உடலே பண்டரி உயிரே விட்டலன்!

இதோ இன்னொரு வைஷ்ணவாத்வைதி! விசிஷ்டாத்வைதி என்று தான் சொல்ல வேண்டுமோ? தெரியவில்லை! எதுவாக இருந்தாலும் இவர் ஒரு பேரடியார்! மராட்டிய ஆழ்வார்! சந்த் ஏகநாதர்!
மராட்டிய பக்தர்கள் பாடிய அபங்கங்களை முதலில் கேட்டது நாரத கான சபாவில். அவ்வளவாகப் புரியவில்லையே என்று தான் தோன்றியது. 'புரியணுமா? அப்படின்னா மராத்தி தெரியணுமே. உனக்குத் தெரியுமா?' என்று கேட்காதீர்கள். அங்கங்கே ஓரிரு வார்த்தைகள் புரிவதால் மொத்தமாக ஒரு புரிதல் கிடைக்கும் சில வேற்று மொழிப் பாடல்களைக் கேட்கும் போது. அது போல் அபங்கங்களும் புரியும் என்று நினைத்தேன்.
ஏகநாதரின் இந்தப் பாடலில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஏதோ ஒரு நல்லவர் என்னைப் போன்றவர்களுக்காகவே இந்தக் காணொளியில் பாடலின் பொருளை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள். இரண்டும் சேர்ந்து இந்தப் பாடலைப் புரிந்து கொள்ள உதவியது. 'எனக்கு புரியவில்லை. உங்களுக்கு என்ன புரிந்தது. தெளிவாக விளக்குங்கள்' என்று இரவிசங்கர் தூண்டில் போடுவார். இந்த மீன் மாட்டாது. :-)
வைஷ்ணவாத்வைதி என்று சொன்னேனல்லவா? ஏன் என்று கேட்கத் தோன்றியதா? தோன்றாவிட்டாலும் பரவாயில்லை. சொல்லுகிறேன். :-)
பாடலின் முதல் வரியைப் பாருங்கள். ஆத்மா ஹா விட்டல என்கிறார். ஆத்மாவே இறைவன் என்பது அத்வைதம் தானே!
அப்படி சொல்லமுடியாது என்று இன்னொரு குரல் கேட்கிறது. எனக்குள்ளிருந்து. ஆத்மாவின் குரலா? இல்லையில்லை. அறிவின் குரல் தான். அனுபவத்தின் குரலும் இல்லை.
யாருக்கு உலகம் உடலோ, யார் உலகத்திற்கு ஆத்மாவோ அவனே இறைவன்.
யாருக்கு ஆத்மா உடலோ, யார் ஆத்மாவிற்கு ஆத்மாவோ அவனே இறைவன்.
இவை வேதங்கள் சொல்பவை.
முப்பெரும் பொருட்கள் உண்டு. இயற்கை, உயிர், இறைவன் என்பவை அவை. மூன்றும் வெவ்வேறானவை. ஆனால் இயற்கைக்கும் உயிருக்கும் உயிராக இருப்பவன் இறைவன். இயற்கையையும் உயிர்களையும் விசேஷணமாக, தன்னில் அடங்கிய மெய்ப்பொருள்களாகக் கொண்டு தான் மட்டுமே இருப்பவன் இறைவன்! அந்த வகையில் இறை என்பது மட்டுமே மெய்ப்பொருள்.
இப்படி விளக்குவது தானே விசிஷ்டாத்வைதம்.
ஏகநாதரின் இந்தப் பாடலை அந்த வகையிலும் விளக்கலாமே?
விளக்கலாம் தான். ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன்? பாடலைக் கேட்டு அந்தப் பாடல் சொல்வதை அனுபவத்தில் கொண்டு வர இறையருள் கிட்டினால் போதாதா? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இன்புறுவோம்.
காயா ஹீ பண்டரி ஆத்மா ஹா விட்டல
நாந்த3தோ கேவல பாண்டுரங்க!
உடலே பண்டரி உயிரே விட்டலன்
உள்ளே இருப்பவன் பாண்டுரங்கனே!
பா3வ ப3க்தி பீ3மா உதக தே வாஹே
ப2ரவா ஸோப3தாஹே பாண்டுரங்க! (காயா)
அன்பு பக்தி பீமா நீரின் ஊற்றே
உண்டு தாகம் தீர்பவன் பாண்டுரங்கனே! (உடலே)
த2யா க்ஷமா ஷாந்தி ஹேஜி வாளுவந்த
மிளாலாச தா4ட வைஷ்ணவாஞ்சா! (காயா)
ஈரம் பொறை அமைதி சேரும் மண்ணின் மீதே
சேரும் அன்பர் கூட்டம் கூடுவதை போலே! (உடலே)
ஞான த்3யான பூஜா விவேக ஆனந்த
ஹாஜி வேணுநாத ஸோபி3தசே! (காயா)
ஞானம் தியானம் பூஜை அறிவு ஆனந்தம்
அமையும் என்னில் குழலோசை போலே! (உடலே)
த2ச இந்த்ரியாஞ்சா ஏக மேள கேலா
ஐசா கோபால்காலா ஹோத அசே! (காயா)
பத்து புலன்களும் ஒன்றே ஆக்கி
தந்தேன் பசுபதிக்கே படையலாக! (உடலே)
தே2கிலீ பண்டரி தே2ஹி ஜனி வனி
ஏகா ஜனார்த்தனி வாரி கரி! (காயா)
காண்கிறேன் பண்டரி என்னில் உன்னில் எங்கும்
இதுவே யாத்திரை போகும் இடமே! (உடலே)
இந்தப் பாடலின் தமிழ்ப்பெயர்ப்பையும் பாடிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இரவிசங்கருக்கே!
