே!
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே!
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே!
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே!
ராம ராஜனுக்கு வால்மீகி நானே!
ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே!

(வரம் தந்த சாமிக்கு)

அதே பாடல்: தெலுங்கில் (ஸ்வாதி முத்யம்)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP