Sunday, April 29, 2012

செல்லமே,என் உள்ளத்தில் உறங்கிவிடு!

 'சர்வம் நீயே' வலையில் சென்ற ஆண்டு பதிவிட்ட கண்ணன் பாட்டு  

இங்கு கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:




செல்லமே,என் உள்ளத்தில் உறங்கிவிடு!


புல்லை துளைத்தன்று குழல்

மெல்லிசையால் மயக்கியவா!

செல்லாக் காசான எந்தன்

உள்ளத்திலே துளையிட்டு,

மெல்ல மெல்ல உள்புகுந்து,

சொல்லெடுத்துத் தந்துவிட்டு,

சொல்லாமல் கொள்ளாமல்

செல்லத்திட்டமிட்டாயா?

அன்பென்னுங் கல்லிட்டு

அடைத்துவிட்டேன் துளையை!

பொல்லாத போக்கிரியே !

செல்ல வழி ஏதுமில்லை!

தொல்லை செய்யாமல்,ஒரு

நல்லபிள்ளைபோல,எந்தன்

செல்லப்பிள்ளை போல,எந்தன்

உள்ளத்திலே உறங்கிவிடு!

Sunday, April 15, 2012

முத்தம் ஒன்று தந்தால் என்ன?



சுப்பு தாத்தா கேட்டவுடனேயே கானடா ராகத்தில்  பாடித் தந்து விட்டார்! மிக்க நன்றி தாத்தா!


முத்தம் ஒன்று தந்தால் என்ன, ஆகாதோ? - என்
சித்தம் எல்லாம் நீயேதானே தெரியாதோ?
பித்துக் கொண்டேன் உன்மேல் என்று அறியாயோ? - என்
பக்திப் பூவைச் சூடிக் கொண்டால் ஆகாதோ?

கண்ணால் உன்னைப் பார்த்துப் பார்த்து
காதால் புகழைக் கேட்டுக் கேட்டு
நெஞ்சச் சிறையில் உன்னை வைத்தேன் அறியாயோ? - உனையே
தஞ்சம் என்று கொண்ட என்னை மறந்தாயோ?

உன்றன் பட்டுப் பாதம் கொஞ்சம்
என்னைத் தொட்டால் துயரம் தீரும்
பற்றை விட்டேன் உன்னைப் பற்ற அறியாயோ?
சற்றே என்றன் அருகில் வந்தால் ஆகாதோ?

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.radhagopaljiutempel.com/srikrishnasriradhe.htm

Friday, April 13, 2012

நகுமோமு கநலேனி - 3

டிஸ்கி: இது மற்றும் ஒரு பழைய ரெக்கார்டிங்க். யாருக்கேனும் பின்னாளில் பயன்படலாம்.

யூட்யூப்-ல் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோ என்றால் வேறு சில வரைமுறைகள் உள்ளன போல. ஆதலால் இரண்டு வீடியோக்களாக பதிய வேண்டியதாயிற்று.






"முந்தைய இரண்டு பதிவுகளும் இந்தப் பதிவும் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ தியாகராஜரின் உயிராகத் திகழ்ந்த சீதாராமருக்கு அர்ப்பணம்." என்று எழுத ஆசை...ஆனால் ராம நவமி முடிந்து ரொம்ப்ப்ப்ப நாளாயிற்றே...அந்த காரணத்தாலும், பாடல் கிரிதாரியை நினைவுபடுத்துவதாலும், இந்தப் பதிவுகள் அத்தனையும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

காலையில் இது போன்ற இசையை லேப்-டாப்பில் போட்டுவிட்டு அலுவலக மெயில்கள் பார்ப்பது, பதில் எழுதுவது போன்ற வேலையில் ஈடுபடுவது வழக்கம்...ஆனால் இந்த நாதஸ்வர இசை செய்யும் வேலையை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டது. :-) ஏறக்குறைய இருபது நிமிடங்கள் எல்லாவற்றையும் மறந்து விடலாம்...
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.  :-)

Monday, April 09, 2012

நகுமோமு கநலேனி - 2


ராகம்: ஆபேரி
நகுமோமு கநலேநி நாஜாலி தெலிஸி
நன்னுப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர நீ

நகராஜ தரநீது பரிவாருலெல்ல
ஒகிபோதன ஜேஸேவார லுகாரே அடுலுண்டுதுரே நீ

ககராஜூ நீயானதி விநிவேக சனலேடோ
ககநாநி கிலகு பஹூ தூரம் பனி நாடோ

ஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது
வகஜூபகு தாளனு நந்நேலுகோரா த்யாகராஜனுத நீ (நகு)

[பொருள்]
ஸ்ரீ ரகுவீர !  உனது புன்னகை தவழும் முகத்தைப் பார்க்க இயலாத என் மனத்துயரைத் தீர்க்கலாகாதா? கிரிதாரியே ! உன் சேவகர்கள் என்னைப் பற்றி அவதூறு சொல்ல மாட்டார்களே ! வெகு தூரம் வர வேண்டும் என்று சொல்லி கருடன் உனது கட்டளைக்கு இணங்கவில்லையா? பரமாத்ம ! அகிலாண்டவா ! எவரிடம் முறையிடுவேன் ! தாமதம் செய்யாமல் இந்த அடிமையைக் காத்தருள்வாய் !

Sunday, April 08, 2012

நகுமோமு கநலேனி - 1



டிஸ்கி: இது ஒரு மிகப் பழைய ரெக்கார்டிங்க். பத்து நிமிடங்கள் முழுமையாக ஒதுக்கிவிட்டு பொறுமையாக கேட்க வேண்டிய ஒன்று. அவசர கதியில் கேட்டோம் என்றால் பிடிக்காமல் போகலாம். பதிவிட்டவர் மேல் கோபம் வரலாம். :-)


ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி அவர்கள் அருளிய "நகுமோமு கநலேனி" என்கிற கீர்த்தனையை பல்வேறு இசைக் கலைஞர்களும் பாடியுள்ளனர். வெகு நாட்களுக்கு முன்னர், முசிறி சுப்ரமணியம் அவர்கள் பாடிய பழைய ரெக்கார்டிங்க் ஒன்று கிடைத்தது. இரவின் அமைதியில் கேட்டால் மனத்தூய்மை ஏற்படுத்தும் ஒரு மிக அற்புதமான ஆலாபனை...இதனைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இப்பொழுது தான் அமைந்தது. எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் இது ஒரு பொக்கிஷம் என்று தோன்றியது. பின்னாளில் எவருக்கேனும் இது பயன்பெறலாம்...
~
கிரிதாரியின்,
ராதா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP