Showing posts with label ஷைலஜா. Show all posts
Showing posts with label ஷைலஜா. Show all posts

Sunday, December 26, 2010

கிளியே....குழறிக் குழறி அழைத்தாயோ?

என்னவோ எல்லாரும் அரங்கன் திருமால் ஆயிரம் நாமங்கள் ஆழ்வார்கள் ஆண்டாள் அப்படீன்னு மட்டுமே இங்க பேசிட்டே இருக்கீங்களே மார்கழில ஒரு மாசிலா ஜீவனை யாராவது நினச்சிப்பார்த்தீங்களா?! அது மட்டும் இல்லேன்னா அரங்கனாவது திருவரங்கக்கோயிலாவது!

அதை கே ஆர் எஸ் மறப்பார் ராதாவும் மறப்பார்! அதைத்தவிர பாக்கி எல்லாரையும் எல்லாத்தியும் பத்தி மார்கழில எழுதுவாங்க! நல்லவேளை ஆண்டாள் அதை தன்னோட ஒரு பாட்டுல கூவி அழைச்சா தோழியை அழைக்கிறமாதிரி! அதெப்படிங்க அழகான அதை மறக்கலாம்?

அழகா இருப்பதால்தான அதை ஆண்டாள் கையில் வச்சிருக்க்கா மீனாட்சியும் அதுக்கு இடம் கொடுத்திருக்கா! ஓ என்ன அதுன்னு கண்டுபிடிச்சிட்டீங்கதானே? ஆமாம் கிளிதான் அது!தத்தைன்னும் சொல்வாங்க தூயதமிழ்ல!

இடிந்த அரங்கன் கோயிலைத் தர்மவர்மனுக்கு கிளி தான் காட்டிக் கொடுத்தது! கிளி மண்டபம் அதனால்தான் அரங்கத்தில் இருக்கு முன்னெல்லாம் தூணுக்குத்தூண் கூண்டு கட்டி கிளிகளை அதில் அடைச்சிருப்பாங்க ரங்கா ரங்கான்னு ஜோரா கத்தும் அவையெல்லாம். இப்போ சில வருஷங்களா கிளிமண்டபம் மட்டும் இருக்கு கிளிகள் இல்லை.

சரி ஆண்டாளுக்கு கிளி ஏன்?

அந்த காலத்தில் உயர்குடிப்பெண்கள் எல்லோருமே கிளிகளை வளர்ப்பது ஒரு இனிய பொழுதுபோக்கா இருந்ததாம்!

ஓர் அழகான காட்சி.
விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் மரத்தில் உள்ள குயிலை ஆண்டாள் பார்க்கிறாள். கூவி அழைத்து கண்ணனை வரவழைத்தால் இதோ என் கையில் இருக்கும் கிளியை உன் தோழி ஆக்குவேன் என்கிறாள்.

இன்னடிசிலோடு பாலமுதூட்டி
எடுத்த என் கோலக்கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே
உலகளந்தான் வரக்கூவாய்!

ஆண்டாள் அப்போது தோளில் கிளியை வைத்திருக்கலாம்

*** *** ***
ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் இன்னொரு கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது

ஒருவேளை கிளியிடம் கண்ணனின் நாமத்தை சொல்லித் தந்தால் எந்நேரமும் அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும்.. காதுக்கும் இனிமையாக இருக்கும் என்று ஆண்டாள் நினைத்திருப்பாளோ ? பெண் மனசு பெண்ணுக்குத்தானே தெரியுமாம்?!

கிளி ஜோசியம் போலத் தான் இதுவும்! ஒரு சுவையான Myth! கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டில் எப்படி மனம் மயங்குதோ, அது போலவே கிளி சொல்லும் கண்ணன் நாமத்திலும் மனம் மயங்குதுன்னு கே ஆர் எஸ் முன்ன என் பதிவில் வந்து இப்படி சொல்லி இருக்கார்!

ஆண்டாள் கிளி விடு தூது எழுதலை! ஒன்லி மேக விடு தூது, குயில் விடு தூது! கிளி சொன்னதை மட்டுமே தான் சொல்லும்! சமயத்தை அனுசரித்துப் பேசத் தெரியாது! அதைத் தூதா அனுப்பி, அது கண்ணன் வீட்டில், வருங்கால மாமியார் கிட்ட மாட்டிக்கிட்டு ஏதாச்சும் உளறிடுச்சின்னா? அதான் நோ கிளி விடு தூது! (இதுவும் தகவல் உபயம்--கே ஆர் எஸ்)


கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,

நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்
-நாச்சியார் திருமொழி

ஆண்டாள் எனும் சோலையில் அருகம்புல்லாய்க்கூட இருக்க இயலாத நிலையில் ஆர்வம் காரணமாகவும் மார்கழில கிளிக்கு ஒரு பாடல் எழுதி அதைப்பெருமைப்படுத்த வேண்டும் என்றும் ஏதோ தெரிஞ்சதை எழுதி மெட்டும் போட்டு பாடியும் படுத்திருக்கேன் கேட்டு சொல்லுங்க என்ன?!

பாட்டு..


அரங்கா அரங்கா என அழைக்கும்
அழகுக்கிளியே நமஸ்காரம்(ஸ்ரீ)

மரங்கள்மீதும் மதில்கள்மீதும்
வானமளாவும் கோபுரத்தும்(ஸ்ரீ)

சோலைப்பசுமை தன்னிலவன்
சொக்கும் வனப்பைக்கண்டாயோ?
கோலக்கிளியே அவனை நீ
குழறிக் குழறி அழைத்தாயோ?(ஸ்ரீ)

நீலவானக் கருமுகிலில்
நிமலன் நிறத்தை நினைத்தாயோ?
காலமுற்றும் அவனருளக்
கனித்துக் கனிந்து விளித்தாயோ?(ஸ்ரீ)

தென்றல் காற்று சிரிக்குங்கால்
தேவன் குரலைக் கருதினையோ?
இன்றே வருவாய் எனவுருகி
இரங்கி இரங்கி அழைத்தாயோ?(ஸ்ரீ)

கரிய துளசி வனத்தினிலே
கண்ணன் மனத்தை உணர்ந்தாயோ?
உரியாய்! உடனே வா வென்றே
உருகி உருகி இசைத்தாயோ?(ஸ்ரீ)

மாவின் தளிரைக் கோதுகையில்
மாலின் அதரம் எண்ணினையோ?
ஆவியனையான் அணைத்திடவே
ஆசை பெருக அழைத்தாயோ?(ஸ்ரீ)

*****************************************************************

Friday, December 17, 2010

வைகுண்டம் ரங்க மந்திரம்!








ஸ்ரீரங்கம்! நினைத்தாலே இனிக்கும் பெயர்!

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்வன் கேண்மினோ
என்று ஆழ்வார் பெருமான் அருளியதுபோல யார் என்ன நினைத்துக்கொண்டாலும் சொல்லத்தான் வேண்டும் ஆம், அரங்கன் என்றபெயரைக்கேட்கும்போது உடலில் மின் அலைகள் பாய்வதை உணரமுடிவதுபோல வேறெந்தப்பெயரும் தாக்குவதில்லைதான்!

திரும்பத்திரும்ப திருவரங்கம் போகிறாயே அலுக்கவில்லையா என்று சிலர் கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் அரங்கன் புதிதாய் நம்மை பிறக்கவைக்கிறானே !

நமக்காக அவன் சொர்க்கவாசலைத்திறந்து வைத்து தான் முன் சென்று நமக்கு அதை வழிகாட்டித்தருகிறானே?

இந்த வைகுண்ட ஏகாதசிதினத்தின் மகிமையை அறியும் முன்பாக நாதமுனிகள் என்னும் வைணவம்தந்த வைரமணியைப்பற்றி சில வரிகள் கூறவேண்டும்.

காலத்தின் மாற்றத்தால் ஆழ்வாரின் பாசுரங்களும் திருவாய்மொழியும் நாதமுனிகள் காலத்தில் காணாமல்போயிருக்க கவலைகொண்டவர் நம்மாழ்வாரின் சந்நிதிமுன்பு நின்றார்.

யோகத்தில் ஆழ்ந்தவர், ஆழ்வார்கள் ஆண்டாள் முதலியோரின் பாடல்களை நம்மாழ்வாரிடமிருந்து க்ரஹித்துக்கொண்டார் ஸ்ரீரங்கம் வந்தவர் அவைகளை இசை என்றும் இயல் என்றும் பிரித்து தாள் சகிதம் பண்ணுடைய இசைப்பாக்களை சேவிக்க மார்கழி சுகல்பட்ச ஏகாதசிக்கு முந்தின பத்துநாட்கள் திருவாய்மொழி தவிர மற்ற ஆழ்வார்களுடைய இசைப்பாக்களையும் ஏகாதசிமுதல் அடுத்த பத்துநாட்களில் இராப்பத்து பொழுதில் திருவாய்மொழியையும் இராபத்து முடிந்த மறுநாள் இயற்பா முழுவதையும் சேவிக்க வேண்டுமென்றும் சிலமுக்கியபாடல்களை அபிநயித்துக் காட்டவேண்டும் என்றும் ஹிரண்யவதம் ராவணவதம் வாமன க்ருஷ்ணாவதாரங்கள் போன்ற சிலமுக்கிய அம்சங்களைப் பாமரர்கள் எளிதில்புரிந்துகொள்ளும்பொருட்டு நாடகரூபமாய் அபிநயித்துக்காட்ட வேண்டுமென்றும் ஏற்பாடு செய்தார்.



அப்படிச்செய்ததும் நம்மாழ்வாரின் திரு உள்ளத்தை அனுசரித்தே செய்யப்பட்டதாய் தெரிகிறது எப்படியென்றால் நம்மாழ்வார் பாடின ’தடங்கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பாடிநடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே ’ என்னும் பாசுரத்தை அனுசரித்து இருப்பதால் என்கிறார்கள் பெரியோர்.

வைகுண்டம் என்பது ஸ்ரீரங்கமே என்று சொல்லுகிறபடி வைகுண்டத்தில் உள்ள எல்லாம் ஸ்ரீரங்கத்தில் அமைந்திருக்கிறது என்பதைக் காட்டிக்கொடுக்கவே இந்தத்திருநாள் நடக்கிறது


வைகுண்டஏகாதசி ஏன் வருஷாவருஷம் வருகிறது? அந்த தினம் எதற்கு சொர்க்கவாசலைத்திறக்கிறார்கள் ஏன் முதலில் நம்பெருமான் செல்கிறார் பின்னர் நம்மையும் அதே வழியில் அழைத்துச்செல்கிறார்? இதற்கான தத்துவம் தான் என்ன என்பதை

கொஞ்சம் பார்க்கலாம்!

எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே என்று சொல்லி திருமங்கையாழ்வார் பகவானுடைய தரிசனம் பெற்றதைப்பேசும் திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தம் பெருமாள்முன்பாக முதலில் சேவிக்கப்படுகிறது ஒரு நூலுக்கு முன்னுரை இருப்பதுபோல ஏகாதசி உதசவத்திற்கு இந்த திருநெடுந்தாண்டகம் உள்ளது

இந்த உஸ்சவத்தில் முக்கியமான அரையர்சேவை பகல் நாட்களில் நடக்கும்போது பகல்பத்து என்கிறார்கள் இந்த பகல்பத்துஉற்சவத்தில் அரங்கன் காலையில் சந்நிதியைவிட்டுப்புறப்பட்டு கிழக்கில் உள்ள அர்ஜுனன் மண்டபத்திற்கு எழுந்தருளி ராத்திரி எட்டுமணீக்கு திரும்ப மூலஸ்தானம் வருகிறார்

ரஙக்நாதன் தனனை சேவிக்க வருபவர்களை ’மம மாயா துரத்யயா...’ என்னுடைய மாயைகளை கடக்க முடியாதென்று சொன்னேன் அவை மண் பொன் பெண் ஆசைகள் !இதில்பெண்ணாசையை வெல்வது மிகவும் கடினமானது நான் போட்ட மோகினிவேஷத்தில் மயக்கத்தில் அசுரர்கள் அமிர்தத்தை இழந்தார்கள் ஆகவே பெண்ணாசையில் மனம் மயங்காமல் நாளை நான் காட்டிக்கொடுக்கும் மார்க்கத்தில் என்னோடு வந்தீர்களானால் வைகுந்தம் நிச்சயம் ’ என் உபதேசிப்பதாகும்

மோகினி அலங்கார தத்துவம் இதுதான்.

இராப்பத்து உத்சவதில் ஆயிரங்கால் மண்டபத்தின் மையத்தில் திருமாமணி மண்டப்தில் பரம்பதத்தில் பெருமாள் எழுந்தருளி இருக்கும் வைகுண்டத்து திருமாமணிமண்டதின்படி கட்டப்பட்டுள்ளதால் அதே பெயர் இதற்கும்! இந்தப்பத்துநாட்கள் அரையர் சேவை ராத்திரியில் நடக்கப்படுவதால் இது இராப்பத்து என்றாகிறது.


தவிர வைகுண்டம் செல்லும் மார்க்கத்தைப்பற்றியே பேசும் திருவாய்மொழியில் ஒருபாசுரமாகிய;சூழ்விசும்பணிமுகில் ;எனும் பத்துபாசுரங்களின் தாத்பர்யங்கள் இந்த நாட்களில் நாடகம் போலக் காட்டப்படுகின்றன. பரமபதத்திற்கு செல்லும் முமூஷுவாய் ரங்கநாதனே நடிக்கிறார்.

வைகுண்ட ஏகாதசித் திருநாளில் கர்ப்பக்ரஹத்திலிருந்து புறப்படுமுன்பாக ஆர்யபடாள்வாசல் நாழிகை கேட்டான் வாசல் முதலானதுமூடப்படும்.

அறிவெனும் தான் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவென்னும் திண்கதவம் செம்மி மறையென்னும் நன் கோதி நன்குணர்வார் காண்பரே நாள்தோறும் பைங்கோத வண்ணன்படி என்ற பாசுரப்படி இந்தக்கதவுகள் மூடப்படுகின்றன. பகவானை சிந்தித்து அவ்னருளைப் பெற இச்சிக்கும் முமுஷு தன் இந்திரியங்களால் இழுக்கப்பட்டு கண்காதுமூக்கு துவாரங்கள் வழியாக வெளிச்செல்வதை தடுக்க முதலில் அவைகளைமூடவேண்டும் என்பதை குறிக்கிறது.

பெருமாள் புறப்படும்முன்பாக கர்ப்பக்ருஹத்தில் வேதபாராயணமும் திருவாய் மொழியும் தொடங்கப்படுகின்றன அதனபின் ரத்ன அங்கி சார்த்திக்கொண்டு பெருமாள் புறப்படுவார் அப்போது சந்நிதிவாசல்திறக்கப்படும் சிம்மகதி(ஆண்டாளின் மாரிமலை முழஞ்சில் பாட்டில் வருமே அதேதான்) பிறகு ஒய்யார நடையிட்டு பரம்பதவாசல் செல்லும்வழியில் சில நெறிமுறைகளை நடத்தியபடி செல்வார் இதையெல்லாம் நம்மாழ்வார்பாடல்களில் காணலாம்.

பரமபதவாசலுக்கு வந்ததும் வடக்குமுகமாய் நின்று வாசல்கதவுகளைதிறக்கும்படி நியமித்தவுடன் அவைதிறக்கப்படும் சொர்க்கவாசல் என்பது இதுதான். சொர்க்கப்படி மிதித்து வெளியே வந்ததும் இந்தவாசலுக்குப் பக்கதில் விரஜா நதியின் ஸ்தானத்தில் சந்திரபுஷ்க்ரணியில் ஒருகிணறு இருக்கிறது இங்கிருக்கும் நாலுகால் மண்டபத்தில் வேதவிண்ணப்ப்பமாகி பெருமாள் இந்தவாசலுக்குப்போனவுடன் அதுவரை சார்த்தி இருந்தபோர்வை களையப்பட்டு புதுமாலைகள் சம்ர்ப்பிக்கப்படுகிறது.


பரமபதத்திற்குப் பக்கத்திலுள்ள விரஜா நதியை அடைந்து அதில் ஸ்னானம் செய்து முக்தனுக்கு பழைய சரீரம் போய் புதுசரீரம் ஏற்படும் தத்துவத்தை இது உணர்த்துகிறது.

ஏகாதசி தினம் ரத்ன அங்கியோடு பெருமாள் பரமபதவாசல் நுழைந்து செல்வதால் ,விரஜா நதியில் மூழ்கி எழுந்த ஒருவன் பரிசுத்தமான ஒளி கொண்ட முகத்தோடுவருகிறான் ,’ ஒளிக்கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆழ்வார் அருளியபடி விரஜைக்கு அப்புறமுள்ள முகதர்களோடு கூடுவதுகாட்டப்படுகிறது ஆதிகாலத்தில் பரமபதவாசலுக்குவெளியே ஆழ்வார்கள் நின்றுகொண்டிருந்ததாய் சொல்லப்படுகிறது .

ஆயிரங்கால் மண்டப்த்தின் திருமாமணிமண்டபத்தில் அண்ணல் அமர்ந்ததும் அவர் எதிரில் ஆழ்வார்கள் வீற்றிருப்பது மாமணிமண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை என்கிறபடி முக்தன் பரமபதத்தில் உள்ள திருமாமணி மண்டபதை அடைந்து அங்குள்ள நித்ய முக்தர் மத்தியில் ஆனந்தமாய் இருப்பதைக்காட்டுகிறது

ஆக ,அரங்கன் ’வைகுண்டம்’ என்றதலைப்பில் நடத்தும் நாடகம் தான் இந்தவைகுண்ட ஏகாதசி. ! இறைவன் நமக்கு உய்ய வழிக்காட்ட முன்னின்று செல்கிறான் நாமும் ’உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் ’என்ற திருவாய் மொழிக்கு ஏற்ப அவனை அறிந்து உணர்வோம், உன்னதம் அடைவோம்!

அரங்கன் திருவடிகளே சரணம்!





--

Tuesday, May 25, 2010

சிரித்தது செங்கட் சீயம்!







இன்று நரசிம்ம ஜயந்தியை முன்னிட்டு இந்தப்பதிவு!


அன்று ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலில் ஒரே ஆரவாரம்! ‘ஆதிகவியான வால்மீகியின் இராமாயண காவியத்தை தமிழில் செய்து அரங்கேற்றத் துணிந்த இந்தக் கம்பன் என்பவன் யாராம்?” என்று ஒருவருக்கொருவர் வியப்பும் திகைப்்புமாகக் கேட்டுக்கொண்டனர்.

திருவரங்க நகரம் அந்த நாளில் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த பண்டிதர்களைக்கொண்டிருந்தது. அங்கே தங்களது புலமைக்குப்பாராட்டு கிடைப்பதை விரும்பாத புலவர்களே இல்லை.

இங்கு தனது இராமாயணக்காதை அரங்கேறுவதே தனக்குச்சிறப்பு என்று கம்பன் நினைத்தான்.

.

கம்பனின் கதையைக்கேட்டுத்தான் பார்க்கலாமே என்று சிலர் ஆர்வமுடன் முன்வந்தனர். அவர்களின் முயற்சியில்

அரங்கன் கோயிலில் பிராட்டியாரின் சந்நிதி முன்பாக இருக்கும் நாலுகால் கல்மண்டபத்தில் அரங்கேற்ற ஏற்பாடுகள் ஆயத்தமாயின.

வால்மீகியான தெய்வ மாக்கவி மாட்சி தரிக்கவே இதை நான் புனைந்தேன் என்றான். கம்பன்.

பிறகு இராமாயணக்காதையை தான் இயற்றிய பாடல்களுடன் கூற ஆரம்பிக்கிறான்.

. பல புலவர்களும், கதை கேட்பவர்களும், அமர்ந்திருக்கும் அந்த இடத்தில் அப்போது, யுத்த காண்டம் அரங்கேற்றம் ஆரம்பிக்கின்றது.

”விபீஷணன் ராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறினான் காமத்தில் மதி இழந்த இராவணன் அவைகளைப்பொருட்படுத்தாமல் விபீஷணனை இகழத்தொடங்கினான்.

“விபீஷணா! மானுடர் வலியர் என்றாய்! ஏன்...? அச்சமோ? அவர்பால் அன்புமோ உனக்கு? கூனியின் சூழ்ச்சியால் அரசிழந்து வனம் புகுந்து என் சூழ்ச்சியால் தன் மனைவியை இழந்தும் கழிந்துபோகா உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வலிமையை உன்னைத்தவிர யார் மதிப்பர்? அவனோ என்னை வெல்லுவன்?’ என்று கத்தினான் .

“மனம் வருந்திய விபீஷணன்,”அண்ணா!! நீர் இராமன் என்னும் நாராயணனைக் கேவலமாய் நினைக்கவேண்டாம். ஒப்புயர்வில்லாத வீரர்கள் அந்த நாராயணனைப் பகைத்து அழிந்து போயிருக்கின்றனர் அத்தகையவர்களில் ஒருவன் தான் இரணியன் என்பவன்.” என்று சொல்லி இரணியனின் வரலாற்றையும் கூறினான்.

இப்படி கம்பன் கூறும்போது, சில பண்டிதர்கள் திகைத்தனர்.


”உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?” என்று சீறினார் ஒருவர்.


மற்றவர்.” ஆமாம்! இதை ஒப்புக் கொள்ள முடியாது! அனைத்தும் தவறு “ என்று பொங்கி எழுந்தார்.

”: புலவர்களே! அமைதி! கம்பர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்கலாம்! கம்பரின் ராமாயணம் முடிவதற்குள் இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த ராமாயணம் காப்பியமாக அனுமதிக்கப் படாது. அதுவரையில் நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கம்பரே! நீர் தொடரும்!” என்று அவைத்தலைவர் அனுமதி அளித்தார்.

பெருமூச்சுடன், கம்பர் தொடர்ந்தார்

நசை திறந்து இலங்கப் பொங்கி, 'நன்று நன்று' என்ன நக்கு;
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி
இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்;
திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்!



அவ்வளவுதான்.......


ஒரு புலவர் (வேகமாக எழுந்து,” புலவரே! பாடலை மீண்டும் படியுங்கள்!” என்றார்

கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்கினார்.

”'சிரித்தது செங்கட் சீயம்' என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாராவது இதைப் பார்த்ததுண்டா?”

அவையில் சிரிப்பு!;


கம்பர், இந்தச் சிரிப்பையும் கிண்டல் பார்வைகளையும் பொருட்படுத்தாமல் அடுத்த பாடலை ஆரம்பித்தார்.

அவைத் தலைவர் இப்போது,”புலவரே! அவர் கேள்விக்கு விளக்கமளித்து விட்டு, அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்!” என்றார் உத்தரவிடும் குரலில்.

கம்பர் திகைத்தார்.தன்னிலை மறந்து காவியம் எழுதும் போது கடவுளின் ஆணையாக வந்த சொற்களை கடவுளே அறிவார்! .அபிராமி பட்டருக்கும் இதே நிலைதானே ஏற்பட்டது?


அவையில் பலத்த சிரிப்பொலி ...

“மாட்டிக்கொண்டான் கம்பன் ...அவன் ராமாயணக்காதை முற்றிலும் அரங்கேற்ற சாத்தியமே இல்லை இனி! “

முணுமுணுத்து மகிழ்ந்தது ஒருகூட்டம்.

திடீரென்று அவர்களின் பலத்த சிரிப்பையும் மீறி, ஒரு சிரிப்பு! அனைவரையும் நடுங்க வைக்கும் சிரிப்பு! எல்லோரும், சிரிப்பு வந்த திசையை நோக்குகின்றனர்)

கம்ப மண்டபத்தின் மிக அருகில் கல்படிக்கட்டுகள் கொண்ட மேட்டுப் புறத்திலே உள்ள சந்நிதி கோபுரத்திலிருந்து ஒரு அதிர்வு உண்டானது. பூகம்பமோ என மக்கள் நிமிர்ந்து அச்சத்துடன் பார்த்தனர்.

ஆ !என்ன இது கோபுரத்தில் பதிக்கப்பெற்றிருந்த நரசிம்மனின் சிலை.. இல்லை இல்லை இது சிலையில்லையே ?நரசிம்மர் உயிரோடு அல்லவா இருக்கிறார்! கோலாகலமாய் சிரிக்கிறாரே!

ஒருக்கணம்தான் எல்லாம்!


திகைப்பும் பயமுமாய் கண்டவர்களுக்குக் காட்சி தந்து மறைகிறார் நரசிம்மப்பெருமான்.

“கம்பனே! உன் கவிதையை யாம் ஏற்றுக்கொண்டோம்! வால்மீகியின் கவிதையைப்போல நின் கவிதையும் என்றும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழட்டும்” என்பதாகக்கையை உயர்த்தி ஆசி கூறி வாழ்த்தினார். அடுத்த கணம் உயிர்பெற்ற சிலை மறுபடி சிலையானது.ஆனால் தூக்கிய திருக்கரம் தூக்கியபடியே இருந்தது.


அனைவரும் மெய்சிலிர்த்தனர் . கம்பனைப்போற்றி வணங்கினர்.

இன்றும் அரங்கன் கோயிலில் அந்த கம்ப மண்டபம் இருக்கிறது ! அதற்குப் பக்கத்தில் சற்றே எதிரே அந்த மேட்டழகிய சந்நிதியும் இருக்கிறது !தூக்கிய திருக்கரமுடன் தம்மைக் காணவரும் பக்தர்களுக்கு இன்றும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் அன்று கம்பனைக்காத்த நம் பெருமான் நரசிம்மன்!


'ஆடிஆடி அகம் கரைந்து இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்

நாடிநாடி, நரசிங்கா என்று

வாடி வாடும் இவ் வாள்நுதலே. '



'.

Tuesday, February 02, 2010

ஆயிரத்தில் ஒருவர் !



(குரு ராமானுஜர் இங்கே)





’கூரத்துச் சம்பா
குமரகோட்டத்துக்கீரை
கோபுர வாயிற்படி காற்று
வெள்ளைக்குளத்துத் தீர்த்தம்
வரதரது வாசம்
!

கூரம் என்னும் ஊரின் சிறப்பினை, இந்த நாட்டுப்புறப்பாட்டில் அறியமுடிகிறது.

கூரத்தின் நிலம் மிகவும் செழிப்பானதாம் இதில் விளையும் சம்பா நெல் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது.

இன்று கிராமமாகக் காட்சி அளிக்கும் கூரம் முன்னொருநாளில் கூரமாநகரமாக திகழ்ந்தது.காஞ்சிக்கு 12கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரில் ஸ்ரீராமமிஸ்ரர் பெருந்தேவி தம்பதிகளுக்கு சௌம்யவருஷம் தைமாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் வியாழக்கிழமையில் ஓர் ஆண்குழந்தைபிறந்தது. பிறப்பிலேயே ஸ்ரீவத்சத்தின் புனிதக்குறி விளங்கியதால் ஸ்ரீமன் நாராயணனின் சங்கின் அம்சமாக இருக்குமோ என வியந்து பெற்றோர் குழந்தைக்கு ஸ்ரீவத்ச சின்ஹர் என்று பெயர் சூட்டினர். பிற்காலத்தில் அர்ச்சாவதாரத்தில் ஏனைய ஆழ்வாரகளைப்போல ஈடுபாடு உள்ளது கண்டு இவரை எல்லாரும் ஆழ்வான் என அழைக்கலாயினர் காஞ்சிப்பெருமானின் நட்சத்திரமும் ஹஸ்தமே ஆகும்.

கூரத்தாழ்வார் பொறுமையின் வடிவம். ஒருசமயம் ஆழ்வார் நட்ந்துகொண்டிருக்கையில் வயல்வழி ஓரமாக ஒரு தவளையை பாம்பு விழுங்கிக்கொண்டிருந்தது அந்த தவளையோ இறக்குமுன்பு பரிதாபமாக கத்திக்கோண்டிருந்தது இதுகண்டு அவர் யார்தான் இந்தத் தவளையைக் காப்பார்களோ என நினைத்து மயக்கமாய் விழுந்தாராம் அவருக்கு அவ்வளவு மெல்லிய மனது.


மற்றொருசமயம் ஒருவாழைத்தோட்டத்தில் வழியே சென்றுகொண்டிருந்தபோது ஒருமரத்தில் அப்போதுதான் வாழை இலையை ஒருவன் அறுத்துக்கொண்டு போயிருந்தான் அந்த அறுத்த இடத்தில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது அதுகண்டு ஆழ்வார் மனம்பொறுக்காமல்மூர்ச்சித்து விழுந்தார் என்று கூறுவர்.

உடையவர் ஒருநாள் ஓர் ஊமையை அழைத்துக்கொண்டு மடத்திற்கு வந்தார்.வந்தவர் நேராக தமது அறைக்குச்சென்றார் பிறகு அந்த ஊமையைப்பார்த்து தனனை விழுந்துவணங்கி திருவடிகளை தலையிலே ஏற்கும்படி செய்கையால் கூற அந்த ஊமையும் திருவடி தஞ்சம் என்று உணர்ந்து அவ்வாறே செய்தான் இதைப்பார்த்த ஆழ்வார் ,’ஐயோ எவ்வளவு சாஸ்திரங்கள் கற்று என்னபயன் ?இந்த ஊமைக்குக்கிடைத்த பாக்கியம் நமக்குக்கிட்டவில்லையே நானும் ஊமையாய் இல்லாமற்போனேனே” என்றுவருந்தினாராம்.

அரங்கனிடம் மோட்சவரம் பெற்று ஆன்ந்தக்கூத்தாடியபடி வந்தவரை கவலையுடன் எதிர்கொண்டார் ராமானுஜர்.

“ஆழ்வானே என்னைவிட்டுப் போகபோகிறீரா? எப்படி மனம் வந்தது என்னைப்பிரிவதற்கு?’

அதற்கு கூரத்தாழ்வார்,” சுவாமி! பரமபதத்தில் புதிதாக வருபவர்களை அங்குள்ள நித்யசூரிகள் அழைத்துக்கொள்வது வழகக்ம்.... தாங்கள் முன்சென்று நான்பின்சென்றால் தாங்கள் என்னைஅழைக்க வேண்டிவரும். தாங்கள் என் குரு! குருவானவர் சிஷ்யனை வரவேற்பது அபசாரமல்லவா? ஆகையால் நான் சென்று, முன்னின்று தங்களைவரவேற்கத் தயாராய் இருப்பேன்” என்றுகூறினார்

கடைசிநேரமும் வந்தது.






(சீடர் கூரேசர் இங்கே)


எதிராஜர் திருமந்திரம் ஓத, ஆழ்வான் தனது தனதுதலையைத் தனது சிறந்த சீடரான பிள்ளை ஆழ்வான் மடியில் வைத்தார். த்னதுதிருப்பாதங்களை சாந்தமே உருக்கொண்டவரும் பொறுமைக்கு பிராட்டிக்கு அடுத்தபடியுமானவராய் கருதப்பட்டவரும் ,அனைவர்க்கும் தயா குணம்படைத்தவரும் கைபிடித்த நாளிலிருந்து கடமை வழுவாது கணவனுக்குக் குறிப்பறிந்து பணிவிடை செய்த உத்தம பத்தினியுமான ஆண்டாள் மடியில் வைத்தார்.

திருமகன்கள் பராசரபட்டரும், வேதவியாசபட்டரும் மற்றும் எம்பாரும் முதலியாண்டவனும் நடாதூர் அம்மானும் கண்ணீர்விட்டபடி நின்றிருக்க தம் குரு ராமானுஜரைப்பார்த்தபடி இரு கைகளையும் கூப்பியபடியே கூரத்தாழ்வார் பரம பதம் அடைந்தார். இத்தகைய பாக்கியம் யாருக்குக்கிடைக்கும்?

மொழியைக்கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம்
குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்

என்று திருவரங்கத்தமுதனார் ராமானுஜ அந்தாதியில்குறிப்பிட்டுள்ளார். முக்குரும்பாகிய குழி என்பது, கல்விச்செருக்கு தனச்செருக்கு குலச்செருக்கு என்பதாகும் இம்மூன்றையும் ஒழித்தவர் ஆழ்வான்.

அஷ்டபிரபந்தம் எழுதிய திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐய்யெங்கார், ’அந்தமில் பேரின்பத்து அழிவில்லாத பெருவீட்டில் அழிவில்லாத உடல்பெற்று வாழும் பரமாச்சாரியரான கூரத்தாழ்வான் திருவடிகளை எப்போதும் கூடுவேன்’ என்றுபாடுகிறார்


இன்று(3.02-2010) கூரமாநகரம் ஆழ்வானின் ஆயிரமாவது பிறந்தநாளை கோலாகலமாக் கொண்டாடுகிறது.ஆழ்வானின் அருள்பெறுவோம் ஆனந்த நிலையடைவோம்!

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே!
தென் அரங்கன் சீரருளை சேர்ந்திருப்போன் வாழியே!
பாராளும் எதிராசர் பதம்பணிந்தோன் வாழியே!
நாராயணனே நமக்குசரண் என்றான் வாழியே!

பொருள் விரிக்கும் எதிராசர் பொன்னடியோன் வாழியே!
பொன்வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே!
ஏராரும் அஸ்தத்தில் இங்கு உதித்தான் வாழியே!
எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே!



(பாடலுக்கு உதவிய ’கூரத்தாழ்வார்கதை’ எனும் புத்தகத்திற்கு நன்றி)

கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்!

_____திருவரங்கப்ரியா--------------

Monday, December 21, 2009

பேய்ப் பெண்ணே !



மார்கழி - 07

கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்,
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்!



கேயாரெஸின் விளக்கம் இங்கே.


ஆனைச் சாத்தன் பறவையெல்லாம்
பேசும் பேச்சுகள் கேட்கலையோ?
நறுங்குழல் ஆய்ச்சியர் தயிர்கடையும்
ஓசை உனக்கு கேட்கலையோ?
வளையொடு அணிகளும் சேர்ந்திசைக்கும்
கலகல ஒலியும் கேட்கலையோ?
கேசவன் புகழைக் கேட்ட பின்னும்
உறங்கிக் கிடக்கும் பேய்ப் பெண்ணே!
ஒளிர்திரு மேனி உடையவளே!
உடனே கதவைத் திறவாயே!

--கவிநயா

இந்த பாடலைக் குறித்து ஷைலஜா அக்கா:

இன்றைய திருப்பாவை மிகவும் சிறப்பான பாடலாக அமைந்திருக்கிறது.
ஆரமபமே கீசு கீசு என்று காதருகே வந்து கிசுகிசுக்கிறது! அதென்ன கீசு கீசு என்று பாசுரம் படிக்க ஆரம்பித்த நாளில் மனசில் ஒரே குறுகுறு!

விடுவிடுவென பொழிப்புரைபக்கங்களைப்புரட்டிப்படிக்க ஆரம்பித்தால் அவரவர் பாணியில் அர்த்தங்களைச்சொல்லி இருந்தாலும் அழகிய சிங்கர்சுவாமிகள்(ஸ்ரீரங்க ராஜகோபுரம் கட்டியவர்தான்) கூறிய விளக்கம் அப்படியே மனசைக்கட்டிப்போட்டுவிட்டது

ஆனைச்சாத்தான் என்றால் என்ன? பரத்வாஜ பட்சிகளாம்!

ராமனை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரச் சித்திரகூட யாத்திரைசெய்தபோது பரதனுடன் கூடவே வந்த் அயோத்தியாவாசிகளான ஆண்பெண்கள் அவ்வளவுபேரும் ஆனைச்சாத்தான்களாம். அதாவது பரத்வாஜரின் விருந்தோம்பலில் அவரிடத்தில் பூரண விசுவாசம் கொண்டவர்களாயிருந்து ராமனை சேவிக்கவேண்டும் என்ற பெரிய மகிழ்ச்சியான ஆரவாரத்தைச்செய்கிறார்களாம்.அதுபோல இப்போது யமுனைத்துறைவனை சேவிக்க கூட்டமாய் வருகிறார்களாம். அவர்கள் தேவ மொழியில்பேசுவதால் நமக்கு அது புரியாதாகையால் கீசுகீசென்று கேட்கிறதாம், அந்த சப்தம் உன்காதில் விழவில்லையா என்று ஆண்டாள் கேட்கிறாளாம்!

இறைசிந்தனையைத் தடுத்துவிட்ட பேய் புத்திகொண்ட பெண்ணே என்று திட்ட ஆரம்பித்து கடைசியில் தேஜஸ் கொண்டவளே என்கிறாள் தேசமுடையாய் என்பதற்குக்காரணம் கண்ணனின் நினைவிலேயே அவள் இருப்பதால் அவனது தேக தேஜஸ் நாயகப்பெண்பிள்ளையான அதாவது இவர்களின் எஜமானியான அவளுக்கும் வந்துவிடுகிறதாம் அப்படியானால் பேய்ப்பெண் என்று இறை அடியாரான அந்தப்பெண்னை சொல்லிவிட்டதற்காய் வருந்தி தேசமுடையாய் என முடிக்கிறாள் அவளும் நான் பேய்ப்பெண் தான் இல்லாவிடில் இப்படி தூங்கிக்கொண்டு கேசவனின் நாமம் பாடி வந்த உங்களை வாசலில் காக்க வைப்பேனா நானல்லவா பாகவத அபசாரம் செய்துவிட்டேன் என்கிறாள்!
அவளது அழகான பேச்சைரசித்தபடி மற்றொரு பெண்னை எழுப்பச்செல்கிறார்களாம்! இந்தப்பாசுரத்தில் கூறப்படும் திவ்யதேசம் திரு ஆய்ப்பாடியாகும் இது பெரியாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டது.

ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
பெரியாழ்வார் திருமொழி 1-2 -2

இங்கு கூறப்படும் பாடுவார்களும் பல்பறைக்கொட்ட நின்று ஆடுவார்களும் என்னும் தொடர் ஏழாம் பாசுரத்தில்கூறப்படும் நாராயணன் மூர்த்தி கேசவனைப்பாடவும் என்பதை நினைவுபடுத்துகிறது.



படத்துக்கு நன்றி: aazhvarmozhi.blogspot.com

Saturday, January 17, 2009

கூரேசன் சீர் கேளீரோ!

நீங்கள் திருவரங்கம் கோயிலுக்குப்போயிருக்கிறீர்களா

பிரதான வாயில்வழியாக அதாவது ரங்கா ரங்கா கோபுரம்வழியாக திருக்கோவிலில் காலடி எடுத்துவைத்ததுமே உங்களின் வலப்புறத்திலிருக்கும் இருக்கும் முதல்சந்நிதியை ஏறெடுத்துப்பார்த்திருக்கிறீர்களா

அது என்ன பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரின் சந்நிதியா அல்லது

பரமபக்தன் அனுமனின்சந்நிதியா

அல்லது பக்தபிரஹாலதனின் சந்நிதியா

எது என்று கேட்கிறீர்களா

ம்ஹூம் அவர்கள் யாரும் இல்லை.

பகவானுக்குத்தன் அடியார்களை மிகவும் பிடிக்கும்.

ஆனால் அடியாரைநேசிக்கும் அடியாரை அதைவிடப்பிடிக்கும்.

தன் அடியாரை குருவாக ஏற்று அவருக்குத்தொண்டு செய்யும் அடியவர்தான் ஆண்டவனின் மனத்தில் முதலில் இருப்பவர்.

கூரத்தாழ்வாரின் குருபக்திக்கு பலபல சொல்லலாம் . ஒன்றைமட்டும் இப்போது பார்க்கலாம்!


குருவுக்குமுன்பாய் தனக்கு திருநாடு (வைகுந்தம்) ஏக அரங்கனிடம் இறைஞ்சுகிறார் கூரர்.



அரங்கன் வியப்புடன் அவரை நோக்க, அரங்கபெருமானே நான் வைகுண்டத்திற்கு முன்னே சென்று எம்பெருமானை இருகரம்நீட்டிவரவேற்கவேணுமே அதற்குத்தான் என்றபோது அவரது ஆசார்யபக்தியை மெச்சிய அரங்கன் , கூரத்தாழ்வாரின் விருப்பத்திற்கிணங்கி அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் முக்தியளிக்க முன் வந்தார். அதன்படி ராமானுஜருக்கு சுமார் ஏழு ஆண்டுகள் முன்னதாகவே இவ்வுலக வாழ்க்கையைவிட்டு திருமாலிடம் இணைந்தார் கூரத்தாழ்வார்


குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வாருக்கே, அரங்கன், அ(ந்த)ரங்கத்தில் உயர்பதவி கொடுத்திருக்கிறான்!

ஆமாம் !கோவிலின் முதல் சந்நிதி கூரத்தாழ்வாருடையதுதான் !

இனி திருவரங்கம் செல்லும்போது கோவிலில் நுழைந்ததும் முதலில் குருபக்தியில் சிறந்துவிளங்கியவரின் திருச்சந்நிதிக்கு சென்றுவாருங்கள்! அரங்கனுக்கு தன் அடியவர்களைக்கணடு வணங்கியபின்னர் தன்னைக்காணவருவதே பிடிக்கும்!

கூரத்தாழ்வாரின் மகிமையைச்சொல்வது என்பது கடலைக்கைக்குள் கொண்டுவருவது என்பதுபோல...சிறு அலையொன்றைமட்டும் இங்கே வீசிச்செல்ல எனக்கு இயலுவதை
பாக்கியமாகக் கருதுகிறேன்!


.


ஸ்ரீ ராமானுசரின் பிரதம சீடரான கூரத்தாழ்வார் காஞ்சீபுரம் அருகே கூரம் என்னும் கிராமத்தில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர்திருமறுமார்பினன். (ஸ்ரீவத்சாங்கர்).தனது செல்வத்தை ஏழை எளியோர்க்கு வாரிவழங்குவதிலேயே செலவிட்டார்.

அவரது அரண்மனை போன்ற பெரிய மாளிகையில் நள்ளிரவு வரை பெறுங்கள் கொடுங்கள் மகிழுங்கள் என்ற கோஷமே கேட்கும்.

ஒவ்வொரு நாளும் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் திருக்கதவுகள் மூடிய பின் தான் இவரது வீட்டுக் கதவுகள் மூடப்படும். ஆனால்ஒரு நாள் ஊர் திருவிழாவிற்கு செல்ல வேண்டியிருந்ததால் சற்று முன்பாகவே அவர் இல்லக்கதவை மூடிவிட்டார். அந்தக் கதவில் கட்டப்பட்டிருந்த விலைஉயர்ந்த மணிகளின் ஒலி, கதவை சாத்தும்போது கோயில் வரை கேட்கும்.

திருக்கச்சி நம்பிகள் என்பவர் காஞ்சி வரதராசப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தார் . கூரத்தாழ்வார் வீட்டு மணியொலி வரஜராஜப்பெருமாள் சன்னதி வரை கேட்கவும் பெருந் தேவித்தாயார், சுவாமியிடம் "என்ன! அதற்குள் கோயில் அடைக்கும் சத்தம்.. நடை சாத்த நேரமாகிவிட்டதா?" என்று வினவினாள்.

குழம்பிய சுவாமி தனக்கு சேவை செய்து வந்த திருக்கச்சி நம்பிகளிடம் இதைப் பற்றிக் கேட்க, அவரும் நடந்ததைச் சொன்னார்.

அதைக் கேட்ட பெருமாள், "ஆழ்வானின் செல்வத்திற்கு அத்தனை சிறப்பா? கோயில் கதவு மூடும் முன்னே அவன் வீட்டுக்கதவு மூடப்பட்டதே!" என்றார்

தாயார் நம்பியிடம் உத்தம ஆத்மாவான கூரேசனைதான் காணவிரும்புவதாய் கூறினாள்

இதைக்கேட்ட திருக்கச்சி நம்பி கூரத்தாழ்வாரிடம் இதைப் பற்றிச் சொல்லக் கூரத்தாழ்வார் மனம் வருந்தி “ மகாபாவியான நானா உலகமாதாவை வந்துப்பார்ப்பது! செல்வம் என்ற குப்பையை இத்தனைகாலமும் சேர்த்துவைத்திருந்த நான் நாயினும் கடையேன் எனக்குத்தாயாரை தரிசிக்கும் பாக்கியமும் இல்லை தகுதியும் இல்லை என்றார்.

செல்வம் அல்ல உய்ய வழி” என்பதைப் புரிந்து கொண்டு எல்லாச் செல்வங்களையும் தானம் செய்ய ஆரம்பித்தார். தாயாரின் தாமரைப்பாதம் தரிசிக்க என்னைத்தகுதி உள்ளவனாக ஆக்கிக்கொள்ள இப்போதே என்மனத்தையும் உடலையும் தூய்மையாக்கிக் கொள்கிறேன் என்று
அதற்கு சித்தமானார்.



சிறு வயதிலிருந்தே நிறைந்த கல்வியுடன் நற்பண்புகள் அவரிடம் காணப்பட்டன. எல்லோருக்கும் பிடித்த பாத்திரமாக விளங்கிய அவருக்குத் தகுந்தாற்போல, ஆண்டாள் என்ற பெயர் கொண்ட ஒரு நல்ல குணவதி அவருக்கு மாலையிட்டாள்.

தன் செல்வத்தை எல்லாம் தானம் செய்த பின்னர் குருவைத் தேடிய அவர், ஸ்ரீராமானுஜரைச் சரணடைந்தார். அவருக்குத் தொண்டு செய்து வாழும் எண்ணத்தில் மனைவியிடம் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீராமானுஜருக்கு சேவை செய்வோம் என்று கூறினார்.

"எத்தனை தூரம் போக வேண்டும். வழியில் எதாவது பயம் உண்டா?"

"மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்! ஏன் எதாவது எடுத்து வந்திருக்கிறாயா?

"ஆம் சுவாமி,தாங்கள் சாப்பிட என்று ஒரு தங்க வட்டில் கொண்டு வந்திருக்கிறேன்".

அதை வாங்கி வீசி எறிந்தார் ஆழ்வார்.

பின் நீண்ட பயணத்திற்குப் பின் திருவரங்கம் அடைந்து அங்கு ஒரு வீட்டில் தங்கினார்கள். கீழச்சித்திரை வீதியில் தேருக்கு நேராக அமைந்த அந்த வீட்டில் உணவில்லாமல் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தனர்.

ஆண்டாளம்மாள் தன் கணவர் இப்படிப் பட்டினியாக இருப்பதைப் பார்த்து தவித்துப் போபோய்விட்டாள். அவளுக்குத் தானும் பட்டினி கிடப்பது தெரியவில்லை. நேராக மனதில் ஸ்ரீரங்கநாதனைக் கண்டு பேசினாள், "அப்பா, திருவரங்கனே! உனக்கு மட்டும் மூன்று வேளைகளும் இனிப்புடன் பிரசாதம் போகிறது. உன் பக்தன் இங்கு மூன்று நாட்கள் பட்டினியாக இருப்பது தெரியவில்லையா? நீ மட்டும் அங்கு வயிறாற அமுது உண்கிறாயே!"

என்ன ஆச்சரியம்! உடனேயே கதவைத் தட்டிய ஒரு பரிசாரகன், ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, "அரங்கன் என்னை அனுப்பி, இதைக் கொடுத்து வரச் சொன்னார்" என்றான். அதைப் பிரித்துப் பார்த்தால் அதில் அரவணைப் பிரசாதம் இருந்தது. ஆண்டாள் அதை எடுத்துத் தன் கணவரிடம் கொடுத்தாள்.

கூரத்தாழ்வார் தன் மனைவியிடம், அரங்கனை வேண்டினாயா என்று வினவ, "ஆம், மூன்று நாட்கள் என் கணவர் பட்டினி கிடக்கிறார். உனக்கு மட்டும் பிரசாதம் போகிறதே என்று ரங்கநாதனிடம் கேட்டேன் " என்றாள்.

அனைத்தையும் விட்டு வந்தபின்னும் அரங்கனிடம் நீ இப்படிவேண்டிக்கொள்ளலாமா சரி இனி இம்மாதிரி செய்யாதே எனச்சொல்லி அவர் அரங்கபிரசாதத்தில் தானும் சிறிது எடுத்துக்கொண்டு மனைவிக்கும் சிறிதுகொடுத்துவிட்டு இரவு முழுதும் திருவாய்மொழியை ஓதியவண்ணமே கழித்தார்.

(பரமனின் பிரசாதம் உண்ட பலனாய் பத்துமாததில் அவர்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.
பராசரபட்டர் வியாசபட்டர் என்று பேரறிவும் மிகுந்த ஞானமும்கொண்டஅவர்களைப்பற்றி பிறகுவிவரமாய் எழுத அரங்கன் அருளவேண்டும்!)

சுமார் 12 வருட காலம் கழித்து ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் காஞ்சியில் சந்தித்தனர். அப்போது ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனிடம் வேண்டிக் கொண்டதால், கூரத்தாழ்வார் இழந்த பார்வையை மீண்டும் பெற்றார்.

.
குணங்களில் சிறந்தவரும், ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்யம், பகவத் பாகவத தொண்டு மற்றும் பாண்டித்யம் பெற்றவரும், தான் கண்களை இழக்கக் காரணமாயிருந்த "நாலூரான்' என்பானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டவருமான கூரத்தாழ்வாரை வேண்டிக் கொண்டால் நமது கண் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியடையும்.

இவ்வருடம் இன்று( 17.1.2009) அமையும் இவரின் அவதார தினம், இவரது ஆயிரமாவது ஆண்டாக அமைகிறது.

கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்!

Saturday, December 13, 2008

சுசீலாவின் பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்!

காலங்கலமா இதே வழக்கம்ப்பா இந்த ஆண்களுக்கு! அழகான பெண்களைக் காதலிக்கவேண்டியது ,அப்புறமா மனசு மாறிட வேண்டியது!

பாருங்களேன் இந்த அழகான பெண்ணும், ஒரு கோபிகை தான்(கோபிகா அல்ல பாவனா அல்லன்னு KRS Ragav Rishan பின்னூட்டமிடு முன்பாக நான் முந்திட்டேனே:)))

ம்ம்ம் என்ன சொன்னேன் அழகான் பெண் என்றேனா அவளைக் குழலூதும் கண்ணன் தன் இசையில் மயக்கி இருக்கிறான்.

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்னு அந்தப் பொண்ணும் மயங்கிட்டா...
அவளை நல்லா மருக வைத்துவிட்டு நைசா ப்ருந்தாவனத்துக்கு வந்துட்டான், அங்க இருக்கற கோபிகைகளுடன் குதூகலமாய் விளையாட ஆரம்பிக்கிறான் கண்ணன்.

காதலிக்கிறவ்ரை அ(எ)ந்த ஆணையும் ஒரு எதிர்பார்ப்போட‌ ஏறெடுத்தும் பார்க்க மாட்டாங்க பொண்ணுங்க, ஆனா, காதலிச்சிட்டால் அவன் என்ன பண்றான் எங்க போறான் வேற‌ எந்த ஃபிகர்கிட்ட செல்லுல சொல்லுல ஜொல்லுவிடறான்னு மோப்பம் பிடிக்கற‌தேதான் அவங்கவேலை!

ஆணை விட பெண்ணுக்கு அன்பின் ஆளுமையும் பொஸஸிவ் நெஸ்ஸும் ஜாஸ்திங்க!மோதிரத்தை தொலைச்சி மனைவியை மறந்தது துஷ்யந்தன் தானே!! காற் சில‌ம்பை அட‌குவ‌ச்சி க‌ண்ண‌கியை அம்போன்னு விட்ட‌து கோவ‌ல‌ன் தானே! இன்னும் மீத‌ம் இருப்ப‌தை ம‌க‌ளிர் பொங்கி எழுந்து நினைவுப‌டுத்த‌க்கேட்டுக்க‌றேன்!(முடிஞ்சா மறக்கலேன்னா ஆண்க‌ளும்:))))

சரி இருங்க கதைக்கு வருவோம்...கண்ணன் ப்ருந்தாவனத்துக்குப் போனால் விஷயம் தெரியாம போயிடுமா, நம்ம தமிழ்நாட்டு தங்க மகளுக்கு, ஆல்ரெடி ஸ்மார்ட்னெஸ் தமிழ்ப் பெண்களுக்கு நிறைய உண்டுன்னு சொல்வாங்க இதுல கண்ணபெருமானின் கடைக்க‌ண்பார்வை வேறு பெற்றுவிட்ட்வள்!!காதல் பார்வையையும் கூட!

so,சும்மா இருப்பாளா வாரேன் சுவாமி உங்க ப்ருந்தாவனத்துக்கே நேரா வரேன் வந்து க்ருஷ்ணா நான் ஒருபாவியோன்னு கேட்பேன் அதுக்கு நீ பக்கத்துல ஏகப்பட்ட கோபிகைகளை வச்சிட்டு என்னை கேலியா பார்த்தா அதை தாங்கிப்பேன்னு நினைக்காத...என் கேள்விக்கு பதில் என்ன கேலியோன்னு கேட்காம விடமாட்டேன்,,,

நீ காயிலே புளிப்பாய் கனியிலே இனிப்பாய் ! நோன்பிலே உயிர்ப்பாய்கண்ணா ! ஆமா நான் இப்போ இருப்பது உயிர் நோன்பு ! காதல் நோன்பு! பாவை நோன்பு கொண்டாட இதோ மார்கழி பிறக்கப் போகிறது! உன்னையும் நப்பின்னை முதல் நந்தகோபனின் வாயிற்காப்பான் வரை வரை எல்லாரையும் விரட்டிக்கேட்க வில்லிப்புத்தூர் வீரப்பெண் வேறு வந்து விடுவாள். ஆகவே அப்போதைக்கிப் போதே வந்தேன் அடியாளை ஏறிட்டுப்பார்த்து ஏற்றுக்கொள்ளும் சுவாமி! என்கிறாள்.

ஒருபொண்ணு நின‌ச்சா, நின‌ச்சா.....எதுக்கு அதை ஒரு பெண்ணே இப்போ சொல்லணும், பாட‌லைக் கேளுங்க‌ க‌ல்லும் க‌னியாகும்!

பாட்டு பிருந்தாவனத்துக்கு வ‌ருகின்றேன் என்பெருமான் உன்னிட‌ம் கேட்கின்றேன்!

ப‌ட‌ம்..லட்சுமிகல்யாணம்
பாடியவ‌ர்.....சுசீலா
இசை...MSV

பாடலை இங்கு கேட்கவும்!

பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்! - என்
பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்!
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ? - என்
கேள்விக்கு பதில் என்ன கேலியோ?
(பிருந்தாவனத்துக்கு)

கீதையில் உன் குரல் கேட்டேனே! - என்
கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே!
பாதையில் உன் துணை வரவில்லையே!
பகவான் திருவருள் தரவில்லையே!
(பிருந்தாவனத்துக்கு)

குங்குமம் அணிந்தால் உன் தேவி! - தன்
கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி!
சங்கமம் என்பது எனக்கில்லையோ? - அந்த
மங்கல மரபுகள் உனக்கில்லையோ?

கங்கையின் வெள்ளம் தண்ணீரோ? - இல்லை
கன்னியர்கள் விடும் கண்ணீரோ?
கண்ணனின் மனமும் கல் மனமோ? - எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ?
(பிருந்தாவனத்துக்கு)

கிருஷ்ணா...கிருஷ்ணா...
கிருஷ்ணா...கிருஷ்ணா...


By...
............திருவரங்கப்ரியா(shylaja)

Monday, April 14, 2008

ராமநவமி: இராமன் என்னும் கோபக்காரன்!

ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்திய வேந்தனைப் பாடிப்பற என்கிறார் பெரியாழ்வார்.

எப்போது நம்மால் பறக்கமுடியும்?

மனம் இலேசானால்..

மனம் எப்போ லேசாகும்?

அழுத்தங்கள் அகலும்போதுதான்..

அழுத்தங்கள் எனும் பாரங்கள் எப்போது நமக்குள் வரும்?

கவலையும் கோபமும் சூழும்போது வரும்.

கவலை நம்மைத் தின்று விடுமாம். அதனால் தான் பாரதி என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்கிறார்.

நம்மைக் கவலையும் கோபமும் ஆட்கொள்ளாமலிருக்க இறைவனை சரணடைய வேண்டுமாம்.

சரி, அந்த இறைவனுக்கே கோபம் வந்தால்..?இறைவனுக்கு நம்மைப்போல காரணமேயின்றி கண்டதற்கும் கோபம் வந்துவிடுமா என்ன?
கருணையே உருவான கடவுளுக்கும் கோபம் வருமளவு நடந்து கொள்வதும் முறையா?
இந்தக் கோபம் சக்கரவர்த்தித் திருமகனை சிலநேரங்களில ஆட்கொண்டதாய் ராமாயணக் காவியத்தில் காண்கிறோம்.
அண்ணலை அந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யாரார் எனப் பார்ப்போமா?

ராமனுக்கு இளவரசுப் பட்டாபிஷேகம் செய்வதாய் தீர்மானிக்கப்பட்டு விட்டது ...ஊரே உற்சாகத்தில் மிதக்கிறது.அரச சபையில் அனைவர் முகத்திலும் குதூகலம் நிரம்பிவழிகிறது. ராமனும் சீதையும் பட்டாபிஷேகத்திற்குரிய விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்.

இதற்கிடையில் மந்திரையின் பேச்சில் புத்தி தடுமாறி கைகேயி தசரதனிடம் ராமன் 14 வருடங்கள் வனவாசம் போகவேண்டும் என்றும் தனது
மகன் பரதன் முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்றும்( வரம்) கேட்டு அதனை பெற்றும் விடுகிறாள்.

இதைக் கேள்விப்பட்ட ராமன் சற்றும் கோபமடையவில்லையாம்.
தந்தை சொல்லைக் காப்பாற்றுவதைவிட சாம்ராஜ்யம் பெரிதல்ல என நினைத்தானாம். ராமனின் முகத்தில் கோபத்திற்கு மாறாக மகிழ்ச்சிதான் தெரிந்ததாம்...'அவ்வாசகம் உணரக்கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா' என்கிறார் கம்பர்.

எம்பெருமான் ஜிதக்ரோத: அதாவது கோபத்தைவென்றவன் ஆகிறார்.
சீற்றமில்லாதானைப்படிப்பற, சீதைமணாளனை பாடிப்பற! என்பது பெரியாழ்வார் வாக்கு.
கோபத்தை வென்ற தாசரதிக்கு எப்போது கோபம் வந்தது?

பிராட்டியை ராவணன் அபகரித்துப் போனதும் காணாமல் துடிக்கிறான் ராமன். மரத்தை, நதியை எல்லாம் கேட்கிறான். ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை திகைத்தனை போலும் செய்கை என்று பின்னர் கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பர் கூறியதுபோல என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறான்.

கோபம் அதிகரிக்கிறது.
சக்கர்வர்த்தி திருமகனின் கோபத்தை ஒரு சர்க்கம் முழுவதும் ராமக்ரோத: என்று அரண்யகாண்டம் 64வது சர்கத்தில் வால்மீகி விவரிக்கிறார்.

ஒருகட்டத்தில் ராமன் "என்பிரியபிராட்டியை யார் கவர்ந்து சென்றார்? என்னிடம் திரும்ப ஒப்படைக்காவிட்டால் என்னுடைய பாணங்களால் மூவுலகங்களையும் அழித்துவிடுவேன்" என்று கோபத்துடன் சூளுரைக்கிறார்.

பிராட்டியின் பிரிவினால் மிகவும் கோபமாயிருக்கும் அண்ணனை இளையவர்(கோபத்திற்குப்பெயர்போனவர்)::0 அவரை சமாதானம் செய்கிறார்.
யாரோ ஒருவன் செய்த தவறுக்காக உலகத்திற்கு தண்டனை கொடுக்கலாகாது. கவர்ந்து சென்றவனைக் கண்டுபிடித்து அவனுக்கு
தண்டனை கொடுப்போம்.. ஆகவே நாம் தேடுதல் வேட்டையை செய்வோம்' என்றபின் சக்கரவர்த்தி திருமகனுக்குக் கோபம் தணிந்தது.

ஜிதக்ரோத: எனப்பட்ட ராமனுக்கும் பிராட்டியை ராட்சசன் கவர்ந்து சென்றதில் கோபம் எழுந்தது.
ஆனால் இளையபெருமாளால் சமாதனம் செய்யப்பட்டதும் அந்தக்கோபம் தணிந்தது மீளவும் ஜிதக்ரோதனான்.

அடுத்து வனவாசத்தில் காகாசுரன் சீதையின் உடலைத்தீண்ட அதனின்றும் பெருகிய ரத்தம் கண்டு கட்டுக்கடங்காத கோபம் உண்டாயிற்று
ராமனுக்கு.
காலசர்ப்பதைப் போல மூச்சு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி.
ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்த்ர மந்திரத்தை அந்தக் காக்கையின் மேல் ஏவினான். அந்த அளவு கோபமுண்டாகிவிட்டது.

பிறகு காகாசுரன் அடைக்கலமாகி காலில் விழுந்ததும் அவனுக்கு கோபம் தணிந்து உயிர்பிச்சை அளித்தான். சரணம் என்றவரை தள்ளியதில்லை தசரத மைந்தன்.

அதேபோல இலங்கைசெல்ல கடல் அரசன் வழிவிடாதபோது கோபம் வந்தது.
'லட்சுமணா என் தனுசைக்கொண்டுவா.. கொல்லும் பாம்புகள் போன்ற குரூரமான பாணங்களையும் எடுத்துவா.. இந்தக் கடலை முற்றிலும் வற்றச் செய்துவிடுகிறேன். வானர வீரரகள் நடந்தே லங்கை செல்லட்டும் .."என்றதும் கடலரசன் அஞ்சி சரணம் எனப் பணிந்தான். அவனுடைய சரணாகதியை அண்ணலும் ஏற்றுக்கொண்டார்.

ராவணனுடன் போர் செய்கையில் அனுமனை தன் பாணங்களால் காயப்படுத்துகிறான் ராவணன். அதைக்கண்ட ராமனுக்குக் கோபம் வந்தது.
உடனே ராவணனின் ஆயுதங்களை அழித்து அவனை நிராயுதபாணியாக்கி ,'இன்று போய்நாளை வா' என்கிறான் .


இப்படித் தான் அடியார்க்கு தீங்கிழைத்தால் பெருமாளுக்குக் கோபம் மிகுந்து வருமென்பதற்கு பிரஹலாதன் பெரும் சாட்சி.
'அங்கண் ஞாலம் அஞ்ச 'என்றும் 'முளைத்த சீற்றம் விண்கடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்த அஞ்ச' என்று ஆழ்வார் அருளிச்செய்ததில் இதனை உணரலாம்.

தன் உயிரான இனிய சீதையைக் கவர்ந்ததும், தனக்காக் போராடிய வானர வீரர்களைக் கொன்று குவித்ததும் போன்ற தகாத செயலை செய்ததால் ராவணன் மீது ராமனுக்குக் கோபம் வந்தது. அதுவே ராவணனின் முடிவிற்கும் காரணமானது..

இதைத்தான் ஆண்டாளும், 'சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற மனதுக்கினியானை' என்று திருப்பாவையில் சொல்கிறாள்.

இறைவனுக்கு நம்மீது கோபம் ஏற்படாத வகையில் நாம் நடந்துகொள்வோம் அப்படியே அறியாது தவறு செய்தாலும் அண்ணலின் பாதங்களை சரணமெனப்பிடித்துவிடுவோம்!
********************************************************************************

எம் எஸ் அவர்களின் இனியகுரலில் இந்தப்பாடல்......இங்கே கேட்கவும்!

முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருளென்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற
அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப் பாடிப்பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.

Tuesday, January 08, 2008

அனுமத் ஜெயந்தி: சொல்லின் செல்வன் அனுமன்!

உலகில் எத்தனையோ அமரகாவியங்கள் உருவாகியுள்ளன. ஆனால் நம்முடைய பாரத இதிகாசங்களான ராமாயணம் மஹாபாரதம் போல மானுட வாழ்வின் ஒட்டுமொத்த செறிவுகளை பிரதிபலிக்கும் ஒரு இயக்கம் வேறு எங்கும் இல்லை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்றும் பொருந்தும் விதமாக அதன் உணர்ச்சிக் களன் அமைத்திருப்பது இன்றைய ஹைடெக் விஞ்ஞானத்தில் உன்னதமான ஒரு கண்டுபிடிப்புக் கூடத் தரமுடியாத ஆச்சரியமாகும்.

ராமாயண நாயகன் ராமனைப் போல மகாபாரத நாயகன் கண்ணனைப் போல விலங்கினமான வானரைனத்துப் பிரதிநிதியான அனுமன் இந்த இரு இதிகாசங்களிலும் விஞ்சி நின்று தனித்துத் தெரிகிறான்.

இதுவும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒரு சிறப்பு அம்சம். விலங்குகளுக்கு பாவ புண்ணியங்கள் இல்லை.

ஏனென்றால் அவை மனத்தால் வாழ்பவை அல்ல. மனிதனே மனத்தால் வாழ்பவன். மனம் என்று வந்த உடனேயே நேற்று- இன்று- நாளை என்ற மூன்று காலங்கள் வந்துவிடுகின்றன..நேற்றைய நிகழ்வுகள் இன்றைய தாக்கமாகி இன்றைய தாக்கமே நாளைய வாழ்விற்கு அடிப்படையாகி ஒரு வட்ட சுழற்சி ஏற்பட்டு விடுகிறது. இது முடிவில்லாத வாழ்க்கைப்பயணம்.

எப்படி இருப்பினும் மானுடப்பிறப்பு என்பதே அரிதானது.

தாவும் குணம் கொண்டவனும் மனத்தவனுமான வானரன் ஒருவன் அந்த குணத்தை வென்று தர்மத்தின் தூதுவனாக பக்தியின் இருப்பிடமாகத் திகழ்ந்ததால் அவன் அழகானவன் - சுந்தரன் ஆனான்! அதனால் தான் சுந்தரகாண்டம் வந்தது.

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயு-அஞ்சலை புத்திரனாய் அவதரித்தவன் அனுமன்.
இங்கிதம் அறிந்து பேசும் அனுமனை சொல்லின் செல்வன் என்கிறார் கம்பர்பெருமான்.
அதற்கு உதாரணம்..

இலங்கையில் சீதையைக்கண்டு திரும்பிய அனுமன் வானரவீரர்களுடன் கிஷ்கிந்தைக்கு திரும்புகிறான்.
ஒரே உற்சாகக் கூக்குரல்கள்..குதூகல ஒலிகள்! அவ்வளவு வானரவீரர்களும் வேகமாய் நடந்துவந்து சுக்ரீவனிடம்,: ப்ரபுவே! நமது அனுமன் வெற்றியுடன் திரும்பி இருக்கிறான். அனுமனால் நமக்கெல்லாம் பெருமை.
சீதாபிராட்டியை சிறையினின்றும் மீட்க நாம் உடனே படையெடுத்துச் செல்லலாம் வாருங்கள்" என்றனர்.

ஆனால அனுமன் மட்டும் மூலையில் அடக்கமாய் ஏதும் பேசாது அமைதியாய் நின்று கொண்டிருந்தார்.
அவனை அழைத்து ராம சுக்ரீவன் முன்பு அழைத்துக் கொண்டு நிறுத்திய ஜாம்பவானும் அங்கதனும்,"ப்ரபோ! அனுமன் ஜெயவீரன். அவன் வாயினாலேயே அனைத்து விவரங்களும் அறிவது தான் தங்களுக்கு நிம்மதி" என்று கூறி அனுமனைத் தூண்டி விட்டனர்.
அனுமன் பேசத்தொடங்கினான்.
"கண்டேன் கற்பின் அரசி சீதையை: என்று ஆரம்பித்தான்.

சீதையைப்பற்றி செய்தி கேட்க ஆவலாயிருக்கும் ராமனுக்கு சீதையைக் கண்டதாய் சொல்ல ஆரம்பித்தால் சீதையை எனக் கூறி அடுத்து சொல்ல இருக்கும் அந்தக் கண நேரத்திற்குள் சீதைக்கு ஆபத்து என ராமன் நினைத்து பதட்டமடையக்கூடும் என நினைத்து மகிழ்ச்சி தரக்கூடியதும் மன நிம்மதி தரக்கூடியதுமான கண்டேன் எனும் சொலலி முதலில் கூறுகிறான் என்கிறார் கம்பர்.
மேலும் கண்டேன் சீதையை என்று கம்பன் பாடவில்லை.
கண்டனன் கற்பினுக்கணியை என்றே கம்பன் பாடல் கூறுகிறது.

ஒருக்கால் சீதை ராமனின் வீர பராக்கிரமங்களைக்கேட்டு மயங்கி இலங்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறாளோ என்ற எண்ணம் ராமனுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக கற்பினுக்கணியை என்கிறான் கம்பன்.
ராமனே தங்கள் தேவி தங்களைத்தவிர வேறு எதையும் நினைப்பதில்லை. இராவணனையும் அவனது செல்வங்களையும் ஒரு சிறு துரும்புக்கு சமமாய் எண்ணுகிறாள். இதை நான் என் கண்ணால் கண்டேன்.எனவே சீதை கற்பின் செல்வி என்கிற இவ்வளவு விஷயங்களையும் ஒரே வரியில் சொல்லி விடுகிறான்.

கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்....என்று பாடல் தொடங்குகிறது.

அனுமன் பிறந்த நாள் ஆற்றல் பிறந்த நாள்! இந்த நன்னாளில் அவனைத்தொழுது வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்!

Monday, December 31, 2007

80. இச்சுவை தவிர யான் போய்....

எம்பெருமான் ஐந்து ரூபங்களுடன் விளங்குகிறான் என்கிறார்கள் படித்த சான்றோர்கள் - பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சைஎன ஐந்து ரூபங்களய் விளங்கும் அவனை நாம் காணமுடிவது ஐந்தாவதில் தான்.

பரம் எனப்படும் பரம ரூபம் ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும் அவனது திருமேனி. அது நமக்கு அகப்படாது.

பாற்கடலில் வாசுதேவன்,சங்கர்ஷணன்,ப்ரத்யும்நன்,அநிருத்தன்
என்கிற திருமேனிகளோடு நிற்கிறான். அவைகளுக்கு வியூஹம் எனப் பெயர். அவைகளையும் நாம் அறிவதற்கு அரிது.

ஸ்ரீராம, கிருஷ்ண அவதாரங்களுக்கு விபவம் எனப் பெயர்.
அவைகள் எல்லாம் எடுத்து முடிந்து விட்டபடியால் நாம் காண இயலவில்லை.

நமக்குள்ளே அந்தர்யாமி என்பது கட்டைவிரல் அளவில் இருக்கும் ரூபம்.
அந்த ரூபத்தையும் யோக சாதனையாலன்றி பார்க்க இயலாது. சாமான்ய மனிதர்களான நம்மால் அது இயலாது.

ஆகவே அவனுடைய ஐந்தாவது திருமேனியான அர்ச்சாவதாரம் (ஆலயங்களில் அவன் திருவுருவச் சிலைகள்) தான் நமக்குப் பார்த்து அனுபவிக்க முடியும்.
பின்னானார் வணங்கும் ஜோதி என்று அனுபவிக்கும்படி எல்லா திவ்ய தேசங்களிலும் அவன் சேவை சாதிக்கிறான். ஆண்டாள் திருப்பாவையில் சொல்லியபடி கூடி இருந்து குளிரக் குளிர பெருமானைக் காணவேண்டும்.

என்னரங்கத்தின் இன்னமுதர் குழலழகர் விழியழகர் கண்ணழகர் என்றெல்லாம் பெருமாளின் திருவழகில் மயங்கி நிற்கிறாள் மங்கை ஆண்டாள். அர்ச்சாவதார மூர்த்தியான அரங்கனின் மேனி அழகைக் கண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் இச்சுவை தவிர இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்கிறார்.

பாடலைப் படித்துக் கேட்டு இன்புறுவோமா?
மந்திர ஒலியில் இங்கு கேளுங்கள்! அருணா சாயிராம்
உன்னி கிருஷ்ணன் குரலில் இங்கு கேளுங்கள்!



renganatha
பச்சை மா மலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே.





திருமதி ஆர்.வேதவல்லியின் குரலில்
வேத நூல் பிராயம் நூறு
மனிசர் தாம் புகுவர் ஏலும்,
பாதியும் உறங்கிப் போகும்
நின்று அதில் பதினை ஆண்டு,
பேதை பாலகன் அதாகும்
பிணி பசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்க மா நகர் உளானே


திருமால் பெருமை படத்தில் TMS பாடுவது இங்கே!
ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை,
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா.
அரங்க மா நகர் உளானே



பதிவுலக நண்பர்கள் எல்லோருக்கும் இதயங் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- திருவரங்கப்ரியா

Wednesday, April 25, 2007

கிரிதர கோபாலா - மீராவின் கதை!

ராஜபுதனத்து அரண்மனை அதன் உப்பரிகையிலிருந்து கீழே பார்த்துக்கொண்டிருக்கிறாள் அந்த அழகான சிறுமி.
வீதியில் ஒரே ஆரவாரம், கோலாகலம் ! ஏதோகல்யாண ஊர்வலம்! அலங்கரிக்கப்பட்ட யானை மீது மாப்பிள்ளை அமர்ந்திருக்கிறார்.

சட்டென தன் தாயைப்பார்த்து அந்தச் சிறுமி கேட்கிறாள்.
'அம்மா யார் அது குதிரைமீது?"
'அவர் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை"
"அம்மா என் மணவாளன் யார்?"

கள்ளங்கபடமற்ற குழந்தையின் கேள்வி அந்தத் தாயைப் பரவசப்படுத்த அங்கே உயர்ந்த பீடத்திலிலிருந்த கிரிதரகோபாலனின்
சிலையைக் காண்பித்தாள்." இவன்தான் உன் மணவாளன்" என்கிறாள்
அந்தக் கணமே அந்தச் சிறுமியின் மனதை ஆட்கொண்டுவிட்டான் கிரிதரகோபாலன்.

அந்தச் சிறுமி தான் மீரா.
மீராபாய் என்பார்கள் வடக்கில் பெரும்பாலும்.
அரசகுமாரியாய்ப் பிறந்து அனைத்தையும் துறந்து ஆண்டவனைத் தேடிக்கொண்ட மாபெரும் பக்தை, மீரா.
ராதையின் மறு அவதாரம் மீரா என்பார்கள் வடநாட்டில்.

ராஜபுத்ர சிற்றரசனின் மகளாய் கிபி1547ல் அவதரித்தாள் மீரா.
அவளுடைய மூன்றவது வயதில் அரண்மனைக்கு வந்த துறவி அளித்த
கிரிதரகோபாலனின் சிலையைத் தான் அவள் தாய் காண்பித்து அவளுடைய மணவாளன் என வேடிக்கையாய் சொன்னாள்.
ஆனால் மீராவுக்கு அது வேடிக்கையாய் விளங்காமல் உயிரில் கலந்த உறவாய் வியாபிக்க ஆரம்பித்தது. விக்கிரஹத்துக்கு நீராட்டி
அலங்கரித்து அதனுடன் ஆடிப்பாடி என பக்தியோடு வளர ஆரம்பித்தாள்.

அவளுடைய எட்டாவது வயதில்(சில குறிப்பு 13வயது என்கிறது) சித்தூர் இளவரசன் போஜராஜனுடம் மீராவுக்குத் திருமணம் நடந்தது. மீரா கிரிதர கோபாலனின் விக்ரகத்துடன் சித்தூர் சென்றாள்.
மேவார் ராணாக்களின் குலதெய்வம் சிவனும் சக்தியும்.
மீராவோ கண்ணனைத் தவிர வேறு தெய்வங்களைத் தொழாதவள். இதிலேயே பிரச்சினை ஆரம்பித்தது.

ஆயினும் மீரா பணிவோடு தன் கொள்கையைக் கணவனிடம் கூறி
அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைக் குறைவின்றி செய்தாள்; குடும்பகாரியங்களை சரியாக கவனித்து முடித்தபின்னரே தனது தெய்வ மணாளனுக்கு வழிபாடுசெய்வாள்; ஆடல்பாடல் சேவைகளில் மனதைப் பறி கொடுப்பாள்.

போஜராசன் ராஜபுத்ரவீரன் ..அழகன் ..மீராவிடம் காதல்கொண்ட அன்புக் கணவன். அவளை உயிரினும் மேலாய் நேசித்தான். அவளோ ஆண்டவனிடமே மனதைச் செலுத்தினாள். தெய்வீக்காதலைப் புரிந்துகொள்ளாத புகுந்த வீட்டார் அவள் கற்பில் மாசு கூற, ஒரு நாள் போஜன் உருவிய வாளோடு மிராவின் பூஜை அறைக்குள் நுழைந்தான்.


அங்கே மீரா கிரிதர கோபால விக்கிரஹத்திடம் மனமுருக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவன் கோபம சட்டென மறைந்தது .
ஆனாலும் மனைவிக்கு புத்தி பேதலித்து விட்டதென வருத்தமாயும் வந்தது .
மீரா மீதுள்ள அன்பில் அவளுடைய கண்ணனுக்காக ஆலயம் கட்டி கொடுத்தான்.

அக் கோயில் மூலமாய் மீராவின் வெளி உலக உறவு வளர்ந்தது. சத்சங்கம் சாதுக்கள் என மீரா பக்தியுடன் பாடிஆடி பக்தியின் உச்சத்திற்கே போய்விட்டாள். மீராவின் புகழ் நாடெங்கும் பரவியது.
மொகலாய மன்னர் அக்பர் காதுக்கு அது எட்டியது.
மன்னர் சர்வ சமய சமரசத்தை ஆதரித்தவர். அவர் மீராவின்ன் பக்தியால் கவரப்பட்டு அவளைக் காண விரும்பினார்.

காலங்காலமாய் இரு பிரிவினருக்குள் கடும்பகை வேறு .அதனால் அக்பர் தன்னை ஹிந்து சாது போல மாறுவேடம் போட்டுக்கொண்டு சித்துர் வந்து மீராவின் பாதங்களை பயபக்தியுடன் தொட்டார். அவளுடைய கிருஷ்ணனுக்கு விலை உயர்ந்த முத்து மாலைகளை அளித்துச் சென்றார்.
இந்தச் செய்தி போஜனுக்கு எட்டி விட்டது, வந்துபோனது அக்பரென்றும் சித்துரின் ஜன்மசத்ரு மீராவின் பாதங்களைத் தொட்டது
மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ராஜபுத்திர குலதிற்கே அது களங்கம் என்றும் கொதித்தனர்.

மீராவை ஆற்ரில் குதித்து உயிரைவிட போஜன் கட்டளையிட்டான்.
மீராவும் அதை ஏற்று ஆற்றில் குதித்தாள் ஆனால் பின்னாலேயெ கண்னனின் அன்புக்கரங்கள் அவளை அணைத்து மேலேற்றியது.
காதோரம் 'இன்றோடு உலகபந்தம் உனக்கு அற்றது, ஸ்ரீ பிருந்தவனம் சென்று அங்கே நீ என்னைச் சந்திப்பாய் 'எனக் கூறி மறைகிறார்

ப்ருந்தாவனத்தில் மீரா கண்ணனுக்காக பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை.



சூர்தாஸ் துளசிதாஸ் மீரா என ஹிந்தி கவிகளில் மூவரே முதல் சிறப்பு வாய்ந்தவர்கள்.
குஜராத்தியிலும் கவிதை எழுதினாள். குஜராத்தி இலக்கியத்தில் நர்சீ மேத்தாவுக்கு அடுத்த இடம் மிராவுக்கு உண்டு.

வையந் தகளியாக வார் கடலே நெய்யாக இந்த பிரபஞ்ச விசாலத்தின் அழகொளியிலும் பின்னர் உருகி உருகி
'அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா இன்று சிந்தை இடு திரியா' ஏற்றிய அன்பு விளக்கின் ஒளியிலும் முதலாழ்வார்கள் இறைவனைக்
காணவில்லையா! அப்படியே மீராவும் பாடுகிறாள்.

எந்தன் உடலை விளக்காக்கி
இடுதிரியாக்கி இதயத்தை
உன்பால் உள்ள காதலையே
எண்ணை ஆக ஏற்றிடுவேன்
இரவும்பகலும் எரியட்டும்
அருள்மிகுஅடியார் கூடிடும் உன்
அழகிய சந்நிதி முன்னிலையில்
உன்னைப் பிரிந்து ஒருக்கணமும்
இருக்கமாட்டேன் இனி ஐயா
என்னை உனதாய் ஏற்றுக்கொள்
என்னை உனைப்போல் ஆக்கிவிடு

தமிழ்நாட்டு ஆண்டாளுக்கும் ராஜபுதனத்து மீராவிற்கும் வாழ்வின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது.
கண்ணனையே மணாளனாய் மனத்தில் வரித்துக்கொண்ட மாமங்கையர்கள் இருவரும்.

' மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்' என்ற ஆண்டாளை ஸ்ரீரங்கதிற்கே அரங்கன் அழைத்தான்.
மீராவையும் கண்ணன் ப்ருந்தாவனத்திற்கு அழைத்தான்.
திருஅரங்கத்தில் இறைவனுடன் இரண்ரடறக் கலந்தாள் ஆண்டாள்.
துவாரகையில் ஆடிப்பாடியபடியே கண்ணன் சந்நிதியில் மீராவும் இறைவனோடு ஒன்றாகக் கலந்தாள் என்கிறது மீராவின் வரலாறு.

பல்லாண்டுகள் மறைந்தாலும் மீராவின் பாடல்கள்
காற்றினிலே வரும் கீதமாய்
இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

******************************************************************************************************************

Sunday, April 22, 2007

உடையவர், உறைபவர்!

கண்ணன் ராதை - இவர்கட்கு மட்டும் தான் இடமா? - இந்த வலைப்பூவில்?
யார் சொன்னது? அவனைக் காட்டிலும் இரக்கம் உள்ளவர்க்கு எல்லாம், இப்பதிவில் இடம் உண்டே!

அவனைக் காட்டிலும் இரக்கம் "உடையவர்" யார் அப்பா?

அதான் உங்க கேள்வியிலேயே பதில் சொன்னீரே அப்பா!
உடையவர், அவரே தானப்பா! உடையவர், அனபர் நெஞ்சில் உறைபவரப்பா!

இராமானுசரின் திரு அவதார நாள் இன்று! அவர் மறைந்த (பரமபதித்த) தினமும் கூட! சித்திரைத் திருவாதிரை.

அது என்ன உடையவர்?
பெருமாளின் தர்ம பத்தினி சாட்சாத் மகாலக்ஷ்மி, அவருக்கு இட்ட பெயர்!
நம் பெரும் குல தனத்துக்கு எல்லாம் உடையவர் இவர்! அதனால் உடையவர்!
எல்லாச் சாதிக்கும் மதங்களுக்கும் உடையவர்.
அவர்களை எல்லாம் பெருமாளுக்கு உடையவர் ஆக்கும் உத்தமர்!
அதனாலும் உடையவர்!!

ramanuja_1.0ramanuja_2.0ramanuja_3.0

1. இளையாழ்வார் - பிறப்புப் பெயர் - பெரிய திருமலை நம்பிகள் இட்டது
2. ராமானுஜர் (ராம+அனுஜர்=ராமனின் உடன் பிறந்தான்=இலக்குவன்) - பெரிய திருமலை நம்பிகள் தந்தது
3. பரதபுரீசர் - பெரிய திருமலை நம்பிகள் தந்தது
4. யதிராசர் (யதி+ராசர்=முனிவர்க்கு அரசர்) - காஞ்சி வரதராஜப் பெருமாள் தந்தது
5. உடையவர் - ரங்கநாதனும், ரங்கநாயகியும் தம் சொத்தைத் தந்து, பேரையும் தந்தது
6. தேசிகேந்திரன் - திருமலை வேங்கடேசன் தந்தது
7. ஸ்ரீ பாஷ்யகாரர் - கலைமகள், சரஸ்வதி தேவி தந்தது
8. திருப்பாவை ஜீயர் - பெரிய நம்பிகள் தந்தது
9. எம்பெருமானார் - திருக்கோட்டியூர் நம்பி தந்தது
10. நம் கோயில் அண்ணன் - வில்லிபுத்தூர் ஆண்டாள் தந்தது
11. சடகோபன் பொன்னடி - திருமலையாண்டான் தந்தது
12. லக்ஷ்மண முனி - திருவரங்கப் பெருமாள் அரையர் தந்தது


இறும்பூதெய்தும் மனம்
இராமானுஜனை நினைக்கும் கணம்


வைணவத்தின் வைரமணி
வேதாந்த சிகாமணி
சூடிகொடுத்த நற்பெண்மணி
அவளுக்கு முன்னான மாமுனி


அரங்கனுக்கு உடையவன்
அன்பருக்குள் உறைபவன்

சீரார் மதில்கள் சூழ்
திருவரங்கத் திரு நகரினில்
காரார்ந்த மேனியனின்
காலடியைத் துதிப்பவன்


ஆதிரைநட்சத்திரம் கொண்ட
தீதிலா வைணவ ஜோதி
(அவன்)ஓதியதெல்லாம்

'அண்ணலின் அடியார்
அனைவரும் ஒரே ஜாதி!"

******************************

இராமானுச ஜெயந்தியை முன்னிட்டு
ஷைலஜா (திருவரங்கப்ரியா) எழுதிய பாடல்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP