Showing posts with label சங்கர். Show all posts
Showing posts with label சங்கர். Show all posts

Sunday, September 11, 2011

மேகங்களை கண்டு மிரள்கிறேன்



பல்லவி:

மேகங்களை கண்டு மிரள்கிறேன் - கண்ணா
தேகத்தை மட்டுமே நனைக்கவரும் - நீர்
(மேகங்களை)

அனுபல்லவி:

பாகனின் கட்டை மீறிய மதக்களிறென
வேகவேகமாய் வந்து சூழ்ந்திடும் - கரு
(மேகங்களை)

சரணங்கள்:

மின்னல்களே வேள்வித் தீயாக - அந்தப்
பேரிடிகள் மந்திரங்கள் தான் முழங்க
குளிர்காற்றே என்னை புகையாய்த் தழுவி
பலனாக பிரிவை மேலுமுணர்த்த வரும்
(மேகங்களை)

கூடும் பொழுதை எதிர்காணும் பேடைமுன்
ஆடும் மயிலின் அகவல் சத்தமும்
நாடும் நங்கையரின் கலியை தீர்த்திட
ஓடும் ஆடவரின் காலோசையும் தந்திடும்..
(மேகங்களை)

வெள்ளம் புரளும் யமுனைக் கரையில்
கள்ளன் வருகைக்கு காக்கக் கண்டு
வெள்ளை நிலவு எள்ளாத குறையை
முல்லை மலர்களே போக்கத் தூண்டும்

மேகங்களை கண்டு மிரள்கிறேன் - கண்ணா
தேகத்தை மட்டுமே நனைக்கவரும் - நீர்

Wednesday, August 24, 2011

கிரிதாரிக்கு திருநீர்


மீரா என்று ஒரு முறை கூறிப்பார்க்கின் இனம் விளங்காத ஒரு வலி நம்மை பற்றிக் கொண்டு விடுகிறது. நாம் இப்போது அறியப் போகும் அவளின் பாடல், அவளுடைய இளம் பிராயத்தினது அன்று, தன்னுடைய முதிர்ந்த அகவையில் இயற்றியது. தன்னை மறுதளித்து கொண்டே வருகிறானே இந்த மாய கிரிதாரி; ஒருவேளை அவனுக்கு அவளின் பிரேமை என்பதும் சலித்தும் போனதோ? அன்று பெண்கள் என்றால் ஒவ்வாத நோயும் கொண்டானோ ? இல்லை துறவியாகி விட்டானோ ? என்று பலவாறு எண்ண அலைகள் தோன்றி மறைந்தன அந்த அடிமைக்கு!

அவன் ஒரு வேளை துறவியாக மாறிவிட்டனானால்; இனி ஒரு முறை எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதற்கில்லை, தன்னிடம் வாராததர்க்கும் காரணம் கேட்டு அறிவதற்கில்லை; பிரேம பக்தியில் தான் அவிழ்க்க இயலாத புதிர்களின் விடைகளை அறிவதர்க்குமில்லை. ஹே ! கிரிதாரி நீ துறவியாகவே ஆகியிருப்பினும் எனக்கு ஒரு வழி சொல்லியே தீர வேண்டும்..

அந்தோ! மாயவ .. நீ துறவியாக வந்து சேர்ந்தால், உனக்கு என்னால் என்னதான் தர இயலும். வனமாலை தான் தொடுத்து சூட்ட முடியுமா ? பட்டு பீதாம்பரங்களை உடுத்த தர முடியுமா ? சுகந்தம் வீசும் திரவியங்களை அள்ளி உன் மார்பில் பூச முடியுமா ? உன் கண்களை தீரா மோகத்துடன் பார்க்க முடியுமா ? கட்டி அணைக்க முடியுமா ?
இல்லை மூச்சு முட்ட முத்தம்தான் இட முடியுமா ? எதற்கும் இம்மி அளவும் சாத்தியம் இல்லை..

அந்த துறவிக்கு அவளால் தர இயன்ற ஏதேனும் ஒன்று உண்டா? உண்டென்றால் அது என்ன? துறவிக்கு உகந்த வஸ்து ..மீராவால் தர இயன்ற ஒன்று.. சாம்பல்!

ஆம், துறவியாக வரும் அவனுக்கு இவள் தர முடிவு செய்தது, துறவிகள் அங்கமெல்லாம் பூசிக்கொள்ளும் சாம்பல்தான்.. அதென்ன அவ்வளவு சாதாரணமான ஒரு வஸ்துவை தருகிராளே, என்று யாரும் எண்ணக் கூடாது என்றேதான், அதன் செய்முறையையும் தன் பாடலில் இயற்றி உள்ளாள். துறவியும் விரும்பும் சாம்பலாகவே மாறி அவன் அங்கம் தழுவி நிற்கவும் தயாரானாள்.

ஹே பிரபு.. நீ சந்தனமென்றால் நான் தண்ணீர்..
ஹே பிரபு.. நீ சூரியனென்றால் நான் சந்திரன்
ஹே பிரபு.. நீ முத்துக்கள் என்றால் நான் நூல்..
ஹே பிரபு.. நீ துறவியானால் நான் சாம்பல்..
ஹே பிரபு..நீ கிரிதாரி நான் உந்தன் தாசி..

பாடல்..


மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..
பாவ் பரூன் மே.. சேரி தேரி..

செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..
பாதம் பணிந்தேன் பேதை உந்தன்..

பிரேம பக்தி கி பெந்தோ ஹி ந்யாரோ..
ஹம்கோ கேல் பதா ஜா..

பிரேம பக்தியின் பாதையில் புதிர்கள் ..
பகர்ந்திடு பதில் ஒன்று எனக்கு ..

அகர் சந்தன் கி சிதா பனாஊன்
அப்னே ஹாட் ஜலா ஜா

சந்தனத்து விறகினில் சிதையொன்று செய்தால்
உந்தனது கையினால் எரியூட்டு..

ஜல் பல் பை பஸ்முஹீ டெரி..
அப்னே அங்கு லகா ஜா
மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..

என் சவமது எரிந்து சாம்பலாய் குறைந்தால்
உனது மேனியில் பூசிக்கொள் - ஸ்வாமி
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..

மீரா கஹே பிரபு கிரிதர நாகர
ஜோத் சே ஜோத் மிலா ஜா - ஜோகி ..

மீரா கோரும் பிரபு கிரிதர நாகர
உந்தன் ஜோதியில் கலந்திடு என்னை ..
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..

Monday, June 13, 2011

நித்தியமும் வந்து சத்தியங்கள் செய்தவன்...





நித்தியமும் வந்து சத்தியங்கள் பலசெய்த
வித்தகன் வேணுகான லோலனை கண்டாயோ!

வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..
நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !

ஆயர்க்குலச் சீயன் அவன் அங்கம் வழியும் கருமையை
சாயம் பூசினான் சந்திரன் தவழும் விண்ணிற்கு..
வியர்வையாய் சுரந்தனன் மாயன் மழையதனை - அதில்
மண்குளிரச் செய்வதாய் ஏழை மனம் குளிர்வித்தானடி..

Friday, March 25, 2011

ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி...



ராஜபுத்தானத்து அரசிகள் அந்த புரத்தை விட்டு வெளியே வந்ததாக சூரியனும் அறிகிலன். குடும்பத்து மூத்தவர்களுக்கு முன்பும் முகத்திரை அணிந்தே வலம் வந்தனர். நட்டு மக்களில் ஒருவரும் அவர்களின் வதனத்தை கண்டு அறிந்திலர்.

ஆனால், மீரா என்ற அந்த கவி படும் குயில், அரண்மனை எனும் ஸ்வர்ண கூண்டை விட்டு பறக்க வேண்டியதாயிற்று. அவளின் கிரிதரியைத் தேடி , அவளின் ஜீவதாரத்தைத் தேடி. அவளுடைய பதினாறாம் நூற்றாண்டு சமூகத்தினில், பெண்மை மற்றும் கலாச்சாரம் சார்ந்த கட்டுப்பாடுகளை தகர்த்தெறிவது ஒரு மகா பாவமாக கருதப்பட்டது.

இதற்க்கெல்லாம் மேலாக கிரிதாரியை அடையும் இயக்கத்தின் ஒரு முகமாக, தன்னை அவள் ராஜபுத்தானது சுட்டெரிக்கும் பாலைவனத்தின் நடுவே கண்டாள். மீராவின் மிருதுவான பாதங்களை மென்மையான மணல் துகள்கள் பொசுக்கியது. அலைந்தாள் திரிந்தாள், அந்த கருணையற்ற பாலையோ அவளுக்கு தர இயன்றதல்லாம் உடல் முழுதும் கொப்பளங்களும், புண்களும், முட்கீரல்களும்தான்.
தன் கிரிதாரியைத் தேடி அவள் பாலை நிலத்தில் திரிந்தது ஓர் வெப்பமான நிஜம். அந்த தருணத்திலும் அவளின் உடற் காயங்களை விட, மனக் காயங்களின் வலியானது மிகுந்தது. அழுதாள் ஆர்ப்பரித்தாள், அவன் வரவில்லை. தான் இத்துனை துயரம் எய்தியும் தன்னிடம் இரங்காத கிரிதரனின் இயல்பை எண்ணி வாடினாள்.
அவள் தன் உயிரையே உருக்கி அழும் அவ்வமயம், சூடான புழுதிப்புயல் வீசியது. எங்கும் தனிமை .. மாயவனை காணாள், மருகி நின்றாள். அவள் துன்பம் அனைத்தையும் ஒன்று திரட்டி கவிதை புனைந்தாள். அது கவிதை அல்ல, அவளின் தினக் குறிப்பு. அவள் பட்ட வேதனைகளை கூறும் ஒரு கண்ணாடி. அவள் காதல் ஆழத்தை நினைவுறுத்தும் ஒரு மேவாரி மொழிக் கிணறு.

ஹேரி மேய்ந தோ பிரேம் திவானி
மேரோ தரத் ந ஜானே கோயி..

எந்தன் வலி அறிவார் யாரும் இல்லை
ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி... எந்தன்

காயல் கி கதி காயல் ஜானே
கி ஜின் காயல் ஹோய ..

ஜோஹர் கி கதி ஜோஹர் ஜானே
கி ஜின் ஜோஹர் ஹோய.. மேரோ

காயத்தின் வலியை காயமடைந்தவளே அறிவள்..
தீயின் வெம்மையை தீக்குளித்தவளே அறிவள்..
எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...

சூலி ஊபரு சேஜ் ஹமாரே ; சொவனு கிசு விது ஹோய ?
ககனு மண்டலு மேய்; சேஜ் பியா கே கிசு விது மீலன்னு ஹோய ? மேரோ

முட்களின் மீது மஞ்சம் எனது நித்திரை எவ்விதமே..?
முதல்வனின் மஞ்சமோ வான வெளியில், இணைவது எவ்வழியோ ?
எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...

தரத் கீ மாரி வனு வனு டோலூன்
வேய்த் மிலா நஹி கோயி
மீரா கி பிரபு பீர் மிடேகி
ஜப் வேய்த் சாவரியா ஹோய.. மேரோ ..

வலியையும் விஞ்சி வனம் துழாவி நின்றேன்
வைத்தியன் ஒருவனையும் காணேன்..
மீராவின் பிரபு இனிமையை கொணர்வான்..
அவனே வைத்தியனாய் வருவான்...

(அது வரை ) எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...
ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி... எந்தன்

Sunday, March 06, 2011

கண்ணனாகக் கண்டால்



கண்ணனாக கண்டால் கல்லும் கமழ்ந்திடும்
மன்னவன் வடிவிற்கு நிகரில்லை மாரனும்..


வெண்ணை உண்டு உண்டு மேனி செழித்திடும் - அவன்
வண்ணத் திருமார்பை வண்டினம் மொய்த்திடும்
சின்னத் தனமனைத்தும் செய்து களித்திடும் - என்
கண்ணில் நீரைக் கண்டால் உள்ளம் குழைந்திடும்.
கண்ணனாக...


தண்ணிய வெண்ணிலவு மின்னிய கோபியர் - என
நன்னிய நாட்டியத்தில் நாட்டம் செலுத்திடும்
திண்ணிய மனமொன்றைக் கொண்டு திகழ்ந்திடும் - எனை
தன்னந் தனியனாய் வாட்டி மகிழ்ந்திடும்.
கண்ணனாக...

Thursday, February 03, 2011

சல்லாபம்



இனிமையான மாலைப் பொழுது.. ஆலாபனை ஒன்று காற்றில் தவழ்ந்து வந்தது. என்ன ராகம் இது.. இப்படியும் மனம் மயக்க..

கண்ணனிடம் பொய்க் கோபம் கொண்ட ராதை, அவன் திரும்பி வர இப்படித்தான் முனகி இருப்பாளோ, என்று தோன்றியது.

காலம் பின்னோக்கி சென்றது..

பின் மாலை நேரம்.. பசுமையான வனத்தினில் அவன் வருவானென்று காத்திருக்கின்றாள். வானமெங்கும் படர்ந்திருந்த நீல நிறம், அவளுக்கு கண்ணனின் அங்கங்களை நினைவுறுத்தியது. கார்மேகம் இரண்டொன்று, அவள் மேல் பன்னீரைத் தூவிச் சென்றது. குளிரில் அவள் நடுங்கினாள். பசுமையான முல்லை புதர்களில் தோன்றிய மலர்கள், தன்னை கண்டு எள்ளி நகையாடுவதைப் போல அவளுக்கு தோன்றியது. தன் முன்கோபத்தை தானே நொந்து கொண்டாள். ஒரு முறை அவன் எழில் திருமேனியினை காணோமா!! அவன் பாதம் பணியோமா!! என்று ஏங்கினாள்... அதோ பாடுகிறாள் அவள், ஆள் இல்லாத வனமதனில், ஆண்டவனின் கருணையை நாடி....


நீ வேய்ங்குழல் ஊத நிதம் ஏங்கி நின்றேன் கண்ணா..

நினைவிலும் கனவிலும் மாயம் செய்யும் மாதவா மனமிரங்கி..


சரிந்திடும் கார்குழலும்

அசைந்திடும் மயில் பீலியும்

ஒளிர்ந்திடும் பட்டு துகிலும்

குவிந்திடும் செவ்விதழும் கொண்டு .. நீ


குன்றினை ஏந்தி நின்ற

குவலயா பீடம் கொன்ற

திரௌபதை மானம் காத்த

தோழனின் துயர் தீர்த்த.. நீ


சரணம் என்று நானும்

அடைந்தேன் உந்தன் பாதம்

உதிரம் எல்லாம் உனதே

என்ற உளறல் கேட்டிலையோ ... நீ



Saturday, January 15, 2011

அரங்கனிடம் தோழி

கோதை படும் துயரை, தாளாத அவள் தோழி, அரங்கனிடம் சென்று முறையிடும் பாவனையில் எழுதியது.




பொன்னியே பொறுத்திருக்க.. ரங்கா..
கோதைக்குத் துணை இலவு மரம் வாழும் கிளிதானோ ?


சுழித்தோடி வரும் பொன்னி நதியோ உன் திருப்பாதம்
தழுவ தவம் இயற்றி தாரணியில் யுகமாச்சே..

காத்திருந்து களையிழந்து கண்மை கசிந்துறைந்தாள்..
ஓய்வின்றி ஒழிவின்றி உன் நாமம் போற்றி வந்தாள்..
உண்பதே மறந்து உருக்குலைந்து தளர்ந்து நின்றாள்..
இன்னும் உன் மனம் இரங்க என்னனென்ன செய்வாளோ!!

Friday, December 17, 2010

ஹோலி


சங்கரின் குரலில்....


வண்ணங்கள் அள்ளி தெளிக்காதே கண்ணா
ஹோலியன்று புத்தாடை மேல்..

தோழியர் குழாம் கேலி செய்யும்..
உன் ஜாலம் கண்டால், மணிவண்ணா.. மாதவா.. கோவிந்தா !
(வண்ணங்கள் ...)

வானவில் மின்னி ஒளிர்ந்திடும் போதுன்..
காதலில் நனைந்திட காத்திருக்கையிலே,
வானவில் வண்ணங்கள் வாரியெடுத்தென்
எண்ணத்தை முறித்திட முடிவு செய்து..
(வண்ணங்கள் ...)

இந்த பாடலை கேட்க கீழ்காணும் இணைய முகவரியை தட்டினாலும் தட்டலாம்! :))

Wednesday, December 08, 2010

குயிலே


கோவிந்தன் குணம் கூவாய் - குயிலே !

கோவிந்தன் குணம் கூவாய் ...

திருமகள் நேயன்; திகழொளி மார்பன் ..

தீரம் உணர்ந்த தருணமதிலே..

வந்தனை செய்வோரின் குந்தகம் நீக்கிடும்;

வாழ்க்கை படகினை கரை தனில் ஏற்றிடும்;

தாசனின் மனதினை காதலில் நெகிழ்த்திடும்;

குணம் கூவாய்; சுகம் காண்பாய் .. குயிலே !!!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP