Showing posts with label ராகவ். Show all posts
Showing posts with label ராகவ். Show all posts

Wednesday, May 05, 2010

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே !!

இடம்: பெங்களூர்
நேரம்: அழகிய மதிய நேரம்..

காண்பவை: கணினி, கடிகாரம் ஒரு மணி 35 நிமிடம் காட்டிக் கொண்டிருந்தது. பிஸி பேளா பாத்-ம், தயிர் வெங்காயமும்.. கொஞ்சம் காராபூந்தி சேர்த்து.. உண்ட மயக்கம் உண்மையான தொண்டருக்கும் உண்டு என்பதை உணர்த்தும்படி இராகவ் தூங்கிக் கொண்டிருக்கிறன்.


திடீரென்று முதுகில் ஒரு அடி விழுகிறது. டொம்ம்ம்ம். திடுக்கிட்டு விழிக்கும் ராகவ்,

ராகவ்: எவ அவ ??

தலையில் மலர் கிரீடம், கையில் குழலுடன் உள்ள ஒரு கபடதாரி: எவன் அவன்னு கேளுப்பா..


ராகவ்: சரி சரி.. இப்போ என்ன விஷயம்.. ஏதாவது கஸ்டமர் மீட்டிங்கா..

கபடதாரி: நான் உனக்கு கஸ்டமரா.. கஷ்டம்டா முருகா!!

ராகவ்: முருகாவா??? கண்டுபிடிச்சிட்டேன்.. கே.ஆர்.எஸ் தானே நீங்க..

கபடதாரி: சே! கண்ணன் வேஷம் போட்டாலும் கண்டுபிடிச்சுடுறாங்கப்பா..

ராகவ்: ஹி ஹி.. கண்ணன் வேஷம் போட்டா போதுமா.. ராதா ராதான்னு சொல்லிருந்தாலும் நம்பியிருப்பேன்.. முருகா முருகான்னு ஒரு வார்த்தை போதுமே..

கபடதாரி: சரி சரி.. சும்மாதானே இருக்க.. கண்ணன்பாட்டுல ”என்னை”க் கண்டதைப் பற்றி ஒரு பாடல் எழுதேன்..

ராகவ்: அப்படியே ஆகட்டும்.. என் ஞான ஆசார்யரே!!..

கபடதாரி: ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல..

ராகவ்: சரி.. பாடல் ஜேசுதாஸ் ஐயாவ பாடச் சொல்லட்டுமா..

கபடதாரி: ம்.. அவரும் இருக்கட்டும்.. அப்புடியே புதுசா ஏதாவது செய்யு.. நான் அடுத்ததா.. ராதாவை போய் பாட்டு போடச் சொல்லி டகால்ட்டி பண்ணணும்.. வரட்டா...

***

கண்ணனைக் கண்டு பலநாட்கள் ஆகிவிட்டதாம் இந்தப் பேதைக்கு.. யாரைக் கேட்பது?? எங்கு போய்க் கேட்பது?? நான் வளர்த்த மல்லிக் கொடியிடம் கேட்போம்.. அதுதான் என் உற்ற தோழி.. என் நிலைமையை கண்ணனுக்கு தன் வாசத்தின் மூலம் கொண்டு சேர்த்து விடும்.

என் மல்லிக் கொடியே எனக்காக தூது செல்வாயா!!.. என் பாடலை கேட்பாயா.


கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

வெண்ணிலாவில் அவன் என்னுடன் களிக்கையில்!
கண்ணே கண்ணே என்று ஆவலுடன் அழைத்த!

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

எண்ணமெல்லாம் நான் செய்கிறேன் என்றான்!
எண்ணமெல்லாம் நான் செய்கிறேன் என்றான்!
திண்ணம் உன்னை நான் செய்விடேன் என்றான்!

கண்ணிமை மூடினேன்ன்ன்ன்ன்ன்..
கண்ணிமை மூடினேன்.. லலிதா சோதரன்
கண்ணிமை மூடினேன்..லலிதா சோதரன்
கண்முன்னே இருந்தான் எங்கோ மறைந்தான்!

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

***
ஜனனி அவர்கள் பாடிய கர்னாடிக் ஃப்யூஷன்




ஜேசுதாஸ் ஐயாவின் தேமதுரத் தமிழில்,




Monday, September 28, 2009

காஞ்சிபுரம் டு திருவரங்கம் - கப்பலில் போக முடியுமா?

காஞ்சிபுரம் டு திருவரங்கம் - பேருந்தில் போகலாம்! ரயில்ல போகலாம்! கார்-ல போவலாம்! எங்களைப் போல வருத்தப்படாத வாலிபர்கள் பைக்-ல கூட ஜாலியாப் போகலாம்! ஆனா கப்பல்-ல போக முடியுமா? - முடியும்!

எப்படி? அதைத் தான் இன்னிக்கி பதிவில் பார்க்கப் போகிறோம்!


ராமாநுஜதயா பாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் !!
ஜெகதாசார்யரான இராமானுஜரின் கருணைக்கு பாத்தியமானவரும், ஞானம் மற்றும் வைராக்ய குணக்கடலாகிய வேங்கடநாதன் எனும் வேதாந்த தேசிகரை வணங்குகிறேன்.

வேதாந்த தேசிகர் திரு அவதார தினமாகிய இன்று அவரைப் பற்றிய ஒரு பாடலை அனுபவிப்போமா.. அது ஒரு கப்பல் பாட்டு!
திருவில்லிபுத்தூரில் இன்றைய தினம் நடக்கும் உற்சவத்தைப் பற்றி பரவஸ்து. நாராயணதாஸன் (எனது பெரியப்பா) விவரித்ததை இங்கு சென்று அனுபவியுங்கள்.
இங்கே!


இன்று,


புரட்டாசித் திருவோணம் எனும் உத்தமமான நாள்!
வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திருநாள்-
திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடுநாள்
தீதாகிய பல மாயக் கலிகளை சிக்கென வென்றிடுநாள்.
பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிக நாள்
வாதியர் வாழ்வறுத்த கவிதார்க்கிக சிம்மம், பற்பல
கலை வல்ல பாவலன் வேதாந்தார்யன் உதயம் செய்திடுநாள்
_____________________________________________________


108 திருப்பதிகளில் முதலாவதான திருவரங்கம். ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் தலைநகரம். அங்கு ஒருநாள்,

ஸ்ரீமத் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்திற்கு, ஸ்ருதப் பிரகாசிகை எனும் விளக்கவுரை எழுதிய ஸ்ரீசுதர்ஸன பட்டரை சந்திக்க நாலாயிர திவ்ய ப்ரபந்த வ்யாக்யானகர்த்தா திரு. பெரியவாச்சான் பிள்ளை அவர்களும், 18 ரகஸ்ய க்ரந்தங்கள் ஸாதித்தருளிய திரு. பிள்ளை லோகாசார்யர் அவர்களும் வந்தன்ர்.

பெரியவாச்சான் பிள்ளை: தேவரீர் ! அடியோங்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேணும் !

சுதர்ஸன பட்டர் : வாரும் வாரும் ! ஏன் இந்த ஓட்டம் ?

பிள்ளை லோகாசார்யர் : ஸ்வாமி, வடக்கிலிருந்து மாயாவாதிகள் சிலர் வாதப்போர் புரிய வந்துள்ளனர். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கு தேவரீர் தான் ஆலோசனை வழங்க வேண்டும்.

சுதர்ஸன பட்டர்: ராமானுஜ சித்தாந்தத்திற்கு ஒருநாளும் ஒரு குறையும் வராது. வந்திருக்கும் மாயாவாதிகளை தூப்புல் வேங்கடநாதன் ஒருவனால் தான் எதிர்கொள்ள முடியும். உடன் அவரை வரவழையுங்கள்.
_______________________________________________________________________


தூப்புல்

விஷயம் கேள்விப்பட்ட வேங்கடநாதன், இராமானுஜ சம்ப்ரதாயம் செழித்து விளங்க புறப்படுகிறார்...
வேங்கடநாதன் எனும் கப்பல் காஞ்சியில் இருந்து கஸ்தூரி ரங்கரின் கோவிலை நோக்கி புறப்படப் போகிறது.
ஜெயத்தை பறைசாற்ற வடகலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க,
திருவேங்கடமுடையான், பார்த்தசாரதி, வீரராகவனும் கப்பலில் முதலில் ஏறிக் கொள்ள,
ஆழ்வார்கள் பதின்மரும் கப்பலில் ஏறியவுடன்..
மாலுமியாக ஹயக்ரீவர் அமர
________________________________________________________________________


ஓம்கார சத்தத்தை எழுப்பிக் கொண்டு கப்பல் செல்லும் அழகையும், ஸ்வாமி வேதாந்த தேசிகரின் வெற்றியை பறைசாற்றும் ஒரு அருமையான பாடலையும் கேட்டு அனுபவியுங்கள்.



காசினியோர் தாம் வாழும் காஞ்சி நகர் வந்துதித்து
தேசமெல்லாம் பவனி வரும் எங்கள் தேசிகக் கப்பல் இது !!

நாலு வேதங்களும் நங்கூரமாக
நலமுடைய வடகலைக் கொடியொன்றை நாட்டி
திருமொழிகள் முதலான பிரபந்தங்கள் எல்லாம்
திடமான கொடியிலே கயிறாக மாட்டி
ஆழ்வார்கள் பதின்மரும் அதன்மேலே ஏறி
அடைவுடன் வழிதேடி சுக்கான் திரும்ப
காஞ்சி நகர் விட்டு கிளம்பியே கப்பல்
ஸ்தூரி ரங்கருடை கோவிலைத் தேடி

பரமகுரு எங்களுடை தேசிக கப்பல்
பாலாறு கரை தாண்டி வருகுதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

கருணை எனும் கடல் நடுவே
ஞானம் எனும் பாய் விரித்து
மறையவர்கள் ஜெய ஜெயவென
மகிழ்ந்து வரும் கப்பல் இது

ஆறு சாஸ்திரங்களும் பீரங்கியாக
ஹயக்ரீவர் அவர்களுக்கு அதிகாரியாக
கப்பலின் மேல்வரும் துரைகளின் பேர்கள்
கணக்குடன் சொல்லுவேன் ஞானமுடன் கேளீர்

திருமலையிலே வாழும் திருவேங்கடத்தான்
திருவலிக்கேணியில் பார்த்தசாரதியும்
திருவள்ளூர் அதிகாரி வீரராகவனும்
திருவிடந்தை மேவு லக்ஷ்மிவராகன்
இத்தனை துரைகளும் இதன்மேலே ஏற
விசையுடன் கப்பலும் இவ்விடம் விட்டு

தெளிவுடை பெண்ணை நதிக் கரைதன்னில் வந்து
திருக்கோவலூர் கண்டு திரும்புதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

உலகமெலாம் இருள் நீங்க
உடையவர் தம் மதம் விளங்க
அறு சமயக் கொடியறுத்து
அமர்ந்து வரும் கப்பல் இது

தர்மங்கள் ஆனதொரு பலகைகள் சேர்த்து
தர்ப்பங்கள் ஆனதொரு பாய்மரம் நாட்டி
அருமறைகள் ஆனதொரு ஆணிகள் தைத்து
அரங்க மாநகர் தேடி அதிவேகமாக
பதிகள் நூற்றெட்டிலும் முதலான கோயில்
பிரதிவாதியாலே ஒரு பழுதாகாதென்று

திருக்கோவலூர் விட்டு கிளம்பியே கப்பல்
திருச்சோழ் நாட்டை ஓர் நொடியிலே தாண்டி
காவேரிக் கரைதன்னில் உதயத்தில் வந்து
கஸ்தூரி ரங்கருடைக் கோவிலைக் கண்டு
கண்ணாலே ஆனந்த பாஷ்பங்கள் உதிர
கமலங்கள் போல இரு கைகளைக் கூப்பி
அத்தலத்துள்ளோர் அனைவர்களாலே ஆராதனம் நின்ற செய்தியைக் கேட்டு

செழிப்புடைய வடதிருக்காவேரி தாண்டி
ஸ்ரீரங்க நகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

பதின்மர்கள் துதிசெய்ய கோவிந்தா
பாம்பணை மேல் பள்ளி கொள்ளும்
ரவிகுலத்தோர் குலதெய்வம் எங்கள் ரங்கருடை சன்னிதிக்கு
இவ்வுலகில் ஒருவரும் ஈடில்லையென்று
எங்கள் குரு தேசிகரை லேசாக எண்ணி
கிருஷ்ணமிஷ்ரன் வந்து கட்சிகள் சொல்ல

கண்டாவதாரரை கண்டித்து மேலும் சாஸ்திரங்களான
பீரங்கியாலே சண்டப்ரசண்டமாய் சண்டைகள் செய்து
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிர் நிற்க மாட்டாமல் எழுந்திருந்தோட
அப்போது ரங்கருக்கு ஆராதனை செய்ய

அங்குள்ள பேர்களுக்கு ஆக்ஞைகள் பண்ணி
ஸ்ரீரங்க நகர் விட்டு கிளம்பியே கப்பல்
திருப்பேர்நகர் தாண்டி ஆடுதுறை வந்து
கும்பகோணம் வந்து ஒருநாள் இருந்து
கோதண்டபாணியுடை பாதங்கள் கண்டு
திருவாழி திருநகரி சீர்காழி வந்து
திரைகடல் போல் வரும் கொள்ளிடம் தாண்டி
சித்திர கூடம் வந்து ஒருநாள் இருந்து
தேவாதி நாதனை கண்டு கை தொழுது

அழகுடைய கருடநதி கரைதனில் வந்து
அயிந்தை மாநகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

பாடியவர்கள் : என் அத்தைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கமலா மற்றும் அவர் சகோதரி கோமளம்.

Get this widget Track details eSnips Social DNA
புரட்டாசித் திருவோணத்தில் அவதரித்த எங்கள் தூப்புல் கவிதார்க்கிக சிங்கம், வேதாந்த தேசிகர் அடிபணிகிறேன்.

நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ,
மாநகரில் மாறன் மறை வாழ - ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Friday, July 24, 2009

திருப்பாவை பாடிய செல்வியின் பிறந்த தினம் - வாழ்த்த வர்றீங்களா?



இன்று விரோதி வருடம், ஆடி மாதம், 9ம் தேதி பூர நட்சத்திரம் (ஜூலை 25) ரொம்ப்ப்ப்ப முக்கியமான நாளுங்க.. நிறைய பேருக்கு தெரிந்தது தான், அதனால எல்லாரும் சேர்ந்து நம்ம திருப்பாவைச் செல்விக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிருங்க.. எப்புடி வாழ்த்துறதுன்னு கேக்குறீகளா? நமக்கு Happy Birthday to you பாட்டைத் தவிர வேற எதுவும் தெரியாதேப்பான்னு சொல்றது கேக்குது. இதோ என்னோட ஸ்வீட் அத்தை எப்புடிக் கொஞ்சிக் கொஞ்சி பாடுறாங்கன்னு கேளுங்க.

திருப்பாவைச் செல்விக்கு அறிமுகம் வேண்டாம்.. என்ன இப்புடிச் சொல்லிட்டேனேன்னு பாக்காதீங்க, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மொத்தம் எத்தனை பாட்டுன்னு கேட்டா எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்க பாப்போம் :) ஆனா ஆண்டாள்னு சொன்ன உடனே திருப்பாவை முப்பது பாட்டும் தான் தோணும். மார்கழித் திங்கள் கை நிறைய பொங்கல்ங்கிற முதல் வரியாவது கண்டிப்பாக எல்லாருக்கும் தெரியும் தானே :)

இன்னைக்கு இங்க இப்போ ஆண்டாள் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியா பதிவுலக வரலாற்றில் முதன்முறையாகன்னு எல்லாம் விளம்பரப்படுத்தாம எங்க அத்தை அந்தக் குட்டிப் பெண்ணை பத்தி ஒரு பாட்டு பாடப் போறாங்க.. அதனால் ஆண்டாளை வரவேற்பதற்கு முன் எங்க அத்தையை இங்க அறிமுகப்படுத்துறதுல நான் பெருமைப்பட்டுக்குறேன் :)



ஸ்ரீவில்லிபுத்தூர் கமலா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் எங்க அத்தை ஒருமுறை பெங்களூர் வந்தப்போ, அவங்களோடவும், சில உறவினர்களுடனும் வெளியில் சென்றிருந்தோம்.. மற்றவர்கள் ஷாப்பிங் செய்ய்ச் செல்ல, அத்தையும் நானும் அலைய வேண்டாம் என்று ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அத்தை பேசவில்லை, பாட ஆரம்பித்து விட்டார்கள்.. கண்ணனை, கோதையை, ஆசார்ய இராமானுசரை, ஸ்ரீமத் வேதாந்த தேசிகரை என்று ஒவ்வொருவருக்காகவும் தன்னை மறந்து, அதிக மக்கள் நடமாடும் பகுதியில் பாடிக் கொண்டே இருந்தார். எங்களைச் சுற்றி ஒரே ரசிகப் பெருமக்கள். சரி போதும் போதும்... இதோ நமது முக்கிய விருந்தாளி, வந்து
விட்டாள்.

கட்டியம் சொல்பவர், நம் ஆண்டாள் வருகையை உரத்த குரலில் சொல்கிறார்.. வாருங்கள் அனைவருமாக வரவேற்போம்.

‘ஆண்டாள் வந்தாள்!
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்!
பட்டர்பிரான் திருமகள் வந்தாள்!
பாட வல்ல நாச்சியார் வந்தாள்!
திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!
ஞான செழிப்புமிக்க கோதை வந்தாள்!
அன்பை அருளச் செய்த ஆண்டாள் வந்தாள்!
திருமாலைப் பிரியாத நிலமகள் வந்தாள்!
உடையவள் வந்தாள்!
தோகை மயிலாள் வந்தாள்!
ஞானத் தலைவி வந்தாள்…’’

இதோ எம் தலைவியை,
மாணிக்கம், வைரத்தினாலான ஊஞ்சலில் அமரவத்து,
பட்டர்பிரான் கட்டி வைத்த திருநந்தவனத்தில் இருந்து தொடுத்து வந்த மலர் மாலை கொண்டு வந்து சார்த்தி,
அரங்கன் மார்பில் சாற்றிய சந்தனம் கொடுத்து,
கண்ணனின் தோள் அங்கவஸ்த்திரம் கொண்டு பொன்னாடை போர்த்தி,
திருமாலிருஞ்சோலை அழகனுக்கு நிவேதனம் செய்த அக்கார அடிசில் தந்து,
அவளின் உற்ற தோழியாம், பச்சைக்கிளி வந்து அவள் கையில் அமர,
ஒரு அதிஅற்புதமானதொரு சூழல்


அரங்கன் வந்து காப்பு கட்ட கனாக் கண்ட ஆண்டாளைப் போல, நம்முடன் ஆண்டாள் மீண்டும் வந்து இருக்க மாட்டாளா என்று நான் தினம் கனவு காண்கிறேன்..

சரி ஆண்டாளைக் காக்க வைக்க வேண்டாம்.. பிறந்ததினக் கொண்டாட்டத்திற்கு நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.. அதனால் அத்தையின் பாட்டைக் கேட்டுக் கொண்டே.. ஆண்டாளின் ஊஞ்சலை மெதுவாக ஆட விட்டுக் கொண்டாடுவோம் வாருங்கள்.

ஆடிப்பூரத்துத்த ஆடிப்பூரத்துதித்த ஆண்டாள் நம் கோதை...
ஆண்டாள் நம் கோதை...
அணியரங்கருடன் ஊஞ்சல் அணியரங்கருடன் ஊஞ்சல்
ஆடினாள் அப்போதே.... ஆடிரூஞ்சல்..

பாடிப்பாமாலை தந்த பாடிப்பாமாலை தந்த
பட்டர்பிரான் கோதை... பட்டர்பிரான் கோதை..
பணியரங்கருடன் ஊஞ்சல்.. பணியரங்கருடன் ஊஞ்சல்...
ஆடினாள் அப்போதே..லாலி..

ஸ்ரீலத்துழாயடியில்.. ஸ்ரீலத்துழாயடியில்..
சிசுவாய் மலர்ந்தாள்.. கோதை சிசுவாய் மலர்ந்தாள்
நாதன் வடபத்ரர்க்கு.. மாலை சூட்டிக் கொடுத்தாள் ஆடிரூஞ்சல்..

திருப்பாவை பாடித்தந்த.. திருப்பாவை பாடித்தந்த
தீஞ்சுவைக் கனியே.. தீஞ்சுவைக் கனியே..
பன்னிரு ஆழ்வாரில்.. பாங்கான கோதாய்.. பாடிரூஞ்சல்..

திருவாடிப் பூரத்து.. திருவாடிப் பூரத்து
ஜெகத்துதித்தாள் வாழி...
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழி.. ஆடிர் ஊஞ்சல்.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெரியாழ்வார் பெற்றெடுத்த
பெண்பிள்ளை கோதாய்..பெண்பிள்ளை கோதாய்..
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான கோதாய்.. ஆடிர் ஊஞ்சல்..

ஒருநூற்று நாற்பத்து.. ஒருநூற்று நாற்பத்து
மூன்றுரைத்தாள் வாழி.. உயர் அரங்கற்கே கண்ணி
உகந்தளித்தாள் வாழி.. ஆடிர் ஊஞ்சல்..

மருவாரும் திருமல்லி.. மருவாறும் திருமல்லி
வளநாடு வாழி..வண்புதுவை நகர்க்கோவை...
வண்புதுவை நகர்க்கோவை.. மலர்ப்பதங்கள் வாழி லாலி.. லாலி..


சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வடபெருங்கோயிலுடையான் திருவடிகளே சரணம்



Wednesday, May 06, 2009

கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க..

கடந்த ஒரு மாசத்துக்கும் மேலாக நம்ம மதுரை மக்கள் திருவிழா கொண்டாட்டத்துல இருக்காங்க.. இப்போ தான் மிகச் சிறப்பாக வைகை நகர் அரசி, மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனுக்கும்,  நம்ம சொக்கருக்கும் திருக்குடமுழுக்கு ரொம்ப அற்புதமா நடந்து முடிந்தது. 

அடுத்ததா, மீனாட்சி அம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம்.. பவளக்கனிவாய் பெருமாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து எழுந்தருளி அன்னையை தாரை வார்த்துக் கொடுக்க, பிள்ளைகள் இருவரும் கூடி இருந்து மற்ற சுற்றமும், ஊராரும் கண்டுகளிக்க திருக்கல்யாணம் சிறப்பே நடந்தேறியது. 

எல்லாம் நல்லாதான் நடந்தது... ஆனா முக்கியமா வரவேண்டிய ஒருவர் ஆளே காணோம்.. மதுரையை விட்டு கொஞ்சம் தொலைவில் இருந்தாலும் நெருங்கிய சொந்தம் தான்.. ஆனாலும் வரலை..  என்ன காரணமா இருக்கும் ??

ஒருவேளை பிரயாணம் பண்ணி வர்ற வசதியில்லையோ ? - அப்புடி சொல்ல முடியாது, தங்கப் பல்லக்கில் ஏறி சொகம்மா வரலாம்... இல்லன்னா.. குதிரையில் ஏறி காத்தா பறந்து வரலாம். இருந்தும் ஏன் வரல ?

ஒருவேளை வைகையில வெள்ளம் வந்து வர முடியாமப் போச்சோ ? அதுக்கும் வாய்ப்பு குறைவுதான்.. சரி அதெல்லாம் அவர் வந்ததுக்கப்புறம் கேட்டுக்கலாம்.. முதல்ல அவர் கிளம்பினாரா இல்லையான்னு தெரியலையே !!
கிளம்பிட்டாராம்பா... அழகர் இன்னைக்கு அழகர் மலையை விட்டு திருப்பல்லக்கில் சுந்தரராஜன் கள்ளழகனாக ஆரோகணித்து விட்டார். இதோ நாமும் கண்டு களிப்போம்... வரும் சனிக்கிழமை.. சித்திரை பெளர்ணமி அன்று அதிகாலை ஆற்றில் மண்டூக முனிக்கு சாப விமோசனம் அளிக்க கிளம்பி விட்டார்.. அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் அந்த நிகழ்ச்சியை காண்போம்.. இப்போ..





கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
பல்லாக்கு ஏறி..... மாமதுரை நோக்கி...
பல்லாக்கு ஏறி மாமதுரை நோக்கி கிளம்புறாரு.. வரம் எல்லாம் வாரி வாரி வழங்குறாரு
மீனாட்சி கல்யாணம் நடத்தி வைக்க அழகர் வேணும்
தங்கச்சி மீனாட்சி கல்யாணம் நடத்தி வைக்க அழகர் வேணும்

கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க

தல்லாகுளம் வந்து சந்தோஷமா சேர்ந்துட்டாரு அழகரு..அழகரு
எதிர்சேவை முடிஞ்சு ராத்திரி தங்க கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
வெட்டிவேர் சப்பரத்தில.. ஆயிரம்பொன் சப்பரத்துல
அழகர் ஆண்டாள் மாலையணிஞ்சு பட்டாடை உடுத்திருப்பாரு

தங்கக்குதிரை ஏறி அழகர் வரும் கண்கொள்ளாக் காட்சியைப் பாரு
வளம் கொழிக்கும் வைகை ஆறு மனுசங்களா ஒடும் பாரு

சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு 
மதுரை சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு

கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க

திருமணம் முடிஞ்ச சேதியக் கேட்டு திரும்பிட்டாரு அழகரு.. அழகரு
வண்டியூர நோக்கி பயணம் போக கிளம்பிட்டாரு அழகர்.. அழகரு
ஓடிக்கிட்டே இருப்பாரு ஓரோரு மண்டபமா.
கூடும் சனம் கூட வரக் ஓடிக்கிட்டே இருப்பாரு

விண்ணதிர மண்ணதிர வானவெடி வேடிக்கையோட
விடிவிடியக் கொண்டாட்டம் கோலாகலக் காட்சி பாரு

ஷேசனோட வாகனத்தில் தேனூர நோக்கி கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
முனி சாபம் தீர கருடனோட கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
இராமராயர் மண்டபத்தில் கோடி சனம் காத்திருக்க
தசாவதார சேவையோடு முத்தங்கி சேவை தந்து 
கள்ளழகர் வேடத்துல மறுபடியும் கிளம்பிட்டாரு

மாமதுரை வீதியெல்லாம் கலக்கிப்புட்டு

கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க.

Wednesday, November 12, 2008

ஆடி வரார்.. ஓடி வரார் வரதராஜப் பெருமாள்


என்ன இது.. இத்தனை பேரு மஞ்சள் ஆடை உடுத்தி எம்பெருமான் திருச்சின்னங்களை கையில் ஏந்திக் கொண்டு.. பாத்தா கோவில் வாசல்ல யாருக்கோ வரவேற்பு கொடுப்பதற்காக நிக்கிறாங்களோன்னு நினைக்கிறீங்களா ?

அதான் இல்லை.. இவங்கெல்லாம் ஒரு ஐந்து நாள் எமனேஸ்வரம் ஊரை விட்டு ஊர் சுத்தப் போறாங்க.. யாரோட சுத்தப் போறாங்கன்னு கேக்குறீங்களா.. இதோ கீழ இருக்கார் பாருங்க.. அவரோட தான்

பெருந்தேவி மணாளன்.. தேவர் பிரான்.. பேரருளாளன்.. ஸ்ரீவரதராஜன்..

எங்க ஊர் வரதராஜனை பற்றி எழுதலாம்னு உக்காந்தப்போ சில நாள் முன்பு கேட்ட திருச்சின்னமாலை ஞாபகம் வந்தது..

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்

என்று ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், பேரருளாளனை அழகுற வர்ணித்திருப்பார். பேரருளாளனை உடனே தரிசிக்கணும்னு மனதில் ஆசை.. அப்புறம் என்ன.. உடனே பஸ்ஸை பிடிச்சு கிளம்பிட்டோம்ல.. அந்த திவ்யமான அனுபவம் இன்னொரு நாள் சொல்லுறேன்.


சாமிக்கு கோவில் கட்டி, நித்யப்படி பூஜையும் செஞ்சு.. முக்கிய தினங்களில் வீதி உலாவும் பண்ணுறோம்.. இருந்தும் ஸ்ரீவரதராஜன், ஒரு 5 நாள் சேந்தாப்புல ஊர் சுத்தணும்கிறார்.. எதுக்காம்??

காரணன்.. காரியம் இரண்டுமாகி இருப்பவன் ஆயிற்றே..
காரணமில்லாமலா, வெளியில் கிளம்புவார்.. துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு மண்டூகமாக மாறி இருந்த சுதபஸ் என்ற முனிவருக்கு சாப விமோசனம் தர வேண்டியே இந்த விஜயம்

எமனேஸ்வரத்தில் மிகச் சிறப்பான திருவிழா.. திருவிழா நடக்கும் 18 நாட்களும் ஊரே கொண்டாட்டமா இருக்கும். அழகரை “அழகரப்பன்” என்று செளராஷ்ட்ர மக்கள் அழைப்பர்.


மேல உள்ள படத்துல தெரியற அர்ச்சகர் யாரா இருக்கும்னு சொன்னா.. அவர்களுக்கு அடையார் ஆனந்த பவனில் ஒரு கிலோ மை.பா வாங்கி அனுப்பப்படும் :).



புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள், பயணத் திட்டம் யார் யாருக்கு என்ன பொறுப்பு எல்லாம் விஷ்வக்‌ஷேனர் ஆகிய சேனை முதலி தயாரா வைச்சிருக்கார்.

பயணத்திட்டத்தின் படி.. அதிகாலை கள்ளர் திருக்கோலத்துடன்.. புஷ்பப் பல்லக்கில் ஏறி.. பெருந்தேவி தாயாரிடமும், சக்கரத்தாழ்வானிடமும் மற்றும் முக்கியமாக காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமியிடமும் விடை பெற்றுக் கொண்டு,

பக்தர்கள் தீவட்டி ஏந்திக் கொண்டும்.. தோளுக்கினியானை தோளில் சுமந்தபடி. ஆடியும் பாடியும் ஓடியும் ஆரோகணித்துக் கிளம்புகின்றார்.

எந்த வருடமும் தவற விடாத.. என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும்.. ஊரார் அனைவரும் மிக்க சந்தோஷத்துடனும்.. பக்தியுடனும் எம்பெருமான்.. பேரருளாளன்.. வரதனை.. அழகனை கொண்டாடும்.. இப்பாடலை கண்டு களிப்போமா..





புஷ்பப் பல்லக்கு அசைந்தாடி வர.. குதூகலத்துடன்.. கோவிந்தா.. ஹரி என்ற கோஷம் முழங்க.. ஒரு துள்ளலுடன் எழுந்தருளுகிறார் வரதன்.



புஷ்பத்தின் மணங்களுடன்.. காலை குளிரில் பக்தர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு.. ஆற்றில் இறங்க தயாராகிறார்..

சரி.. இனி பாடலுடன் எம்பெருமான் ஆடலையும் பாப்போமா..

ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..

கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..

வைகாசி மாசத்திலே பிரம்மோத்ஸவம் பாரு
அந்த வைபவத்தில் காட்சி தரும் வாகனங்கள் பாரு..

கல்யாண வைபவத்தில் வரதராஜனைப் பாரு..
கல்யாண வைபவத்தில் வரதராஜனைப் பாரு..
நாம் வடம்பிடித்து வலம் வருகின்ற தேரோட்டம் பாரு

ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..

கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..


வஸந்தோத்ஸவ வைபவத்தில் வாண வேடிக்கை பாரு..
பூ பல்லாக்கிலே பவனி வரும் கள்ளழகரை பாரு..

கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..


அதிர்வேட்டு சத்தத்திலே தீவட்டி வெளிச்சத்திலே
அதிர்வேட்டு சத்தத்திலே தீவட்டி வெளிச்சத்திலே

ஐந்தடுக்கு வாத்தியங்கள் இஷ்டத்துக்கு முழங்குது பார்..


ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..

கருப்பண்ண சுவாமியிடம் காவல் காக்க சொல்லி
தான் கைபிடித்த தேவியிடம் தைரியத்தை சொல்லி

வைகையிலே இறங்குகிறார் வட்ட நிலா ஜொலிக்க
வைகையிலே இறங்குகிறார் வட்ட நிலா ஜொலிக்க

அவர் கள்ளழகர் கோலத்திலே தல்லாகுளம் போய் அமர்வார்..

ஆடி வரார்..

தங்க நிற குதிரையிலே கள்ளழகரை பாரு
அவர் தங்கமென ஜொலித்து நிற்கும் வண்ணவராம் பாரு

சொர்ணமய சப்பரத்தில் சொர்க்க வாசல் பாரு

சொர்ணமய சப்பரத்தில் சொர்க்க வாசல் பாரு

நம்ம வரதராஜப் பெருமாளும் வண்டியூரில் அமர்வாரு..


ஆடி வரார்..


மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தரார் பாரு
அந்த மண்டகப்படியில் எழுந்தருளி தசவதாரம் பாரு..


கோவிந்தா கோவிந்தா... கோவிந்தோவ்..


நகரெங்கும் வலம் வருகின்ற நாராயணனை.. நம் வரதராஜனை தரிசித்து மகிழுங்கள்.


பேரருளாளன் அருள்வானாக.. மூன்று அழகர்களை பற்றி சொல்லலாம் என்று நினைத்துள்ளேன்.. அடுத்ததா.. பரமக்குடி சுந்தரராஜனையும்.. இறுதியாக.. சோலைமலை அழகனையும் வரும் வாரங்களில் பார்ப்போம்.


பாடல் எழுதி பாடியவர்: திரு. குங்கா. கே. நாகநாத அய்யர் அவர்கள் குழு, எமனை.






  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP