Showing posts with label hindi. Show all posts
Showing posts with label hindi. Show all posts

Monday, January 30, 2012

ஹரி தும ஹரோ! (காந்தி - மீரா - எம்.எஸ்)

இந்தப் பாடல் காந்தியண்ணலின் விருப்பப் பாடல்! ஒரு நாள் எம்.எஸ் வந்திருந்த போது, அவர் குரலில் கேட்க ஆசைப்பட்டு, திடீரென்று அவரைப் பாடச் சொன்னார்!
எம்.எஸ்.அம்மா, 'தனக்கு இந்தப் பாடலை எப்படிப் பாடணும் என்பது தெரியாதே, முன்னே பின்னே இதைப் பாடியதில்லையே' எனத் தயங்க...

"அப்படியானால் பரவாயில்லை, நீ பாட வேணாம், உன் குரலில் இந்தப் பாட்டைப் பேசியாச்சும் காட்டு" என அண்ணல் கேட்க...
அதில் நெகிழ்ந்து போய்...பாடலையும் பொருளையும் கற்றுக் கொண்டு...அடுத்த நாள் பதிவு செய்து, அண்ணலுக்கு Air Mail-இல் பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்தார்!

இந்தப் பாடலையே, அண்ணலின் படுகொலைக்குப் பின், பல முறை வானொலியில் ஒலிபரப்பினார்கள்!


ஹரி.........
தும ஹரோ...ஜன் கி பீர்

அரி...அய்யா...
அன்பரின் துயரம் தீர்!
--------



திரெளபதி கி  லாஜ் ராக்ஹி......
தும படயோ சீர்
(ஹரி தும ஹரோ)

திரெளபதை தன்-மானம் காக்க.....
துகில் வளர்க்க விரைந்தீர்!
(அரி.....அய்யா)
--------

பக்த காரண, ரூப நரஹரி,
தர்யோ ஆப் சரீர்
ஹிரண்ய கஸ்யப, மார லீந்ஹோ,

தர்யோ நாஹின தீர்
(ஹரி தும ஹரோ)


சிறுவன் பொருட்டு, ஆள்-அரி உருவம்,
நன்று நீர் எடுத்தீர்!
சீறும் இரணியன்,  சாபம் தொலைந்திட,

அன்று நீர் முடித்தீர்!
(அரி.....அய்யா)

--------

பூடதே கஜ, ராஜ ராக்யோ,
கியோ பாஹர நீர்
தாச மீரா, லால கிரதர,

துக் ஜஹான் தஹான் பீர்
(ஹரி தும ஹரோ)


காதல் களிறின், காலைத் தூக்கி,
காத்து அருள் செய்தீர்!
தாச மீரா, கிரி-தாரி இங்கோ,

துக்க வலி பெய்தீர்!
(அரி.....அய்யா)

வரிகள்: மீரா
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
மொழி: இந்தி
Jan 30 - அண்ணலின் நினைவு நாள்!

Wednesday, August 24, 2011

கிரிதாரிக்கு திருநீர்


மீரா என்று ஒரு முறை கூறிப்பார்க்கின் இனம் விளங்காத ஒரு வலி நம்மை பற்றிக் கொண்டு விடுகிறது. நாம் இப்போது அறியப் போகும் அவளின் பாடல், அவளுடைய இளம் பிராயத்தினது அன்று, தன்னுடைய முதிர்ந்த அகவையில் இயற்றியது. தன்னை மறுதளித்து கொண்டே வருகிறானே இந்த மாய கிரிதாரி; ஒருவேளை அவனுக்கு அவளின் பிரேமை என்பதும் சலித்தும் போனதோ? அன்று பெண்கள் என்றால் ஒவ்வாத நோயும் கொண்டானோ ? இல்லை துறவியாகி விட்டானோ ? என்று பலவாறு எண்ண அலைகள் தோன்றி மறைந்தன அந்த அடிமைக்கு!

அவன் ஒரு வேளை துறவியாக மாறிவிட்டனானால்; இனி ஒரு முறை எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதற்கில்லை, தன்னிடம் வாராததர்க்கும் காரணம் கேட்டு அறிவதற்கில்லை; பிரேம பக்தியில் தான் அவிழ்க்க இயலாத புதிர்களின் விடைகளை அறிவதர்க்குமில்லை. ஹே ! கிரிதாரி நீ துறவியாகவே ஆகியிருப்பினும் எனக்கு ஒரு வழி சொல்லியே தீர வேண்டும்..

அந்தோ! மாயவ .. நீ துறவியாக வந்து சேர்ந்தால், உனக்கு என்னால் என்னதான் தர இயலும். வனமாலை தான் தொடுத்து சூட்ட முடியுமா ? பட்டு பீதாம்பரங்களை உடுத்த தர முடியுமா ? சுகந்தம் வீசும் திரவியங்களை அள்ளி உன் மார்பில் பூச முடியுமா ? உன் கண்களை தீரா மோகத்துடன் பார்க்க முடியுமா ? கட்டி அணைக்க முடியுமா ?
இல்லை மூச்சு முட்ட முத்தம்தான் இட முடியுமா ? எதற்கும் இம்மி அளவும் சாத்தியம் இல்லை..

அந்த துறவிக்கு அவளால் தர இயன்ற ஏதேனும் ஒன்று உண்டா? உண்டென்றால் அது என்ன? துறவிக்கு உகந்த வஸ்து ..மீராவால் தர இயன்ற ஒன்று.. சாம்பல்!

ஆம், துறவியாக வரும் அவனுக்கு இவள் தர முடிவு செய்தது, துறவிகள் அங்கமெல்லாம் பூசிக்கொள்ளும் சாம்பல்தான்.. அதென்ன அவ்வளவு சாதாரணமான ஒரு வஸ்துவை தருகிராளே, என்று யாரும் எண்ணக் கூடாது என்றேதான், அதன் செய்முறையையும் தன் பாடலில் இயற்றி உள்ளாள். துறவியும் விரும்பும் சாம்பலாகவே மாறி அவன் அங்கம் தழுவி நிற்கவும் தயாரானாள்.

ஹே பிரபு.. நீ சந்தனமென்றால் நான் தண்ணீர்..
ஹே பிரபு.. நீ சூரியனென்றால் நான் சந்திரன்
ஹே பிரபு.. நீ முத்துக்கள் என்றால் நான் நூல்..
ஹே பிரபு.. நீ துறவியானால் நான் சாம்பல்..
ஹே பிரபு..நீ கிரிதாரி நான் உந்தன் தாசி..

பாடல்..


மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..
பாவ் பரூன் மே.. சேரி தேரி..

செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..
பாதம் பணிந்தேன் பேதை உந்தன்..

பிரேம பக்தி கி பெந்தோ ஹி ந்யாரோ..
ஹம்கோ கேல் பதா ஜா..

பிரேம பக்தியின் பாதையில் புதிர்கள் ..
பகர்ந்திடு பதில் ஒன்று எனக்கு ..

அகர் சந்தன் கி சிதா பனாஊன்
அப்னே ஹாட் ஜலா ஜா

சந்தனத்து விறகினில் சிதையொன்று செய்தால்
உந்தனது கையினால் எரியூட்டு..

ஜல் பல் பை பஸ்முஹீ டெரி..
அப்னே அங்கு லகா ஜா
மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..

என் சவமது எரிந்து சாம்பலாய் குறைந்தால்
உனது மேனியில் பூசிக்கொள் - ஸ்வாமி
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..

மீரா கஹே பிரபு கிரிதர நாகர
ஜோத் சே ஜோத் மிலா ஜா - ஜோகி ..

மீரா கோரும் பிரபு கிரிதர நாகர
உந்தன் ஜோதியில் கலந்திடு என்னை ..
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..

Monday, August 15, 2011

ரகுபதி ராகவ ராஜாராம் !


 


ரகுபதி ராகவ ராஜாராம் !
பதீத பாவன சீதாராம் !

சீதாராம் ஜெய சீதாராம் !
பஜ து ப்யாரே சீதாராம் !

ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !

ரகுபதி ராகவ ராஜா ராம் !
பதீத பாவன சீதாராம் !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

ஜெய ஜெய ராம் !
கோவிந்த ஹரி ஹரி !
ஜெய ஜெய ராம் !
முகுந்த ஹரி ஹரி !

கோவிந்த ஹரி ஹரி !
முகுந்த ஹரி ஹரி !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

பாடலை எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் கீழே கேட்கலாம்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Sunday, September 26, 2010

பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் !



எனக்கு மிகவும் பிடித்த ஒரு இனிய மீரா பஜன் (ஹிந்தி பாடல்). உங்களுக்கும் பிடிக்கும் என்று இங்கே பகிர்ந்து கொள்கிறேன். :-)
கலைமகள் மகள் எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலைப் பாடுவதை இங்கே கேட்கலாம்.


[மீரா பஜனை]

சாக்கர் ராகோ ஜி ! மனே சாக்கர் ராகோ ஜி !

சாக்கர் ரஹஸூ பாக் லகாஸு நித உட் தர்சன பாஸூ
ப்ருந்தாவன கீ குஞ்சகலின் மே தேரீ லீலா காஸூ

மோர முகுட பீதாம்பர ஸோஹ கல பைஜந்தி மாலா
ப்ருந்தாவன மே தேனு சராவே மோஹன முரளி வாலா

யோகி ஆயா யோக கரண கோ, தப கரணே சன்யாசி
ஹரி பஜன கோ சாது ஆயா, ப்ருந்தாவன கே வாசி

மீரா கே ப்ரபு கஹர கம்பீரா ஹ்ருதய தரோ ஜீ தீரா
ஆதிராத ப்ரபு தரசன தேன்ஹே ப்ரேம நதீ கே தீரா



[பொருள்]

வைராக்யம் வாய்ந்த தீரர்கள் தங்கள் இதயத்தில் வைத்துப் போற்றும் மீராநாதன் அளவிட முடியாத ஆழமானவன் ! கம்பீரமானவன் ! தீரர்களுக்கு எல்லாம் தீரன் ! இவன் வைஜயந்தி மாலை அணிந்தவனாக, மயிற்பீலி அலங்கார கிரீடம் தரித்தவனாக, பீதாம்பரனாக, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு பிருந்தாவனத்தில் மாடுகள் மேய்ப்பவன். காண்போர் மனதை மயக்கும் அழகன்.

மோஹன கிருஷ்ணா ! பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் ! உன் தரிசனத்தை தினமும் பெறுவேன். கொடி மண்டபங்கள் நிறைந்த பிருந்தாவன தெருக்களில் எல்லாம் உன் லீலைகளைப் பாடி செல்வேன். உனது சேவையாக ஒரு தோட்டம் அமைப்பேன். அந்தத் தோட்டத்திற்கு பிருந்தாவன வாசிகள் பலரும் வருகை புரிவர். யோகம் செய்ய யோகிகள் வருவர். தவம் செய்ய சன்யாசிகள் வருவர். ஹரி பஜனை செய்ய சாது ஜனங்கள் வருவர். அமைதியான இரவில் உள்ளத்தில் அன்பு பொங்கும் வேளையில் நீயும் வருவாய். அனைவருக்கும் உன் இன்ப தரிசனம் தருவாய். ஐயே ! பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் !

Thursday, December 31, 2009

தாஸ மீரா லால கிரதர !


"ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாணுதலே."

மேலே உள்ள நம்மாழ்வார் பாசுரத்தை நினைவுபடுத்தும் வகையில், "ஹரி ஹரி ஹரீ" என்ற உருக்கமான அழைப்பினோடு ஒரு மீரா பஜனை, கண்ணனும் அபகரிப்பவன் (ஹரி) தான் என்ற வகையில் கண்ணன் பாடலில் தரப்படுகிறது. :)

"அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?" என்ற பாடலில் புகழப்பெற்ற அதே லீலைகளை இந்த ஹிந்தி மீரா பாடலிலும் காணலாம். எம்.எஸ் அம்மா அவர்களின் உருக வைக்கும் குரலில் இங்கே கேட்கலாம்.

ஹரி தும ஹரோ ஜன கீ பீர ||

த்ரௌபதி கி லாஜ ராகி
தும படா யோ ஜீர் ||

பகத காரண ரூப நரஹரி
தர்யோ ஆப சரீர |
ஹரினகஸ்யப மார லீன்ஹு
தர்யோ நான்ஹின தீர் ||

பூடதே கஜராஜ ராக்யோ
கியோ பாஹர நீர |
தாஸ மீரா லால கிரதர
துக ஜஹா தஹா பீர ||

ஹரி ஹரீ ஹரீ ஹரீ
தும ஹரோ ஜன கீ பீர் ||

யானைக்கு அருள் செய்ததையும், பாலனை பாலனம் செய்ததையும், சபையில் பக்தையின் மானம் காத்த அருளையும்  பாடி அடியாள் மீரா  கிரிதரநாதனை எல்லோர் சார்பாகவும் எல்லா துயர்களையும் களைய வேண்டுகிறாள்.

2010 புத்தாண்டு தினத்தில் ஹரி அனைத்து உயிர்களின் துன்பங்களையும் களைய நாமும் அவன் அருள் வேண்டுவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு !! :)

ராதே கிருஷ்ணா !!
~
கிரிதாரியின்,
ராதா

Sunday, December 20, 2009

எங்கள் கண்களில் வசிக்க வா!

சொந்தமாக கவிதை எழுதும் திறமை இல்லாவிடினும், இருக்கும் கவிதைகளை நன்றாக காப்பி அடிக்க தெரியும். :)

இதோ இங்கே ஒரு மீரா பஜனை பாடல் - ஹிந்தி மூலமும், "காற்றினிலே வரும் கீதம்" என்ற ரா.கணபதி எழுதிய புத்தகத்தில் இருந்து தமிழாக்கமும்.

(மீரா பஜன் -1)

பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா ||

மோஹனீ மூரத ஸாம்வரீ ஸூரத நைநா பனே பிஷால் ||


மோர முகுட மகராக்ருதி குண்டல, அருண திலக சோஹ பால் ||

அதர சுதா ரஸ முரளி, ராஜதி உர (பை)பம்ஜதீ மால் ||


சுத்ர கண்டிகா கடி தட ஷோபித நூபுர ஸபத ரஸால் ||

மீரா ப்ரபு ஸந்தன சுகதாயீ ப-க-த-வ-ச-ல கோ-பா-ல் ||


(தமிழாக்கம் - நன்றி ரா.கணபதி, கிரிதாரி)


அந்தமில் அழக, நந்தலால,

கண்ணில் வசிக்க வா, கண்ண, பால


மோகன மூர்த்தி

சியாமள சீர்த்தி

நயனம் விரி நேர்த்தி


மயிற்பீலி மங்கலம்

மகரமீன் குண்டலம் - நெற்றி

திலக முகமண்டலம்


ஆரமுதம் பொழியும் அதரம் - அதனில்

தீங்குழல் பொழியும் இன்சுரம்

பேரெழில் வைஜயந்தி உறை உரம்


உயிரை கவர் உதரம் - அதனில்

மோகன கிண்கிணி மதுரம்

இன்னிசைக்கும் நூபுரம்


மீரா இதய பூபாலன்

அன்பர்க்கு இனிய க்ருபாலன் - பக்த

கன்றுகள் கோபாலன்.


இந்தப் பாடலை பாரதத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷமாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பக்தி ரசம் நிறைந்த குரலில் இங்கு கேட்கலாம்.
(மற்றுமொரு சுட்டி.)
Baso More - M S Su...


~
கிரிதாரியின்,
ராதா

Friday, October 09, 2009

இராதாப்ரேமி..!



யர்பாடியின் பொன் அந்தி மாலை நேரம் அது.

யமுனை நதி சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கின்றது. அதன் நீரலைகள் காற்றின் மென் தீண்டல்களின் போதெல்லாம் அசைந்தாடி, நளினமான இளம் பெண்ணின் இடை போல வளைந்து நகர்ந்து, நகர்ந்து செம்மண் கரைகளின் மீது மோதிக் கொண்டிருக்கின்றன. அதன் கரைகளின் வளர்ந்திருந்த நாணல் செடிகள், மாலைக் கால ஊதற் காற்றுக்குத் தலையாட்டிக் கொண்டிருக்கின்றன. படிக்கட்டுகளில் விரவியிருந்த ஈரம் அவ்வப்போது, வந்து மோதிய சிலுசிலுப்புத் தென்றலில் தவழ்ந்து கொண்டே இருக்கின்றது. வெண்மை நிற நுரைகளைக் கண்ட சிறுவர்கள் வெண்ணெய் என்று நினைத்து அள்ளி அள்ளித் தின்கிறார்கள். கண்ணன் வாழும் ஊரின் கரைகளைத் தொட்டுக் கடக்கும் நதியின் நுரைகள் அல்லவா..? அவையும் இனிக்கின்றன.

நதியின் அக்கரையில் இருந்து ஆரம்பிக்கின்றது ஒரு வனம். பலவித மரங்கள், காற்றுக்கு அடையாளம் தரும் பலவித மணம் பூக்கும் மலர்கள், பசுமையான புற்செடிகள், மூங்கில்கள், குளங்கள், மலைகள். இயற்கையின் முழுமையான அன்பான அரவணைப்பில் கட்டுண்டிருக்கும் காடு அது. மாலை ஆகி விட்டதல்லவா..? ஆநிரைகள் மேய்த்த யாதவச் சிறுவர்கள் களைப்புடன் மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பசுக்களும், மாடுகளும், ஆடுகளும் கூட தமது எஜமானர்களோடு முட்டாமல், மோதாமல் தமக்குள் இரகசியங்கள் பேசிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

எங்கிருந்தோ ஒரு தேமதுரக் குழலோசை கேட்கின்றது.

வேறு யாராக இருக்க முடியும்..? சூரியனைத் தவிர கதிர் ஒளி தர யாரால் முடியும்..? சிலுசிலுவென ஈரம் கலந்த குளிரைத் தர தென்றல் காற்றையன்றி வேறு யாரால் இயலும்..? உச்சி முகடுகளில் இருந்து கிளம்பி ஒவ்வொரு மலராய் முத்தமிட்டு தேன் அள்ளி சேகரித்து, சேர்த்து வைத்து இனிக்க இனிக்கச் சொட்டுச் சொட்டாய்க் கொடுக்கத் தேனீக்களால் அன்றி வேறு யார் செய்ய முடியும்..? கேட்பவர் அத்தனை பேரையும், கிறங்கச் செய்து, விழிகளில் நீர் பெருகச் செய்து, அந்த மயக்கத்தில் மனதில் மிதக்கின்ற கசடுகளையும் கவலைகளையும் கனமிழக்கச் செய்யும் அந்த கண்ணனை அன்றி யாரால் அத்தகைய குழலோசையை வழங்க முடியும்..?

வனத்தின் மரங்களின் இடுக்குகளில் எல்லாம் சின்னச் சின்னதாய்க் கூடுகள் இருக்கின்றன. அவற்றின் கையகல இடங்களில் எல்லாம் சிட்டுக் குருவிகளும், மைனாக்களும் தத்தம் குட்டிகளோடு இருக்கின்றன. அவை அத்தனையும் அந்த நாத ஓசையில் மயங்கி சிறகடிக்கவும் மறந்து பொட்டுக் கண்கள் மூடி இருக்கின்றன. நதியில் வரும் நீரோட்டத்தை எதிர்த்தும், அதன் வழியோடு சென்றும் துள்ளித் திரியும் மீன்களும் அந்த குழல் இசையைக் கேட்க வேண்டும் என்பதற்காக, நீரில் இருந்து மேலே மேலே எம்பித் துள்ளித் துள்ளிக் குதிக்கின்றன. அப்போது நதியைப் பார்த்தால், அதன் மேல் மழைக் கம்பிகள் விழும் போது எப்படி துளிகள் தெறிக்குமோ, அப்படி காட்சியளிக்கின்றது. அந்த மச்சங்களுக்கெல்லாம் தரையில் வாழும் ஜீவன்களைக் கண்டு பொறாமையாய் இருக்கின்றது. பின்னே என்ன, தரை உயிர்கள் எல்லாம் நொடி அளவும் இடைவெளி இன்றி உயிர் மயக்கும் இசையைக் கேட்கின்றன அல்லவா..?

நதியின் கரைகளில் படர்ந்திருக்கும் தாமரை இலைகளின் மேல் தவளைகள் தாவித் தாவி விளையாடுகின்றன. காற்றில் எம்பிக் குதிக்கும் மீன்களுக்கு அவற்றைக் காணும் போது, தம்மைக் கிண்டல் செய்கின்றனவோ என்று தோன்றியது. மீன்களின் சந்தேகத்தை உணர்ந்தது போல், தவளைகள் வேறோர் இடத்தைக் காட்டின. அங்கே பாம்புகள் மயக்கத்தில் தலை அசைத்து, தத்தம் வால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. 'கால்களே இல்லாத பாம்புகளே, உற்சாகத்தில் ஊறிக் கிடக்கும் போது, அவற்றைப் பற்றிய பயமில்லாமல், நான்கு கால்களோடு நாங்களும் மகிழ்ச்சியோடு குதித்துக் கொண்டிருக்கிறோம்..' என்று சொல்லின போலும்..!

மரங்களின் கிளைத்திருந்த இலைகள் காற்றில் அசைந்து கொண்டிருகின்றன. அவையும் இசையை இரசிக்கின்றன. கிளைகளும், இலைகளும், பூக்களும், காய்களும், கனிகளும் யாவும் மொத்தமாக இசையமுதை அள்ளி அள்ளி அருந்திக் கொண்டிருக்கின்றன.

காற்றின் அணுக்களை எல்லாம் நிரப்பி, கானத்தால் கருவம் கொண்டலையச் செய்கின்ற கண்ணனது குழலிசை ஆயர்பாடியுள் மட்டும் செல்லாமல் இருக்குமா..? அப்படி செல்லாமல் இருக்கத் தென்றல் காற்று தான் விட்டு விடுமா என்ன..?

வளது வீட்டின் பின்கட்டில் தோட்டம் இருக்கின்றது. வெள்ளைப் பளிங்கினால் ஆன படிக்கட்டுகளைக் கடந்தால் தோட்டம். இராதா முதலாம் படிக்கட்டின் மேல் அமர்ந்திருக்கின்றாள். அங்கிருக்கும் ஒரு நெடும் தூணின் மேல் சாய்ந்திருக்கிறாள். அவளது கைகள், ஆசையோடு வளர்க்கும் புள்ளிமானுக்குப் புற்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால அவள் கவனம் அங்கே இல்லை. அந்த மான், இந்த மானின் நிலையைப் புரிந்து கொண்டது. மேலும் அவளைத் தொல்லை பண்ணாது, தானே புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அதனை அறியாத இராதா, ஒவ்வொரு புல்லாக எடுத்துப் போட்டுக் கொண்டே, மேலும் அந்த மானிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

"அடியே..! எத்தனை கொடுத்தும் தின்று கொண்டே இருக்கின்றாயே..? இத்தோடு மூன்று கட்டுகள் புற்களைக் கொடுத்தாயிற்று. இன்னும் பசி அடங்கவில்லையா உனக்கு..? நீ சாதாரண மான் தானா..? இல்லை ஒரு காலத்தில் யமுனை நதியில் பெரும்பசி எடுத்து வந்தவர்களை எல்லாம் தின்ற காளிங்கனின் அவதாரமா..?" காளிங்கனை நினைத்ததும் அந்த பாம்பரசனை நடனமாடிக் கொன்ற ஒரு தீரனது நினைவு அவளுக்குள் எழுந்தது. கையில் இருந்த புற்களைக் கண்ணீர்த் துளிகள் நனைத்தன.

தெருவில் ஒரு கிழவியின் குரல் கேட்டது."தயிர்...பால்...வெண்ணை...வெண்ணை..." வெண்ணைக் குரல் இந்தப் பெண்ணைத் தீண்டியவுடன் அவள் எண்ணத்தை நிரப்பியது ஒரு கள்ளனின் குழந்தை முகம். அதில் எப்போதும் ததும்பும் குறும்புப் புன்னகை.

இராதைக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

அப்போது அவள் இதே தோட்டத்தில் மான்களோடும், மயில்களோடும், புறாக்களோடும், குயில்களோடும் விளையாடிக் கொண்டிருந்தாள். குயில்கள் ஒரு சமயம் 'கூ...கூ..'வெனக் கூவும். இராதை அகமகிழ்ந்து அவற்றைத் தடவிக் கொடுப்பாள். அதனைக் கண்டு, மயில்களும் தாமும் தடவல் பெற வேண்டும் என்பதற்காக, அவற்றால் இயன்ற அளவிற்கு கோரமாக அகவும். விழுந்து விழுந்து சிரிக்கும் இராதை, அவற்றையும் ஓடிப் போய்த் தடவுவாள். மகிழ்ந்து போகும் மயில்கள் தேகம் சிலிர்த்து, தோகை ஒன்றைக் கொடுக்கும். அப்படி கிடைத்த தோகைகளை இராதை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுவாள், ஒரு மாயவனுக்கு கொடுப்பதற்காக! தாம் கொடுக்கத் தோகை ஏதும் இல்லையே என்று சோகத்தில் குயில்கள் மேலும் கூவும். இப்போது இராதை இங்கும் ஓடி வருவாள்.

இந்த விளையாட்டை அவளது தோளின் மேல் அமர்ந்து வெண்புறாக்கள் பார்த்துக் கொண்டு கண் சிமிட்டிக் கொண்டிருக்கும். இது போன்ற சிறுபிள்ளைத்தனங்களில் தாங்கள் கலந்து கொள்வதில்லை என்ற இறுமாப்போடு புள்ளிமான்கள் அவை பாட்டுக்குத் தத்தம் புல் மேய்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

அப்போது, அவளது படுக்கையறையில் சத்தம் கேட்டது. யாரோ புகுவது போல! சிறிது நேரத்தில் அந்த சத்தம் அடங்கி அமைதியாகி விட்டது. யாரோ புகுந்து மறைந்திருக்கிறார்கள் என்று தெரிந்து விட்டது. 'யாராயிருக்கும்..?' என்ற சந்தேகத்தோடு இராதா தோட்டத்தில் இருந்து நீங்கி, அவளது அறையை நோக்கிச் செல்லும் போது, எதிரே பக்கத்து வீட்டுக்காரி வந்தாள். பின்புற வாசல் வழியாக உள்நுழைந்தாள் போலும்!

"இராதா..! இராதா..! கண்ணன் இங்கு வந்தானா..?" என்று கேட்டாள்.

புரிந்து விட்டது. அவளது அறைக்குள் நுழைந்தவன் அவனே தான்.

"ஏனக்கா..?" என்று கேட்டாள் இராதா.

"என்னவென்று சொல்வதம்மா..! இந்தப் பயலின் குறும்புகள் வர வர அதிகமாகிக் கொண்டே வருகின்றது. வளர வளர பொறுப்பு வரும். நந்தகோபரின் இல்லப் பெயர் சொல்லுமாறு வளர்வான் என்று பார்த்தால் இவன் இன்னும் சிறுவனாகிக் கொண்டே போகின்றான். போன வாரம் இவன் எங்கள் வீட்டுச் சமையலறையில் தரையில் வைத்திருந்த வெண்ணெய்ப் பாத்திரங்களை உருட்டி, உடைத்து, தின்று விட்டுப் போயிருக்கிறான். இவனுக்குப் பயந்து, அதற்கப்பால் தரையிலேயே பாத்திரங்களை வைப்பதில்லை. எல்லாவற்றையும் இறுக்க மூடி பரண் மேல் வைத்து விட்டு வெளியே சென்று விடுவேன். இன்று வந்து பார்த்தால், அந்த கள்ளன் என்ன செய்திருக்கிறான் தெரியுமா..? பரணின் மீதேறி எல்லாவற்றையும் தின்று விட்டு, ஒரு பூனையை வேறு அங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறான். இவன் தின்றது போக மிச்சம் மீதி இருந்தவற்றையாவது நாங்கள் பயன்படுத்துவோம். இப்போது அவன் கொண்டு வந்த பூனை, மிச்சம் மீதியையும் வழித்து தின்று விட்டிருக்கின்றது. இந்த முறை இவனைச் சும்மா விடுவதில்லை. அவனைப் பிடித்து நேராக நந்தகோபரிடமே கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறேன். அவனை மட்டுமல்ல, அந்த திருட்டுப் பூனையையும் பிடித்துக் கொடுக்கப் போகிறேன். யசோதையிடம் சொல்லி ஒரு பயனுமில்லை..! நான் துரத்திக் கொண்டு வரும் போது, அவன் இங்கே வந்தது போல் இருந்தது. வந்தானா..?" என்று பெருமூச்சு விட்டாள்.

இராதையின் படுக்கையறையில் சிறு சிறு சத்தங்கள் கேட்டன.

இராதை யோசித்து, "இல்லையக்கா..! அவன் இங்கே வரவில்லை..! நான் இங்கே தானே இருக்கிறேன். அவன் வரவில்லை..!" என்றாள்.

"கவனமாய் இரம்மா..! அந்தக் கள்ளன் பொல்லாதவன். இங்கே வந்து உன்னிடமிருந்தும் ஏதேனும் திருடிக் கொண்டு போய் விடுவான்..!" என்று சொல்லி விட்டுப் போனாள் அவள்.

'இன்னும் என்னிடமிருந்து எதைத் தான் திருட வேண்டியிருக்கின்றது அவன்..? என் பரிமள இதயத்தையும், உறக்கத்தையும் ஏற்கனவே களவாடிக் கொண்டு விட்டான். மிச்சமிருப்பது என் உயிர் மட்டும் தானே..!' பெருமூச்செறிந்தாள் இராதா.

பக்கத்து வீட்டுக்காரி சென்று விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு, இராதா அவளது அறைக்குச் சென்றாள். அதன் வாசலில் நின்று கொண்டு, உள்ளே பார்த்து கூவினாள்.

"யாரது என் அறைக்குள்ளே..? வெளியே வந்து விட்டால், அவர்கள் விரும்பிய பொருள் தரப்படும். நினைவிருக்கட்டும். எங்கள் தொழுவத்தில் நிறைய பசு மாடுகள் இருக்கின்றன. அவற்றில் இருந்து பெற்ற வெண்ணெய் எங்கள் வீட்டில் நான்கைந்து உறிகள் நிறைய இருக்கின்றன. உள்ளே இருப்பவர்களுக்கு வேண்டுமா, வேண்டாமா..? வேண்டுமெனில் அவர்களே வெளியே வர வேண்டும்.." என்றாள்.

"அவள் போய் விட்டாளா..?" என்று உள்ளே இருந்து குரல் கேட்டது. கூடவே, "மியாவ்..."

அவனே தான்.

"போயாயிற்று..!" என்றாள் இராதா.

கண்ணன் வெளியே வந்தான்.

ஆஹா..! அவன் வந்த கோலம் தான் என்ன அழகு..? நள்ளிரவில் வானம் முழுதும் கரியதாக இருளென இருக்கும். ஒரே ஒரு வெண்ணிலா மட்டும் பளீரென வெண்மையாய்க் காட்சியளிக்கும். ஆங்காங்கே புள்ளிப் புள்ளியாய் நட்சத்திரங்கள் மினுக்கும். அது போல கண்ணனது திரு கருமுகத்தில் உதடுகள் மட்டும் இப்போது தான் உண்ட வெண்ணெயின் வெண்மை நிறத்திலும், கன்னங்களில் எல்லாம் வெண்ணெய்த் தெறிப்புகளும் இருந்தன.

வானில் இருக்கும் கரு மேகங்களில் மழையானது சிறு சிறு பொட்டுத் துளிகளாய் இருக்கும். அந்த முகில்கள் போல, ஆடைகள் கலைந்திருந்தன. அவற்றின் மேல் வியர்வைத் துளிகள் பொட்டுப் பொட்டாய் துளிர்த்திருந்தன.

அவன் கைகளில் ஒரு பூனை. வெளியே வந்தவுடன், வெளிச்சம் கண்டு மிரண்ட அது, அவன் கைகளில் இருந்து துள்ளி குதித்து, 'தப்பித்தோம்; பிழைத்தோம். அப்பா கண்ணா..! நீ கூப்பிட்டாய் என்று வந்து, நான்கு சொட்டு வெண்ணெய் தின்பதற்குள் உயிருக்குப் பயந்து ஓட வேண்டியதாகி விட்டது. இன்றோடு நீ இருக்கும் திசைக்கே ஒரு வணக்கம்!' என்று சொல்லி விட்டு ஓடி மறைந்தது.

"இராதா..! நல்லவேளை நீ காப்பாற்றினாய். இவளிடம் சிக்கி இருந்தேன் என்றால், என் நிலைமை என்ன ஆகி இருக்கும். அப்பாவிடம் கூட்டிப் போயிருப்பாள். நான் ஆநிரை மேய்க்கப் போகாமல், வெண்ணெய் திருடுகிறேன் என்று அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். போகட்டும். வெளியே வந்தால் ஏதோ தருவதாகச் சொன்னாயே..? என்ன அது காட்டு..?" என்று கேட்டான் கண்ணன்.

அதுவரை கைகளில் மறைத்து வைத்திருந்த மயில் தோகைகளை நீட்டினாள், இராதா. தோட்டத்தில் இருந்து ஜன்னல்கள் வழியாக வீசிய காற்றுக்கு அந்த பசிய தோகைகள் அசைந்தாடின.

"ஆஹா..! இராதா..! எத்தனை அழகு..! எத்தனை அருமை..! கொடு..! எனக்கு மிகப் பிடித்தமானதையே நீ கொடுக்கிறாய்..! அருகே வா..! என்னை அவளிடமிருந்து காப்பாற்றியதற்கும், பரிசு கொடுப்பதற்கும் உனக்கு ஒன்று தருகிறேன். வா..!" என்று அவள் கைப்பிடித்து இழுத்தான், அந்த மாயன்.

மிக அருகில் சென்று நின்றவுடன், கண்ணன் அவளது செழுமையான பொன்னிறக் கன்னத்தில், தன் இதழ்களைப் பதித்தான்.

சடாரென அவளை விட்டு, ஓடி வெளியே மறைந்தான்.

கோதை என்று ஒருத்தி இருந்தாள். அவள் என்ன கேட்கிறாள்? " வெண் சங்கே..? அந்த மாதவனின் செவ்விதழ்ச்சுவையும், நறுமணமும் எது போல் இருக்கும்..? பச்சைக் கருப்பூரத்தின் வாசம் போலவா..? சிவந்த தாமரைப்பூவின் மணம் போலவா..? அவனது இதழ் ஸ்பரிசம் தித்திப்பாய் இருக்குமா..?" என்று!

அப்படி ஒரு இனிய சுந்தரனது திருவாய்ச் சுவையோடு இப்போது உண்ட வெண்ணெய் மணமும், சுவையும், இராதையின் கன்னங்களில் ஒட்டிக் கொண்டது.

இராதையின் கன்னத்தில் கண்ணன் பதித்த வெண்ணெய்ச் சுவடு எது போல் இருக்கின்றது தெரியுமா? வழக்கமாக அழகான குழந்தைகளின் மேல் திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக கருப்புப் பொட்டு வைப்பார்கள். ஆனால இராதையின் கன்னத்தில் இருந்த வெண் வெண்ணெய் உதட்டுச் சுவடானது, அவளது அழகுக்குத் திருஷ்டி போல் அமைந்தது எனில், அவளது திருவடிவழகைத் தான் எவ்விதம் இயம்ப..?

அன்றிலிருந்து இராதைக்கு வெண்ணெய் பற்றி நினைத்தாலோ, யாரேனும் சொல்வதைக் கேட்டாலோ, இந்நிகழ்ச்சி நினைவுக்கு வந்து விடும். கண்ணீர் பெருக்குவாள்.

ஆயர்பாடியுள் கண்ணனது கான நாதத்தைச் சுமந்து நுழைந்த காற்று, இராதையின் தோட்டத்திலும் புகுந்து மயக்கியது. இராதையின் செவிகளிலும் குழைந்து இனித்தது.

இராதை அகமகிழ்ந்தாள். இது யாருடைய குரல் என்பது தெரியாதா..? குழலே அவனது குரல் அல்லவா..?

நெடுங்காலம் பிரிந்திருந்த கடலை நோக்கி நதி அப்படி ஓடுவதில்லை; இரவெல்லாம் தனித்துக் கவலையோடிருந்த பனித்துளி காலைக் கதிரை நோக்கி அப்படி பாய்வதில்லை; பள்ளத்தில் பாயும் பேரருவி அவ்வளவு ஆக்ரோஷத்துடன் விழுவதில்லை; இராதை அப்படி ஓடினாள்.

முனா நதிக்கரையின் இக்கரையில் ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு நந்தவனம் அமைந்திருக்கின்றது. பெயரிலேயே தெரிகின்றது அல்லவா..? அது நந்தனது வனம். நந்தன் மகனது வனம். எத்தனை பூக்கள்; எத்தனை பழங்கள்; எத்தனை ரீங்காரமிடுகின்ற வண்டுகள்; தாமரையும், அல்லியும் மாறி மாறிப் பூத்துக் குதூகலிக்கின்ற பொய்கை ஒன்று மத்தியில் உள்ளது. ஆங்காங்கே மர மேடைகள். வேலிகளை எல்லாம் வளைத்து பூக்கொடிகள்! மரங்களை எல்லாம் கட்டி அணைத்து காய் காய்க்கும் கொடிகள். பறவைகள் எல்லாம் பேடைகளோடு கூடிக் கலந்து, நீலவானில் ஆனந்தச் சிறகடித்துப் பறக்கும் பெருவனம் அது..!

அங்கே கண்ணன் வீற்றிருக்கிறான். கண்களை மூடி அவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவன் அருகிலேயே ஒருத்தி தம்புரா வாசித்துக் கொண்டிருக்கிறாள். ஒருத்தி மிருதங்கத்தால் காற்றை அதிரச் செய்து கொண்டிருக்கிறாள். ஒருத்தி தாமரைத் தண்டுகளை அள்ளி அள்ளி அவனது காலடியில் அமர்ந்திருக்கிறாள். மற்றுமொருத்தியோ, பறித்த மலர்களில் திருப்தியுறாமல், மேலும் மரங்களில் இருந்தும் பல வர்ணப் பூக்களை அள்ளிக் கொண்டிருக்கிறாள்.

இராதை ஓடி வந்து கண்ணன் அருகில் அமர்ந்து தலை குனிந்து அமர்கிறாள்.

தாமரை சூரியன் வரும் வரை எங்கே அவன் என்று தேடிக் கொண்டேயிருக்கும். அவன் வந்து விட்டாலோ, வெட்கம் வந்து தலை கவிழ்ந்து கொள்ளும்; கதிரவன் அவனது பொன் கிரணங்களால் மெல்ல மெல்ல அவளைத் தட்டி எழுப்பி இதழ் திறக்க வைப்பான்.

அல்லி மாலை வரும் வரை எங்கே சந்திரன் இன்னும் காணவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்; மாலையில் அந்த குளிர் அழகன் வந்து தனது வெண்ணொளியால் அல்லியை மடல் அவிழ்ப்பான்.

அது போல் இராதையும் இப்போது கண்ணனின் அருகிலே வெட்கத்தோடு அமர்ந்திருக்கிறாள்.

கண்ணன் தனது புல்லாங்குழலை ஒருபுறம் வைத்து விட்டு, தனது ஒரு கையால் அவளது தோளைத் தடவிக் கொடுக்கிறான். மறுகையால் அவளது திருமுகத்தைத் தாங்கி எடுக்கிறான். இராதை இன்னும் வெட்கப்படுகிறாள்.

"இராதா..! இராதா..! இங்கே பாரேன்..! என் உள்ளங்கையைப் பார். அது சிவந்திருக்கின்றது. அது எதனால் தெரியுமா? உன் முகத்தில் இருந்து நான் வழித்துக் கொண்ட வெட்கத்தால் தான். ஆனாலும் என்ன ஆச்சரியம்? எத்தனை வெட்கத்தை நான் உன் முகத்தில் இருந்து வழித்தெடுத்தாலும், வெட்கம் உன் திருமுகத்தில் ஊறிக் கொண்டே இருக்கின்றது. பிற்காலத்தில் பாஞ்சாலிக்கு கொடுக்க வேண்டிய அட்சய பாத்திரத்திற்கு உன் முகமே நல்ல உதாரணம். இராதா..! என் உதடுகளும் சிவந்திருக்கின்றன, பார்த்தாயா? அது எதனால் தெரியுமா..? உன் வெட்கம் நிறைந்த என் கைகளை முத்தமிட்டேன். அதனால் தான்.

இங்கே எத்தனை தாமரை மலர்கள் இருக்கின்றன, பார்த்தாயா..? அவை எல்லாம் நீ அணிந்துள்ள இந்த மென் நிற உடைக்குத் துளியும் சமானமாகவில்லையே..? மலையின் மஞ்சள் கிரணங்கள் எங்கிருந்து அவற்றின் பொன்னிறத்தைப் பெறுகின்றன என்ற என் ஐயமும் இப்போது நீங்கி விட்டது. உன் அழகில் பட்டு எதிரொலிக்கும் பொன்னிற ஒளி தானே அது..?

நான் ஆயர்பாடியை நீங்கி, துவாரகையில் நிலைபெற்று விட்டேன் என்று நினைத்துக் கலங்கினாயா கண்ணே..? உயிர் இங்கே இருக்கும் போது வெறும் உடல் அங்கே என்ன செய்ய முடியும்..? மழை இங்கே பெய்து கொண்டிருக்கும் போது வர்ண வானவில் மட்டும் அங்கே தோன்றுவது எங்ஙனம்..? பொருள் இங்கே ஆயர்பாடியுள் இருக்கும் போது வார்த்தை அங்கே சென்று ஆவதென்ன..?

இங்கே பார்..! உன் தோட்டத்து மயில் தோகைகள் தான் என் சிகையை அலங்கரிக்கின்றன. உன் வனத்து மலர்மாலைகள் தான் என் மேனியோடு தழுவி இருக்கின்றன.

இனியும் நீ பேசாதிருந்தால், நான் குழலிசைப்பேன்...!!"

கண்ணன் அவனது புல்லாங்குழல் எடுத்து இனிமையாக வாசிக்கத் துவங்குகிறான். அதைக் கேட்டதும் இராதை கண்களில் ஆனந்தம் பெருக, கண்ணனது திருமார்பில் சாய்கிறாள்.

இரு காதலர்களின் இரகசிய லோக சஞ்சாரத்தில் நமக்கென்ன வேலை..?

வாருங்கள் போகலாம்..!

***



யமுனா நதிக்கரையில்
கண்ணன் என்னைச் சீண்டினான்..!

என் கைமணிக்கட்டுகளைச்
செல்லமாக வளைத்தான்..!

(யமுனா)

ஒரு சிறு கல்லெடுத்து
என் மேல் எறிந்தான்.

நான் கொண்டுவந்த
தண்ணீர்ப்பானையை உடைத்தான்.

தண்ணீர்ப்பானையை
உடைத்தான்.

என் உடைகளை முழுக்க
நனையச் செய்து விட்டான்.

(யமுனா)

அவன் கண்களைக் கொண்டு
ஒரு வசீகரம் காட்டினான்.

என்
இதயத்தை வென்றான்.

என்
இதயத்தை வென்றான்.

ஒரு பார்வையால்
என்னை மறைத்த

திரைகளைத்
திறந்து விட்டான்.

நதிக்கரைகளில்
கண்ணன் என்னைச் சீண்டினான்..!

(யமுனா)


தேன்கூடு : மொகல்-ஏ-ஆஸம்.
படைத்தேன் : கே.ஆஸிஃப்.
இசைத்தேன் : நெளஷாத்.
மொழிந்தேன் : ஷகீல் பதயுனி.
பொழிந்தேன் : லதா மங்கேஷ்கர்.
அசைந்தேன் : மது..மது..மதுபாலா மற்றும் பலர்-1.
பார்த்தேன் : ப்ரித்விராஜ், திலீப்குமார், நீங்கள் மற்றும் பலர்-2.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP