Wednesday, May 15, 2013

"தெலுங்கு" இராமானுசர்!

இன்று (14-May-2013) = சித்திரைத் திருவாதிரை!


"ஆதிரையான்" எனப்படும் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரத்திலே...
"ஆம் முதல்வன்" என்று தோன்றிய = இராமானுசர்;

இவரை வைணவர்கள் கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லை;
ஆனால்... பழுத்த நாத்திகர்கள் கொண்டாடுவது??
அதுவே = "இவர் குணம் என்ன?" என்பதை ஓரளவு சொல்லி விடும்!

பாரதிதாசன், புரட்சிக் கவிஞர் ஆவதற்கு முன்பே, என் காதல் முருகன் மேல் பாட்டெழுதி இருக்காரு; (மயிலம் சுப்ரமணியர் துதியமுது)
ஆனா, பழுத்த திராவிடத் தலைவரான பின்னால்??
தான் நாத்திகரான பிறகும், போற்றிப் பாடிய ஆன்மீக அருளாளர்கள் = ரெண்டே ரெண்டு பேரு தான்
1) இராமானுசர்
2) வள்ளலார்

ஏன்?
= அதையும் பாரதிதாசனே சொல்லீடறாரு;

முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத் தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்ற தன்றோ?

சச்சரவுபட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவான் வேண்டும் என்றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
(பாரதிதாசன் கவிதைகள்)

*பல பக்திமான்களும், தங்கள் பக்தி, தங்கள் பாட்டு/ தங்கள் பதிகம் என்ற அளவில் நின்று விடுவார்கள்... 
= "தன்னளவில் இறையன்பு"

*ஆனால், சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களையும், அரவணைத்துக், கூடி இருந்து குளிர்ந்தது?
= "பொதுநலம் மிக்க இறையன்பு"


ஆயிரம் ஆண்டுகட்கும் முன்னரே, அக்ரஹாரங்கள் கட்டாவாகக் கோலோச்சிய காலத்திலேயே...
பல "மேலாளர்களின்" எதிர்ப்பையும் மீறி...

* ஒதுக்கப்பட்டோரை ஆலயத்துள் சேர்ப்பித்து, "திருக்குலத்தார்" என்று ஏற்றம் தந்தது
* ஆலயப் பணியில் உள்ள வண்ணான் முதலானோரை = ஈரங் கொல்லி உடையார் -ன்னு, ஊதியம் + மதிப்பு செய்வித்தது

* தமிழைக், கருவறைக்குள்ளேயே முழங்கச் செய்தது

* ஊர்வலங்களில், தமிழ் முன் செல்ல, பெருமாள் தமிழைப் பின்பற்றியே வர வேண்டும்...
வடமொழி வேதங்கள் பெருமாளுக்கும் பின்னே வந்தால் போதும் என்று வகுத்துக் குடுத்த கோயில் ஒழுகு!

* இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும், ஒரு அரசாங்கமே போராட வேண்டிய நிலையில் உள்ள "அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டத்தை".. அன்றே நடத்திக் காட்டியது;
(பூநூல்) "சார்த்தாத ஸ்ரீ வைணவர்கள்" என்றும் "கருப்பு அந்தணர்கள்" என்றும், தக்க பயிற்சியோடு, கோயில் அர்ச்சகர்களாய் நியமித்தது

கிட்டத்தட்ட, தந்தை பெரியார் போன்ற அதே "கூர்மையான" சொல்லால்.....
"அடியார்களைக் குலம் விசாரிப்பவன், பெற்ற தாயை யோனி விசாரித்தவன் ஆகின்றான்"
- ன்னு அதிரடியாப் பேசி, பலர் பகையைச் சம்பாதித்துக் கொண்டது; இருப்பினும் தளராமல் நின்றது...

இவை தான் பாரதிதாசனே, வியந்து பாடக் காரணம்!
இது தவிர,
* ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுதப் பண்ணியது
* ஸ்ரீ பாஷ்யம் எழுதியது
-ன்னு ஆன்மீகப் பணிகளையெல்லாம் நாம் இங்கு பட்டியல் இடப் போவதில்லை; சமூகப் பணிகள் மட்டுமே இங்கு சொல்லியது;

இந்தச் சமூகப் பணிகள், தமிழகம் மட்டுமல்ல! ஆந்திராவிலும் பரவியுள்ளது!

"இராமானுஜ கூடமுலு" (இராமானுச கூடம்)
- என்று ஒரு குறிப்பிட்ட தெலுங்கு வர்க்கத்தினர், ஊர் முழுதும் நடத்தும் இறை/மக்கள் பணி
- தங்களுக்குச் சாதி என்பதே கிடையாது என்றும் சொல்லுவார்கள் இந்த இயக்கத்துத் தெலுங்கு மக்கள்; திருவாய்மொழி/ திருப்பாவை -ன்னு இந்தத் தெலுங்கர்கள் பாடுவதே வித்தியாசமாய் இருக்கும்:)


அப்படியொரு "வித்தியாசமான" பாட்டு இன்னிக்கி...

கர்நாடக சங்கீதப் பிதாமகர், தியாகராஜருக்கும் காலத்தால் முன்னவர் என்று போற்றப்படும் "அன்னமாச்சாரியர்";
அந்த அன்னமய்யா, இராமானுசர் மேல் எழுதின ஒரு பாட்டு!

(இராமானுசர் மேல், அன்னமய்யா எல்லாம் பாட்டு எழுதி இருக்காங்களா? என்பதே சிலருக்கு வியப்பா இருக்கும்)



எடுப்பு: (பல்லவி)

உன்னதோ உன்னதுடு உடையவரு
என்ன நன்னந்துடே ஈ உடையவரு

உன்னதம் உன்னதமாம் உடையவரே
உன்னையே நம்பி வந்தோம் உடையவரே
(
உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

முடிப்பு: (சரணம்)
சர்வ லோகமுல சாஸ்திர ரகசியமுல
ஊர்வி போதம நீ உடையவரு
பூர்வபு வேதாந்த புண்ய சாஸ்திரமுலு
நிர்வகிஞ்சே நன்னித நூ உடையவரு

உலகம் யாவையும் ஊரும் - அறிந்து கொள்ள
மறைகளை மறைக்காது சொன்னவரே
சொன்ன வண்ணம் முன்னம் அந்த - ஓல மறையெல்லாம்
நல்ல வண்ணம் சீர் செய்த உடையவர் நீ்ரே!
(உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

வெக்க சம்பு ஸ்ரீ விஷ்ணு பக்தியே
ஒக்க ரூபமே உடையவரு
சக்க நைன சு ஞானமுன கிரவை
உக்கு மீரே நிதே உடையவரு

உன் தன்னோடு உறவென்னும் - திருமாலின் மெய்யன்பே
உருவமாய் வந்திட்ட உடையவரே
கண்ணன் கழலை நண்ணும் - மனமும் ஞானமும்
திகட்டாமல் ஊட்டிடும் உடையவர் நீரே!
(உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

கதினே மோட்ச சாகரமு தானை
வுடுதுன நிலிசே நீயு உடையவரு
இதிகோ ஸ்ரீ வேங்கடேஸ்வரு யீ நீடை
பொதலுசு நுன்னாடு பூவீனு உடையவரு

பிறவிப் பெருங்கடலை - நீந்துவார் நீந்திடப்
பரிசல் துடுப்பே உடையவரே
இதுவே வேங்கட அன்னமய்யன் பாடியநல்
காரேய்க் கருணை உடையவர் நீரே
(உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------


கவிஞர்: தாளபாக்கம் அன்னமய்யா (1408-1503)
ராகம்: சாமந்தம்
(கிட்டத்தட்ட அதே மெட்டில், தமிழாக்கியும் குடுத்துள்ளேன்; பிழை இருப்பின் மன்னித்துச் சுட்டிக் காட்டுங்கள்)

Thursday, April 18, 2013

நாவே!ராமரஸம் பருகு!

சதாசிவ பிரம்மேந்திரரின்  "பிபரே  ராமரஸம் "என்ற பாட்டை 
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்கும்போதெல்லாம் 
நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதுண்டு .காரணம் ?
1)இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்பதாலா?
2)அந்தப்பாடலின் வரிகளா ?
3)பாடியவரின்  இழையும் குரலா?
4) எல்லாவற்றையும் விட முக்கியமானது  அது ஸ்ரீராமநாம மகிமையை 
    சொல்வதனாலோ ?

இன்றுவரை  காரணம் புரிபடவில்லை !

பாட்டைத்தழுவி அதே ராகத்தில் பொருந்தும்வகையில் 
தமிழில் எழுதிவிட்டேன் .கண்ணன்பாட்டு  அன்பர்களுக்கு 

 இனிய ராமநவமி  வாழ்த்துக்கள்!

1)சுப்புசார்  ராமரஸத்தை  ரசித்துருசித்து  உருகி 
    அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள :
http://www.youtube.com/watch?v=KuWu4VX_z8I&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1

2)கலாவின்  குரலில்  ராமரஸ  இனிமையைச்
    சுவைக்க   கீழே:

நாவே!ராமரஸம்  பருகு!



video


பிபரே ராமரஸம் ரஸனே பிபரே ராமரஸம்

அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 

தூரிக்ருத பாதக ஸமஸர்க்கம் 
பூரித நானாவித பல வர்க்கம் 

புன்மையைப் போக்கும் புனித நன்னாமம்.
நன்மைகளனைத்தும் நல்கும் சுநாதம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 


ஜனனமரணபய சோக விதூரம் 
சகல சாஸ்த்ர நிகமாகம சாரம் 

பிறவிமரணபயம்  மாய்க்கும் மாமந்த்ரம்.
மறைகளிலே நிறை ஞானத்தின் சாரம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 
 

பரிபாலித சரசிஜ கர்ப்பாண்டம் 
பரம பவித்ர க்ருத பாஷாண்டம்

நான்முகன் படைப்பினைக் காத்திடும் கவசம். 
நாத்திகநோய் நீக்கும் ஔடதக்கலசம் . 
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 
 

சுத்த பரமஹம்ச ஆஸ்ரம கீதம் 
சுக சௌனக  கெளசிக முக பீதம்

யோகியர் திளைத்திடும் திவ்விய கானம் .
ஞானியர் பருகிடும் தேனிசைப் பானம் . 
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 



THANKS: http://sujamusic.wordpress.com/2012/06/07/pibare-ramarasam/

 FROM GOOGLE SEARCH

Monday, March 25, 2013

கலையாத கனவொன்று...



கலையாத கனவொன்று தந்தாய் – நீயே
நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்!
மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்
மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்!

வனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து
வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்!
மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ
மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்!

சுனைபோலப் பெருகு மென்னன்பு – என்
வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு!
உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உனை
நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!

--கவிநயா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP