மேலே உள்ள நம்மாழ்வார் பாசுரத்தை நினைவுபடுத்தும் வகையில், "ஹரி ஹரி ஹரீ" என்ற உருக்கமான அழைப்பினோடு ஒரு மீரா பஜனை, கண்ணனும் அபகரிப்பவன் (ஹரி) தான் என்ற வகையில் கண்ணன் பாடலில் தரப்படுகிறது. :)
"அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?" என்ற பாடலில் புகழப்பெற்ற அதே லீலைகளை இந்த ஹிந்தி மீரா பாடலிலும் காணலாம். எம்.எஸ் அம்மா அவர்களின் உருக வைக்கும் குரலில் இங்கே கேட்கலாம்.
ஹரி தும ஹரோ ஜன கீ பீர ||
த்ரௌபதி கி லாஜ ராகி
தும படா யோ ஜீர் ||
பகத காரண ரூப நரஹரி
தர்யோ ஆப சரீர |
ஹரினகஸ்யப மார லீன்ஹு
தர்யோ நான்ஹின தீர் ||
பூடதே கஜராஜ ராக்யோ
கியோ பாஹர நீர |
தாஸ மீரா லால கிரதர
துக ஜஹா தஹா பீர ||
ஹரி ஹரீ ஹரீ ஹரீ
தும ஹரோ ஜன கீ பீர் ||
யானைக்கு அருள் செய்ததையும், பாலனை பாலனம் செய்ததையும், சபையில் பக்தையின் மானம் காத்த அருளையும் பாடி அடியாள் மீரா கிரிதரநாதனை எல்லோர் சார்பாகவும் எல்லா துயர்களையும் களைய வேண்டுகிறாள்.
2010 புத்தாண்டு தினத்தில் ஹரி அனைத்து உயிர்களின் துன்பங்களையும் களைய நாமும் அவன் அருள் வேண்டுவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு !! :)
இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009) மோட்ச ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!
பல இடங்களில் பலவாறு கொண்டாடப்பட்டாலும், திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாகக் கொண்டாடப்படுவது! = இராப் பத்து! திருவாய்மொழித் திருநாள்! எம்பெருமான், வடமொழி வேதங்களைச் சற்றே ஓரங்கட்டி, தீந்தமிழ்ப் பாசுரங்களை மட்டுமே இடைவிடாது கேட்கும் நாள்!
திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!
முற்றிலும் தமிழ்ப் பாட்டான கண்ணன் பாட்டிலே, * கன்னடப் பாடல் - கிருஷ்ணா நீ பேகனே, * தெலுங்குப் பாடல் - ஷீராப்தி கன்யககு, * செளராஷ்டிரப் பாடல் - பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ * வடமொழிப் பாடல் - பாவன குரு/அமர ஜீவிதம், * இந்திப் பாடல்கள் - பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா * ஆங்கிலம் - The Child in Us (Enigma) என்று எப்போதாவது ஒன்னு ரெண்டு இதர மொழிப் பாடல்களும் வரும்!
அந்த வரிசையில், இன்று மிகவும் ஏகாந்தமான மலையாளப் பாடல் ஒன்று! கேட்டுத் தான் பாருங்களேன்! பொருள் சுமாரா உங்களுக்கே புரிஞ்சிரும்-ன்னு நினைக்கிறேன்! மலையாளமும் தமிழும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை அல்லவா? எந்தா இன்னும் ஓர்க்குன்னு? யான் பறைஞ்சது மனசுலாயோ? ஈ நாள் வரை தமிழ் பாஷையிலே மட்டும் கானம் கழிஞ்சோ? :) குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல் வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண ரூபம்! இங்கே கேட்டுக் கொண்டே பாடலில் கரையுங்கள்!
பாடல்: குருவாயூர் ஏகாதசி தொகுப்பு (Album): வனமாலா குரல்: K.J.யேசுதாஸ் வரிகள்: ரமேசன் நாயர் இசை: P.K.கேசவன் நம்பூதிரி "குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்"
= அது என்னங்க "குருவாயூர்" ஏகாதசி? "வைகுந்த" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க? கேரளத்தில் மட்டும், அனைத்து ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்? இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே! :)
= எல்லாத்துக்கும் ஒரு யானை தாங்க காரணம்! = வாரணம் தான் காரணம்! வேண்டுமானால் இங்கே சென்று அந்த தனிக் கதையை வாசித்துக் கொள்ளவும்!
அது சரி, கண்ணன் பாட்டிலே மலையாளப் பாட்டு எப்படி இருந்துச்சி? ஓடக்குழல் ஊதுன்னு காடெல்லாம் பகவான்-ன்னு இருந்துச்சா? :)
இது போன்ற முயற்சிகளை, பன் மலர் மாலைகளை, கண்ணன் பாட்டு அன்பர்கள் தொடர்ந்து செய்ய வேணுமாய், பணிவுடன் கேட்டு, அடியேன் அமைந்து விடுகிறேன்! பயந்த தனி வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே! பயந்த தனி வழியில்..... வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண நாமம்!! தளரும் போல் ஆத்மாவுக்கு... வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண நாமம்!! அவன் நாராயண நாமம்!!
சாது ஜனங்கள் ஒன்று கூடினால் கிரிதாரிக்கு கொண்டாட்டம் தான். அதுவும் மீரா போன்ற ஒரு பக்தையின் தலைமையில் கூடுகிறது என்றால் கிரிதாரியின் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். இதோ இங்கே ஒரு அருமையான பஜனை பாடலை எல்லோரும் சேர்ந்து பாடிக் களிக்கிறார்கள். கண்ணனையும் குளிர வைக்கிறார்கள்.
அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?
அறிந்தவர் யார்? எங்கும் நிறைந்தவனே !
யானை அன்று "ஆதிமூலமே !" என்று
ஓலமிடவும் ஓடி வந்தனையே !!
ஈனர்கள் சபையில் த்ரௌபதி கதற
மானம் காத்தனையே !! ஆஹா நீ !!
ப்ரஹலாதனையே பாலனம் செய்ய
நரஹரியாய் வந்த நாரணனே !
தாரணியில் உன்னை அன்றி வேறே
யார் துணை சங்க கதாதரனே ?
மீராவின் காலத்தில் அந்த சாதுக்கள் கூட்டத்தில் சேர்ந்து பாடும் பாக்கியம் செய்யாவிடினும், இதோ இங்கே மறுபடி எம்.எஸ் அம்மாவின் குரலில் நம்மை மீரா வழி நடத்துகிறாள்.
இந்தப் பாடல் மிகவும் ப்ரபலமான (அதாவது எனக்கு மிகவும் பிடித்த :)) ஹிந்தி மீரா பஜன் ஒன்றின் திரண்ட பொருளை தழுவியதாகக் கொள்ளலாம். கிரிதாரியின் அருளால் பின்னர் ஒரு பதிவில் அந்தப் பாடல் கண்ணன் பாட்டில் வரும். ராதே கிருஷ்ணா !!
~
கிரிதாரியின்,
ராதா
இரண்டாவது பதிவு டகால்டி பதிவு மாதிரி இருந்தால் அதற்கு சகவாச தோஷம் தான் காரணம். :)
"ஜகன் நாதன்" என்று பாடலில் வருவதால் கண்ணன் பாடல் என்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். :) [பக்த மீராவின் அடிகளை தலையில் சுமந்து, தாயாரை அடைந்து அதன் பின்னரே கண்ணன் பாடல்கள் வருமாம். :)]
கவிஞர்: ப்ரஹ்மஸ்ரீ பாபநாசம் சிவன் ராகம்: அடாணா தாளம்: ஆதி
பல்லவி: நீ இரங்காயெனில் புகல் ஏது ? அம்பா !! நிகில ஜகன் நாதன் மார்பில் உறை திரு (அம்பா நீ)
அனுபல்லவி: தாய் இரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ ?!! ஸகல உலகிற்கும் நீ தாய் அல்லவோ !!!
இன்றைய திருப்பாவை மிகவும் சிறப்பான பாடலாக அமைந்திருக்கிறது. ஆரமபமே கீசு கீசு என்று காதருகே வந்து கிசுகிசுக்கிறது! அதென்ன கீசு கீசு என்று பாசுரம் படிக்க ஆரம்பித்த நாளில் மனசில் ஒரே குறுகுறு!
விடுவிடுவென பொழிப்புரைபக்கங்களைப்புரட்டிப்படிக்க ஆரம்பித்தால் அவரவர் பாணியில் அர்த்தங்களைச்சொல்லி இருந்தாலும் அழகிய சிங்கர்சுவாமிகள்(ஸ்ரீரங்க ராஜகோபுரம் கட்டியவர்தான்) கூறிய விளக்கம் அப்படியே மனசைக்கட்டிப்போட்டுவிட்டது
ஆனைச்சாத்தான் என்றால் என்ன? பரத்வாஜ பட்சிகளாம்!
ராமனை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரச் சித்திரகூட யாத்திரைசெய்தபோது பரதனுடன் கூடவே வந்த் அயோத்தியாவாசிகளான ஆண்பெண்கள் அவ்வளவுபேரும் ஆனைச்சாத்தான்களாம். அதாவது பரத்வாஜரின் விருந்தோம்பலில் அவரிடத்தில் பூரண விசுவாசம் கொண்டவர்களாயிருந்து ராமனை சேவிக்கவேண்டும் என்ற பெரிய மகிழ்ச்சியான ஆரவாரத்தைச்செய்கிறார்களாம்.அதுபோல இப்போது யமுனைத்துறைவனை சேவிக்க கூட்டமாய் வருகிறார்களாம். அவர்கள் தேவ மொழியில்பேசுவதால் நமக்கு அது புரியாதாகையால் கீசுகீசென்று கேட்கிறதாம், அந்த சப்தம் உன்காதில் விழவில்லையா என்று ஆண்டாள் கேட்கிறாளாம்!
இறைசிந்தனையைத் தடுத்துவிட்ட பேய் புத்திகொண்ட பெண்ணே என்று திட்ட ஆரம்பித்து கடைசியில் தேஜஸ் கொண்டவளே என்கிறாள் தேசமுடையாய் என்பதற்குக்காரணம் கண்ணனின் நினைவிலேயே அவள் இருப்பதால் அவனது தேக தேஜஸ் நாயகப்பெண்பிள்ளையான அதாவது இவர்களின் எஜமானியான அவளுக்கும் வந்துவிடுகிறதாம் அப்படியானால் பேய்ப்பெண் என்று இறை அடியாரான அந்தப்பெண்னை சொல்லிவிட்டதற்காய் வருந்தி தேசமுடையாய் என முடிக்கிறாள் அவளும் நான் பேய்ப்பெண் தான் இல்லாவிடில் இப்படி தூங்கிக்கொண்டு கேசவனின் நாமம் பாடி வந்த உங்களை வாசலில் காக்க வைப்பேனா நானல்லவா பாகவத அபசாரம் செய்துவிட்டேன் என்கிறாள்! அவளது அழகான பேச்சைரசித்தபடி மற்றொரு பெண்னை எழுப்பச்செல்கிறார்களாம்! இந்தப்பாசுரத்தில் கூறப்படும் திவ்யதேசம் திரு ஆய்ப்பாடியாகும் இது பெரியாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டது.
ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார் பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே பெரியாழ்வார் திருமொழி 1-2 -2
இங்கு கூறப்படும் பாடுவார்களும் பல்பறைக்கொட்ட நின்று ஆடுவார்களும் என்னும் தொடர் ஏழாம் பாசுரத்தில்கூறப்படும் நாராயணன் மூர்த்தி கேசவனைப்பாடவும் என்பதை நினைவுபடுத்துகிறது.
சொந்தமாக கவிதை எழுதும் திறமை இல்லாவிடினும், இருக்கும் கவிதைகளை நன்றாக காப்பி அடிக்க தெரியும். :)
இதோ இங்கே ஒரு மீரா பஜனை பாடல் - ஹிந்தி மூலமும், "காற்றினிலே வரும் கீதம்" என்ற ரா.கணபதி எழுதிய புத்தகத்தில் இருந்து தமிழாக்கமும்.
(மீரா பஜன் -1)
பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா ||
மோஹனீ மூரத ஸாம்வரீ ஸூரத நைநா பனே பிஷால் ||
மோர முகுட மகராக்ருதி குண்டல, அருண திலக சோஹ பால் ||
அதர சுதா ரஸ முரளி, ராஜதி உர (பை)பம்ஜதீ மால் ||
சுத்ர கண்டிகா கடி தட ஷோபித நூபுர ஸபத ரஸால் ||
மீரா ப்ரபு ஸந்தன சுகதாயீ ப-க-த-வ-ச-ல கோ-பா-ல் ||
(தமிழாக்கம் - நன்றி ரா.கணபதி, கிரிதாரி)
அந்தமில் அழக, நந்தலால,
கண்ணில் வசிக்க வா, கண்ண, பால
மோகன மூர்த்தி
சியாமள சீர்த்தி
நயனம் விரி நேர்த்தி
மயிற்பீலி மங்கலம்
மகரமீன் குண்டலம் - நெற்றி
திலக முகமண்டலம்
ஆரமுதம் பொழியும் அதரம் - அதனில்
தீங்குழல் பொழியும் இன்சுரம்
பேரெழில் வைஜயந்தி உறை உரம்
உயிரை கவர் உதரம் - அதனில்
மோகன கிண்கிணி மதுரம்
இன்னிசைக்கும் நூபுரம்
மீரா இதய பூபாலன்
அன்பர்க்கு இனிய க்ருபாலன் - பக்த
கன்றுகள் கோபாலன்.
இந்தப் பாடலை பாரதத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷமாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பக்தி ரசம் நிறைந்த குரலில் இங்கு கேட்கலாம்.
(மற்றுமொரு சுட்டி.)
திருமார்கழிப் பிறப்பை ஒட்டி மடலில் சொன்னது போல், முடிந்த அளவுக்குத் தினம் ஒரு வெண்பாப் பூக் கொய்து, மாலையாக்கி ஆண்டாளின் அழகன் தோள் சாற்றும் அதிகப்படியான ஆசையில் எழுத உட்கார்ந்து விட்டேன். வெண்பா இலக்கணத்தைப் பெருமளவுக்குப் பின் தொடர முயல்கிறேன். தவறிருந்தால், ஒரே ஒரு குட்டு குட்டி, திருத்த உதவுங்கள். கவிதை மாதிரி இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி, நெய் உண்ணோம்; பால் உண்ணோம்; நாட்காலே நீராடி மை இட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்று ஓதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யும் ஆறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.
புல்லாங் குழலை ஊதும் எந்தன் பொல்லாத கண்ணனைக் கண்டீரா? இரவு பகலாய்த் தேடுகிறேன் இன்னமும் என்னிடம் சிக்கவில்லை!
பளிங்கு வனத்தின் மேல் பாய்ந்த ஒளி வெள்ளம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது ஆயர்பாடி.
இன்னும் உக்கிரம் கொள்ளாத சூரியனின் பார்வைகள் தீண்டும் பகுதிகளில் எல்லாம் வெம்மையில் பூத்துக் கொண்டிருந்தது வெயில். கொத்தாய்ச் சிரித்துக் கொண்டிருந்த பச்சை இலைகளைப் பிரித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது பகல் ஒளி. வெள்ளிக் காசுகள் தூவிய போர்வையாய் அசைந்து, அசைந்து ஓடிக் கொண்டிருந்தது யமுனை நதி.
ஆவினங்களை ஓட்டியபடி அருகின் வனம் புகுந்திருந்த நாயகர்களின் வீரக் கதைகளைப் பேசிக் கொண்டு யமுனையின் குளிர்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது கோகுலத்தின் கன்னிப் பெண்களின் குழாம்.
கவனம். இது கன்னியர்களின் அந்தரங்கங்கள் அலசப்படும் இடம். நமக்கு, இங்கே என்ன வேலை? வாருங்கள். நாம் ஊருக்குள் செல்வோம்.
அடடே, அங்கே ஒரே கூட்டமாய் இருக்கின்றதே? என்னவாய் இருக்கும்? வாருங்கள். சென்று பார்ப்போம்.
நானா, உங்களை அழைக்கிறேன்? நம்மையெல்லாம் அழைப்பது ஒரு நாதம். கள்ளினும் பெரும் போதையில் நம்மை ஆழ்த்தும் இந்த குழலோசையின் நாயகன், வேறு யாராய் இருக்க முடியும்? அந்த மாயவனே தான்.
தேன் சொரியும் மலரைச் சுற்றிலும் மது மயக்கத்தில் மனம் கிறங்கிய வண்டுகள் இருப்பது அதிசயமா என்ன? பச்சைப் பசிய மரங்கள் நிரம்பிய காடுகளில் மேகங்கள் தங்கி இளைப்பாறுவதும், களைப்பாறுவதும் இயல்பானதே அல்லவா? இந்த மதுசூதனின் மாயக் கரங்கள் மூடித் திறந்து விளையாடும் புல்லாங்குழலின் இனிய இசையில் மன அமைதியுறாத மானிடர் தாம் உண்டோ?
நாமும் அந்தக் குழுவில் இணைகிறோம்.
யாரென்ன , எவரென்ன , குலமென்ன, கோத்திரமென்ன, இனமென்ன, இவனென்ன என்றெல்லாம் பார்த்தா கதிர் ஒளி தருகின்றது? நதி நீர் தருகின்றது? அது போல், யாரெல்லாம் இங்கே உள்ளார்கள்?
வாழ்வின் கடைசிப் படிகளில் படுத்திருக்கும் கிழவர் முதல், முதல் படிக்கட்டில் முழந்தாள் பதித்திருக்கும் பச்சை மண் வரை இவனது குழல் நாதத்தில் மயங்கி இருக்கிறார்களே!
அல்லி மலர்கள் இதழ் கூம்பியிருந்தாலும், நிலவின் ஒளி அதனைத் தட்டித் தட்டி எழுப்புவதில்லையா? தாமரை வெட்கத்தால் தலை கவிழ்ந்திருந்தாலும், கதிரொளி அந்த சிவந்த முகத்தைக் கரங்களால் அள்ளி முத்தமிட இட செந்தாமரை முகம் இன்னும் சிவந்து பரவசம் கொள்ளுவதில்லையா?
இந்த மாயவனின் மனம் கவரும் குழலின் ஓசையில் நாமும் கலந்து நிற்கிறோம்.
ஆ..! இது என்ன எல்லோரும் கலைந்து ஓடுகிறார்களே!~ யாரத்கு, வருவது?
கையில் கழியோடு யசோதை வருகிறாள்.
"கண்ணா..! இது என்ன , எப்போது நீ இங்கே வந்தாய்? உன்னை சமையலறையில் அல்லவா கட்டிப் போட்டேன்! அடே, மாயப் பயலே? என்னையா ஏமாற்றி விட்டு வந்தாய்! இந்த வெயிலைப் பார்த்தாயா? நெல் மணிகளை வெளியே கொட்டி வைத்தால், நிமிடக் கணக்கிலே அரிசியாய்ப் பொறிந்து போகுமே! இந்த சூட்டில் நீ நிற்கலாமா? நாளை உன்னை மணக்கப் போகும் மகராசி வந்து உன்னை கருப்பாக வளர்த்து விட்டேன் என்று குறை கூறுவாளே! அதற்காகவா நீ திட்டம் போட்டு பகலெல்லாம் வெயிலின் சூட்டையேல்லாம் உன் மேனியோடு தாங்கிக் கொண்டு வருகிறாய்? வா. வீட்டுக்கு! உனக்குப் பிடித்த வெண்ணெய்ப் பலகாரங்கள் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் நமது தொழுவத்தில் பிறந்த கன்றுக்கும் தராமல் சீம்பாலில் இனிப்புகள் செய்து வைத்திருக்கிறேன். வா, மனைக்கு..! அடே பயல்களா! நீங்கள் விளையாட என் மாணிக்கம் தான் கிடைத்தானா? இரவெல்லாம் இந்தப் பெண்கள் அள்ளிக் கொண்டு போய் கொஞ்சித் தீர்க்கிறார்கள். அவர்களது முத்தங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு சிவந்த சிறுவனாக வருகிறான். பகலில் நீங்கள் வந்து கூட்டிக் கொண்டு போய் வெயிலில் விளையாடி அவனைக் கருநிறத்துக் கண்மணியாக மாற்றி அனுப்புகிறீர்கள். என் செல்வத்தின் உடல் தான் என்னாவது? இனிமேல் மனைப் பக்கம் வாருங்கள். உங்களையும் இவனுடன் சேர்த்து உரலோடு கட்டிப் போடுகிறேன். பிறகு எங்கும் நகரவியலாது. உங்கள் தாயார்கள் வந்து தயை கூறக் கேட்டாலும் அனுப்ப மாட்டேன். ஆமாம். கண்ணா! இனிமேல் வெளியே வந்து விளையாட மட்டேன் என்று உறுதி கூறு? எங்கே சொல்லு..! அது என்ன வாயில் அடைத்துக் கொண்டு இருக்கிறாய்? எங்கே காட்டு? ஆ.. காட்டு..! ஆ..!"
ஆஹா! இந்த அம்மையின் அன்பையும், ஆதுரமான பேச்சையும் வேறெங்கே காண முடியும்? நாமும் கண்ணனின் லீலையைப் பர்ப்போம்.
புல்லாங்குழலிற்கு உயிர் கொடுத்து உற்சாக உணர்வூட்டும் அந்த செவ்விதழ்களைத் திறந்து காட்டுகிறான். ஆஹா! ஆங்கே காண்பது தான் என்ன!
பிரபஞ்சத்தை அல்லவா காட்டுகிறான். அவன் இங்கே காட்டியதால், பிரபஞ்சத்திலேயே ஒன்றும் இல்லாமல் பஞ்சம் ஆனது போல் உள்ளதே! அவை தான் இங்கேயே உள்ளதே.!
ஏ.. மனமோகனா! அழகிய மணவாளா! மகா பிரபு! உன் கருணையின் வெள்ளத்தையும், மஹாமாயாவின் லீலைகளையும் உன் அன்னை யசோதையே தாங்கிக் கொள்ளவியலாமல் மயங்கி விழுகிறாளே! நாங்கள் என் செய்வோம்?
***
கவிநயா அக்கா, சென்ற பதிவில் கேட்ட 'அப்புறம் என்ன ஆச்சு?'விற்குப் பதில் தெரியாம, '.....ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கற' கே.ஆர்.எஸ். போன்ற அப்பாவிகளுக்கு(?) இந்தப் பதிவு சமர்ப்பணம். :)
அந்தக் குட்டிக் கிருஷ்ணனைப் பாருங்க... அவன் தான் எப்பேர்ப்பட்ட அழகு! கொழுக் மொழுக்னு! துறுதுறு கண்ணும், கூரான மூக்கும், பவழச் செவ்வாயும், கொழுகொழு கன்னங்களும்.... அடடா... அவனைப் பார்த்தாலே அவனை இறுகக் கட்டி அணைச்சு முத்து முத்தா கொடுத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குல்ல! அந்த கண்ணன் ஏற்கனவே இருக்கற அழகு பத்தாதுன்னு மேற்கொண்டு அழகு படுத்தி விட்டிருக்கா அவன் அம்மா.
சுருள் சுருளா, கருகருன்னு இருக்கிற தலை முடியில மயிலறகு. நெற்றில பொட்டு. கண்ணுல மை. கன்னத்துல திருஷ்டிப் பொட்டு வேற. இடுப்புல மஞ்சள் பட்டாடை. கால்ல கிண்கிணிச் சலங்கை. கைல அவனை விடப் பெரீசா ஒரு புல்லாங்குழல்!
அவன் சுறுசுறுப்பா ஓடிக்கிட்டும், மழலை மொழி பேசிக்கிட்டும், குறும்பு பண்ணிக்கிட்டும் இருக்கற அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம். அவன் பக்கத்துல இருக்கும்போது கால் கூட தானா அவனை தொடர்ந்துகிட்டே இருக்கும். கண்ணோ அவனைத் தவிர வேற எதயும் பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்கும். வாயும் தன் பங்குக்கு அவன் பேரைத் தவிர எதையும் சொல்லாது. இப்படி எல்லா புலன்களையும் ஒருங்கே கவர்ந்துக்கிற அப்படி ஒரு செல்லம் அவன்!
அவனைப் பெற்ற பேற்றை நினைச்சுக்கிட்டே, அந்த சுகத்தை அனுபவிக்கறதுக்காக, மூச்சை ஆழமா இழுத்து, ஒரு நொடி, ஒரே ஒரு நொடிதான் கண்ண மூடினா, அவன் அம்மா யசோதா. அடுத்த நொடி, அந்தப் பய காணாம போயிட்டான்! உடனே பதறிட்டா. எழுந்து ஓடி ஓடி. 'கண்ணா.... கண்ணா"ன்னு கூப்பிட்டு, தேடித் தேடி சலிச்சுட்டா. எங்கேதான் போனானோ இந்தக் குறும்புக் கண்ணன்?
அவனை நினைச்ச உடனேயே உதடு தானா புன்னகைக்குது! மனசு கோவத்தை நினைவுபடுத்திக்கிட்டு, "ஏய் உதடே, உனக்கென்ன சிரிப்பு வேண்டியிருக்கு?!" அப்படின்னு மெரட்டுது. "வரட்டும் அவன். என்ன செய்யறேன் பாரு இன்னிக்கு?" அப்படின்னு கறுவுது. மறுபடியும் தேடல் தொடருது.
அதோ.... அங்க... அந்த மரத்துக்கு கொஞ்சம் பின்னால மஞ்சள் துணி மாதிரி தெரியுதே... கிட்ட போய் பார்க்கலாம். பூனை மாதிரி சத்தம் செய்யாம போய் பாக்கிறா யசோதா. கண்ணன் இன்னும் ரெண்டு தோழர்களோட சேர்ந்து மண்ணு தின்னுக்கிட்டிருக்கான்!
வந்ததே கோவம் அந்தம்மாவுக்கு! பூனை மாதிரி போனவ புலி மாதிரி உறுமி, "வாடா இங்கே"ன்னு காதப் புடிச்சு திருகி, அழைச்சுக்கிட்டு வந்தா. "இம்புட்டு வெண்ணெயும் தயிரும் மோருமா சாப்பிடறியே. நான் குடுக்கிறது பத்தாதுன்னு, இருக்கிற வீட்ல எல்லாம் திருடி வேற சாப்பிடற. அதுவும் பத்தலையா ஒனக்கு? மண்ணு வேற வேணுமா? துப்பு... துப்பு!"
நீல நிறக் குழந்தையோட காது செக்கெச் செவேல்னு ஆயிருச்சு. "நானா மண்ணு தின்னேன்? மண்ணும் திங்கல, ஒண்ணும் திங்கலயே. மண்ணுன்னா என்னன்னு கூட எனக்குத் தெரியாதே...", அப்படிங்கிற மாதிரி ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கறான் குழந்தை.
"என்னடா ஒண்ணும் தெரியாத மாதிரி நிக்கிற? வாயை இப்ப தெறக்க போறியா இல்லையா?"
அவனோட சின்ன வாயை வலுக்கட்டாயமா திறக்கிறா! அப்புறம் என்ன ஆச்சுன்னுதான் உங்களுக்கே தெரியுமே!