Monday, March 29, 2010

பி. சுசீலா - ஒரே பாட்டில் கண்ணன்+முருகன் பாட்டு!

முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ச்சியாக...
கண்ணன் பாட்டிலே, சுசீலாம்மாவின் ஒரு மோகனமான பாட்டு!
இந்தப் பாட்டில், சுசீலாம்மா, கண்ணனையும் முருகனையும் மாற்றி மாற்றிப் பாடி, இசைமாலை சூட்டுவார் மாயோனுக்கும் சேயோனுக்கும்!

அட, அப்படி ஒரு பாட்டு இருக்கா என்ன?

இருக்கே! கண்டு புடிங்க பார்ப்போம்! இந்தப் படத்தில் வரும் இன்னொரு பாடல்...ரொம்பவே ஹிட்!
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!
நீ இல்லாமல் நானும் நானல்ல!
தெய்வத்தின் முன்னே...நீயும் நானும் வேறல்ல!

இந்தப் பாட்டை...இப்பல்லாம்...தினமுமே கேட்பதால்...அப்படியே தங்கி விட்டதா? அதான் டக்-குன்னு இந்த முருகன்+கண்ணன் பாட்டும் ஞாபகத்துக்கு வந்துருச்சி! சரி முருகனருள்-150 உற்சவத்துக்கு வசதியா இங்கு இட்டு விட்டேன்! :)



என்ன கண்டு புடிச்சாச்சா? :)
படம் = இதய கமலம்! சரி தான்! ரவிச்சந்திரன் - கே.ஆர்.விஜயா

எந்தப் பாட்டு? = மலர்கள் நனைந்தன பனியாலே!

இது அவர் பாடிய மற்ற பக்திப் பாடல்கள் போலவே இருக்காது! ஏதோ வசீகரமான காதல் பாட்டு போலத் தான் இருக்கும்! (ஒரு வேளை என் காதுக்குத் தான் இப்படித் தோனுதோ? :)

நடுநடு-ல கண்ணன், முருகன்-ன்னு வருவதால், இது ஏதோ சாமிப் பாட்டு-ன்னு சொல்லலாமே தவிர...
இந்த இனிய மோகன மெலடி...என் மனம் மயக்கும் காதல் பாட்டே தான்! சந்தேகமே இல்லை!

கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி-ன்னு அவங்க கண்ணனைப் பாடும் போது, கண்ணாடி முன்னாடி போய் நின்னுக்குவேன், முருகனால் காயம் இருக்கா-ன்னு பார்க்கத் தான்! :)
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி-ன்னு அவங்க முருகனைப் பாடும் போது...என்ன சொல்ல.....முருகா, முருகா, நான் உன்னோடு இருப்பேன்! என்னிக்கும் இருப்பேன்! நீ இல்லாமல் நானும் நானல்ல!



* பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை! Prelude - Dont Miss!
* பாடலின் நடுவில் வரும் மிருதங்க பீட்! போராடி-நீராடி-கண்ணாடி-முன்னாடி! That Interlude - Dont Miss!

மயக்கும் மோகன ராகத்தில்...
மயக்கும் சுசீலாம்மா மெலடியை...
கேட்டுக்கிட்டே படிங்க!


படம்: இதயக் கமலம்
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
ராகம்: மோகனம்

ஆண்டிக் கோல முருகனும், கண்ணனும்! - யார் இதுல தண்டாயுதபாணி? :)


மலர்கள் நனைந்தன பனியாலே!
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!
பொழுதும் விடிந்தது கதிராலே!
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!
(மலர்கள் நனைந்தன)

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்!

சேர்ந்து மகிழ்ந்து போராடி!
தலை சீவி முடித்தே நீராடி!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
(மலர்கள் நனைந்தன)

இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)


இதே மெட்டில் வேற என்ன பாட்டெல்லாம் ஞாபகம் வருது-ன்னும் சொல்லுங்க பார்ப்போம்!
சாம்பிளுக்கு நான் துவங்கி வைக்கிறேன்!
* ஆஹா இன்ப நிலாவினிலே - மாயாபஜார்
* கங்கை யமுனை இங்குதான் சங்கமம் - இமயம்

பாட்டு நல்லா இருந்திச்சா?
இப்போ சொல்லுங்க,
சுசீலாம்மா பாடுவது...கண்ணன் பாட்டா? முருகன் பாட்டா? :)

Tuesday, March 23, 2010

கணபுரத்தென் கருமணியே ! இராகவனே தாலேலோ !



மன்னுபுகழ் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே !
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் ! செம்பொன் சேர்
கன்னிநன் மாமதிள்  புடைசூழ்  கணபுரத்தென் கருமணியே !  
என்னுடைய இன்னமுதே ! இராகவனே தாலேலோ !

[பெருமாள் திருமொழி (8-1)]

மேலே உள்ள திவ்ய பிரபந்த பாசுரம், குலசேகர ஆழ்வார் ராமனைக் குழந்தையாக பாவித்து தாலாட்டாக பாடியது.   இன்று ராம நவமியை முன்னிட்டு இந்தப் பாடல்களை பதிவு செய்யலாம் என்று வந்தால், நம் குமரன் ஏற்கனவே இங்கே பொருளுடன் பதிவு செய்துள்ளார். :)

சரி, அதனால் என்ன? இந்த முறை ஆழ்வார்களின் பாசுரங்களே வாழ்வாகக் கொண்ட "அரையர் சுவாமி ஸ்ரீ ராமபாரதி"யின் குரலில் இந்த பாசுரங்களை இங்கு கேட்டு மகிழலாம்.


புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!



தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!



பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!
 
 
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!
 
ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!
மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!


தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!



தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!





கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

அப்படியே, ராம நவமியை முன்னிட்டு திருவரங்க ப்ரியா (என்ற நம் ஷைலஜா அக்கா)
பாடிய பஜன் - "ராமா ராகவா ஜெய சீதா நாயகா" இங்கே கேட்கலாம். :-)

~
கிரிதாரியின்,
ராதா

Thursday, March 18, 2010

பி.சுசீலா - ஜெயதேவர் அஷ்டபதி - காதலா? காமமா?

பிருந்தாவனம்! யமுனைத் துறை!
புன்னை மரத்து நிழல் கீழே, நினைவென்னும் காதல் மடி மேலே, தலை வைத்து மெல்லியதொரு தூக்கம்! கலங்காது கை கோர்த்து சேரும்...கண்ணோரம் ஆனந்த ஈரம்...

அப்போது, இசையரசி பி.சுசீலாம்மா பாடிக் கொண்டே, தலையைத் தடவிக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
அந்த உறக்கத்தின் கிறக்கத்தில் உதித்தது தான்.....இந்தப் பதிவு! இப்போது என் துக்கங்கள்-தூக்கங்கள் எல்லாமும் அப்படியே!!




ஜெயதேவர்-ன்னா ஒரு சிலருக்கு தெரிஞ்சிருக்கும்-ன்னு நினைக்கிறேன்! (1200 CE)
அஷ்டபதி-ஜெயதேவர்-ன்னு சொன்னாக்கா, இன்னும் சில பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம்!
ஒரிஸ்ஸா மாநிலக் கவிஞரான, அவர் எழுதிய காதல் காவியம் தான்.....அஷ்டபதி என்கிற கீத-கோவிந்தம்!

பேரில் என்னமோ கீத கோவிந்தம்-ன்னு "கோவிந்தம்" இருக்கு!
ஆனால் படிக்கறப்போ "வேற மாதிரி" இருக்கே!
இது பக்திக் காவியமா? காதல் காவியமா? காமக் காவியமா? :)

எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது! காதலே காமம் ஆகி, காமமே காதலாகி விட்டால்...எனக்கு எதுவும் தெரியாது! :)

சரி, அது என்ன அஷ்ட-பதி?
கல்யாணம் ஆகும் போது, தீவலம் செய்து, 7 அடி எடுத்து வைப்பதை, சப்த-பதி-ன்னு சொல்லுவாய்ங்க!
இது கல்யாணம் ஆவதற்கும் முன்னாடியே (Pre Marital) என்பதால், ஒரு "அடி" கூடவா? அதான் அஷ்ட-பதியா?? :)

மொத்தம் 12 சர்க்கம், 24 பாடல்கள்!
ஒவ்வொரு பாட்டும் 8 பத்திகள், பதிகள்! அதுவே அஷ்ட பதி!

அஷ்டபதி என்பது சிருங்கார ரசம் சொட்டச் சொட்ட ஒரு நாட்டிய நாடகம்!
புன்னை இலைகளால் ஒரு படுக்கை தயார் செய்யும் கண்ணன்...
அவன் அருகில் வரும் வேளையில், அவனை ஒதுக்கி, கீழே தள்ளிவிடும் ராதை!
கண்ணன் உடம்பிலும் அடி, உள்ளத்திலும் அடியா?? ஹைய்யோ! திடீரென்று, என்னவாயிற்று இந்த ராதைக்கு?


* ராதையின் அகங்காரம், ராதையின் திமிர்,
* ராதையின் கோபம், ராதையின் தாபம்,
* ராதையின் ஊடல், ராதையின் தேடல்,
* ராதையின் சாதல், ராதையின் காதல்,
* ராதையின் பேதை, ராதையின் மேதை,
இவை எல்லாமே நாடகத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கின்றன!

அதனால் தான், பின்னாளில்...
கண்ணனின் வாழ்வு கூட்டத்தில் கலக்க, ராதையின் வாழ்வு தனிமையில் கலந்து போனது!
கண்ணன் தனக்கா? உலகத்துக்கா? என்று வந்த போது...
தன் முகம் காட்ட மறுத்தாள்! முகவரியை மறைத்தாள்!

வியாசரும், சுகப் பிரம்மும் கூட, அவளை, அவர்கள் காவியத்தில் எழுதத் திணறி...முடியாமலயே போனது!
இன்றும் கூட, ராதை என்பவள் இருந்தாளா? = மகாபாரதத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும்...தேடினாலும் கிடைக்காது!

அவள் இருந்தாளா? = அவளுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரியும்! எனக்கும் தெரியும்!
கண்ணனின் சோலையில் அவள் சுகந்த பரிமள வாசத்தை...காண முடியாது! முகர மட்டுமே முடியும்! முகர...முகர...முருகா!

* என் பால் நோக்காயே ஆகிலும்...உன் பற்றல்லால் பற்றில்லேன்!!
அவள் "பரிசுத்தமான காமம்"! = அதுவே "கீத கோவிந்தம்"!!!


திரைப் பாடலைக் கேட்டுக் கொண்டே, பதிவை வாசியுங்க!


அல்லது...கேட்க/தரவிறக்க மட்டும் இதோ!
பதிவின் இறுதியில் இதர கலைஞர்களின் குரலில், இதே பாடல்!



வடமொழியில் உள்ள வரிகளை, கிட்டத்தட்ட அதே மெட்டில் தமிழாக்கி உள்ளேன்!
தமிழில் சரியாப் பொருந்தி வருதா?-ன்னும் பார்த்துச் சொல்லுங்க!


படம்: தெனாலி ராமகிருஷ்ணா (தெலுங்கு)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
(மயக்கும்) குரல்: சுசீலாம்மா
கலைஞர்கள்: ஜமுனா, பானுமதி, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ்

சந்தன சர்ச்சித நீல கலேவர
பீத வசன வனமாலி
கேலி சலத் மணி குண்டல மண்டித
கண்ட யுக ஸ்மித ஷாலி
ஹரி ரிஹ முக்த வதூ நிகரே
விலாசினி விலசதி கேலிபரே

சந்தனம் சிந்திடு்ம் நீல மேனி தனில்
பொன்பட்(டு) உடை வனமாலை!
தந்தன தந்தன குண்டலம் ஆடிட
மோகனப் புன்னகை லீலை!!
கண்ணனின் கன்னியர் நாணமும் ஆசையும்
கண்டு கொண்டே விளை யாடினரே!

காபி விலாச விலோல விலோசன
கேலன ஜனித மனோஜம்
த்யாயதி முக்த வதூ அதிகம் - மது
சூதன வதன சரோஜம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

அவளொரு தாரகை, அவள்விழி முந்திட,
அவன் மனம் முந்திய நேரம்!
அவன்முகத் தாமரை, அவள்முகம் விரிந்திட,
மதுசூ தனன் இதழ் ஈரம்!

ஸ்லிஷ்யதி காமபி சும்பதி காமபி
காமபி ரம்யதி ராமம்
பஷ்யதி சஸ்மித சாருதராம் அப
ராமனு கச்சதி வாமம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

துழவினள் இதழை, துடித்தனள் உடலை,
துவண்டனள் அவனிடம் பேதை!
நகைத்தனன் அவனும், பகைத்தனள் அவளும்,
இருப்பினும் கூடினள் கோதை!
(கண்ணனின் கன்னியர்...விளையா டினரே)

ஸ்ரீஜய தேவ பணிதம நேமம்
அத்புத கேசவ கேளி ரகஸ்யம்
பிருந்தாவன விபினே லலிதம் வித
நோது சுபாமி யஷாஸ்யம்!

இதுஜெய தேவர் அருளிய தாஸ்யம்
பிருந்தா வன விளை யாடல் ரகஸ்யம்
அற்புத மோகன கீத கோவிந்தம்!
அருளிடும் அவன்திரு் பாதர விந்தம்!!

ராகம்: காமவர்த்தினி
தாளம்: ஆதி
மொழி: வடமொழி
வரிகள்: ஜயதேவர்
காவியம்: அஷ்டபதி



சுசீலாம்மா தனியாகப் பாடுவது: (Dont miss the veeNai interlude at the beginning)


சுசீலாம்மாவின் முன்பு, பூஜா என்ற பெண் முயற்சி செய்கிறார்!


கர்நாடக இசையில்:
* Priya Sisters

சற்றே மெல்லிசையில்:
* உன்னி கிருஷ்ணன்

பரதேசி என்னும் தெலுங்குப் படத்தில்:
* மனோ,சங்கீதா,சுபா (Just opening lines for a cinema song)

ஒரிய மொழி இசையில்:
* In Oriya Style, Prafulla Mohanty & Bhubaneshwari Mishra (The 1st one min is intro)
* Chorus, Nirmala Mishra & Rakhal Mohanty

சுசீலாம்மாவை நினைவிருத்தி...தமிழில் யாரேனும் எனக்குப் பாடித் தருகிறீர்களா?
உறக்கத்தின் கிறக்கத்தில் உறங்கச் செல்கிறேன்.....சிற்றஞ் சிறுகாலே 4:45!




குறிப்பு:
முற்றிலும் தமிழ்ப் பாட்டான கண்ணன் பாட்டிலே,
* கன்னடம் - கிருஷ்ணா நீ பேகனே,
* மலையாளம் - வழிகாட்டுக வழிகாட்டுக,
* தெலுங்கு - ஷீராப்தி கன்யககு,
* செளராஷ்டிரம் - பகவத் நமமூஸ்
* வடமொழி் - பாவன குரு/அமர ஜீவிதம்/அஷ்டபதி,
* இந்தி் - பஸோ மொரே...மேம் நந்தலாலா
* ஆங்கிலம் - The Child in Us (Enigma)
என்பன போன்றவை, எப்போதாவது ஒன்னு ரெண்டு வரும்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP