மனமே பிரம்மத்தில் சஞ்சரிப்பாய்!
திருக்கோவில்களில் தெய்வத் திருநீராட்டின் போது ஓதப்படும் வேத மந்திரங்களில் முதன்மையானது புருஷ சூக்தம்.
'ஸஹஸ்ர சீருஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்' என்று ஆயிரம் தலைகள் உடையவன், ஆயிரம் கண்களை உடையவன், ஆயிரம் கால்களை உடையவன் என்று தொடங்கும் புருஷ சூக்தத்தில் இறைவன் புருஷ: என்ற பொதுப் பெயராலேயே சொல்லப்படுகிறான். ஆனால் அப்படி பொதுப்பெயராலேயே சொல்லும் வேதமும் 'ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீ:ச பத்ன்யௌ' என்று 'அவனுக்கு பூமியும் லக்ஷ்மியும் பத்தினிகள்' என்று மறைமுகமாக அவன் அடையாளத்தைச் சொல்லிவிடுகிறது.
அதே போல் எப்போதும் பிரம்மத் தியானத்திலேயே இருந்த அவதூதராக விளங்கிய சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரும் 'மனமே பிரம்மத்தில் சஞ்சரிப்பாய்' என்று பிரம்மம் என்ற பொதுப்பெயராலேயே இறைவனை இந்தப் பாட்டில் குறித்தாலும் 'மயிற்பீலி அணிந்தவன், திருமகள் கேள்வன், குழலை இசைப்பவன்' என்று இறைவனின் அடையாளங்களைக் கூறிவிடுகிறார். அத்வைத மஹாஞானியான சதாசிவ பிரம்மேந்திரரும் பிரம்மம் எனில் யார் என்பதை ஆதிசங்கரரைப் போல் மிகத் தெளிவாக இந்தப் பாட்டில் கூறுகிறார்.
மானஸ ஸஞ்சரரே! – பி3ரம்மனி
மானஸ ஸஞ்சரரே!
மனமே சஞ்சரிப்பாய்! - பிரம்மத்தில்
மனமே சஞ்சரிப்பாய்!
மத3சிகி பிஞ்சா அலங்க்ருத சிகு3ரே
மஹநீய க2போ3ல விஜித முகு3ரே (மானஸ)
மஞ்ஞையின் தோகை விளங்கிடும் திருமுடி
பிஞ்ஞகன் கன்னமோ விளங்கிடும் ஒளிகூடி (மனமே)
ஸ்ரீரமணீ குச து3ர்க விஹாரே
ஸேவக2 ஜன மந்தி3ர மந்தா3ரே
பரமஹம்ஸ முக சந்த்ர சகோ3ரே
பரிபூரித முரளீரவதா3ரே (மானஸ)
திருமகள் தனமெனும் மதிலுக்குள் அலைபவன்
அடியவர் வேண்டுதல் தருவதில் தருவவன்
பரமஹம்சர் முகம் பருகிடும் பறவையன்
உலகினில் பரவிடும் குழலினின் இசையவன் (மனமே)
தனிமையில் இயற்கைச் சூழலில் இந்தப் பாட்டின் ஒவ்வொரு சொல்லாகக் கவனித்துக் கேட்டால் ஒரு மாபெரும் தியானம் கைகூடுவதைக் கண்டிருக்கிறேன். அதனால் தானோ என்னவோ இந்தப் பாடலைப் பாடாத இசைவாணர்களே இல்லை என்று சொல்லும் வகையில் இந்தப் பாடல் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இசைவாணர்கள் பலரும் இந்தப் பாடலைப் பாடுவதை இங்கிருக்கும் காணொளிகளில் கண்டு கேட்டு மகிழுங்கள்.
தமிழ் மொழிபெயர்ப்பைப் பாடித் தரவேண்டிய பொறுப்பு இரவிசங்கருக்கு! :-)
