Wednesday, August 24, 2011

கிரிதாரிக்கு திருநீர்


மீரா என்று ஒரு முறை கூறிப்பார்க்கின் இனம் விளங்காத ஒரு வலி நம்மை பற்றிக் கொண்டு விடுகிறது. நாம் இப்போது அறியப் போகும் அவளின் பாடல், அவளுடைய இளம் பிராயத்தினது அன்று, தன்னுடைய முதிர்ந்த அகவையில் இயற்றியது. தன்னை மறுதளித்து கொண்டே வருகிறானே இந்த மாய கிரிதாரி; ஒருவேளை அவனுக்கு அவளின் பிரேமை என்பதும் சலித்தும் போனதோ? அன்று பெண்கள் என்றால் ஒவ்வாத நோயும் கொண்டானோ ? இல்லை துறவியாகி விட்டானோ ? என்று பலவாறு எண்ண அலைகள் தோன்றி மறைந்தன அந்த அடிமைக்கு!

அவன் ஒரு வேளை துறவியாக மாறிவிட்டனானால்; இனி ஒரு முறை எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதற்கில்லை, தன்னிடம் வாராததர்க்கும் காரணம் கேட்டு அறிவதற்கில்லை; பிரேம பக்தியில் தான் அவிழ்க்க இயலாத புதிர்களின் விடைகளை அறிவதர்க்குமில்லை. ஹே ! கிரிதாரி நீ துறவியாகவே ஆகியிருப்பினும் எனக்கு ஒரு வழி சொல்லியே தீர வேண்டும்..

அந்தோ! மாயவ .. நீ துறவியாக வந்து சேர்ந்தால், உனக்கு என்னால் என்னதான் தர இயலும். வனமாலை தான் தொடுத்து சூட்ட முடியுமா ? பட்டு பீதாம்பரங்களை உடுத்த தர முடியுமா ? சுகந்தம் வீசும் திரவியங்களை அள்ளி உன் மார்பில் பூச முடியுமா ? உன் கண்களை தீரா மோகத்துடன் பார்க்க முடியுமா ? கட்டி அணைக்க முடியுமா ?
இல்லை மூச்சு முட்ட முத்தம்தான் இட முடியுமா ? எதற்கும் இம்மி அளவும் சாத்தியம் இல்லை..

அந்த துறவிக்கு அவளால் தர இயன்ற ஏதேனும் ஒன்று உண்டா? உண்டென்றால் அது என்ன? துறவிக்கு உகந்த வஸ்து ..மீராவால் தர இயன்ற ஒன்று.. சாம்பல்!

ஆம், துறவியாக வரும் அவனுக்கு இவள் தர முடிவு செய்தது, துறவிகள் அங்கமெல்லாம் பூசிக்கொள்ளும் சாம்பல்தான்.. அதென்ன அவ்வளவு சாதாரணமான ஒரு வஸ்துவை தருகிராளே, என்று யாரும் எண்ணக் கூடாது என்றேதான், அதன் செய்முறையையும் தன் பாடலில் இயற்றி உள்ளாள். துறவியும் விரும்பும் சாம்பலாகவே மாறி அவன் அங்கம் தழுவி நிற்கவும் தயாரானாள்.

ஹே பிரபு.. நீ சந்தனமென்றால் நான் தண்ணீர்..
ஹே பிரபு.. நீ சூரியனென்றால் நான் சந்திரன்
ஹே பிரபு.. நீ முத்துக்கள் என்றால் நான் நூல்..
ஹே பிரபு.. நீ துறவியானால் நான் சாம்பல்..
ஹே பிரபு..நீ கிரிதாரி நான் உந்தன் தாசி..

பாடல்..


மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..
பாவ் பரூன் மே.. சேரி தேரி..

செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..
பாதம் பணிந்தேன் பேதை உந்தன்..

பிரேம பக்தி கி பெந்தோ ஹி ந்யாரோ..
ஹம்கோ கேல் பதா ஜா..

பிரேம பக்தியின் பாதையில் புதிர்கள் ..
பகர்ந்திடு பதில் ஒன்று எனக்கு ..

அகர் சந்தன் கி சிதா பனாஊன்
அப்னே ஹாட் ஜலா ஜா

சந்தனத்து விறகினில் சிதையொன்று செய்தால்
உந்தனது கையினால் எரியூட்டு..

ஜல் பல் பை பஸ்முஹீ டெரி..
அப்னே அங்கு லகா ஜா
மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..

என் சவமது எரிந்து சாம்பலாய் குறைந்தால்
உனது மேனியில் பூசிக்கொள் - ஸ்வாமி
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..

மீரா கஹே பிரபு கிரிதர நாகர
ஜோத் சே ஜோத் மிலா ஜா - ஜோகி ..

மீரா கோரும் பிரபு கிரிதர நாகர
உந்தன் ஜோதியில் கலந்திடு என்னை ..
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..

Sunday, August 21, 2011

அதோ வருகிறான் குட்டிக் கண்ணன்


    
 
முட்டித் தேய தவழ்ந்து நகர்ந்து
சட்டிவெண்ணைதனை முகர்ந்து,

எட்டி உதைத்துருட்டித் தள்ளி,

கொட்டிப்போன கட்டிவெண்ணை

குட்டிக்கைகள் வழிய அள்ளி,

மொட்டுவாயில் அடைத்து,சப்புக்

கொட்டி ரசித்து,ருசித்து,-வயிறு

முட்டத் தின்னும் குட்டி அரியின்

சுட்டித்தனம் கண்ட அன்னை,

''பட்டு விடும கண்?''என்றஞ்சி,

பட்டுக்கன்னம் தொட்டு வழித்து,

முட்டிமடக்கி த்ருஷ்டி கழித்து,

கட்டக்கரு மை பொட்டுஒன்று
முகில்வண்ண முகத்திலிட்டு,

சிறுமாலை மடியில் போட்டு,

பாடுகிறாள் திருத்தாலாட்டு!
தாயவள்கை தள்ளி உருண்டு

தத்தக்கா புத்தக்கா நடை நடந்து,

விழுந்து,மீண்ட தாய்மடியில்

படுக்கிறான் அரிக்கொழுந்து!

பாலூட்டும் தாய் கையிலிருந்து

பாலாடை சங்கு பறித்து,

கரத்தில் சங்கு ஏந்தும் அரியாய்

அருள்கிறான் திருக் காட்சி.!

தட்டிக்கொட்டிய பாலில் விழுந்து

பட்டாடை நனையப் படுத்து

பாற்கடலில்  பள்ளி கொண்டு

அருள்கிறான் திருக் காட்சி!.

கண்ணன் பிறந்த நாள்: பால் வடியும் முகம்!

கண்ணன் பாட்டு மக்களுக்கு....இனிய கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (Aug-21, 2011)

கோகுலாஷ்டமி - கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

இன்னிக்கி எனக்கு மிகவும் பிடிச்ச
பால் வடியும் முகம்...நினைந்து நினைந்து...என் உள்ளம்
பரவசம் மிகவாகுதே - கண்ணா!


பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)
அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf!
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))

ஒத்தை ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு......இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!

கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை வேறொரு ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!

Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு போடறது தப்பில்லை!
ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல? பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியார் காவடிச் சிந்தைக் கேளுங்க! சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)

சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க!
பால் வடியும் முகம் - கண்ணா, என்பது ஊத்துக்காடு வேங்கட கவியின் கீர்த்தனை! நடனத்துக்குன்னே பாடப்பட்ட அழகான கண்ணன் பாடல்! இதை எப்படி முருகதாஸ் Handle பண்றாரு?

* முதலில் பச்சை மாமலை போல் மேனி-ன்னு, ஆழ்வாரை Hum பண்ணி ஆரம்பிக்கறாரு!
* அடுத்து, ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு!
* அடுத்து, பாஆஆஆஆஆல் வடியும் முகம்...நினைந்து நினைந்து உள்ளம்.....பரவசம் மிகவாகுதே....கண்ணாஆஆஆஆ!

கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில், மாயோன் பாட்டு - பால் வடியும் முகம்! Bhajan Version, here

பால் வடியும் முகம்...



பால் வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிக வாகுதே - கண்ணா!
(பால் வடியும்)

நீலக் கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடி கொண்ட
அன்று முதல் இன்றும்
எந்தப் பொருள் கண்டும்
சிந்தனை செலா தொழிய
(பால் வடியும்)
நீர் வடியும் முகம்...

வான முகட்டில் சற்றே
மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோனுதே!

தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து காணுதே!

கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் - உன்
கானக் குழலோசை மயக்குதே!

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகு - இறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை, குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு - நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே
பதித்த பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நனவினொடு
பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக பரங்கருணை....
(பால் வடியும்)

வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: நாட்டக் குறிஞ்சி
தாளம்: ஆதி
குரல்: பித்துக்குளி முருகதாஸ்

இசைக் கருவிகளில்:
* வயலின் - குன்னக்குடி
* நாதசுரம்
* வீணை

Monday, August 15, 2011

ரகுபதி ராகவ ராஜாராம் !


 


ரகுபதி ராகவ ராஜாராம் !
பதீத பாவன சீதாராம் !

சீதாராம் ஜெய சீதாராம் !
பஜ து ப்யாரே சீதாராம் !

ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !

ரகுபதி ராகவ ராஜா ராம் !
பதீத பாவன சீதாராம் !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

ஜெய ஜெய ராம் !
கோவிந்த ஹரி ஹரி !
ஜெய ஜெய ராம் !
முகுந்த ஹரி ஹரி !

கோவிந்த ஹரி ஹரி !
முகுந்த ஹரி ஹரி !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

பாடலை எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் கீழே கேட்கலாம்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Friday, August 05, 2011

'கிரிதாரிக்குத் தொண்டு' என்னும் இனிய கரும்பு!



ஆழமான கருத்துகள் கொண்டு இனிமையான எளிதான பாடல் இது.

பல்லவி
க2ள்ளி க2வொ க2ள்ளி க2வொ--நிச்சு
கைங்கர்யம் மெனஸ்தான் கொப்பு3 க2ள்ளி க2வொ [க2]

எடுத்து உண்ணுங்கள் எடுத்து உண்ணுங்கள் - தினம்
தொண்டு என்னும் கரும்பு எடுத்து உண்ணுங்கள் (எ)

அநுபல்லவி
கரெ கர்முன் த4மய்
ஹரிக் பாய்ம்பொடி3 பொ3வொ துமி [க2]

செய்த வினைகள் ஓடும்
ஹரியை வணங்கி அழையுங்கள் - நீங்கள் (எ)

சரணு
தா3ஸ் ஹோனாஜியெத் மோஸ் அவயி ஹரி
தா3ஸ§நுக் தா3ஸ்ஹொயெத் ஹரி க்ருபகரயி
தொ3ங்க3ர் ராணும் ஹிங்க3ன் வேஸ் நீ:
தொ3ங்க3ர் அங்க்3ளிதெ4ரெ ரெங்கா3க் ஸெங்கு3 ஸவொ யேட்[க2]

தொண்டன் ஆகாவிட்டால் மோசம் வருமே - ஹரி
தொண்டருக்கு தொண்டன் ஆனால் ஹரி கருணை செய்வானே
காடு மலை ஏறத் தேவையில்லையே - மலையை
விரலால் தொட்ட ரெங்கனைத் துணை கொள்ளுங்கள் இங்கே (எ)

மத்திம் உஜி மத்திம் ஹொடி3 மத்திமூஸ்ஜாய் ஸெரிர்
ப4க்தி கிஸொதி கரொ
வடபத்ரஸாயி ஹொய்கிநு மொகொ
நடனக்ருஷ்ண தா3ஸ§ந் ஜொவளும் ஜெய் [க2]

மண்ணில் பிறந்து மண்ணில் வளர்ந்து மண்ணிலே போகும் உடல்
பக்தி எப்படியாவது செய்யுங்கள்
வடபத்ரசாயி ஆகி என்னை
நடனகிருஷ்ண தாசர்கள் உடன் கொண்டு சென்று (எ)

இந்தப் பாடலை டி.எம். சந்திரசேகர் குரலில் இங்கே கேட்கலாம்.

Thursday, August 04, 2011

எங்கெங்கும் என் கண்ணன்



கண்ணா கண்ணா என்றலைந்தேன்
கண்ணீராலே தினந் தொழுதேன்
கண்ணன் எங்கே என்றறியேன்
கண்ணால் காணும் வகையறியேன்

ஒரு நாள் கண்ணன் குழல் கேட்டேன்
குழல் வழியே அவன் குரல் கேட்டேன்
எங்கும் நானே இருக்கின்றேன்
ஏனோ கண்ணீர் எனச்சொன்னான்

காற்றாகி குழல் கலைக்கின்றான்
மழையாகி மனம் நனைக்கின்றான்
சேற்றிலும் அவனே இருக்கின்றான்
செந்தாம ரையாய் சிரிக்கின்றான்!

நேற்றாய் இன்றாய் நாளானான்
நாளும் பொழுதும் அவனானான்
கேட்கும் ஒலியில் இசையானான்
பார்க்கும் அனைத்தும் அவனானான்!

எங்கும் அவனாய் இருந்தாலும்
ஏக்கம் ஏனோ தீரவில்லை -

தொட்டுப் பிடித்து விளையாட
கட்டி யணைத்துக் கதை பேச
கணமும் என்னைப் பிரியாமல்
கண்ணுக்குள்ளே கண் பார்க்க...

எனக்கே எனக்காய் என்கண்ணன்
என்றன் முன்னே வருவானோ?
கனிவாய்க் கண்ணீர் துடைப்பானோ?
தணியா இன்பம் தருவானோ?


--கவிநயா

Monday, August 01, 2011

krs100: தோழி கோதை பிறந்தநாள்!

இன்று....

என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! :)

உன்னோட கடைசிப் பாட்டு ரொம்ப தொல்லை குடுக்குதுடீ! வரவர தாங்க முடியல! நானும் உன்னைப் போலவே ஆயிருவேனோ-ன்னு பயமா இருக்கு! :(
இது கண்ணன் பாட்டிலே....KRS என்னும் சிறுவனின் 100வது இடுகையும் ஆகும்!
வாழ்விலே பல தருணங்கள், இவளை ஒட்டித் தான் எனக்கு அமைஞ்சிருக்கு!

* என் பிறந்த நாள் ஆகட்டும், வாழைப் பந்தல் கிராமத்துப் பள்ளிச் சேர்க்கை ஆகட்டும்,
* சென்னை திராவிடர் கழக வாசம் ஆகட்டும், TVS நிறுவன வேலை ஆகட்டும்,
* அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகட்டும், பந்தல் பதிவுகள் ஆகட்டும்....
* இனியது கேட்கின் ஆகட்டும்....எட்டாம் வகுப்பில் இவளைப் போலவே பெண் வேடமிட்டு, பள்ளியில் ஆடிய நடனப் புகைப்படம் ஆகட்டும்

...........ஒவ்வொன்றிலும் கோதையின் சாயல் வீசாம இருக்கவே இருக்காதோ? :)

இவள் பிறந்த நாளை ஒட்டி, இவளின் மகுடமான கனவுப் பாட்டை, நனவுப் பாட்டாக....இதோ...கண்ணன் பாட்டிலே!


வாரணமாயிரம் = பல திரைப்படங்களில், பல்வேறு இசையமைப்பாளர்கள் கை வண்ணத்தில் வந்திருக்கு!
ஆனால் அத்தனைக்கும் மகுடமாக, இளையராஜாவின் இசையில்.....கேளடி கண்மணி படத்தில்.....ஜானகி பாடும் ஏக்கமான மெல்லிசை!

சிங்கார வேலனே தேவா போல்.....ஜானகிக்கு அமைந்து விட்ட மிகப் பெரும் நல்லூழ் (அதிருஷ்டம்) என்று தான் சொல்லணும்!
ஏன்-ன்னா வேற யாரும் இதைச் சினிமாவில் முழுக்கப் பாடலை! ஏக்கம் இழையோடும் குரலில் கேட்டுக்கிட்டே பதிவை வாசியுங்கள்!


ஹே ராம் படத்திலும், சிறு சிறு துணுக்குகளாக.....கோயில் அரையர்கள் ஓதும் நடையில் இந்த ஆண்டாள் பாட்டு! இதுவும் இளையராஜே இசையே! விபா சர்மா பாட, அரையர்கள் ஓதுவது!


நாட்டியப் பேரொளி பத்மினி நடனமாடுவது! - செந்தாமரை என்னும் படத்தில்!MSV இசையிலே, பி. லீலா பாடுகிறார்கள்!


** சுசீலாம்மாவும் இந்தப் பாட்டைப் பாடி இருக்காங்க! ஆனால் முதல் இரு வரிகள் மட்டுமே! அப்பறம் Track மாறீடும்! திருமால் பெருமை படத்தில்! இதோ!

** SPB, அதே கேளடி கண்மணியில் பாடுவது!

** வியப்பு என்ன-ன்னா மரபிசை-கர்நாடக இசையில், எவருமே இதை இதுவரை பாடாதது தான்! பிரபல கலைஞர்கள், இதைப் பாடிக் குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும்!

ஆண்டாள் கல்யாணத்துக்காக, ஷைலஜா அக்கா
பிரத்யேகமாக போட்டு அனுப்பிய, வண்ணக் கோலம் (தண்-மண்டலம்).

இவ்வளவு நாள், சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!

* பெரிய திருவடியான கருடன், எங்கள் மாப்பிள்ளையை, வாயு வேகத்தில் பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2042 (கர வருடம்), ஆடித் திங்கள் (Aug-02-2011), பூர நட்சத்திரம் கூடிய நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,

* மதுரை-வில்லிபுத்தூர், பட்டர் பிரானின் செல்ல மகள் = திருநிறை செல்வி. கோதைக்கும்
* திருநாட்டுத் தலைவன், அமலன் ஆதிப் பிரான் = திருநிறை செல்வன். அரங்கனுக்கும்
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* நீங்கள் எல்லாரும்... சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,

* ஆண்டாள்-அரங்கன் இன்னுயிர் இணைகளை,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறு,
* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

- இப்படிக்கு,
மாதவிப் பந்தல்: கோதையின் ஆருயிர்-நட்புச் சமூகம்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட....
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத...
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்ட...
நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்-தன்னை
காப்பு நாண் கட்ட...
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுத...
(கெட்டி மேளம், கெட்டி மேளம்.....)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்ற...
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மா-களிறு அன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்ய...
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க...
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்ட...
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு, ஆனைமேல்
மஞ்சனம் ஆட்ட...
(ஆயனுக்காகத் தான் "கொண்ட மணாவினை")
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!



வாரணமாயிரம் பாசுரத்தில், "கனாக் கண்டேன்" என்னும் சொற்களை எழுத எனக்கு மனசு வரலை!

அவள் வாழ்க்கை வெறும் கனவு-ன்னு நினைச்சிப் பார்க்கக் கூட முடியலை! அதான் "கனாக் கண்டேன்" என்ற சொற்களை எழுதாமல்.....
அப்படியே நிகழ்வாகவே எழுதி விட்டேன்! பாசுரத்தில் கைவைத்து விட்டேன்-ன்னு தவறாக எண்ண வேண்டாம்! அன்பர்கள் மன்னிக்க!

பாம்பணையில், உன் பிஞ்சுக் கால் விரல்கள் அழுத்தி,
பரபர என்று மேல் ஏறி, மால் ஏறி,
எங்கள் செல்வ மகள், தென்னரங்கச் செல்வனைச் சேர்ந்தாள்! சேர்ந்தாள்!



வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும்
தோரணம் நாட்ட...


மத்தளம் கொட்ட, நாதசுரம் நின்றூத
முத்துடை தாமம், மாதவிப் பந்தல்கீழ்
மைத்துனன் முருகன், திருத்தாலி கட்டியெனைக்
கைத்தலம் பற்ற...


இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன், எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி, முன்றில் அம்மியின் மேல்
பொன்மெட்டி பூட்ட...

அவனுக்கே என்னை விதிக்கிற்றியே! - நாங்கடவா வண்ணமே நல்கு!!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP