ஓரக்கண்ணால் பார்த்த கண்ணன்
மார்கழியில் முடிந்தளவுக்குக் கண்ணன் பாடல்களைப் பதிவு செய்ய ரவி அழைப்பு விடுத்தார். எனக்குக் கண்ணன் பாடல்கள் எவ்வளவு பிடிக்குமோ, அந்தளவுக்கு வீரமணிஐயரின் பாட்டுக்களும் பிடிக்கும். இந்த இரண்டும் சேர்ந்திருந்தால் அது எவ்வளவு நன்றாகவிருக்கும். என்பங்குக்கு அப்படி ஒரு பாடலைப் பதிவு செய்தால் என்ன என்று எண்ணிய போது, யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப்பெருமானை நினைந்து, வீரமணிஐயர் பாடிய இப்பாடல் நினைவுக்கு வந்தது. ஆனால் பாடல் ஒலிவடிவத்தில் கிடைக்கவில்லை. உங்களைச் சும்மா விடலாமோ? :)
கல்யாண வசந்தராகத்தில், கல்யாணக் கோல வர்ணனையாக அமைந்த இப் பாடலை, முறையாக இசைகற்காத நான், என்னால் முடிந்தவரையில் பாடிப் பதிவு செய்துள்ளேன்.
|
கல்யாண வசந்த மண்டபத்தில் காலைத்தூக்கி
கண்ணன் அம்மிக்கல்லில் வைத்தானடி
கல்யாண வசந்த மண்டபத்தில்
எல்லாம் மறந்தேனடி ஏகனோடிணைந்தேனடி
நல்லாய் என் குருநாதன் நாயகனானடி
கல்யாண வசந்த மண்டபத்தில்
ஓமப்புகை நடுவே ஓரக்கண்ணால் பார்த்து
கோமளப்புன்னகையால் குழைந்தானடி
சியாமள வண்ணன் கண்ணன் செளந்தர்ய லாவண்யன்
பொன்னாலைப் பதிவாழும் புனிதன் வரதராஜன்
கல்யாண வசந்த மண்டபத்தில்
