Showing posts with label புரந்தரதாசர். Show all posts
Showing posts with label புரந்தரதாசர். Show all posts

Tuesday, March 01, 2011

கண்ணன் தூணில் இருக்கிறானா? துரும்பில் இருக்கிறானா?


கண்ணன் எங்கே இருக்கிறான்? தூணில் இருக்கிறானா? துரும்பில் இருக்கிறானா?

இருங்க இருங்க. இந்த வசனம் கண்ணன் அவதாரத்தில் இல்லையே? அது ரொம்ப முன்னாடி நரசிம்ம அவதாரத்திலேயே வந்த வசனமாச்சே?

பின்னே. யாரு இப்படி கேட்டாங்க?

ஒரு வேளை யசோதா கேட்டாங்களா? நந்தகோபர்?

அட, யார் கேட்டா என்னப்பா? பதில் சொல்லுங்க.

கண்ணனோ, நரசிம்மனோ - இருவரும் (ஒருவரே!) எல்லா இடத்திலும்தானே இருக்காங்க.

அவங்க இல்லாத இடம்னு ஏதாவது இருக்கா?

எதிலும் இங்கு இருப்பான், அவன் யாரோன்னு பாடியிருக்காங்களே.

அப்போ, இந்த கேள்வி கேட்டது யாருப்பா? சொல்லப் போறீங்களா இல்லையா?

அது வேறெ யாருமில்லே. நம்ம புரந்தர தாஸர்தான்.

என்ன? சந்தேகமா? தாஸருக்கா?

நமக்குத்தான் கஷ்டமான நேரங்களில் பகவான் இருக்கானா இல்லையான்னு தோணும்.

ஆனா, அனைத்தும் அறிந்த ஞானியான தாஸருக்கும் அந்த சந்தேகம் வந்துடுச்சா?

அதுதான் கிடையாது.

அவர் கேள்விகள் கேட்பது நமக்காக.

அவர் பதில்கள் சொல்வது நமக்காக.

அவருக்கு சந்தேகம் வர்றது நமக்காக.

அதுக்கு அவரே விளக்கங்கள் கொடுப்பது நமக்காக.

கண்ணன் எங்கே இருக்கிறான்? அவனைப் பார்த்தீர்களா? என்று கேட்பது போல் கேட்டு, அதற்குண்டான பதிலையும் அவரே கொடுக்கிறார் - இந்த அழகான பாடலில்.

இப்போ பாடல்.


****

பிள்ளங்கோவிய செலுவ கிருஷ்ணன எல்லி நோடிதிரி
ரங்கன எல்லி நோடிதிரி


குழலூதிக்கொண்டு நின்றிருக்கும் கிருஷ்ணனை
எங்கு பார்த்தீர்கள்?
ரங்கனை, எங்கு பார்த்தீர்கள்?

எல்லி நோடிதரல்லி தானில்ல
தில்லவெந்து பல்லே ஜானர (பிள்ளங்கோவிய)


வெறும் கண்களால் எங்கு பார்த்தாலும் கிடைக்காத கிருஷ்ணன்
(பக்தியுடன் பார்த்தால் எங்குமே இருப்பான்) என்று அறிந்த மக்களே (பிள்ளங்கோவிய)

நந்தகோபன மந்திரங்கள சந்து கொந்தினல்லி
சந்த சந்தத கோப பாலர விருந்த விருந்ததல்லி
சுந்தராங்கத சுந்தரியர ஹிந்து முந்தினல்லி
அந்தகாகள கந்த கருகள மந்தே மந்தேயல்லி (பிள்ளங்கோவிய)


நந்தகோபரின் கோயில்களின் அக்கம் பக்கத்தில்
கோபாலத்து சிறுவர்களின் தோட்டங்களில்
அழகான கோபியர்களின் முன்னும் பின்னும்
ஆயர்பாடியின் கன்றுகளின் மந்தையின் நடுவில் (பிள்ளங்கோவிய)

ஸ்ரீ குருக்த சதா சுமங்கள யோக யோகதல்லி
ஆகமார்த்ததொளகே மாடுவ யாக யாகதல்லி
ஸ்ரீகே பாக்ய நாஷ வார்த்திப போக போகதல்லி
பாகவதரு சதா பாகி பாடுத ராகதல்லி (பிள்ளங்கோவிய)


குரு மற்றும் சத்பக்தர்கள் கூடும் இடங்களில்
ஆத்மார்த்த பக்தியுடன் செய்யப்படும் யாகசாலைகளில்
(நமக்குள் கொழுந்து விட்டு எரியும்) ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில்
பாகவதர்கள் எப்போதும் (கிருஷ்ணனை) புகழ்ந்து பாடும் ராகங்களில் (பிள்ளங்கோவிய)

ஈ சராசரதொளகே ஜனங்கள ஆசே ஈசெயல்லி
கேசரேந்த்ரன சுதன ரதத அச்ச பீடதல்லி
நாசதே மாதவ கேசவ எம்ப வாச கண்களல்லி
பிச்சுகொண்டத புரந்தர விட்டலன லோசனாக்ரதல்லி (பிள்ளங்கோவிய)


உலகத்து மக்களின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டு (இருக்கிறான்)
இந்திரனின் புதல்வனான அர்ச்சுனனின் தேரில் இருக்கிறான்
மாதவா, கேசவா என்று அன்புடன் குதித்து பாடும் பக்தனின் பேச்சில் மற்றும் கண்களில்
புரந்தர விட்டலா என்றழைக்கும் பக்தனின் விழியோரத்தில் (பிள்ளங்கோவிய)

*****

கண்ணன் ஆயர்பாடியில் இருக்கிறான் என்று ஆரம்பித்த தாஸர், கடைசியில், மாதவா, கேசவா என்று சொல்லிக் கொண்டே இருங்கள், உங்கள் மனதில், பேச்சில், கண்களில் என்று உங்களுக்குள்ளேயே, உங்களுடனேயே இருப்பான், வேறெங்கும் தேடவேண்டியதேயில்லை என்று அழகாக முடிக்கிறார்.

***

இந்த பாடலைப் வித்யாபூஷணர் பாடியுள்ள காணொளி இங்கே. (இரண்டாம் சரணத்தை பாடவில்லை இவர். முதலாம் மற்றும் மூன்றாம் சரணத்தை மட்டும் கேட்போம்).



***

Tuesday, February 01, 2011

என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்வாய்!

நாம் இன்று பார்க்கப் போகும் பாடலின் ஆசிரியர், த்வைத சித்தாந்தத்தில் 15ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு மகான். தாஸர். வேத, புராண, இதிகாசங்கள் அனைத்தின் சாரத்தையும், சர்வோத்தமனான பரந்தாமனின் பேர், குணம், அவதாரங்கள், சிறப்பு ஆகிய அனைத்தையும் அனைவருக்கும் புரியும்படியாக எளிய கன்னடத்தில் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தவர்.

யார் அவர்? அவர்தான் - நாரதரின் மறுபிறவி என்று கருதப்படும் - ஸ்ரீ புரந்தரதாஸர்.


எதுக்கு இன்னிக்கு அவர் பாடலை எடுத்துக்கிட்டோம்? ஏன்னா, இன்று ஒரு சிறந்த தினம். புஷ்ய மாத அமாவாசையான இன்றுதான் ஸ்ரீ புரந்தரதாஸரின் புண்ய தினம். ஆராதனை. உலகெங்கிலுமுள்ள தாஸரின் தாஸர்கள் அவரது பாடல்களை பாடி கடவுளை வழிபடும் நன்னாள்.

ஸ்ரீ மத்வர் உருவாக்கிய த்வைத சித்தாந்தத்தில் வந்த ஸ்ரீ வியாஸராயரின் பிரதம சீடர் நம்ம புரந்தரதாஸர். பாடல்கள் மூலமாக மக்களின் அறியாமையை அகற்றி அவர்களை பக்தி மார்க்கத்திற்கு திருப்ப வேண்டுமென்ற தன் குருவின் கட்டளையை ஏற்று எண்ணற்ற பாடல்களை பாடியவர்.


கடவுளை தன் தலைவனாக, நண்பனாக, குழந்தையாக இன்னும் பல்வேறு ரூபங்களில் நினைத்து, வர்ணித்து, உருகி அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள். அட, இதேதானே நம்ம தமிழ் ஆழ்வார்களும் செய்திருக்காங்கன்னு உங்களுக்கு தோணும். மிகச் சரி. தமிழில் ஆழ்வார்கள் என்றால் கன்னடத்தில் ஹரி-தாஸர்கள். அதாவது ஹரிதாஸர்கள். (இதில் புரந்ததாஸர், கனகதாஸர்னு வரிசையா நிறைய பேர் இருக்காங்க).

மறுபடி புரந்தரதாஸருக்கே வருவோம்.

**

பக்தியில் ஐந்து விதமான பக்தி உண்டு என்று சொல்லப்படுகிறது. அது என்ன?

தாஸ்ய பாவம் - கடவுளை தலைவனாகவும், தன்னை அடிமையாகவும் நினைத்து வழிபடுவது; பாடுவது.

சக்ய பாவம் - கடவுளை நண்பனாக நினைத்து வழிபடுவது.

மதுர பாவம் - கடவுளை கணவனாக நினைத்து பாடுவது. (கோபிகைகள் கண்ணனை நினைத்து உருகுவது இதில் வரும்).

வாத்ஸல்ய பாவம் - கடவுளை ஒரு குழந்தையாக நினைத்துக் கொள்ளுவது.

சாந்த பாவம் - இதில் பக்தன் உணர்ச்சி வசப்படாதிருப்பவன். அமைதியே உருவானவன். இந்த நிலையில் கடவுளை நினைத்து பாடுபவன்.

நம்ம தாஸர் (மற்ற அனைத்து தாஸர்களைப் போலவே), மேலே சொன்ன இந்த ஐந்து பாவங்களிலும் ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.


இன்று நாம் பார்க்கப்போகும் பாடல் - தாஸ்ய பாவத்தை சார்ந்தது.

அதாவது கடவுள் என்பவன்

தலைவன்.
முதலாளி.
அனைத்திற்கும், அனைவருக்கும் மேலானவன்.
சர்வோத்தமன்.

நானோ

அவன் தாஸன்
வேலைக்காரன்.
தலைவன் என்ன சொல்வானோ, அதை நான் செய்வேன்.
எனக்கு என்ன வேண்டுமோ அதை அவனே பார்த்து கொடுப்பான்.

இப்படியான உத்தமமான நிலைதான் தாஸ்ய மனோபாவம்.

இப்போ இந்த பாடலையும், அதன் பொருளையும் பாருங்க. உங்களுக்கே புரியும்.

**

தாஸன மாடிகோ என்ன
ஸ்வாமி சாசிர நாமத வேங்கடரமணா (தாஸன)


Infinity பெயர்களை கொண்ட வேங்கடரமணனே, ஸ்வாமி, என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்.

துர்புத்தி களனெல்ல பிடிஸோ
நின்ன கருணகவசவென்ன ஹரணக்க தொடிஸோ
சரணசேவே எனகெ கொடிஸோ
அபய கரபுஷ்பவ என்ன சிரதல்லி முடிஸோ (தாஸன)


கெட்ட எண்ணங்களை என் மனதிலிருந்து விடுவிப்பாய்
உன் கருணை என்னும் கவசத்தால் என் வாழ்க்கையை ரட்சிப்பாய்
உன் திருவடியை வணங்கி சேவை செய்யும் பாக்கியத்தை எனக்கு கொடுத்து
உன் அபயத்தை அளிக்கும் கரத்தை என் தலையில் வைத்து என்னை காப்பாற்று.

த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின பாடி
கடெகண்ணிலே என்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)


எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்.

மரெஹொக்க வரகாய்வ பிரிது
என்ன மரெயதே ரஷணே மாடய்ய பொரது
துரிதகளெல்லவ தரிது
ஸ்ரீ புரந்தரவிட்டல என்னனு பொரெது (தாஸன)


காப்பாற்று என்று உன்னை வேண்டியவருக்கெல்லாம் சமயத்தில் வந்து உதவி புரிந்த வரலாறு இருக்கிறது
அதே போல் (நானும் வந்திருக்கிறேன்) என்னையும் கண்டிப்பாக காப்பாற்று
என் அனைத்து பாவங்களையும் போக்கி
உன் கருணையால் என்னை கரையேற்று ஸ்ரீ புரந்தர விட்டலா!

முதல் இரண்டு பத்திகளில் பக்தி மேலோங்க பெருமாளிடம் வேண்டுகோள் வைக்கும் தாஸர், கடைசி பத்தியில் உரிமையுடன் கேட்பது போல் பாடியிருக்கிறார். கஜேந்திர மோட்சம், த்ரௌபதிக்கு அபயம் அளித்தது இது போன்ற உதாரணங்கள் இருக்கிறதே, அதே போல் எனக்கும் அபய ஹஸ்தம் கொடுப்பாய் என்று கேட்கிறார்.

**

இப்படி தாஸ்ய பாவத்தில் உருகி பாடியிருக்கும் புரந்தரதாஸரின் பாடலை யாரு பாடினா பொருத்தமாயிருக்கும்?

தினந்தோறும் அந்த வேங்கடரமணனையே ‘சுப்ரபாதம்’ சொல்லி எழுப்பும் - அந்த திருப்பதி வேங்கடவனின் காலடியிலேயே நிரந்தரமாய் தங்கி சேவை புரியும் - நம்ம எம்.எஸ்.அம்மாதான். வேறே யாரு?. பாடலின் முழுமையான அர்த்தத்தை புரிந்தவாறு, ஆத்மார்த்தமான பக்தியுடன் அம்மா பாடுவதை பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

தாஸன மாடிகோ என்ன..





**

ஜெய் ஜெய் விட்டல ! பாண்டுரங்க விட்டலா !!
ஜெய் ஜெய் விட்டல ! புரந்தர விட்டல !!


**

நன்றி
ச்சின்னப் பையன்
http://dasar-songs.blogspot.com

**

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP