Tuesday, July 19, 2016

ப்ரியே...சாரு ஸீலே...

ப்ரியே...சாரு ஸீலே...

ப்ரியே...ப்ரியே.... மனதில் அமரும் சின்னக் குருவியே... கிளை நழுவும் நிழலே... இரவில் நகரும் மெளனமே....

முகம் தூக்கி நீ கொள்ளும் சினமென்ன..? விரல்களைக் கோர்த்துக் கொண்டு திரும்பி அமர்ந்திருக்கும் கோலமென்ன? புறங்கழுத்தில் அலையாடும் சிறுமென்மயிர்களைக் காட்டி நீ புறங்காட்டும் பொழுதென்ன? ப்ரியே...ப்ரியே...

குழலென எழும் என் தவிப்பை நீ அறியமாட்டாயா? என் விரல்கள் தடவும் நீள்குழலை நீ விரவிப் பரந்திருக்கும் நதிக்கரையில் ஊறும் சிற்றெறும்பு என என் மேல் கனிய மாட்டாயா..? குளத்தில் விரிந்திருக்கும் கமலம் மேல் சுற்றி வரும் வண்டென உன் நினைவு மேல் வட்டமிடும் என் உளம் நீ அறியாததா?

ப்ரியே...ப்ரியே... மோதி உடையும் செம்மலர் மணமென நீ வருகையில் என் பீலி திரும்பும் திசையே... மதுவே... மலரிடைத் துகளே... மழையென எழும் கருணையே... பட்டென தழுவும் முகிலே...முகில் கொழுத்த குளிரே...

எழிலே... தழலே... நறுந்தளிர் முகையே... கறந்த வெம்பால் நுரையே... நுரைகெழு சுவையே... பனியே... பனிநனை புடவியே... ப்ரியே...

படர்க்கொடி நுனியாய்த் தத்தளிக்கும் என்னை அறியாயா... கருமையே கனிந்த வெம்மையே... என் விழிக்கெனவெழும் விழிக்கெனவழும் விழிக்கனவெழும் விழிக்கனவழும் ராக்காலங்களில் உலா வரும் புகைத்திரளே... ப்ரியே...


  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP