Thursday, December 31, 2009

தாஸ மீரா லால கிரதர !


"ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாணுதலே."

மேலே உள்ள நம்மாழ்வார் பாசுரத்தை நினைவுபடுத்தும் வகையில், "ஹரி ஹரி ஹரீ" என்ற உருக்கமான அழைப்பினோடு ஒரு மீரா பஜனை, கண்ணனும் அபகரிப்பவன் (ஹரி) தான் என்ற வகையில் கண்ணன் பாடலில் தரப்படுகிறது. :)

"அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?" என்ற பாடலில் புகழப்பெற்ற அதே லீலைகளை இந்த ஹிந்தி மீரா பாடலிலும் காணலாம். எம்.எஸ் அம்மா அவர்களின் உருக வைக்கும் குரலில் இங்கே கேட்கலாம்.

ஹரி தும ஹரோ ஜன கீ பீர ||

த்ரௌபதி கி லாஜ ராகி
தும படா யோ ஜீர் ||

பகத காரண ரூப நரஹரி
தர்யோ ஆப சரீர |
ஹரினகஸ்யப மார லீன்ஹு
தர்யோ நான்ஹின தீர் ||

பூடதே கஜராஜ ராக்யோ
கியோ பாஹர நீர |
தாஸ மீரா லால கிரதர
துக ஜஹா தஹா பீர ||

ஹரி ஹரீ ஹரீ ஹரீ
தும ஹரோ ஜன கீ பீர் ||

யானைக்கு அருள் செய்ததையும், பாலனை பாலனம் செய்ததையும், சபையில் பக்தையின் மானம் காத்த அருளையும்  பாடி அடியாள் மீரா  கிரிதரநாதனை எல்லோர் சார்பாகவும் எல்லா துயர்களையும் களைய வேண்டுகிறாள்.

2010 புத்தாண்டு தினத்தில் ஹரி அனைத்து உயிர்களின் துன்பங்களையும் களைய நாமும் அவன் அருள் வேண்டுவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு !! :)

ராதே கிருஷ்ணா !!
~
கிரிதாரியின்,
ராதா

Sunday, December 27, 2009

கண்ணன் பாட்டிலே ஒரு மலையாளப் பாட்டு!

அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில் பலநாள் கழித்து....அடியேன் வணக்கம்!

இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)
மோட்ச ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!

பல இடங்களில் பலவாறு கொண்டாடப்பட்டாலும்,
திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாகக் கொண்டாடப்படுவது! = இராப் பத்து!
திருவாய்மொழித் திருநாள்! எம்பெருமான், வடமொழி வேதங்களைச் சற்றே ஓரங்கட்டி, தீந்தமிழ்ப் பாசுரங்களை மட்டுமே இடைவிடாது கேட்கும் நாள்!

திருவாய் மொழிக்கு உருகாதார்
ஒருவாய் மொழிக்கும் உருகார்!



முற்றிலும் தமிழ்ப் பாட்டான கண்ணன் பாட்டிலே,
* கன்னடப் பாடல் - கிருஷ்ணா நீ பேகனே,
* தெலுங்குப் பாடல் - ஷீராப்தி கன்யககு,
* செளராஷ்டிரப் பாடல் - பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ
* வடமொழிப் பாடல் - பாவன குரு/அமர ஜீவிதம்,
* இந்திப் பாடல்கள் - பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா
* ஆங்கிலம் - The Child in Us (Enigma)
என்று எப்போதாவது ஒன்னு ரெண்டு இதர மொழிப் பாடல்களும் வரும்!

அந்த வரிசையில், இன்று மிகவும் ஏகாந்தமான மலையாளப் பாடல் ஒன்று!
கேட்டுத் தான் பாருங்களேன்!
பொருள் சுமாரா உங்களுக்கே புரிஞ்சிரும்-ன்னு நினைக்கிறேன்! மலையாளமும் தமிழும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை அல்லவா?
எந்தா இன்னும் ஓர்க்குன்னு? யான் பறைஞ்சது மனசுலாயோ? ஈ நாள் வரை தமிழ் பாஷையிலே மட்டும் கானம் கழிஞ்சோ? :)

குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண ரூபம்!

இங்கே கேட்டுக் கொண்டே பாடலில் கரையுங்கள்!



குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும்போல்
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண ரூபம்!


தளரும் போல் ஆத்மாவாம் பஷூவே நின் நாவில்
அம்ருதம் போல் ஊஊறிடுக நாராயண நாமம்!


நெய்யுண்ணு பீதாம்பரம் ஈ சந்தயகள் ராவாம்
பையெல்லாம் வார்க்குன்னு பால் மாதுரி அல்லோ?

ஓடக்குழல் ஊதுன்னு காடெல்லாம் பகவான்
சுட்டுன்னுரு பீலி திருமுடியோ மழை மேகம்?


கருடன் போல் ஆகாசம் சிறகார் நீடும்போல்
வனமாலைகள் தீர்க்குன்னு மழை வில்லுகள் இப்போல்!

நிறக் கண்ணால் காணுன்னே எங்கெங்கும் சுவாமி
குருவாயூர் அப்பா நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்.....

நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்
நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்



பாடல்: குருவாயூர் ஏகாதசி
தொகுப்பு (Album): வனமாலா
குரல்: K.J.யேசுதாஸ்
வரிகள்: ரமேசன் நாயர்
இசை: P.K.கேசவன் நம்பூதிரி


"குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்"

= அது என்னங்க "குருவாயூர்" ஏகாதசி? "வைகுந்த" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க?
கேரளத்தில் மட்டும், அனைத்து ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்? இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே! :)

= எல்லாத்துக்கும் ஒரு யானை தாங்க காரணம்!
= வாரணம் தான் காரணம்!
வேண்டுமானால் இங்கே சென்று அந்த தனிக் கதையை வாசித்துக் கொள்ளவும்!

அது சரி, கண்ணன் பாட்டிலே மலையாளப் பாட்டு எப்படி இருந்துச்சி? ஓடக்குழல் ஊதுன்னு காடெல்லாம் பகவான்-ன்னு இருந்துச்சா? :)

இது போன்ற முயற்சிகளை, பன் மலர் மாலைகளை,
கண்ணன் பாட்டு அன்பர்கள் தொடர்ந்து செய்ய வேணுமாய்,
பணிவுடன் கேட்டு, அடியேன் அமைந்து விடுகிறேன்!

பயந்த தனி வழிக்குத் துணை,
வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!
பயந்த தனி வழியில்.....
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண நாமம்!!

தளரும் போல் ஆத்மாவுக்கு...
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண நாமம்!! அவன் நாராயண நாமம்!!

7.கண்ணன் 'அம்மா' என்றழைத்தல்.



வழ்ந்து தொடங்கிய தங்கப் பகல்மேல்
கவிழ்ந்து மறைத்தது கொண்டல். - அவிழ்ந்த
சுருள்நுரையாய்ப் புட்கள் சுழலாய்ப் பறக்க
வருகின்ற தந்ததிரு நாள்.

கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;
பாவினங்கள் கோயிலில் பாடுவர். - ஆவினங்கள்
கட்டியக் கூரைத் தொழுவத்தில் மேய்ந்திடத்
தொட்டிலில் கண்ணன் எழுச்சி.

பக்கம்போய்த் தட்டிக் கொடுத்துப் பாலூட்டிப்
பார்த்துக் கவனமாய் நீராட்டிப் - பாலன்னம்
சோறிட்டுத் தாலாட்டிச் சொக்கி உறங்குமுன்
கூறினான் காதினில் "மா!"

குழல்நாதம் கொஞ்சம் குறுவீணை கொஞ்சம்
கழலுரசல் சேர்த்துக் கனித்தேன், - பழரசம்,

செஞ்சாந்து, யாழிசை, சேரும் அலையோசை
மஞ்சள் குளிரை மயனென்பான் - மிஞ்சியச்

செங்கரும்புச் சாற்றில் சிறுசிறு செம்பருத்தித்
தங்கக் குழம்பைத் தளிர்வாழை - எங்கும்

ஏந்திப் பனிக்கட்டிப் பாறைகள் ஊறிட,
காந்தி ஜொலிக்கும் குயில்மொழி - நீந்தி

எடுத்ததோர் முத்து எலுமிச்சை கோர்த்துத்
தொடுத்ததாம் கண்ணன் குரல்.

***

Image Courtesy :: http://www.netglimse.com/images/events/janmashtami/krishna_bakasura.jpg

Friday, December 25, 2009

யதுநந்தனா ! கோபாலா !

சாது ஜனங்கள் ஒன்று கூடினால் கிரிதாரிக்கு கொண்டாட்டம் தான். அதுவும் மீரா போன்ற ஒரு பக்தையின் தலைமையில் கூடுகிறது என்றால் கிரிதாரியின் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். இதோ இங்கே ஒரு அருமையான பஜனை பாடலை எல்லோரும் சேர்ந்து பாடிக் களிக்கிறார்கள். கண்ணனையும் குளிர வைக்கிறார்கள்.

அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?
அறிந்தவர் யார்?  எங்கும் நிறைந்தவனே !

யானை அன்று "ஆதிமூலமே !"  என்று
ஓலமிடவும் ஓடி வந்தனையே !!

ஈனர்கள் சபையில் த்ரௌபதி கதற
மானம் காத்தனையே !! ஆஹா நீ !!

ப்ரஹலாதனையே பாலனம் செய்ய
நரஹரியாய் வந்த நாரணனே !

தாரணியில் உன்னை அன்றி வேறே
யார் துணை சங்க கதாதரனே ?

யதுநந்தனா ! கோபாலா !
ஜெய பிருந்தாவன லோலா !

ஜெய தீன வத்ஸலா !!
ஜெய வேணுகான லோலா !!

வரதா !! அருள் தருவாய் வனமாலீ !!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!!

மீராவின் காலத்தில் அந்த சாதுக்கள் கூட்டத்தில் சேர்ந்து பாடும் பாக்கியம் செய்யாவிடினும், இதோ இங்கே மறுபடி எம்.எஸ் அம்மாவின் குரலில் நம்மை மீரா வழி நடத்துகிறாள்.

இந்தப் பாடல் மிகவும்  ப்ரபலமான (அதாவது எனக்கு மிகவும் பிடித்த :)) ஹிந்தி மீரா பஜன் ஒன்றின் திரண்ட பொருளை தழுவியதாகக் கொள்ளலாம்.  கிரிதாரியின் அருளால்  பின்னர் ஒரு பதிவில் அந்தப் பாடல் கண்ணன் பாட்டில் வரும்.  ராதே கிருஷ்ணா !!
~
கிரிதாரியின்,
ராதா


Wednesday, December 23, 2009

பாதத் தாமரைகள் நொந்திட...




....பார் தனில் என்னை தேடி வந்தவன் !

மனதை வருடும் ஒரு மெல்லிய பாடல். மார்கழி நன்னாளில் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். :)

கவிஞர்: அமரர் கல்கி
ராகம்: ஹரிகாம்போதி

வண்டாடும் சோலை தனிலே
கண்டெனதுள்ளம் கொண்டான் சகியே !

கொண்டல் போலும் வண்ணன் உடையான் !
கோகுலம் தந்த பாலன் அவனோ !!

பாதத் தாமரைகள் நொந்திட
பார் தனில் என்னை தேடி வந்தவன் !
மாதவன் மதுரை மைந்தன்
மறைகள் பரவும் மாயன் அவனோ !! (வண்டாடும்)

பாடலை திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் தேனினும் இனிய குரலில் இங்கு கேட்கலாம். ராதே கிருஷ்ணா !!

~
கிரிதாரியின்,
ராதா

Tuesday, December 22, 2009

6.கண்ணன் நடைபழகுதல்.



றங்கும் கதிரவன் வான விளிம்பைத்
திறந்துப் புரவிகள் தேரில் - இறங்கித்
திரைநீலம் யாவையும் தீயாக்கும் போலே
தரைமேல் குழந்தை தவழ்ந்து.

கொத்து மலர்களே கால்கொண்டு கைபதித்துத்
தத்தித்தத் தித்தண்ணீர்ச் சந்திரனாய் - முத்துக்கள்
சிந்திச் சிதறும் திசையெங்கும் சீதளபன்
உந்திபட ஊன்றித் தவழ்ந்து.

பாக்கியம் செய்தன பாத விரல்களின்
நோக்கிய மென்மை நகங்களே - ஆக்கிய
கோடுகள் நந்தன் நிலத்தில் நான்காகத்
தோடுகள் அசையத் தவழ்ந்து.

***

Image Courtesy :: http://members.rediff.com/sirparetn/res/kanna.jpg

5.கண்ணனைத் தாலாட்டல்.



போது நழுவியது; போக்கிடம் இன்றிநிலா
மாது தழுவினாள் மேகத்தை; - சாதுக்கள்
சத்திரம் ஏகினர்; சாமவேளை ஆனது;
ரத்தினமே கண்வள ராயோ.

தேன்வாழப் பூவிருக்கத் தெம்மாங்கு காத்திருக்க
வான்வாழ நீரிருக்க வந்ததென்ன - நான்வாழ
ராசாதி ராசாவா! ரோசா ஒதட்டாலே
பேசாம கண்ணா ஒறங்கு.

மேக்கால வெந்தவெயில் மெல்லமாய்ப் போனதும்
வேக்காட்ட வந்தநெழல் வீழ்த்தியதும் - தேக்கால
செஞ்சவொரு தொட்டிலில் செம்பவளக் கண்ணாநீ
கொஞ்ச கணமேனும் தூங்கு.

யமுனாப் படுகையில் மின்னல் துளிகள்
அமுதன் படுக்கையில் வைரம்! - குமுதம்
மலர்ந்து விரிந்து மதியில் நனையும்;
தளர்ந்து மகனே உறங்கு.

***

Image Courtesy :: http://jsk247.wordpress.com/category/bal-krishna/

நீ இரங்காயெனில் புகல் ஏது ?




இரண்டாவது பதிவு டகால்டி பதிவு மாதிரி இருந்தால் அதற்கு சகவாச தோஷம் தான் காரணம். :)

"ஜகன் நாதன்" என்று பாடலில் வருவதால் கண்ணன் பாடல் என்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். :)
[பக்த மீராவின் அடிகளை தலையில் சுமந்து,  தாயாரை அடைந்து அதன் பின்னரே கண்ணன் பாடல்கள் வருமாம். :)]





கவிஞர்: ப்ரஹ்மஸ்ரீ பாபநாசம் சிவன்
ராகம்: அடாணா
தாளம்: ஆதி

பல்லவி:
நீ இரங்காயெனில் புகல் ஏது ? அம்பா !!
நிகில ஜகன் நாதன் மார்பில் உறை திரு (அம்பா நீ)

அனுபல்லவி:
தாய் இரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ ?!!
ஸகல உலகிற்கும் நீ தாய் அல்லவோ !!!

சரணம்:
பாற்கடலில் உதித்த திருமணியே ! - ஸௌ
பாக்யலக்ஷ்மி,  என்னை கடைக்கணியே !!

நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் (அம்பா நீ)




பாடலை திருமதி  எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி  அவர்களின் இனிய குரலில் இங்கு கேட்கலாம்.
நம்மைப் பெற்ற தாயாரின் அன்பை இந்த  மார்கழியில் நினைவோம்.



~
கிரிதாரியின்,
ராதா

Monday, December 21, 2009

பேய்ப் பெண்ணே !



மார்கழி - 07

கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்,
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்!



கேயாரெஸின் விளக்கம் இங்கே.


ஆனைச் சாத்தன் பறவையெல்லாம்
பேசும் பேச்சுகள் கேட்கலையோ?
நறுங்குழல் ஆய்ச்சியர் தயிர்கடையும்
ஓசை உனக்கு கேட்கலையோ?
வளையொடு அணிகளும் சேர்ந்திசைக்கும்
கலகல ஒலியும் கேட்கலையோ?
கேசவன் புகழைக் கேட்ட பின்னும்
உறங்கிக் கிடக்கும் பேய்ப் பெண்ணே!
ஒளிர்திரு மேனி உடையவளே!
உடனே கதவைத் திறவாயே!

--கவிநயா

இந்த பாடலைக் குறித்து ஷைலஜா அக்கா:

இன்றைய திருப்பாவை மிகவும் சிறப்பான பாடலாக அமைந்திருக்கிறது.
ஆரமபமே கீசு கீசு என்று காதருகே வந்து கிசுகிசுக்கிறது! அதென்ன கீசு கீசு என்று பாசுரம் படிக்க ஆரம்பித்த நாளில் மனசில் ஒரே குறுகுறு!

விடுவிடுவென பொழிப்புரைபக்கங்களைப்புரட்டிப்படிக்க ஆரம்பித்தால் அவரவர் பாணியில் அர்த்தங்களைச்சொல்லி இருந்தாலும் அழகிய சிங்கர்சுவாமிகள்(ஸ்ரீரங்க ராஜகோபுரம் கட்டியவர்தான்) கூறிய விளக்கம் அப்படியே மனசைக்கட்டிப்போட்டுவிட்டது

ஆனைச்சாத்தான் என்றால் என்ன? பரத்வாஜ பட்சிகளாம்!

ராமனை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரச் சித்திரகூட யாத்திரைசெய்தபோது பரதனுடன் கூடவே வந்த் அயோத்தியாவாசிகளான ஆண்பெண்கள் அவ்வளவுபேரும் ஆனைச்சாத்தான்களாம். அதாவது பரத்வாஜரின் விருந்தோம்பலில் அவரிடத்தில் பூரண விசுவாசம் கொண்டவர்களாயிருந்து ராமனை சேவிக்கவேண்டும் என்ற பெரிய மகிழ்ச்சியான ஆரவாரத்தைச்செய்கிறார்களாம்.அதுபோல இப்போது யமுனைத்துறைவனை சேவிக்க கூட்டமாய் வருகிறார்களாம். அவர்கள் தேவ மொழியில்பேசுவதால் நமக்கு அது புரியாதாகையால் கீசுகீசென்று கேட்கிறதாம், அந்த சப்தம் உன்காதில் விழவில்லையா என்று ஆண்டாள் கேட்கிறாளாம்!

இறைசிந்தனையைத் தடுத்துவிட்ட பேய் புத்திகொண்ட பெண்ணே என்று திட்ட ஆரம்பித்து கடைசியில் தேஜஸ் கொண்டவளே என்கிறாள் தேசமுடையாய் என்பதற்குக்காரணம் கண்ணனின் நினைவிலேயே அவள் இருப்பதால் அவனது தேக தேஜஸ் நாயகப்பெண்பிள்ளையான அதாவது இவர்களின் எஜமானியான அவளுக்கும் வந்துவிடுகிறதாம் அப்படியானால் பேய்ப்பெண் என்று இறை அடியாரான அந்தப்பெண்னை சொல்லிவிட்டதற்காய் வருந்தி தேசமுடையாய் என முடிக்கிறாள் அவளும் நான் பேய்ப்பெண் தான் இல்லாவிடில் இப்படி தூங்கிக்கொண்டு கேசவனின் நாமம் பாடி வந்த உங்களை வாசலில் காக்க வைப்பேனா நானல்லவா பாகவத அபசாரம் செய்துவிட்டேன் என்கிறாள்!
அவளது அழகான பேச்சைரசித்தபடி மற்றொரு பெண்னை எழுப்பச்செல்கிறார்களாம்! இந்தப்பாசுரத்தில் கூறப்படும் திவ்யதேசம் திரு ஆய்ப்பாடியாகும் இது பெரியாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டது.

ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
பெரியாழ்வார் திருமொழி 1-2 -2

இங்கு கூறப்படும் பாடுவார்களும் பல்பறைக்கொட்ட நின்று ஆடுவார்களும் என்னும் தொடர் ஏழாம் பாசுரத்தில்கூறப்படும் நாராயணன் மூர்த்தி கேசவனைப்பாடவும் என்பதை நினைவுபடுத்துகிறது.



படத்துக்கு நன்றி: aazhvarmozhi.blogspot.com

Sunday, December 20, 2009

வெண்ணிலாவே!




வெள்ளையாய்ச் சிரிக்குமெழில் வெண்ணிலாவே எந்தன்
வேதனையை அறியாயோ வெண்ணிலாவே?
கள்ளத்தனம் ஏனுனக்கு வெண்ணிலாவே இந்த
பேதையிடம் காய்வதென்ன வெண்ணிலாவே?

கண்ணனவன் திருமுகத்தைக் கண்டதுண்டோ என்
கண்அவனின் குழலமுதம் உண்டதுண்டோ?
விண்பொழியும் மழைமேகக் கருமைவண்ணன் அவன்
நீண்டகரு விழியழகைத் தின்றதுண்டோ?

சின்னக்குறு நகைஇதழில் விளையாட அவன்
வண்ணமலர் மார்பில்அணி அசைந்தாட
தோகைமயி லிறகவனோ டிசைந்தாட அந்த
போதையிலென் னுள்ளமவன் வசமாக

ஆற்றங்கரை ஓரத்திலே வெண்ணிலாவே அவன்
காத்திருந்தால் வருவேனென்றான் வெண்ணிலாவே
காற்றும்கூட பரிகசிக்க வெண்ணிலாவே அந்த
கள்வன்வர வேயில்லை வெண்ணிலாவே

கோபியரைக் கண்டவுடன் வெண்ணிலாவே இந்த
கோதையினை மறந்தானோ வெண்ணிலாவே?
வெம்பிமனம் காயுதடி வெண்ணிலாவே இந்த
பெண்ணின்துய ரறியாயோ வெண்ணிலாவே??

--கவிநயா

எங்கள் கண்களில் வசிக்க வா!

சொந்தமாக கவிதை எழுதும் திறமை இல்லாவிடினும், இருக்கும் கவிதைகளை நன்றாக காப்பி அடிக்க தெரியும். :)

இதோ இங்கே ஒரு மீரா பஜனை பாடல் - ஹிந்தி மூலமும், "காற்றினிலே வரும் கீதம்" என்ற ரா.கணபதி எழுதிய புத்தகத்தில் இருந்து தமிழாக்கமும்.

(மீரா பஜன் -1)

பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா ||

மோஹனீ மூரத ஸாம்வரீ ஸூரத நைநா பனே பிஷால் ||


மோர முகுட மகராக்ருதி குண்டல, அருண திலக சோஹ பால் ||

அதர சுதா ரஸ முரளி, ராஜதி உர (பை)பம்ஜதீ மால் ||


சுத்ர கண்டிகா கடி தட ஷோபித நூபுர ஸபத ரஸால் ||

மீரா ப்ரபு ஸந்தன சுகதாயீ ப-க-த-வ-ச-ல கோ-பா-ல் ||


(தமிழாக்கம் - நன்றி ரா.கணபதி, கிரிதாரி)


அந்தமில் அழக, நந்தலால,

கண்ணில் வசிக்க வா, கண்ண, பால


மோகன மூர்த்தி

சியாமள சீர்த்தி

நயனம் விரி நேர்த்தி


மயிற்பீலி மங்கலம்

மகரமீன் குண்டலம் - நெற்றி

திலக முகமண்டலம்


ஆரமுதம் பொழியும் அதரம் - அதனில்

தீங்குழல் பொழியும் இன்சுரம்

பேரெழில் வைஜயந்தி உறை உரம்


உயிரை கவர் உதரம் - அதனில்

மோகன கிண்கிணி மதுரம்

இன்னிசைக்கும் நூபுரம்


மீரா இதய பூபாலன்

அன்பர்க்கு இனிய க்ருபாலன் - பக்த

கன்றுகள் கோபாலன்.


இந்தப் பாடலை பாரதத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷமாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பக்தி ரசம் நிறைந்த குரலில் இங்கு கேட்கலாம்.
(மற்றுமொரு சுட்டி.)
Baso More - M S Su...


~
கிரிதாரியின்,
ராதா

Saturday, December 19, 2009

4.கண்ணனுக்குப் பாலூட்டல்.



தாய்மை உணர்ந்த தருணமே, ஏந்திய
சேய்மை விரல்தடவிச் செவ்விதழ் - வாய்மை
படர்ந்துப் பெருகியப் பாலைக் குடிக்கத்
தொடர்ந்துத் தொடர்ந்த கணம்.

அணிந்திடும் ஆரங்கள் மின்னல் ஒளியாம்
கனிந்திடும் அன்னைமார் கொண்டல் - தணிந்திடும்
கண்ணன் பசித்தீக்கு கொட்டும் பனிமழை
தண்ணிய தாயுடை பால்.

மென்விரல் கொண்டகை மெல்லியதாய் ஓர்மாரை
என்குரல் தேங்கத் தடவுவான் - வெண்மணல்
குன்றினில் ஊற்றுப் பெருகும் நேரத்தில்
என்னன்னை எண்ணுகிறேன் யான்.

முகிலில் ஒருபொழுது மூழ்கும் கடலில்,
தகிக்கும் அனலில் மற்றும் - முகிழ்க்கும்
குலைகளாய்ப் பெண்ணாய்க் குழைந்தேன் மகவென்
முலைகளாய்ப் பற்றிய போது.



***

Image Courtesy :: http://the-artist-varma.com/ravivarma_images/rrv3.jpg
and http://www.exoticindiaart.com/artimages/ep20.jpg

Friday, December 18, 2009

3.கண்ணனை அலங்கரித்தல்.



போலே இருப்பதென பேசுவதும் ஏலாது
மாலே மணியன் மகுடமுதல் - காலே
அணிந்த கொலுசு அதுவரை ஆழ்வார்
பணிந்த சுவடு பதிந்து.

ஈரச் சிகைகளை இன்னும் உலர்த்திட்டுப்
பாரம் குறையப் புகைகாட்டி - தீரம்
புகட்டிய பைம்பொன் பதித்த இறகால்
முகமே மின்னும் ஒளிர்ந்து.

கொஞ்சம் பவளம் இடையிடை முத்துக்கள்
எஞ்சும் இடத்தினில் வைரங்கள் - பஞ்சுக்
கழுத்தினைக் கட்டியக் கயிறது பட்டுப்
பழுத்தன கைகள் தடவி.

தங்கப் பதக்கம் கரங்கள் புயத்தினில்
மங்காத ஆரம் மணிக்கட்டில் - பொங்கும்
ஒளித்துளி மின்ன ஒளிரும் வளையம்
மிளிரும் அவன்தன் விரலில்.

பட்டுநூலால் ஓராடை பக்குவமாய்ச் சுற்றிப்பின்
கட்டி இறக்கி முடிச்சிட்டு - சுட்டியின்
குட்டி இடையினை வட்டமாய் வளைத்திடும்
ஒட்டிதொடல் வெட்க அழகு.

பாதம் கொலுசுடன் ஜல்ஜல் எழுப்ப
மீதம் விரல்மோ திரம்வழி - மோதும்
பலவொலி கிண்கிணி கிண்கிணி கன்றுகள்
பலவந்துப் பார்க்கும் இயல்பு.

நெற்றிக்குப் பொட்டிட்டு நீள்புருவம் கண்இமைகள்
சுற்றிலும் மையெழுதிச் சுந்தரனின் - வெற்றித்
திருமுகத்தில் வைத்த வலதுகன்னப் பொட்டு
ஒருமுகமாய்ப் பிள்ளைக்குத் திருட்டி.

மோகனனின் மேனி எழிற்சிதறல், மாமலை
யோகிக்கும் சேர்த்த அலங்காரம் - போதாமல்
புன்னகை செய்யும் பரந்தாமன் கண்டதும்
தன்னையே நீங்கினாள் தாய்.

***

Image Courtesy :: http://dr-narasinha-kamath.sulekha.com/mstore/Dr-Narasinha-Kamath/albums/default/Krishna2.jpg

Thursday, December 17, 2009

2.கண்ணனைக் குளிப்பாட்டுதல்.



சுமந்து கொணர்ந்த சுகமான சாந்தைக்
கமகமக்கும் வாசப் புகையில் - சமப்படுத்திப்

பச்சைப் பயிற்றுமாவில் பாங்காய்க் கலந்திட்டுக்
கச்சை முடிச்சிட்டுக் கண்ணனின் - உச்சியில்

காய்த்த சுடுஎண்ணெய்ச் சேர்த்துச் சுருள்முடியில்
தேய்த்து நுரைத்திட்டாள் தாயாக - வாய்த்த

யமுனைநதித் தீரத்தின் யாதவ அம்மை
அமுதெனப்பால் தந்த யசோதா. - குமுறும்

முகில்வண்ணன் கொஞ்சும் முகுந்தன் முகத்தில்
அகிற்புகை சாற்றி அளவாய்ச் - சகிக்கும்

கடலைமா வைப்பயத்தம் மாவுடன் கூட்டி
உடலில் தடவிட்டு ஊறிக் - குடத்தில்

நதியெடுத்துக் கோபாலன் மேனியைக் கொஞ்சம்
புதிதாக்க ஊற்றிப் புறத்தை - அதிரூபம்

பண்ணுகையில் ரீங்காரம் போலும் அழுவது
மண்ணுயிர்க்கு ஓங்காரம் போல்!

***

Image Courtesy :: http://images.exoticindiaart.com/hindu/little_krishna_gets_a_bath_ha39.jpg

கே.ஆர்.எஸ். சொன்ன ஐடியாவைக் கொண்டு அந்தாதி முயற்சி. கே.ஆர்.எஸ்ஸுக்கு நன்றிகள். :)

Wednesday, December 16, 2009

1.கண்ணன் கோகுலம் வருதல்.

திருமார்கழிப் பிறப்பை ஒட்டி மடலில் சொன்னது போல், முடிந்த அளவுக்குத் தினம் ஒரு வெண்பாப் பூக் கொய்து, மாலையாக்கி ஆண்டாளின் அழகன் தோள் சாற்றும் அதிகப்படியான ஆசையில் எழுத உட்கார்ந்து விட்டேன். வெண்பா இலக்கணத்தைப் பெருமளவுக்குப் பின் தொடர முயல்கிறேன். தவறிருந்தால், ஒரே ஒரு குட்டு குட்டி, திருத்த உதவுங்கள். கவிதை மாதிரி இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை.

***

விநாயகர் துதி.



பாடியதில் பைந்தமிழ்! நாடியதில் நற்கல்வி!
கூடியதில் கற்றோர்க் குழாமெனினும் - தேடினேன்
தும்பிக்கை யானைத் துதித்தகைவி டானெனும்
நம்பிக்கை யேந்துகிறேன் நான்.

கலைமகள் துதி.



புன்னகை செய்கிறாள் பூநிறமே நாணிட
வெண்ணிறத் தாமரையில் வேதவல்லி! - அன்னையின்
பாதவிரல் கொண்ட பிரம்மனின் மெட்டியொலி
வேதப் பிரகடனம் கேள்.

கண்ணிலா மாந்தரவர் காட்சியைச் சொல்வதன்ன
கண்ணனைப் பாடும் பணியினை - எண்ணிடாது
களம்புகுந் தேன்யான்! கலைவாணி நீயென்
உளம்புகு வாய்நீயே காப்பு.

குரு வணக்கம்.



மண்ணில் உறங்கும் மழைத்துளி தொட்டபின்
கண்ணைத் திறப்பதால் காணும் - என்னை
உருவாக் கியரறிஞர் அவ்வளவின் நெஞ்சில்
குருவாக் கியமே விதை.

1.கண்ணன் கோகுலம் வருதல்.



கரியதிரை ஒன்று கிழிந்தது போலும்
சரிந்த முகில்கள் இடித்து - வரிந்து

பெருமழை ஆற்றைப் பொழிந்து வழியில்
பருத்த பழுப்புநதி பொங்கக் - கருத்த

இரவின் தடத்தில் இரத்தின பிள்ளை,
விரவின ஈரப் பொழுதில் - பரவின

நந்தர் விரல்களைப் பற்றித் தடவிடத்
தந்தை எனுமோர்த் தகைமையில் - வந்து

நனைக்கும் துளித்துளி நன்முத்துச் சாரல்
அணைக்கத் தடுத்திட, ஆழிப் - பிணைக்கும்

அரவணை ஆதிசேடன் ஆதரவாய்ப் பின்னில்
வரவர கோகுலம் வந்தான் - மரகத

வண்ணனாம் மதுசூதனன் வானிறம் சூடிய
கண்ணனாம் கருமை சுமந்து!

***

Image Courtesy :: http://www.hiddenmeanings.com/krishnaescapes.jpg

Tuesday, December 15, 2009

எந்தன் கண்ணனைக் கண்டீரா?



மார்கழி-02

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம்; பால் உண்ணோம்; நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்று ஓதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.



புல்லாங் குழலை ஊதும் எந்தன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
இரவு பகலாய்த் தேடுகிறேன்
இன்னமும் என்னிடம் சிக்கவில்லை!

நில்லாமல் சுற்றும் புவிபோலே – ஓய்
வில்லாமல் ஊரைச் சுற்றிடுவான்;
உறிமேல் பானை கண்டுவிட்டால்
பறிமுதல் உடனே செய்திடுவான்!

பத்தரை மாற்றுத் தங்கம் போல்
பாசாங்கு பலவும் புரிந்திடுவான்;
இத்தரை மீதில் இவனேதான்
இலக்கணம் போல நடந்து கொள்வான்!

கரிய விழிகளை விரித்து அதில்
கண்ணீரோடு நின்றிடுவான்;
பாவம் என்று விட்டு விட்டால்
மீதம் இன்றி தின்றிடுவான்!

உருட்டி மிரட்டி கட்டி வைத்தால்
உரலையும் இழுத்துச் சென்றிடுவான்!
தறிகெட் டலையும் கன்றினைப் போல்
திரியும் கண்ணனைக் கண்டீரா?

கன்னக் குழியில் குறும்பிருக்கும்
வன்னப் பீலி அசைந்தாடும்
தின்ன வெண்ணெய் எல்லாமே
திகட்டா இதழைச் சுவைத்திருக்கும்!

காதணி வதனம் கொஞ்சி நிற்கும்
மாமணி மார்பில் தவழ்ந்திருக்கும்
கிண்கிணி கொலுசு மணிகளெல்லாம் - அவன்
பாதங்கள் தொட்டு மகிழ்ந்திருக்கும்!

குழலில் குயிலும் மயங்கி நிற்கும்
குரலில் குழலே ஒலித்திருக்கும்
மடுவின் நடுவே மலர் போலே - அவன்
முகமே மனதில் மலர்ந்திருக்கும்

புல்லாங் குழலை ஊதும் எந்தன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
எந்தன் ஏக்கம் அறிவீரா?
அவனைக் கண்டால் சொல்வீரா?

--கவிநயா

அப்புறம் என்ன ஆச்சு? - 2.



ளிங்கு வனத்தின் மேல் பாய்ந்த ஒளி வெள்ளம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது ஆயர்பாடி.

இன்னும் உக்கிரம் கொள்ளாத சூரியனின் பார்வைகள் தீண்டும் பகுதிகளில் எல்லாம் வெம்மையில் பூத்துக் கொண்டிருந்தது வெயில். கொத்தாய்ச் சிரித்துக் கொண்டிருந்த பச்சை இலைகளைப் பிரித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது பகல் ஒளி. வெள்ளிக் காசுகள் தூவிய போர்வையாய் அசைந்து, அசைந்து ஓடிக் கொண்டிருந்தது யமுனை நதி.

ஆவினங்களை ஓட்டியபடி அருகின் வனம் புகுந்திருந்த நாயகர்களின் வீரக் கதைகளைப் பேசிக் கொண்டு யமுனையின் குளிர்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது கோகுலத்தின் கன்னிப் பெண்களின் குழாம்.

கவனம். இது கன்னியர்களின் அந்தரங்கங்கள் அலசப்படும் இடம். நமக்கு, இங்கே என்ன வேலை? வாருங்கள். நாம் ஊருக்குள் செல்வோம்.

அடடே, அங்கே ஒரே கூட்டமாய் இருக்கின்றதே? என்னவாய் இருக்கும்? வாருங்கள். சென்று பார்ப்போம்.

நானா, உங்களை அழைக்கிறேன்? நம்மையெல்லாம் அழைப்பது ஒரு நாதம். கள்ளினும் பெரும் போதையில் நம்மை ஆழ்த்தும் இந்த குழலோசையின் நாயகன், வேறு யாராய் இருக்க முடியும்? அந்த மாயவனே தான்.

தேன் சொரியும் மலரைச் சுற்றிலும் மது மயக்கத்தில் மனம் கிறங்கிய வண்டுகள் இருப்பது அதிசயமா என்ன? பச்சைப் பசிய மரங்கள் நிரம்பிய காடுகளில் மேகங்கள் தங்கி இளைப்பாறுவதும், களைப்பாறுவதும் இயல்பானதே அல்லவா? இந்த மதுசூதனின் மாயக் கரங்கள் மூடித் திறந்து விளையாடும் புல்லாங்குழலின் இனிய இசையில் மன அமைதியுறாத மானிடர் தாம் உண்டோ?

நாமும் அந்தக் குழுவில் இணைகிறோம்.

யாரென்ன , எவரென்ன , குலமென்ன, கோத்திரமென்ன, இனமென்ன, இவனென்ன என்றெல்லாம் பார்த்தா கதிர் ஒளி தருகின்றது? நதி நீர் தருகின்றது? அது போல், யாரெல்லாம் இங்கே உள்ளார்கள்?

வாழ்வின் கடைசிப் படிகளில் படுத்திருக்கும் கிழவர் முதல், முதல் படிக்கட்டில் முழந்தாள் பதித்திருக்கும் பச்சை மண் வரை இவனது குழல் நாதத்தில் மயங்கி இருக்கிறார்களே!

அல்லி மலர்கள் இதழ் கூம்பியிருந்தாலும், நிலவின் ஒளி அதனைத் தட்டித் தட்டி எழுப்புவதில்லையா? தாமரை வெட்கத்தால் தலை கவிழ்ந்திருந்தாலும், கதிரொளி அந்த சிவந்த முகத்தைக் கரங்களால் அள்ளி முத்தமிட இட செந்தாமரை முகம் இன்னும் சிவந்து பரவசம் கொள்ளுவதில்லையா?

இந்த மாயவனின் மனம் கவரும் குழலின் ஓசையில் நாமும் கலந்து நிற்கிறோம்.

ஆ..! இது என்ன எல்லோரும் கலைந்து ஓடுகிறார்களே!~ யாரத்கு, வருவது?

கையில் கழியோடு யசோதை வருகிறாள்.

"கண்ணா..! இது என்ன , எப்போது நீ இங்கே வந்தாய்? உன்னை சமையலறையில் அல்லவா கட்டிப் போட்டேன்! அடே, மாயப் பயலே? என்னையா ஏமாற்றி விட்டு வந்தாய்! இந்த வெயிலைப் பார்த்தாயா? நெல் மணிகளை வெளியே கொட்டி வைத்தால், நிமிடக் கணக்கிலே அரிசியாய்ப் பொறிந்து போகுமே! இந்த சூட்டில் நீ நிற்கலாமா? நாளை உன்னை மணக்கப் போகும் மகராசி வந்து உன்னை கருப்பாக வளர்த்து விட்டேன் என்று குறை கூறுவாளே! அதற்காகவா நீ திட்டம் போட்டு பகலெல்லாம் வெயிலின் சூட்டையேல்லாம் உன் மேனியோடு தாங்கிக் கொண்டு வருகிறாய்? வா. வீட்டுக்கு! உனக்குப் பிடித்த வெண்ணெய்ப் பலகாரங்கள் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் நமது தொழுவத்தில் பிறந்த கன்றுக்கும் தராமல் சீம்பாலில் இனிப்புகள் செய்து வைத்திருக்கிறேன். வா, மனைக்கு..! அடே பயல்களா! நீங்கள் விளையாட என் மாணிக்கம் தான் கிடைத்தானா? இரவெல்லாம் இந்தப் பெண்கள் அள்ளிக் கொண்டு போய் கொஞ்சித் தீர்க்கிறார்கள். அவர்களது முத்தங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு சிவந்த சிறுவனாக வருகிறான். பகலில் நீங்கள் வந்து கூட்டிக் கொண்டு போய் வெயிலில் விளையாடி அவனைக் கருநிறத்துக் கண்மணியாக மாற்றி அனுப்புகிறீர்கள். என் செல்வத்தின் உடல் தான் என்னாவது? இனிமேல் மனைப் பக்கம் வாருங்கள். உங்களையும் இவனுடன் சேர்த்து உரலோடு கட்டிப் போடுகிறேன். பிறகு எங்கும் நகரவியலாது. உங்கள் தாயார்கள் வந்து தயை கூறக் கேட்டாலும் அனுப்ப மாட்டேன். ஆமாம். கண்ணா! இனிமேல் வெளியே வந்து விளையாட மட்டேன் என்று உறுதி கூறு? எங்கே சொல்லு..! அது என்ன வாயில் அடைத்துக் கொண்டு இருக்கிறாய்? எங்கே காட்டு? ஆ.. காட்டு..! ஆ..!"

ஆஹா! இந்த அம்மையின் அன்பையும், ஆதுரமான பேச்சையும் வேறெங்கே காண முடியும்? நாமும் கண்ணனின் லீலையைப் பர்ப்போம்.

புல்லாங்குழலிற்கு உயிர் கொடுத்து உற்சாக உணர்வூட்டும் அந்த செவ்விதழ்களைத் திறந்து காட்டுகிறான். ஆஹா! ஆங்கே காண்பது தான் என்ன!

பிரபஞ்சத்தை அல்லவா காட்டுகிறான். அவன் இங்கே காட்டியதால், பிரபஞ்சத்திலேயே ஒன்றும் இல்லாமல் பஞ்சம் ஆனது போல் உள்ளதே! அவை தான் இங்கேயே உள்ளதே.!

ஏ.. மனமோகனா! அழகிய மணவாளா! மகா பிரபு! உன் கருணையின் வெள்ளத்தையும், மஹாமாயாவின் லீலைகளையும் உன் அன்னை யசோதையே தாங்கிக் கொள்ளவியலாமல் மயங்கி விழுகிறாளே! நாங்கள் என் செய்வோம்?

***

கவிநயா அக்கா, சென்ற பதிவில் கேட்ட 'அப்புறம் என்ன ஆச்சு?'விற்குப் பதில் தெரியாம, '.....ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கற' கே.ஆர்.எஸ். போன்ற அப்பாவிகளுக்கு(?) இந்தப் பதிவு சமர்ப்பணம். :)

Monday, December 14, 2009

அப்புறம் என்ன ஆச்சு?

வாங்க வாங்க! மார்கழியைக் கொண்டாட வாங்க!
மாலவனைக் கொண்டாட வாங்க! அவனோட
மங்கை நல்லாளைக் கொண்டாட வாங்க!


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.



ந்தக் குட்டிக் கிருஷ்ணனைப் பாருங்க... அவன் தான் எப்பேர்ப்பட்ட அழகு! கொழுக் மொழுக்னு! துறுதுறு கண்ணும், கூரான மூக்கும், பவழச் செவ்வாயும், கொழுகொழு கன்னங்களும்.... அடடா... அவனைப் பார்த்தாலே அவனை இறுகக் கட்டி அணைச்சு முத்து முத்தா கொடுத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குல்ல! அந்த கண்ணன் ஏற்கனவே இருக்கற அழகு பத்தாதுன்னு மேற்கொண்டு அழகு படுத்தி விட்டிருக்கா அவன் அம்மா.

சுருள் சுருளா, கருகருன்னு இருக்கிற தலை முடியில மயிலறகு. நெற்றில பொட்டு. கண்ணுல மை. கன்னத்துல திருஷ்டிப் பொட்டு வேற. இடுப்புல மஞ்சள் பட்டாடை. கால்ல கிண்கிணிச் சலங்கை. கைல அவனை விடப் பெரீசா ஒரு புல்லாங்குழல்!

அவன் சுறுசுறுப்பா ஓடிக்கிட்டும், மழலை மொழி பேசிக்கிட்டும், குறும்பு பண்ணிக்கிட்டும் இருக்கற அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம். அவன் பக்கத்துல இருக்கும்போது கால் கூட தானா அவனை தொடர்ந்துகிட்டே இருக்கும். கண்ணோ அவனைத் தவிர வேற எதயும் பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்கும். வாயும் தன் பங்குக்கு அவன் பேரைத் தவிர எதையும் சொல்லாது. இப்படி எல்லா புலன்களையும் ஒருங்கே கவர்ந்துக்கிற அப்படி ஒரு செல்லம் அவன்!

அவனைப் பெற்ற பேற்றை நினைச்சுக்கிட்டே, அந்த சுகத்தை அனுபவிக்கறதுக்காக, மூச்சை ஆழமா இழுத்து, ஒரு நொடி, ஒரே ஒரு நொடிதான் கண்ண மூடினா, அவன் அம்மா யசோதா. அடுத்த நொடி, அந்தப் பய காணாம போயிட்டான்! உடனே பதறிட்டா. எழுந்து ஓடி ஓடி. 'கண்ணா.... கண்ணா"ன்னு கூப்பிட்டு, தேடித் தேடி சலிச்சுட்டா. எங்கேதான் போனானோ இந்தக் குறும்புக் கண்ணன்?

அவனை நினைச்ச உடனேயே உதடு தானா புன்னகைக்குது! மனசு கோவத்தை நினைவுபடுத்திக்கிட்டு, "ஏய் உதடே, உனக்கென்ன சிரிப்பு வேண்டியிருக்கு?!" அப்படின்னு மெரட்டுது. "வரட்டும் அவன். என்ன செய்யறேன் பாரு இன்னிக்கு?" அப்படின்னு கறுவுது. மறுபடியும் தேடல் தொடருது.

அதோ.... அங்க... அந்த மரத்துக்கு கொஞ்சம் பின்னால மஞ்சள் துணி மாதிரி தெரியுதே... கிட்ட போய் பார்க்கலாம். பூனை மாதிரி சத்தம் செய்யாம போய் பாக்கிறா யசோதா. கண்ணன் இன்னும் ரெண்டு தோழர்களோட சேர்ந்து மண்ணு தின்னுக்கிட்டிருக்கான்!

வந்ததே கோவம் அந்தம்மாவுக்கு! பூனை மாதிரி போனவ புலி மாதிரி உறுமி, "வாடா இங்கே"ன்னு காதப் புடிச்சு திருகி, அழைச்சுக்கிட்டு வந்தா. "இம்புட்டு வெண்ணெயும் தயிரும் மோருமா சாப்பிடறியே. நான் குடுக்கிறது பத்தாதுன்னு, இருக்கிற வீட்ல எல்லாம் திருடி வேற சாப்பிடற. அதுவும் பத்தலையா ஒனக்கு? மண்ணு வேற வேணுமா? துப்பு... துப்பு!"

நீல நிறக் குழந்தையோட காது செக்கெச் செவேல்னு ஆயிருச்சு. "நானா மண்ணு தின்னேன்? மண்ணும் திங்கல, ஒண்ணும் திங்கலயே. மண்ணுன்னா என்னன்னு கூட எனக்குத் தெரியாதே...", அப்படிங்கிற மாதிரி ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கறான் குழந்தை.

"என்னடா ஒண்ணும் தெரியாத மாதிரி நிக்கிற? வாயை இப்ப தெறக்க போறியா இல்லையா?"

அவனோட சின்ன வாயை வலுக்கட்டாயமா திறக்கிறா! அப்புறம் என்ன ஆச்சுன்னுதான் உங்களுக்கே தெரியுமே!


--கவிநயா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP