Saturday, July 30, 2011

வீரராகவர் விரதம் - 2


மிக வேகமாக ஓட்டி வந்த தேரை தாருகன் சரியாக மகாராணி சத்தியபாமாவின் மாளிகைக்கு எதிரில் லாவகமாக நிறுத்தினார். சற்று தொலைவில் இருக்கும்போதே தேர்ப் புரவிகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு துவாரகாதீசன் வந்துவிட்டார் என்பதை அறிந்த ருக்மிணி பிராட்டியும் பாமா தேவியும் வாசலை நோக்கி விரைந்தனர். திடீரென அதே நேரத்தில், துவாரகா நகரத்தையே உலுக்கிவிடும் அளவிற்கு  "கிருஷ்ணாஆஆஆஆஆ...கிருஷ்ணாவோஓஓஓஓஓ..." என்ற பேரலறல் கேட்டது. அவ்வளவு தான். அந்த நீலமேக கருணைக் கடல் தேரை விட்டு வேகமாகக் கீழே குதிக்கிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போதே தரையில் கால் பதிக்காமலேயே புவி ஈர்ப்பு விசையை மீறி விண்ணில் தாவினார். திடீரென தன் எஜமானன் விண்ணில் பறப்பதை அறிந்த கருடன் ஆச்சர்யமும் வெட்கமும் அடைந்து, ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு தன் பெரிய சிறகுகளை விரித்துக் கொண்டு அவசரமாக அவரைப் பின் தொடர்ந்தது.
மேற்படி காட்சியை ருக்மிணி பிராட்டி மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். பாமாவின் கண்களிலோ கண்ணீர்.

"நாராயண ! நாராயண ! " என்றபடியே அவர்களிருந்த இடம் நோக்கி திரிலோக சஞ்சாரியான நாரதர் வந்தார்.

"வாருங்கள் நாரதரே !" என்று அவரை பட்ட மகிஷிகள் இருவரும் வரவேற்றனர்.

"மிக அவசர காரியம் போலிருக்கிறது ! " என்றார் நாரதர்.

"ஆம். கருடனால் கூட இன்று அவர் அவசரத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை." என்றார் ருக்மிணி பிராட்டி.

"பட்ட மகிஷிகளைக் கூட பொருட்படுத்தாமல் பகவான் தனியாகச் செல்கிறார் என்றால் யாரோ உயர்ந்த பக்தராக இருக்க வேண்டும்." என்றார் நாரதர்.

"துவரகாதீசர் என்னைப் பொருட்படுத்தாவிடினும் பரவாயில்லை. ருக்மிணி அக்காவையாவது அழைத்துச் சென்றிருக்கலாமே." என்றார் பாமா. இந்த வார்த்தைகளைச் சொல்லும் பொழுதே அவர் குரல் தழுதழுக்க ஆரம்பித்திருந்தது.

"இது என்ன அம்மா ! நீங்கள் பேசுவதைப் பார்த்தால் அந்த நீலமேக ஷ்யாமளன் தங்களை அழைத்துச் செல்வேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டார் என்பது போலிருக்கிறதே ! " என்றார் நாரதர்.

"நாரதரே ! இது துவாரகா என்பது நினைவிருக்கட்டும். உங்கள் வேலையை இங்கே காண்பிக்க வேண்டாம். எச்சரிக்கை !" என்றார் ருக்மிணி பிராட்டி.

"நாரதரை கடிந்து என்ன பிரயோஜனம் அக்கா ! அவர் உண்மையைத் தானே சொல்கிறார் !" என்றார் பாமா.

"ஆஹா ! நான் ஏனம்மா இங்கு வந்து கலகம் செய்யப் போகிறேன்.  அடடா ! இந்த அபாண்டமான குற்றச்சாட்டை விசாரிக்க இப்பொழுது எனது நாதன், கோவிந்தன், மாதவன், மதுசூதனன், உத்தமன், சத்யசந்தன், தீனதயாளன், பரம காருண்யன் இங்கில்லாமல் போய்விட்டானே. இருக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்." என்று சொல்லிய நாரதர் சற்று நிதானித்து,
"ராதாவின் தங்கம் யாருக்கும் வாக்கு கொடுத்து ஏமாற்றியதாக எந்த யுகத்திலும், எந்த கல்பத்திலும் இல்லை. நாராயண ! நாரயண ! " என்றார் நாரதர்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பாமா தேவி, "ஒரு பேச்சிற்கு கூட 'பாமாவின் தங்கம்' என்று சொல்லக் கூடாதா...." என்று அங்கலாய்த்தார்.

"நாராயணா ! நாராயணா ! இன்று நான் என்ன பேசினாலும் விவகாரம் ஆகிவிடும் போலிருக்கிறதே." என்றார் நாரதர்.
"சற்று நன்றாக யோசித்து பாருங்கள் அம்மா ! தங்கள் மாளிகையில் தங்கத்திற்கு மதிப்புத் தான் உண்டா? துவாரகாதீசன் எடைக்கு எடை தங்க ஆபரணங்கள் வைக்க உங்களைத் தவிர எவரேனும் யோசிக்கக் கூட முடியுமா ? " என்று நாரதர் சொல்லும் பொழுதே ருக்மிணி பிராட்டியின் கண்களில் கோபத்திற்கான அறிகுறி தென்பட்டது.
"அதாவது அம்மா...பாமா தேவியின் மாளிகையில் தங்கம் மிகச் சாதாரணமான ஒரு பொருள். பிருந்தாவன ஜனங்கள் எல்லாம் தங்கள் உயிராகக் கொண்டாடுபவரை 'பாமாவின் தங்கம்' என்று சொன்னால், அவரை எல்லோரையும் போல சாதாரணமானவர் என்று குறிப்பது போல் ஆகிவிடுமே...என்று தான்...சொல்ல வந்தேன்..." என்று சர்ச்சைக்குரிய ஒரு நீண்ட விளக்கத்தை நாரதர் அளித்தார்.

"நாரதரே, அன்புற்றவரை பிரிவுறும் நோய்...அதனை நீர் அறியீர். நாம் எவர் மேல் அதிகப் பிரேமை வைத்திருக்கிறோமோ அவரால் உதாசீனப்படுத்தப்பட்டால் அடையும் வேதனை...அதனையும் நீர் அறியீர்...உமக்கு எல்லாமே வேடிக்கை தான். விஷயத்தை தெளிவாக அறிந்து கொண்டு அமைதியாக இரும்." என்று ருக்மிணி பிராட்டி ஆணையிட்டார்.

"நாரயணா ! நாரயணா ! யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை அம்மா ! விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள எனக்கும் ஆவலாகத் தான் இருக்கிறது."

"துவரகாதீசர் இன்று இரவு தனக்கு மிகவும் பிரியமான ஒரு உயர்ந்த பக்தனுக்கு தரிசனம் தர வேண்டும் என்று முன்னரே பாமாவிடம் சொல்லி இருந்தார். ஆனால் யார் அந்த பக்தர் என்று யாருக்கும் தெரியாது. சற்று முன்னர் கூட பக்தனுக்கு தரிசனம் தர வேண்டும் என்று சொல்லி பாமாவை தயாராக இருக்கச் சொல்லி ஆள் அனுப்பினார். யாராக இருக்கும் என்று நானும் பாமாவும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் இங்கு வந்ததும் தெரியவில்லை. மாயமாய் மறைந்ததும் புரியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பாமா ஏமாற்றம் அடைந்துள்ளாள்." என்று ருக்மிணி பிராட்டி விஷயங்கள் நடந்த சூழ்நிலையை விவரித்தார்.

"இப்பொழுது நன்றாக புரிகிறது அம்மா ! பாமா தேவியின் கட்சியில் அடியேனும் உள்ளேன் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். துவாரகாதீசன் அடியேனையும் இதே காரணம் பற்றி இங்கு வரச் சொல்லியிருந்தார். அடியேனுக்கும் பெருத்த ஏமாற்றம் தான். வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை. அவ்வளவு தான். ஆனால் ஜனார்த்தனர் எதைச் செய்தாலும் அதில் ஒரு பொருள் இருக்கும் என்று அமைதியாக இருக்கிறேன். நாராயணா ! " என்றார் நாரதர்.

"ஆமாம் பாமா. 'கிருஷ்ணாவோ' என்ற அந்த அபயக் குரல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எந்த உயிர்க்கு தாங்க முடியாத துன்பமோ ? ஜனார்த்தனர் எப்பொழுதும் உயிர்களுக்கு அபயம் அளிப்பதிலேயே கண்ணாக இருப்பார் என்பது நீ அறியாததா? " என்று பாமா தேவையை ருக்மிணி பிராட்டி தேற்றினார்.

"ஆனால் பட்டமகிஷி பாமாதேவியின் பேரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வைத்திருக்கும் அன்பினை யாரும் குறைவாக எடைபோட வேண்டாம் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்..." என்றபடியே நாரதர் பாமா தேவியின் பக்கம் திரும்பினார்.

"உங்களுக்காக அன்றோ யதுகுலதிலகம் பாரிஜாத மரத்தை இந்திரலோகத்தில் இருந்து துவரகாவிற்கு கொணர்ந்தார்...அந்தப் பரந்தாமன், சர்வேஸ்வரன், புருஷோத்தமன், பகவான் வாசுதேவன், உங்கள் ஒரு வார்த்தைக்கு மதிப்பளித்து, தவறு தவறு, உங்கள் கள்ளம் கபடமில்லா அன்பிற்கு கட்டுப்பட்டு ஒரு தராசு தட்டில் அமர்ந்து தன்னை எடைபோடும்படி தாழ்த்திக் கொண்டானே ! ஆனால் இன்று ஏதோ மிக அவசரமான காரியம் தான் என்று நினைக்கிறேன். இல்லையேல் அந்தக் கருணை மாமுகில் நிச்சயம் தங்களை உதாசீனப்படித்தி விட்டுத் தனியே சென்று இருக்க மாட்டார்." என்றார் நாரதர்.

"நாரதரே ! ஒரே சமயத்தில் அமிழ்தமும் விஷமும் கலந்த வார்த்தைகளைச் சொல்கிறீர் " என்றார் பாமா.

"ஆஹா ! இதே வார்த்தைகளை ஒரு சமயம் சீதாதேவியும் உரைத்ததாகக் கேள்வி." என்றார் நாரதர்."

"அது எப்பொழுது நாரதரே ? " என்று ருக்மிணி பிராட்டி வினவினார்.

"ராமன் தன்னைப் பிரிந்து சொல்ல முடியாத துயரத்தில் காட்டில் பித்துப் பிடித்தவன் போல அலைகிறான் என்று அசோக வனத்தில் சீதாப் பிராட்டியிடம் அனுமன் சொல்லியபொழுது..." என்று நாரதர் சொல்லி முடிப்பதற்குள் பாமாதேவி மூர்ச்சையாகி இருந்தார். நல்ல வேளையாக கீழே விழ இருந்தவரை ருக்மிணி பிராட்டி பிடித்துவிட்டார்.

"ஆஹா ! சீதை, அசோக வனம் என்று கேட்டாலே இவள் மூர்ச்சையாகி விடுவாள். தாங்கள் வந்த காரியம் ஆனதா நாரதரே ? " என்று ருக்மிணி பிராட்டி கேட்கவும், நாரதர், " இன்று நான் எதை செய்தாலும் எல்லோரும் தவறாக நினைக்கிறார்கள் அம்மா. இன்னொரு நாள் வருகிறேன். விடை கொடுங்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் இன்று அறிந்து கொண்டேன்..."

"நீங்கள் அறிந்து கொண்டதை இன்னொரு சமயம் வந்து சொல்லவும். இப்பொழுது நான் பாமாவை கவனிக்க வேண்டும்.  இப்பொழுது விடை பெறுகிறீரா ?" என்று விரட்டாத குறையாக நாரதரை ருக்மிணி பிராட்டி அனுப்பி வைத்தார்.

*****************************************************************************

"இரவெலாம் கண்ணில் நீரருவி பெருகும்" என்று சென்ற பதிவில் இடம்பெற்ற மீராப் பாடலைப் பற்றி நாரதருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல் ஆழ்வார் திருமகள் ஆண்டாள், சத்யபாமா பாவனையில் பாடியுள்ள, "என்பு உருகி இனவேல் நெடுங்கண்கள் இமைப் பொருந்தா பல நாளும்..."  என்ற நாச்சியார் திருமொழி பாசுரத்தை நினைவுபடுத்துகிறது என்றேன். அப்பொழுது தான் நாரதர் தனக்கு ஒரு முறை துவாரகாவில் பாமாதேவியின் தூய அன்பினை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்தது என்று சொல்லி மேற்படி நிகழ்ச்சிகளை விவரித்தார். மேலும் அன்று தான் ருக்மிணி பிராட்டியிடம் சரியாக விடை பெற்று கொள்ள முடியவில்லை என்றும், அவரைப் பார்த்து சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் திருவல்லிக்கேணி வந்ததாகவும் உரைத்தார். [இதன் பின்னர் டீக்கடையில் நடந்த உரையாடல் இந்தப் பதிவில் இல்லை.]

நாரதர் விளக்கிய மேற்படி துவாரகா நிகழ்ச்சியில் ஜனார்த்தனர் எங்கே சென்றார் என்ற கேள்விக்கு விடையாக இந்த சூர்தாஸ் பஜன் அமைந்துள்ளது. இதுவும் இரவின் அமைதியில் கேட்க வேண்டிய இன்னொரு அற்புதமானப் பாடல்.


ஆனையின் துயர் தீர்த்த அம்மான் தன்னையும் காக்க வேண்டும் என்று சூரதாசர் பிரார்த்திக்கிறார். பாடலை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

[பாடல்]
ஹே கோவிந்த ! ஹே கோபால ! ஹே கோவிந்த
ராகோ சரண அப்தோ ஜீவனஹாரே

நீர பிவன ஹேது கயோ சிந்து கேகி நாரே
சிந்து பீச்ச பஸத க்ராஹ சரணதரி பசாரே

சார ப்ரஹர யுத்த பயோ லேகயோ மஜ்தாரே
நாகே கானதுப் ந லாகே க்ருஷ்ண கோ புகாரே

த்வாரகா மே ஷபத கயோ ஷோர பயோ த்வாரே
சங்க சக்ர கதா பதும கருடல சிதாரே
சூர கஹே ஷ்யாம சுனோ ஷரணஹே திஹாரே
அபகி பார பார் கரோ நந்த கே துலாரே

[பொருள்]
ஹே கோவிந்தா ! ஹே கோபாலா ! என் வாழ்வின் இறுதிக்கட்டம் வந்துவிட்டது. அபயமளிப்பாய் ! ஷ்யாமா!  நான் சொல்வதைக் கேட்பாய். அன்றொருநாள் தன் நீர் வேட்கையைத் தணிக்க வேழமொன்று சிந்துவில் இறங்கியது. அப்போது அங்கு வாழ்ந்து வந்த முதலை ஒன்று அந்த வேழத்தின் காலைக் கவ்வியது. பல காலம் அந்த முதலையிடம் போராடி சோர்வுற்ற அந்த வேழம், தன் இறுதி நெருங்கிவிட்டதை எண்ணி "கிருஷ்ணா" என்று அலறியது. அந்த அபயக்குரல் துவாரகாவில் ஏற்படுத்திய அதிர்வு அடங்குமுன், நீ சங்கு சக்ர கதாதாரியாய் கருடாரூடனாய் அவ்விடம் சென்று அந்த யானைக்கு நற்கதி அளித்தாயே ! அவ்வாறே நானும் உன்னை சரணடைந்து விட்டேன். நந்தனின் செல்லமே ! காலம் தாழ்த்தாமல் என்னையும் கரை சேர்ப்பாய்.



Sunday, July 24, 2011

வீரராகவர் விரதம் - 1



 சென்ற ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணியில் நாரதரைச் சந்திக்க நேர்ந்தது. நாரதர் என்றால் யாரோ எனக்கு மட்டும் தெரிந்தவர் என்று எண்ணிவிட வேண்டாம். நம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தவர், தேவரிஷி நாரதர் தான். இடையில் வீணையுடன் (திரைப்படங்களில் தம்புராவுடன்) "நாராயணா ! நாராயணா !" என்று உச்சரித்துக் கொண்டே அலையும் பாகவத உத்தமரே தான். அதிர்ச்சியோ ஆச்சர்யமோ அடையாமல் நம்பிக்கையுடன் மேற்கொண்டு படிக்கவும்.

அல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயார் சன்னிதிக்கு எதிரே ஒரு சிறு மண்டபம் இருக்கும். புளியோதரை, சக்கரைப் பொங்கல், அதிரசம், அப்பம் என்று எதை வாங்கினாலும், இங்கே வந்து அமர்ந்து சாப்பிடுவது சிலர் வழக்கம். அம்மாதிரி நானும் அன்று இரவு அங்கு அமர்ந்துக் கொண்டு, தட்டை(வடை) சாப்பிட்டுக் கொண்டே மனதில் கண்ணனைப் பலவாறாகத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தேன். பல விதமான எண்ணங்கள். கவலை மேல் கவலைகள். மனித பிறவியே ஒரு வீணான பிறவி என்று தோன்றிற்று. திடீரென எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நிறைய படித்தது தான் என்று தோன்றியது. அதனால் அன்றோ இந்தக் கணினித் துறையில் சிக்கிக் கொண்டு எதற்கும் ஒழுங்கான நேரம் கிடைக்காமல் அல்லாடுகிறோம் என்று தோன்றியது. வேலையை விட்டு விட்டு விட்டலனே கதி என்று கிடக்கும் அளவிற்கு உள்ளத் துணிவும் இல்லை. ஏன் நிறைய படித்தோம் என்று தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.
திடீரென எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் தெய்வம் தான் என்று மனம் அடித்துச் சொல்லியது. நம்மை இவ்வளவு பாடு படுத்துவது கண்ணன் என்றால் அவனையே திட்டுவோம் என்று முடிவு செய்து தான் பலவாறு திட்டிக் கொண்டிருந்தேன். "என்னைப் பற்றி உனக்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? இப்படியே வாழ்நாள் எல்லாம் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டு இருக்கிறேனே, நல்ல சங்கீதம் கேட்க நேரம் கிடைக்கிறதா? நல்ல புத்தகங்கள் படிக்க முடிகிறதா? அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? ஒரு காலத்தில் தினமும் உன் வீட்டு சக்கரைப் பொங்கல் உண்டு மகிழ்ந்தேனே, இப்பொழுது வாரம் ஒரு முறை பொங்கல் கிடைப்பதே அரும்பாடாய் இருக்கிறதே ! உன் மனைவி ருக்மிணி பிராட்டிக்கும் என் மேல் அக்கறை இல்லை. ராமனுக்கும் இல்லை. சீதைக்கும் இல்லை. அரங்கனுக்கும் இல்லை. யாருக்கும் இல்லை. எல்லோரும் மாலை வாங்கி வந்தால் மட்டும் சந்தோஷமாக வாங்கி சாற்றிக் கொள்கிறீர்கள். வெறும் கையுடன் வந்தால் பட்டர் மூலமாக, 'மாலை ஒன்றும் இல்லையா?' என்று கேள்வி மட்டும் கேட்கிறீர்கள் !" என்று பலவாறாக எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.  

தாயார் சன்னிதியில் மேல் மாடங்களில் அமைதியாக அமர்ந்திருந்த புறாக்கள் மனதில் வேறு புதுச் சிந்தனைகளைத் தோற்றுவித்தன. அவற்றின் கரு அடுத்தப் பிறவியில் என்ன உயிரினமாகப் பிறக்கலாம் என்பதே. இவ்வாறு தீவிர சிந்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது தான், த்ரிலோக சஞ்சாரியான நாரதர் என் முன்னர் பிரசன்னமானார். ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசம் என்பார்களே, அது இப்படித் தான் இருக்குமோ என்று எண்ணும் அளவிலான ஒரு தெய்விக ஒளிவட்டத்திற்குள் தேவரிஷி நாரதர் திவ்ய தரிசனம் தந்தார். "நாராயண நாராயண ! கண்ணனின் நண்ப ! கவலைகள் மறப்பாய் ! " என்ற சொற்கள் என் காதுகளில் ஒலித்தன. காண்பது கனவா இல்லை நனவா என்று தலைகால் புரியாமல், பேச்சு ஒன்றும் வராமல் திக்கித் திணறி "ஹலோ நாரதரே !" என்ற வார்த்தைகள் என் நாவில் இருந்து வெளிப்பட்டு என்னை ஆச்சர்யப்படுத்தின. "அடச்சே! இதென்ன ! இரு கை கூப்பி நாரதருக்கு நமஸ்காரம் அல்லது வணக்கம் என்று சொல்லாமல் இவ்வாறாக மரியாதை இல்லாமல் பேசினோமே !" என்று உள்மனம் கடிந்துக் கொண்டது. நாரதர் ஏன் அப்பொழுது வந்தார், அவருடன் நடந்த உரையாடல் பற்றி எல்லாம் இந்தப் பதிவிலேயே சொல்லிவிட முடியாது. ஆரம்பத்தில் நடந்தவற்றை மட்டும் சொல்கிறேன்.

என் உள்மனம் நினைத்ததை எப்படியோ அறிந்த நாரதர், "ராதா ! நீ கண்ணனிடம் மாறாத நட்புரிமை கொண்டுள்ளதால் அதன் தாக்கம் அவனைச் சேர்ந்தவர்களிடமும் வெளிப்படுகிறது. நட்பில் மரியாதை பார்க்க வேண்டாம். என்னையும் உனது நண்பராகப்   பாவிக்கலாம்." என்று செவிக்கும் மனதிற்கும் இனிமை தரும் வார்த்தைகளைப் பேசினார்.

"ஆஹா ! உங்களைக் கண்டதில் என் உள்ளத்தில் புதுத் தெம்பு ஏற்ப்பட்டுள்ளது. என் கவலைகள் எல்லாம் பறந்துவிட்டன ! " என்று உற்சாகத்துடன் பேசினேன்.

"நாராயண ! நாரயண ! இது தான் கலி காலம் என்பதோ? உனக்கே கவலை வந்திருக்கிறதே ! " என்றார் நாரதர். "உன்னை இவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கும்படி செய்த விஷயம் தான் என்ன ராதா ? என்னிடம் சொன்னால் தக்க உபாயம் சொல்வேன்", என்றார் நாரதர்.

நாரதர் இவ்வாறு கேட்டவுடன் எனக்கு என்ன பதில் உரைப்பது என்று தெரியவில்லை. நண்பர் என்று சொல்லிவிட்ட போதிலும், சற்று முன்னர் எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருந்தக் கதையை எல்லாம் கேட்டால் என்ன நினைப்பாரோ என்று தோன்றியது.  நமக்கு பக்தி குறைவு தான். நல்ல மன நிலையில் இருந்தால் எல்லோரையும் போற்றுவோம். இல்லையேல் வசைபாடுவோம். ஆனால் இதை எல்லாம் நாரதரிடம் சொல்லிக் கொள்ளத் தேவையில்லை என்று தோன்றியது.

திடீரென, சற்று முன்னர் இருந்த எனது கவலைகள் எல்லாம் எனக்கே மிகவும் அற்பமாகத் தோன்றின. "அது ஒன்றும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை நாரதரே ! கண்ணன் பாடலில் இரண்டு உருக்கமானப் பாடல்கள் பதிவு செய்யலாம் என்று எண்ணம். ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதப் போகிறேன். எப்படிப் பதிவிடுவது என்று சிந்தனை செய்து கொண்டிருந்தேன்" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கதையைத் திரித்தேன்.
த்ரிகால ஞானியான நாரதர், நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்பதை அறியாதவரா? ஆனாலும் பெரியோர் என்றும் பெரியோரே ! பாகவதர்களில் சிறந்தவர், நற்குண நாரதர், என்னை சங்கடத்தில் ஆழ்த்தாமல், என் கதையை உண்மையாக்கி அவை என்ன பாடல்கள் என்று கேட்க, உரையாடல் மேலும் வளர்ந்தது. அவருடன் பேசியதில் துவாரகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஒரு பாடலுடன் சம்பந்தம் பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். இரண்டில், "பக்த மீரா" படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை முதலில் இடுவது என்றும், நாரதர் எனக்கு சொன்ன சில தகவல்களுடன் இரண்டாம் பாடலை பதிவு செய்வது என்றும் நிச்சயம் செய்தேன். அதன்படி, மீரா படப்பாடல் வரிகளைக் கீழே பார்க்கலாம். இரவின் அல்லது பின்னிரவின் அமைதியான நேரத்தில் கேட்க வேண்டிய அற்புதமான பாடல்.

எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் அமைந்துள்ள இந்தப் பாடலை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


சராசரம் உன்னை யாவும் தேடுமே...
மறைகளும் மகிழ்ந்து உன்னைப் பாடுமே....ஹே ப்ரபோ !
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே !
உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா !
கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ !
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா?
இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !

இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும் !
அனலில் மெழுகென அகமும் உருகும் !
"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !
இதயமும் பதறும் ஐயா !

பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா !

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP