
திருமாலவனை வணங்கும் நான் மற்ற தேவரை வணங்கமாட்டேன் என்ற கற்புநெறியோடே இருப்பது பக்தர்களின் இயல்பென்று பேசும் வைணவம். அரங்கனை பாடிய நான் குரங்கனைப் பாட மாட்டேன் என்று அரங்கநாதனைத் தவிர்த்து திருமலையானையும் பாடாத பெரும் கற்புடன் இருந்தவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் கொண்ட இந்த ஆழ்வார் திருவரங்க நகரப்பனுக்குத் திருமாலை தொடுத்துத் தரும் தொண்டினைச் செய்து வாழ்ந்து வந்தார். அவருடைய பாசுரங்களில் சிலவற்றை இந்தப் பங்குனி உத்திரத் திருநாளில் திருமதி. எம்.எஸ். அவர்களின் இனிய குரலில் கேட்டு மகிழ்வோம்.
பங்குனி உத்திரத் திருநாள் திருவரங்கத்தில் ஒரு மாபெரும் திருநாளாகும். இந்தத் திருநாள் தான் அரங்கநாதனும் அரங்கநாயகியும் இணைந்து காட்சி தரும் ஒரே திருநாளாகும். வருடத்தில் வேறு எந்த நாளிலும் கிட்டாத திருக்காட்சி அது. திருமகளுடன் இணைந்த மாலவனே பரம்பொருள் என்று கூறும் வைணவத்தின் அணிவிளக்காம் இராமானுஜர் இந்தத் திருநாளில் தான் திவ்ய தம்பதிகளின் முன்னர் சரணாகதி செய்து மூன்று கத்யங்களைப் பாடி அருளினார்.