Showing posts with label திருமஞ்சனம். Show all posts
Showing posts with label திருமஞ்சனம். Show all posts

Thursday, June 05, 2008

94. தாயார் குளிக்கும் அழகு - வெள்ளிக்கிழமை நீராட்டம் காணுங்கள்!

குளிப்பதைக் காணலாமா? குளிர்விப்பதைக் காணலாமா?
இறைவன் இறைவிக்குச் செய்யும் திருமுழுக்கு (அபிஷேகம்), திருமஞ்சனங்கள் வெறுமனே குளிப்பாட்டும் செயல் அல்ல!
உலகையும் உலகைத் தாங்கி நிற்கும் அகண்ட பரிபூர்ண சக்தியையும் குளிர்விக்கும் செயல் அது! கண்ணாரக் கண்டு தரிசிக்க வேண்டிய காட்சி!

உங்கள் வீட்டுக் குழந்தையைக் குளிப்பாட்டும் காட்சியை எத்தனை பேர் ரசித்துப் பார்த்து இருக்கீங்க?
என்ன என்னவெல்லாம் பாப்பாவுக்கு வீட்டில் பண்ணுவாங்க?
முதலில் மிதமான இதமான வெந்நீரில் சுகந்தப் பொடிகள் தூவி, நீர் வார்த்து விளவி வைப்பாங்க! பின்பு எண்ணெய்க் காப்பு! பின்பு வாசனைத் தூள் சீயக்காய் சேர்த்து, பூசி நீராட்டுவாங்க!

குளித்து முடித்ததும், தலையும் மேனியும் துவட்டி, பஞ்சுத் துவாலையால் ஒத்தி ஒத்தி எடுப்பாங்க!
கூடைக்கு அடியில் சாம்பிராணிப் புகை போட்டு, பாப்பாவின் கூந்தலை கூடை இடுக்கில் காட்டி நறுமணம் சேர்ப்பாங்க! ஆகா...அந்தக் காட்சியே காட்சி அல்லவா? இப்பவும் யாராச்சும் கூடை-சாம்பிராணிப் புகை காட்டுறாங்களா?

பின்பு மேனியெங்கும் பவுடர் பூசி, நெற்றியில் திலகமிட்டு, கன்னத்தில் கருஞ்சாந்து பொட்டு வைத்து திருஷ்டி கழிப்பாங்க! பட்டாடை உடுத்தி, நவமணி நகைகள் பூட்டி, கண்ணே நவமணியே என்று கண்ணேறு கழிப்பாங்க! "நாரணா நீராட வாராய்"-ன்னு பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனின் நீராட்டுக்கு என்றே பல பாசுரங்கள் பாடியுள்ளார்!



குழந்தைக்குச் செய்வதையே தான், இங்கு தாயாருக்கும் செய்கிறார்கள்!
தாயார் யார்? யாருக்குத் தாயார்? - எனக்கா? உனக்கா? உங்களுக்கா?
அவனுக்கா? அவளுக்கா? தேவனுக்கா? அசுரனுக்கா? விலங்குக்கா?
அனைவருக்கும் தாயார் அவள்! உலகன்னை! ஜகன் மாதா! ஜன்ம மாதா!

நம்மை ஈன்ற தாய் இந்த ஒரு ஜன்மத்துக்கு மட்டும் தான் அன்னை ஆகிறாள்! ஆனால் இவளோ ஜென்ம ஜென்மத்துக்கும் அன்னை!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நம் ஜீவனுக்குப் பாலூட்டிச் சீராட்டும் அம்மா!

அவளை நீராட்டும் திருமஞ்சனக் காட்சி கீழே! கீழ்த் திருப்பதி என்று சொல்லப்படும் திருச்சுகனூர்! (திருச்சானூர்).
அங்கே அன்னைக்குப் பார்த்து பார்த்துச் செய்யும் ஸ்நானாதி தூப தீப சேவை! கீழுள்ள வீடியோவில் கண்ணாரக் காணுங்கள்!

சிவாலயங்களில் அபிஷேகம் என்றால் பெருமாள் ஆலயங்களில் திருமஞ்சனம்...நீரில் கொஞ்சம் மஞ்சள் கலந்து நீராட்டுவதால் இந்தப் பெயர்! அவ்வளவு தான் இரண்டிற்கும் வித்தியாசம்! அந்த நீரில் சுகந்த பரிமள பொருட்களான பச்சைக் கர்ப்பூரம், ஏலக்காய், வெட்டிவேர், மலர்கள்,
எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிகப் பவித்திரமான துளசீ தளம்!
நீர்-பால்-தயிர்-தேன்-இளநீர் என்று பஞ்சாமிர்த முழுக்கு!


ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தூபம் காட்டி, பட்டுத் துணியால் ஒத்தி எடுப்பது வழக்கம்!
ஐந்து அபிஷேகங்களும் முடிந்த பின் மஞ்சள் காப்பு செய்து, குங்குமப் பூ இடுகிறார்கள்! ஆயிரம் துளைகள் கொண்ட தாம்பாளத் தட்டின் வழியாக, தாரை தாரையாக அபிஷேகம்! சஹஸ்ர தாரை என்று பெயர்!
Shower Bath என்று சொல்லலாமா? :-)

கண்ணாரச் சேவித்துக் கைகூப்பி மகிழுங்கள்! நம்மைச் சிறுவயதில் குளிப்பாட்டிய அன்னைக்கு, இன்று நாம் செய்யும் திருமஞ்சனம்!
இசையரசி எம்.எஸ்.அம்மாவின் தேன் குரலில், அன்னமாச்சார்ய கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது! அதை எளிமையான தமிழாக்கம் செய்துள்ளேன்! பாட்டின் மெட்டு மாறாமல்!

படித்துக் கொண்டே பாடிப் பார்த்து தமிழாக்கம் எப்படி இருக்குன்னும் சொல்றீங்களா?
ஒலிச்சுட்டிகள் இதோ:
* இசையரசி எம் எஸ் அம்மா
* பாலமுரளி
* பம்பாய் சகோதரிகள்
* வீணை - காயத்ரி


ஷீராப்தி கன்யககு ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி
நீரஜா லயகுனு நீராஜனம்

பாற்கடல் பாவையாம் திருமகள் லட்சுமிக்கு
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி


ஜலஜாக்ஷி மோமுனகு ஜக்குவ குசம்பு லகு
நெலகொன்ன கற்பூரப்பு நீராஜனம்
பங்கயக் கண்ணினள் பால்முலைத் தாயினள் - அவள்
நிலையழகு கற்பூரத் தீப ஆரத்தி

அளிவேணி துருமுனகு, ஹஸ்த கமலம் புலகு
நிலுவு மாணிக்யமுல நீராஜனம்

மட்டுவார் குழலிக்கு, அவள் பங்கயக் கைநலம்
மாணிக்க மணியினால் தீப ஆரத்தி


பகடு ஸ்ரீ வேங்கடேசப் பட்டப் புராணீயை
நெகடு சதி களல குனு நீராஜனம்

அழகனவன் வேங்கடவன் பட்டத்து அரசிக்கு
நற்குண நங்கைக் கொரு தீப ஆரத்தி

ஜகதி அலமேலு மங்கா சக்கதன முல கெல்ல
நிகுடு நிஜ ஷோபனபு நீராஜனம்

அவனி அலர்மேல் மங்கைச் செல்வ நாயகி அவள்
அழகான வடிவுக்கு ஒரு தீப ஆரத்தி


ஷீராப்தி கன்யககு நீராஜனம்!ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி நீராஜனம்!நீரஜா லயகுனு நீராஜனம்!
பாற்கடல் பாவைக்குத் தீப ஆரத்தி!
திரு மகாலட்சுமிக்குத் தீப ஆரத்தி!
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி!


பாடல்: க்ஷீராப்தி கன்யககு
ராகம்: குறிஞ்சி
தாளம்: கண்டசாபு
வரிகள்: அன்னமாச்சார்யர்



கண்ணன் பாட்டு இன்னும் சில நாட்களில் செஞ்சுரி அடிக்கப் போகிறது! நூறைத் தொடும் இந்த நல்வேளையில்,
அடுத்த வாரம் முழுதும் திருவரங்கப் ப்ரியா என்னும் பதிவரின் தலைமையில் சிறப்புக் கச்சேரிகள் இருக்கு! எல்லாரும் வந்து கொண்டாடி மகிழுங்கள்!
Stay Tuned! :-))

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP