Showing posts with label அருணா சாய்ராம். Show all posts
Showing posts with label அருணா சாய்ராம். Show all posts

Thursday, January 06, 2011

I saw Trip-Liq-Cane! திருவல்லக்கேணி கண்டேனே!

டிரிப்ளிக்கேன்! ஆகா, என்ன அழகா வெள்ளைக்காரன் பேரு வச்சிருக்கான்!
Trip போனா Liquor & Cane Juice எடுத்துக்கிட்டு போகணும் - அப்போ தான் சரக்கு ஏறும்! அதான் Trip, Liq, Cane என்று வைத்தானோ? :)

இந்த மார்கழி வெள்ளிக் கிழமை, சும்மா காலாற, திருவல்லிக்கேணி போவலாம், வாரீகளா?




திருவல்லிக்கேணி = அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் கேணி!
தொட்டணைத்தூறும் மணற் கேணி - குறள் ஞாபகம் வருதா?
108 திருத்தலங்களுள் ஒன்று! ஆழ்வார்கள் பாசுரம் பெற்ற தலம்! இராமானுசர் பிறக்க, அவர் பெற்றோர்கள் வேண்டிக் கொண்ட தல

அட, "கூவம் மிகு" சென்னைக்கு இவ்வளவு பெருமையா-ன்னு ஆச்சரியமா இருக்கு-ல்ல? :)
திருஞானசம்பந்தர், ஆழ்வார்கள், அருணகிரி, வள்ளலார்-ன்னு சென்னையைப் பாடாதவர்களே இல்லை-ங்கிறேன்!

அந்தச் சென்னையின் கடலோரத்தில், நெய்தல் நிலத்தில், முல்லை நிலத் தலைவன் மாயோனுக்கு ஒரு பழமை வாய்ந்த ஆலயம்!
அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் கேணி!


இப்போ கொஞ்சம் பராவாயில்லை! குளத்தில் தண்ணீர் உள்ளது!
சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுச் சுத்தமாகவும் உள்ளது! அல்லி மலர்கள் தான் காணோம்!
ஆறுதலான விடயம்: பேருந்துகள், தொடர்வண்டி நிலையம் எல்லாவற்றிலும் ட்ரிப்ளிக்கேன் என்று எழுதாமல், திருவல்லிக்கேணி என்றே எழுதி இருக்கிறார்கள்!

அந்நியன் படத்தில் அம்பி உலா வரும் இடம், Arrest-ஆகும் குளம், எல்லாம் இது தான்!:)

மாநிலக் கல்லூரி (Presidency College), கண்ணகி சிலை, மெரீனா கடற்கரை, பெரிய மசூதி, ஆர்க்காடு நவாப்பின் அமீர் மகால், ரத்னா கபே...
இப்படிப் பல பிரபலங்கள் உள்ள இடம் திருவல்லிக்கேணி! சென்னையின் மிகப் பெரிய "சேவல் பண்ணை", அதாங்க Mens Mansion-உம் இங்கே தான்! :)

மும்பை - Gateway of India போல், Gateway of Chennai = TiruvallikENi! :)


திருவல்லிக்கேணி ஆலயத்துக்குள் போலாமா?நான் சென்னை வரும் போதெல்லாம் - அல்லிக்கேணி & வடபழனி - Never Miss! ஒன்னு என் பொறந்த வீடு, இன்னொன்னு என் புகுந்த வீடு! :)


முதலில் முக்கியமான விஷயம் சொல்லிடறேன்! அப்பாலிக்கா பெருமாளைப் பார்ப்போம்!

1. இந்த ஆலயத்து சர்க்கரைப் பொங்கல் சூப்பர் டேஸ்ட்! ஒரு கிலோ அரிசின்னா, அரை கிலோ நெய், அரை கிலோ முந்திரி போட்டுச் செய்யும் சர்க்கரைப் பொங்கலை - மறக்காம கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க! :)

2. திருவல்லிக்கேணிப் பெண்கள், மரபு உடையில் இருந்தாங்க-ன்னா, கொள்ளை அழகு! :) திருமங்கை ஆழ்வாரே நோட் பண்ணிச் சொல்லி இருக்காரு! :) = மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே!! :)

சரி, சரி, விளையாட்டு போதும்! ஒருவனாய் நின்ற ஒருவனைப் பார்க்கலாமா?



அடியார்கள் எல்லாரும் பெருமாளைச் சேவித்துக் கொள்ளுங்கள்!
பிருந்தாரண்யம், துழாய்க் காடு என்னும் தலத்திலே....சேவை சாதிக்கும்....

இதோ..............மூலவராகிய எம்பெருமான் வேங்கடகிருஷ்ணன்!பெரிய மீசை வைத்த நெடியோன்! மாயோன்! ஒன்பதடி உசரம்!
கீதை சொல்லும் கோலத்திலே, எம்பெருமான் நின்று சேவை சாதிக்கின்றான்!
பெரிய திருமுடி! வஜ்ர கிரீடம்!
அகன்ற நெற்றியிலே துலங்கும் திருமண் காப்பு!
நம்மைப் பார்த்து, "வா வா...குழம்பித் தவிக்கும் தோழா, கலியுக அர்ச்சுனா" என்னுமாப் போலே குறு குறு தோழமைக் கண்கள்!

அழகிய மேல் சுருக்கு மீசை!
மார்பிலே "அவள்" திகழ,....
தேரோட்டியின் கவசம் அணிந்து,
இடுப்பிலே குதிரை ஓட்டும் உழவு கோல்!

இப்படியாக, எடுத்துக் கொண்ட பொறுப்பிலே, சுய கெளரவம் பார்க்காது,
தேரினை ஓட்டியும், குதிரைகளைக் குளிப்பாட்டியும், புல் பிடுங்கிப் போட்டும், சாணம் அள்ளியும்,
குல வழக்கப்படி மீசை வைத்தும், தன் திருவுடம்பிலே உழவுகோல் தரித்தும்,
தோழனுக்காகக் கொண்ட கோலத்தைப் பெருமையோடு காட்டி நிற்கிறான்!

இடுப்புக் கச்சை! மேனியெங்கும் தவழ்ந்தோடும் சாளக்கிராம மாலை!
கருவறையெங்கும் அவன் வாசமா அல்லது துளசீ வாசமா அல்லது இரண்டும் கலந்த வாசமா?

வலது கையில் சங்கு மட்டுமே! சக்கரம் இல்லை! போரில் ஆயுதம் ஏந்தேன்-ன்னு சொன்னதால்!
இடது கை, மொத்த கீதையின் சாராம்சத்தையும் உணர்த்தி நிற்கிறது! = மாம்-ஏகம்-சரணம் வ்ரஜ! என்னையே சரணமெனப் பற்றுக!
= பற்றுக பற்றற்றான் பற்றினை!

அப்பற்றை பற்றுக என்று வாழ்க்கைக்குப் பற்றுக்கோடாய், தாமரைத் திருவடிகள்! திருவடி எங்கும் துழாய் மலர்கள்!

அப்படியே குடும்ப சகிதத்தையும் சேவித்துக் கொள்ளுங்கள்! இதோ...
கண்ணபிரான் குடும்ப சகிதமாக, ஒரே கருவறையில் அருள் பாலிப்பது.....பாரத பூமியில், இந்த ஒரே தலத்தில் தான்!

வலப்புறம் ருக்மிணி பிராட்டி! இடப்புறம் கண்ணனின் தம்பி, சாத்யகி!
இன்னும் வலப்புறம் அண்ணன் பலராமன்! இன்னும் இடப்புறம் மைந்தன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன்!!

உற்சவரான பார்த்த சாரதிப் பெருமாள்! இதோ...

உற்சவருக்குத் தான் பார்த்தசாரதி என்கின்ற திருநாமம்!
பக்தன் பார்த்தனைக் காப்பாற்ற, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தான் ஏற்றுக் கொண்டு, முகமே புண்ணாகிப் போன கண்ணனின் கரு முகத்தை (உற்சவர்) இங்கே கண்கூடாகப் பாருங்கள்!

தோழனின் தற்கொலையைத் தடுக்க, தன் சத்தியம் மீறினாலும் பரவாயில்லை என்று...,
நட்புக்காகச் சக்கரம் ஏந்தியும், பீஷ்ம வடுக்களோடும் ஒருங்கே காட்சி அளிக்கின்றான்!
* மூலவர் = போருக்கு முந்தைய திருக்கோலம்!
* உற்சவர் = போரின் இடையே ஆன திருக்கோலம்!

பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை மன்னனுமாய்,ஆளவந்தார்,
இவனை வேண்டிக் கொண்டு பிறந்த இராமானுசர்,
தேசிகன், மணவாள மாமுனிகள் என்று ஆசார்ய மங்களாசாசனங்களையும் ஒருங்கே பெற்று...

இதோ, கர்ப்பூர தீப மங்கள ஜோதியில் ஜொலிக்கும் பிரான்...!

இனிக்க இனிக்க உங்களைப் பார்த்துச் சிரிக்கும் எம்பெருமானை...
Paartha Saarathy PerumaaL - PSP என்று செல்லம் கொஞ்சிடும்...


எந்தை, எனக்கு உயிர் குடுத்த வித்தினை - அப்பா.....
என்று கண்ணாரக் கண்டு கொள்ளுங்கள்!
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!

கோதில்-இன் கனியை, நந்தனார் களிற்றை,
குவலயத்தோர் தொழுது ஏத்தும்,
ஆதியை, அமுதை, என்னை ஆளுடை....அப்பா......
திருவல்லிக் கேணிக் கண் டேனே!
திருவல்லிக் கேணிக் கண் டேனே!!


கோவிந்தா! கோவிந்தா!
கோவிந்தா! கோவிந்தா!!

இதோ, மணக்க மணக்க, துளசீ தீர்த்தம் பருகிக் கொள்ளுங்கள்! = நாரணம் என்னும் நீர் என்று அவனையே பருகிக் கொள்கிறீர்கள்!
இதோ, சடாரியும் வாங்கிக் கொள்ளுங்கள்! = அவன் திருவடிகளை, மாறனாகிய நம்மாழ்வாரை, உங்கள் தலை மேல் ஏற்றுக் கொள்ளுங்கள்!
அவன் கால் பட்டு அழிந்தது, 
உங்கள் தலை மேல், பிரமன் கையெழுத்தே!

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்...
முடிச் சோதியாய் உன் முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?

ம்ம்ம்ம்...தரிசனம் ஆனவர்கள்-ல்லாம், அப்படியே சேவிச்சபடியே, நகருங்க-ம்மா, நகருங்க! ப்ளீஸ், நகருங்கோ சார்! நகருங்க.....


கருவறையை விட்டு வெளியே வந்து, காற்றாட ஊஞ்சல் மண்டபத்தில் உட்கார்ந்து கொள்வோமா? 

இன்னொரு முக்கியமான சேதி!
கண்ணபிரான் குடும்ப சகிதமாக, ஒரே கருவறையில் அருள் பாலிப்பது இந்தியாவிலேயே இந்த ஒரு தலத்தில் மட்டுமே!
கருவறையில் சற்று எக்கிக் காண வேண்டும்!
அப்பவே சென்னையில் குடும்ப ஆட்சி-ன்னு சொல்லாமச் சொல்லி விட்டானோ, இந்த பார்த்தசாரதி? :) நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்! :)

சொல்லப் போனா, இந்தத் தலம், முழுக்க முழுக்க, ஒரு குடும்பத் தலம்!
கண்ணன் மட்டும் அல்ல...,
திருவல்லிக்கேணியில் எல்லாக் கருவறையிலும், No Singular, Only Plural! :)
ஒரு கூட்டமாகத் தான் எல்லாக் கருவறைக் கடவுள்களும் இருப்பார்கள்! :)

* ஆலயத்துள் நுழைந்து, கொடிமரம் தாண்டி, கஜானனரை வணங்கி, கருடாழ்வாருக்கு ஹாய் சொல்லி...வரிசையில் சேர்ந்து கொண்டால்...

* திருக்கச்சி நம்பிகள், இராமானுசர், மாமுனிகள் என்று ஆசார்யர்களைக் கடந்து, முதலில்....என் இராகவன் வீடு! :)

அங்கும் குடும்ப சகிதம் தான்!
பொதுவாக இராமன்-சீதை-இலக்குவன்-அனுமன் மட்டும் தானே இருப்பார்கள்! இங்கோ, மொத்த குடும்பமாய், பரதனும் சத்ருக்கனனும் கூட உண்டு!

இவர்களைப் பார்த்த வண்ணம், எதிர்ப் பக்கத்தில் ஆஞ்சநேயன்...
அதே வரிசையில் ஆழ்வார்கள், ஆசார்யர்கள், கருடன்-அனந்தன் முதலான நித்யசூரிகள்!

* அடுத்த சன்னிதியாகிய அரங்கன் சன்னிதி!
மன்னாதன்! மன+நாதன் என்று தாயார் அழைத்த பேரில்...இங்கும் கருவறையில் ஒருவர் மட்டும் இல்லை!
தலை மாட்டில் வராகப் பெருமாளும், கால் மாட்டில் நரசிம்மப் பெருமாளும் உண்டு!

* திருவல்லிக்கேணி தனிக் கோயில் நாச்சியாரான வேதவல்லித் தாயார், இந்த அரங்கனின் தர்ம பத்தினியே!
இவளுக்கு வெள்ளி தோறும், மற்றும் அஸ்த நட்சத்திரம் அன்றும் உள் புறப்பாடு/ஊஞ்சல் உண்டு!

* அடுத்த சன்னிதி, வரதப் பெருமாள்!
கருடனும் அதே கருவறைக்குள் இருப்பான்! இறைவனைத் தாங்கிப் பிடித்தபடி! = நித்ய கருட சேவை!

* முக்கியமான பின் சன்னிதி, ஆளரிப் பெருமாள் என்னும் நரசிம்ம-அழகிய சிங்கர் சன்னிதி! மூலவர் மட்டுமே யோக நிலையில், சிங்க முகத்தோடு, "ஆ-வா" என்ற கரத்தோடு!
உற்சவருக்கு சிங்க முகம் இல்லை! சிரித்த முகம் மட்டுமே!
இந்த ஆலயத்தில் நாக்கில்லா மணிகள் தான் அத்தனையும்! கதவில் தொங்கும் மணிகள் உட்பட...

* அடுத்த சன்னிதியாக என்னுயிர்த் தோழி...கோதை...திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!
சரி சரி போதும், உனக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?
ஹேய் வாடீ...அப்படியே விமானங்களைக் கண்டு, கண்ணாடியில் முகம் பார்த்து, தலைமுடி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, பிரசாதக் கடையில்...தோழனுக்கும் எனக்கும் பிடித்த அதிரசம் வாங்கித் தின்போம்! :)

கிறு கிறு புளியோ தரையில் கரைய
சுறு சுறு மிளகு வடையும் நொறுக்க
அதி ரசமான அதிரசம் தன்னைத்
அணி திருவல்லிக் கேணி கண்டேனே! :))



இந்த வலைப்பூ = கண்ணன் "பாட்டு"!
ஆனால் ஷைலஜா அக்கா பண்ண மாயம்...இப்பல்லாம் ஒரே கட்டுரையாப் போயிரிச்சி! :)

வாங்க கண்ணன் "பாட்டில்", பாட்டைப் பார்ப்போம்!
திருவல்லிக்கேணி-க்கென்றே உள்ள சில பாசுரங்களைக் கேட்போமா?
Pasurams - TIRUVLLIKENI and Tiruneermalai - Aruna Sairam
கேட்டுக் கொண்டே பதிவை வாசியுங்கள்!
பிரபல பாடகி, அருணா சாய்ராம், க்ஷேத்ரம்: சென்னைபுரி என்னும் தொகுப்பில் (Album: Ksetra Chennapuri) பாடும் பாட்டு!

திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி
வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை,விழுமிய முனிவர் விழுங்கும்
கோது-இல் இன்-கனியை, நந்தனார் களிற்றை, குவலயத்தார் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை, என்னை ஆளுடை அப்பனை, ஒப்பவர் இல்லா!
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே!!
Shylajakka sent this pic of this year's maargazhi koshti at thiruvallikENi.

திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி (இது சென்னை திருநீர்மலை தலம் பற்றியது, இருப்பினும் Album-இல் உள்ளதால், இங்கு காண்போம்!)
பாரார் உலகும், பனிமால் வரையும்
கடலும் சுடரும், இவை உண்டும் - எனக்(கு)
ஆராது என-நின்றவன் எம்பெருமான்
அலைநீர் உலகுக்கு அரசாகிய - அப்

பேரானை முனிந்த முனிக்கு-அரையன்
பிறரில்லை நுனக்கு-எனும் எல்லையினான்!
நீரார்ப் பேரான், நெடுமால் அவனுக்கு
இடம் மாமலை யாவது நீர்மலையே!

பேயாழ்வார் - 3ஆம் திருவந்தாதி:
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணி-யான் சென்று.

திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி:
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான் - நீள்-ஓதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை.


Here ends the "Triplicane" Tour! :)
Pl assemble @ Marina, for a Treat of Murukku, Sundal & Maangai Bathai, sponsored by Radha Mohan, Citizen of ThiruvallikENi! :)

Also, home made vEN pongal, for pongalO pongal from ILWK aka kaLvanin kaathali :)
- alo, KK, get me some good thakkaLi kothsu and vengaaya chutney, not as prasadam, but as side-dish :) மாம் ஏகம் பிரசாதம் வ்ரஜ! :))

Monday, August 25, 2008

கண்ணன் பிறந்த இரவு-3: சொக்க வைக்கும் தாலாட்டு-மணி நூபுர தாரி!

மூன்றாம் இரவில், முத்தாய்ப்பான இரவில், குழந்தையை மட்டுமல்லாது, நம்மையே சொக்க வைக்கும் ஒரு அருமையான தாலாட்டைக் கேட்கலாம்! இது தமிழில் இல்லை! அதனால் என்ன? நேற்று இரண்டு இரவுகளும் தமிழ்த் தாலாட்டைக் கேட்டோம் அல்லவா? இன்று சற்று வித்தியாசமாக! நாட்டியத் தாலாட்டு! நடனம் ஆடிக் கொண்டே தாலாட்டு!

இந்தப் பாடலை எழுதியது "அலை பாயுதே" புகழ் - ஊத்துக்காடு வேங்கடகவி! பல அருமையான தமிழிசைப் பாடல்களைத் தந்துள்ளார்! கொஞ்சம் போல வடமொழிப் பாடல்களும் எழுதி உள்ளார்!

இந்தப் பாட்டுக்கு மெளலி அண்ணா/குமரன்/கவி அக்கா யாராச்சும் பொருள் சொன்னாங்கனா, மிகவும் மகிழ்வேன்!



மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி (மன்னார்சாமி) மேல் பாடிய பாட்டு இது!
மன்னார்குடி 108 திவ்ய தேசங்களுள் ஒன்றல்ல எனினும் இது ஒரு அபிமான ஸ்தலம்!


மன்னார்குடி இராஜகோபாலனை இன்னிக்கி எல்லாம் வைச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்கலாம்! அம்புட்டு அழகு! சொக்கத் தங்கம்! அவன் கையில் குழலும், காலடியில் பசுவும், தங்க விக்ரகமாய் மின்னும்!
நீங்களே பாருங்க! படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்க!

குழந்தை இல்லாதவர்கள், எம்பெருமான் கண்ணனை, இராஜகோபாலனை, இங்கு மடியேந்தப் பண்ணுவார்கள்!
தட்சிணத் துவாரகை என்று பெயர் பெற்ற தலம்! மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளார்!

ஊத்துக்காடு கவியின் பல பாடல்கள், மன்னார்குடி இராஜகோபாலனைச் சுற்றியே இருக்கும்!
* பாடலை நாட்டியப் பாணியில் இங்கே கேட்கலாம்!
* பம்பாய் சகோதரிகள் பாட, இங்கே கேட்கலாம்!

அருணா சாய்ராம்:



மணி நூபுர தாரி ராஜ கோபால
மணி நூபுர தாரி
கங்கண கிங்கிணி கண
(மணி நூபுர தாரி)

(மணி=மாணிக்கம்; நூபுரம்=சிலம்பு, கொலுசு; மணி நூபுர தாரி = மாணிக்க மணிச் சதங்கைகள், கங்கண-கிங்கிணி-கண என்று ஒலிக்க, இராஜ கோபாலக் குழந்தை ஓடி வருகிறான்!)

மணி கோமேதக லோகிதக நீல
மரகத வால வாயுஜ ஜால
மகுட விராஜித சிகுர மனோகர
முடிர சமகர களேபர கிங்கிணி கண

(மணி நூபுர தாரி)

மாணிக்கம், கோமேதகம், செம்பவழம், நீலம், பச்சை மரகதம் என்று பல அணிமணிகள் குழந்தைக்கு! தலையில் மகுடம் அலங்கரிக்க, அழகான கூந்தல் மேகம் போல் பரவ, குழந்தை ஓடி வரும் களேபரத்தில், கங்கண-கிங்கிணி-கண என்று ஒலிக்கிறதே!

மலயஜ ரஞ்சன யக்ஷ கர்த்தம
வர்ணக மிஷ்ரத அனுபோத
திலக மகைக சுகந்த விலேபன
திரிபுவன ப்ரகடித ப்ரதாப

ஜலதர நீல சமத்யுதி பால
ஸ்வாமி ஸ்ரீ ராஜ கோபால


லலாம கலோல லலித லலாட
மாலாத மால சுவர்ண கபோல
லாலித கோப கோபீ ஜன லோல
காளிங்க லீல கருணா லவால! - லல!
(மணி நூபுர தாரி)

ராகம்: நீலாம்பரி
தாளம்: ஆதி
வரிகள்: ஊத்துக்காடு வேங்கடகவி

செட்டியார் திருக்கோலத்தில், கையில் தராசுடன், இராஜகோபாலன்

Thursday, January 17, 2008

84. முருகனுக்கு மட்டுமா? கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்!

காவடி-ன்னாலே அது முருகனுக்கு மட்டும் தானே! அது எப்படிடா கண்ணனுக்குப் போயி எடுப்பாங்க? எங்கிட்டு எடுப்பாங்க-ன்னு தானே கேக்கறீங்க! மேலே படிங்க! தமிழ்க் கடவுளுக்குக் காவடி எடுக்கும் வழக்கம், தமிழ் மக்களிடையே காலம் காலமாக வந்த ஒன்று! - தெரிஞ்சது தான்!

சரி, தமிழ்க் கடவுள் யாரு? - முருகப் பெருமான்! - மிகவும் சரியான விடை! ஆனா கேள்விக்குண்டான எல்லா விடைகளையும் சொன்னாத் தான் மதிப்பெண்ணு, மதிப்பொண்ணு எல்லாம் கொடுக்கப்படும் :-) இன்னொரு தமிழ்க் கடவுள் யாருன்னும் சொல்லுங்க!

223

பழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் தெய்வங்கள் சேயோன், மாயோன்!
குறிஞ்சிக் கடவுள் = சேயோன் = முருகன் = பெருமான்
முல்லைக் கடவுள் = மாயோன் = கண்ணன் = பெருமாள்
மற்ற திணைகளான மருதம், நெய்தற், பாலைக்கு எல்லாம் தனித்தனித் தெய்வங்கள் இருந்தாலும், பெரும் தெய்வங்களாக எல்லா இலக்கியங்களிலும் பேசப்படுவது இந்த மாயனும், சேயனும் மட்டுமே!

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் முதற்கொண்டு, சிலப்பதிகாரம் முதலான காப்பியங்கள், பிற்கால இலக்கியங்கள் - என்று எல்லாவற்றிலும் இந்த இருவரின் ஆளுமை அதிகமாகத் தான் இருக்கு!
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
என்பது தொல்காப்பியம்! சிலப்பதிகாரத்திலும் விழாக் காலங்களில் இவர்கள் இருவரின் கோயில்களில் நடக்கும் வழிபாடு பற்றிச் சிறப்பாகப் பேசப்படுகிறது! ஒருவேளை மக்கள் அதிகம் புழங்கிய இடங்களாகக் குறிஞ்சியும் முல்லையும் இருந்திருக்கலாம்; அதனால் தானோ இவர்கள் மட்டும் இத்தனை பெரிதாகப் பேசப்படுகிறார்கள்?

ஆக தமிழ்க் கடவுள் என்றாலே அது மாயோனும், சேயோனும் ஆகிய இந்த இருவருமே தான்!
நண்பர் ஜிராவின் உதவியுடன், இது பற்றித் தனி ஆராய்ச்சிப் பதிவாகப் பின்னொருகால் இடுகிறேன்!
இராம.கி ஐயாவையும் சில பாடல்களுக்குப் பொருள் கேட்டுத் தெளிய வேண்டும்! இன்னிக்கி காவடி மேட்டருக்கு மட்டும் வருவோம்!


சின்ன வயசுல (மூனாங் கிளாஸ்-னு நினைக்கிறேன்) என்னைய திருப்பதிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காய்ங்க வூட்டுல!
விளையும் பயிர் தான் முளையிலேயே தெரியுமாமே! சரியான டகால்டி பார்ட்டின்னு அப்பவே என்னை முடிவு கட்டிட்டாங்களாம்! :-)

ஏன்னா....திருப்பதியில நான் அரோகரா அரோகரா-ன்னு கூவிக்கிட்டு இருந்தேனாம்!
வர்ற வழியில, திருத்தணியில் ஹால்ட்டு! அங்கிட்டு கோவிந்தா கோவிந்தா-ன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தேனாம்! நான் கல்லூரி லெவலுக்கு வந்த பின்னும் கூட, இதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எங்க மறைந்த ஆயா!(பாட்டி)

நான் மட்டும் தான் இப்படி டகால்ட்டி பேர்வழின்னு நெனைக்கறீங்களா? நம்மள விட ஒருத்தர் செம டகால்ட்டியா இருக்காரு!
ஊத்துக்காடு வேங்கட கவி-ன்னு ஒருத்தரு! அழகான பல தமிழிசைப் பாடல்களை எல்லாம் கொடுத்திருக்காரு! அலைபாயுதே கண்ணா பாட்டு அவர் எழுதினது தான்! ஏ.ஆர். ரஹ்மான் ராயல்டி ஏதாச்சும் கொடுத்தாரான்னு தெரியலை! அவரு கண்ணன் மேலே காவடிச் சிந்து பாடி இருக்காரு!

பொதுவா காவடிச் சிந்து-ன்னா அது முருகனுக்குத் தான்!
காவடி எடுக்கும் களைப்பு தெரியாம இருக்க, வழிநடைப் பாடலா இதைப் பாடுவாங்க! செஞ்சுருட்டி இல்லீன்னா சிந்து ராகத்தில் இருக்கும்! சும்மா பாட்டைக் கேட்டாலே போதும்,
தையத் தையத் தக்கத் தானா - திமி
தையத் தையத் தக்கத் தானா -ன்னு கால்கள் தானாவே ஆடும்!
அப்படி ஒரு அருமையான காவடிச் சிந்தை, கண்ணபிரான் மேல் பாடி இருக்காரு இந்த ஊத்துக்காட்டுக் கவி!
வாங்க...இன்னிக்கி கண்ணன் பாட்டுல, கண்ணனுக்குக் காவடி எடுப்போம்! கண்ணான கண்ணனுக்கு அரகரோகரா!:-)


மேலே மலேசிய பத்து மலைக் காவடிய உத்துப் பாருங்க! என்னாத் தெரியுது? :-)



எது பிடிச்சிருக்கோ, அதைக் கேட்டுக்கோங்க! என் தெரிவு அருணா சாய்ராம்! தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் நச்சரிப்பு பண்ணாலும், இவங்க சும்மா கும்மறாங்க! காவடி-ன்னாலே கும்ம வேணாங்களா? :-)
யேசுதாஸ் பாடும் காவடிச் சிந்து
அருணா சாய்ராம்
நித்ய ஸ்ரீ பாடுவது
பம்பாய் சகோதரிகள்

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)

தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!

(கண்ணன்)



கீழே ஒருத்தரு இந்தப் பாட்டுக்கு நாட்டியம் ஆடறாங்கப்பா! சும்மா கெடைச்சுது யூ-ட்யூப்பில்! சுட்டுப் போட்டுட்டேன்!

ஷைலஜாவுக்குப் புத்தாண்டு சபதம்! அப்புறம் அம்பிக்கு 2007 இல் புடிச்ச பதிவு! சீனா சாருக்கு மொக்கைச் சரம் பதிவு! - எல்லாம் எக்கச் சக்கமாப் பாக்கி இருக்கு!
சீனா சார் - இந்தப் பதிவை எல்லாம் ப்ளீஸ், மொக்கையில் கணக்கு எடுத்துக்க மாட்டீங்களா? :-)


இன்னிக்குத் தைக் கிருத்திகை-யாம்ல! திராச முருகனருள்-ல பாட்டு போட்டுருக்காரு! இங்கிட்டு கண்ணனுக்குக் காவடி எடுத்துட்டு, அங்கிட்டு முருகனுக்கு ஒரு கும்புடு போட்டுட்டு வந்துருங்க!

Monday, December 31, 2007

80. இச்சுவை தவிர யான் போய்....

எம்பெருமான் ஐந்து ரூபங்களுடன் விளங்குகிறான் என்கிறார்கள் படித்த சான்றோர்கள் - பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சைஎன ஐந்து ரூபங்களய் விளங்கும் அவனை நாம் காணமுடிவது ஐந்தாவதில் தான்.

பரம் எனப்படும் பரம ரூபம் ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும் அவனது திருமேனி. அது நமக்கு அகப்படாது.

பாற்கடலில் வாசுதேவன்,சங்கர்ஷணன்,ப்ரத்யும்நன்,அநிருத்தன்
என்கிற திருமேனிகளோடு நிற்கிறான். அவைகளுக்கு வியூஹம் எனப் பெயர். அவைகளையும் நாம் அறிவதற்கு அரிது.

ஸ்ரீராம, கிருஷ்ண அவதாரங்களுக்கு விபவம் எனப் பெயர்.
அவைகள் எல்லாம் எடுத்து முடிந்து விட்டபடியால் நாம் காண இயலவில்லை.

நமக்குள்ளே அந்தர்யாமி என்பது கட்டைவிரல் அளவில் இருக்கும் ரூபம்.
அந்த ரூபத்தையும் யோக சாதனையாலன்றி பார்க்க இயலாது. சாமான்ய மனிதர்களான நம்மால் அது இயலாது.

ஆகவே அவனுடைய ஐந்தாவது திருமேனியான அர்ச்சாவதாரம் (ஆலயங்களில் அவன் திருவுருவச் சிலைகள்) தான் நமக்குப் பார்த்து அனுபவிக்க முடியும்.
பின்னானார் வணங்கும் ஜோதி என்று அனுபவிக்கும்படி எல்லா திவ்ய தேசங்களிலும் அவன் சேவை சாதிக்கிறான். ஆண்டாள் திருப்பாவையில் சொல்லியபடி கூடி இருந்து குளிரக் குளிர பெருமானைக் காணவேண்டும்.

என்னரங்கத்தின் இன்னமுதர் குழலழகர் விழியழகர் கண்ணழகர் என்றெல்லாம் பெருமாளின் திருவழகில் மயங்கி நிற்கிறாள் மங்கை ஆண்டாள். அர்ச்சாவதார மூர்த்தியான அரங்கனின் மேனி அழகைக் கண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் இச்சுவை தவிர இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்கிறார்.

பாடலைப் படித்துக் கேட்டு இன்புறுவோமா?
மந்திர ஒலியில் இங்கு கேளுங்கள்! அருணா சாயிராம்
உன்னி கிருஷ்ணன் குரலில் இங்கு கேளுங்கள்!



renganatha
பச்சை மா மலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே.





திருமதி ஆர்.வேதவல்லியின் குரலில்
வேத நூல் பிராயம் நூறு
மனிசர் தாம் புகுவர் ஏலும்,
பாதியும் உறங்கிப் போகும்
நின்று அதில் பதினை ஆண்டு,
பேதை பாலகன் அதாகும்
பிணி பசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்க மா நகர் உளானே


திருமால் பெருமை படத்தில் TMS பாடுவது இங்கே!
ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை,
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா.
அரங்க மா நகர் உளானே



பதிவுலக நண்பர்கள் எல்லோருக்கும் இதயங் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- திருவரங்கப்ரியா

Monday, July 23, 2007

மாடு மேய்க்கும் கண்ணே !

கண்ணன் பாடல்களில் எனக்கு ஆர்வம் மிகக் காரணம் என் அன்னை. வேளைகளில், ஏதாவதொரு கண்ணன் பாடலை முணுமுனுத்தபடியிருப்பாள். இதன் நீட்சி, கண்ணன் பாடல்களில் எனக்கும் எப்போதும் விருப்புண்டு. ரவிசங்கர் இந்தப்பதிவைத் தொடங்கிய காலத்திலிருந்து பார்த்தும், பாடல்களைக் கேட்டும் வருகின்றேன். மிக அழகான பாடல்களெல்லாம் பதிவாகியுள்ளன.

இவை பற்றிக் கதைக்கும் வேளைகளிலெல்லாம், ரவிசங்கர் , நீங்களும் கண்ணன் பாடல் பதிவில் பங்குகொள்ளலாமே என்பார். நானும் எப்படியாவது தவிர்த்துக்கொண்டுவிடுவேன். என் தப்பித்தல் தந்திரத்தை புரிந்து கொண்டோ என்னவோ, என் பெயரையும் பதிவில் இணைத்து அழைப்பு அனுப்பிவிட்டார் ரவி. இதற்கு மேலும் தவிர்க்க முடியாதென்பதால் இதோ நானும்...

கண்ணனைப் பலருக்கும் பிடிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று எண்ணிய போது, அவனை புனிதக் கடவுளாக அல்லாது, குறும்புகளும், குறைகளும் கொண்ட மனிதனாகக் கொண்டாட முடிகிறதென்பது ஒரு காரணமாகவிருக்குமோ என்று கூட எண்ணத்தோன்றியது. ( அடிக்க வந்தீடாதீங்கப்பா..:-)

கண்ணனை மாடு மேய்பவனாக, யதுகுல பாலனாகப் பார்த்து ரசிக்கும் இந்தப்பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. பிரபல கர்னாடக இசைக்கலைஞர் அருணாசாய்ராமின் குரலில் இப்பாடலை முதலில் கேட்டபோது, அவரது பாடும் லாவகமும், இசையில் காட்டும் மாறுதல்களும், ரசிக்கத்தக்கதாக இருந்தது. அவ்விசையின்பத்தை இங்கே, உங்களோடினைந்து ரசிக்க வந்துள்ளேன். வாருங்கள்...



ரவிசங்கர்! உங்கள் அன்புக்கு நன்றி. பாடல் உங்களுக்கும், ஏனையோர்க்கும் மகிழ்வு தருமெனில் அதுவே எனக்கும் இன்பம்.

பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்


அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP