சென்ற ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணியில் நாரதரைச் சந்திக்க நேர்ந்தது. நாரதர் என்றால் யாரோ எனக்கு மட்டும் தெரிந்தவர் என்று எண்ணிவிட வேண்டாம். நம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தவர், தேவரிஷி நாரதர் தான். இடையில் வீணையுடன் (திரைப்படங்களில் தம்புராவுடன்) "நாராயணா ! நாராயணா !" என்று உச்சரித்துக் கொண்டே அலையும் பாகவத உத்தமரே தான். அதிர்ச்சியோ ஆச்சர்யமோ அடையாமல் நம்பிக்கையுடன் மேற்கொண்டு படிக்கவும்.
அல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயார் சன்னிதிக்கு எதிரே ஒரு சிறு மண்டபம் இருக்கும். புளியோதரை, சக்கரைப் பொங்கல், அதிரசம், அப்பம் என்று எதை வாங்கினாலும், இங்கே வந்து அமர்ந்து சாப்பிடுவது சிலர் வழக்கம். அம்மாதிரி நானும் அன்று இரவு அங்கு அமர்ந்துக் கொண்டு, தட்டை(வடை) சாப்பிட்டுக் கொண்டே மனதில் கண்ணனைப் பலவாறாகத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தேன். பல விதமான எண்ணங்கள். கவலை மேல் கவலைகள். மனித பிறவியே ஒரு வீணான பிறவி என்று தோன்றிற்று. திடீரென எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நிறைய படித்தது தான் என்று தோன்றியது. அதனால் அன்றோ இந்தக் கணினித் துறையில் சிக்கிக் கொண்டு எதற்கும் ஒழுங்கான நேரம் கிடைக்காமல் அல்லாடுகிறோம் என்று தோன்றியது. வேலையை விட்டு விட்டு விட்டலனே கதி என்று கிடக்கும் அளவிற்கு உள்ளத் துணிவும் இல்லை. ஏன் நிறைய படித்தோம் என்று தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.

திடீரென எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் தெய்வம் தான் என்று மனம் அடித்துச் சொல்லியது. நம்மை இவ்வளவு பாடு படுத்துவது கண்ணன் என்றால் அவனையே திட்டுவோம் என்று முடிவு செய்து தான் பலவாறு திட்டிக் கொண்டிருந்தேன். "என்னைப் பற்றி உனக்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? இப்படியே வாழ்நாள் எல்லாம் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டு இருக்கிறேனே, நல்ல சங்கீதம் கேட்க நேரம் கிடைக்கிறதா? நல்ல புத்தகங்கள் படிக்க முடிகிறதா? அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? ஒரு காலத்தில் தினமும் உன் வீட்டு சக்கரைப் பொங்கல் உண்டு மகிழ்ந்தேனே, இப்பொழுது வாரம் ஒரு முறை பொங்கல் கிடைப்பதே அரும்பாடாய் இருக்கிறதே ! உன் மனைவி ருக்மிணி பிராட்டிக்கும் என் மேல் அக்கறை இல்லை. ராமனுக்கும் இல்லை. சீதைக்கும் இல்லை. அரங்கனுக்கும் இல்லை. யாருக்கும் இல்லை. எல்லோரும் மாலை வாங்கி வந்தால் மட்டும் சந்தோஷமாக வாங்கி சாற்றிக் கொள்கிறீர்கள். வெறும் கையுடன் வந்தால் பட்டர் மூலமாக, 'மாலை ஒன்றும் இல்லையா?' என்று கேள்வி மட்டும் கேட்கிறீர்கள் !" என்று பலவாறாக எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.
தாயார் சன்னிதியில் மேல் மாடங்களில் அமைதியாக அமர்ந்திருந்த புறாக்கள் மனதில் வேறு புதுச் சிந்தனைகளைத் தோற்றுவித்தன. அவற்றின் கரு அடுத்தப் பிறவியில் என்ன உயிரினமாகப் பிறக்கலாம் என்பதே. இவ்வாறு தீவிர சிந்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது தான், த்ரிலோக சஞ்சாரியான நாரதர் என் முன்னர் பிரசன்னமானார். ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசம் என்பார்களே, அது இப்படித் தான் இருக்குமோ என்று எண்ணும் அளவிலான ஒரு தெய்விக ஒளிவட்டத்திற்குள் தேவரிஷி நாரதர் திவ்ய தரிசனம் தந்தார். "நாராயண நாராயண ! கண்ணனின் நண்ப ! கவலைகள் மறப்பாய் ! " என்ற சொற்கள் என் காதுகளில் ஒலித்தன. காண்பது கனவா இல்லை நனவா என்று தலைகால் புரியாமல், பேச்சு ஒன்றும் வராமல் திக்கித் திணறி "ஹலோ நாரதரே !" என்ற வார்த்தைகள் என் நாவில் இருந்து வெளிப்பட்டு என்னை ஆச்சர்யப்படுத்தின. "அடச்சே! இதென்ன ! இரு கை கூப்பி நாரதருக்கு நமஸ்காரம் அல்லது வணக்கம் என்று சொல்லாமல் இவ்வாறாக மரியாதை இல்லாமல் பேசினோமே !" என்று உள்மனம் கடிந்துக் கொண்டது. நாரதர் ஏன் அப்பொழுது வந்தார், அவருடன் நடந்த உரையாடல் பற்றி எல்லாம் இந்தப் பதிவிலேயே சொல்லிவிட முடியாது. ஆரம்பத்தில் நடந்தவற்றை மட்டும் சொல்கிறேன்.
என் உள்மனம் நினைத்ததை எப்படியோ அறிந்த நாரதர், "ராதா ! நீ கண்ணனிடம் மாறாத நட்புரிமை கொண்டுள்ளதால் அதன் தாக்கம் அவனைச் சேர்ந்தவர்களிடமும் வெளிப்படுகிறது. நட்பில் மரியாதை பார்க்க வேண்டாம். என்னையும் உனது நண்பராகப் பாவிக்கலாம்." என்று செவிக்கும் மனதிற்கும் இனிமை தரும் வார்த்தைகளைப் பேசினார்.
"ஆஹா ! உங்களைக் கண்டதில் என் உள்ளத்தில் புதுத் தெம்பு ஏற்ப்பட்டுள்ளது. என் கவலைகள் எல்லாம் பறந்துவிட்டன ! " என்று உற்சாகத்துடன் பேசினேன்.
"நாராயண ! நாரயண ! இது தான் கலி காலம் என்பதோ? உனக்கே கவலை வந்திருக்கிறதே ! " என்றார் நாரதர். "உன்னை இவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கும்படி செய்த விஷயம் தான் என்ன ராதா ? என்னிடம் சொன்னால் தக்க உபாயம் சொல்வேன்", என்றார் நாரதர்.
நாரதர் இவ்வாறு கேட்டவுடன் எனக்கு என்ன பதில் உரைப்பது என்று தெரியவில்லை. நண்பர் என்று சொல்லிவிட்ட போதிலும், சற்று முன்னர் எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருந்தக் கதையை எல்லாம் கேட்டால் என்ன நினைப்பாரோ என்று தோன்றியது. நமக்கு பக்தி குறைவு தான். நல்ல மன நிலையில் இருந்தால் எல்லோரையும் போற்றுவோம். இல்லையேல் வசைபாடுவோம். ஆனால் இதை எல்லாம் நாரதரிடம் சொல்லிக் கொள்ளத் தேவையில்லை என்று தோன்றியது.
திடீரென, சற்று முன்னர் இருந்த எனது கவலைகள் எல்லாம் எனக்கே மிகவும் அற்பமாகத் தோன்றின. "அது ஒன்றும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை நாரதரே ! கண்ணன் பாடலில் இரண்டு உருக்கமானப் பாடல்கள் பதிவு செய்யலாம் என்று எண்ணம். ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதப் போகிறேன். எப்படிப் பதிவிடுவது என்று சிந்தனை செய்து கொண்டிருந்தேன்" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கதையைத் திரித்தேன்.
த்ரிகால ஞானியான நாரதர், நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்பதை அறியாதவரா? ஆனாலும் பெரியோர் என்றும் பெரியோரே ! பாகவதர்களில் சிறந்தவர், நற்குண நாரதர், என்னை சங்கடத்தில் ஆழ்த்தாமல், என் கதையை உண்மையாக்கி அவை என்ன பாடல்கள் என்று கேட்க, உரையாடல் மேலும் வளர்ந்தது. அவருடன் பேசியதில் துவாரகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஒரு பாடலுடன் சம்பந்தம் பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். இரண்டில், "பக்த மீரா" படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை முதலில் இடுவது என்றும், நாரதர் எனக்கு சொன்ன சில தகவல்களுடன் இரண்டாம் பாடலை பதிவு செய்வது என்றும் நிச்சயம் செய்தேன். அதன்படி, மீரா படப்பாடல் வரிகளைக் கீழே பார்க்கலாம். இரவின் அல்லது பின்னிரவின் அமைதியான நேரத்தில் கேட்க வேண்டிய அற்புதமான பாடல்.
எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் அமைந்துள்ள இந்தப் பாடலை
இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சராசரம் உன்னை யாவும் தேடுமே...
மறைகளும் மகிழ்ந்து உன்னைப் பாடுமே....ஹே ப்ரபோ !
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே !
உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா !
கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ !
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா?
இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !

இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும் !
அனலில் மெழுகென அகமும் உருகும் !
"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !
இதயமும் பதறும் ஐயா !
பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா !