Monday, March 25, 2013

கலையாத கனவொன்று...




கலையாத கனவொன்று தந்தாய் – நீயே
நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்!
மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்
மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்!

வனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து
வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்!
மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ
மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்!

சுனைபோலப் பெருகு மென்னன்பு – என்
வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு!
உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உனை
நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!

--கவிநயா

Thursday, March 14, 2013

கண்ணனைக் காணாதே...

மோக நிலவிதுவே - குளிர்
மோதிக் களித்திடும் இரவினிலே
சோகம் அறிந்திலையோ - கவி
சொன்ன நிலையும் இதுவன்றோ?
போகம் மறந்தினையோ - மது
பொங்கி வழிகின்ற வயதினிலே
தேகம் அழிகிறதே - கண்ணன்
தீண்டும் விரல்நுனி காணாதே!

உண்ணும் நினைப்பிலையே - உடை
உடுத்தும் எண்ணமும் வரவிலையே!
பண்ணை இசைத்திடும் பாங்கியரும்
பாவம் இவளென்று சொல்லினரே!
கன்னம் காயவிலையே - வானில்
காலை மாலை கண்டதிலையே
கண்ணன் உடனுறை காலமெலாம்
கண்கள் தூங்கிப் போனதிலையே!*

கூவி யுனையழைத்து இருள்
கூட்டிலே இருவர் தானமர்ந்து மலர்த்
தூவி மகிழ்ந்திட்டு உடல்
தூரிகை மேல்வரை எழிலுடன்
தாவி உனைக் கட்டி - மனம்
தாங்கொணா இன்பமே போதெலாம்
பாவி சுகித்திருப்பேன், அன்றேல்
பாலை நிலத்துப் பாலொளியாய்
ஆவி பிரிவதன்றோ - உடல்
ஆக்கினை பூமிக் கானதன்றோ!

***
*வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆரஅஞர் உற்றன கண். (1179)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP