Friday, October 29, 2010

என் கண்ணன்


கன்னங் கருத்த வண்ணனவன்
கன்னங் குழியும் மன்னனவன்
முன்னஞ் செய்த வினைப்பய னாயென்
உள்ளங் கவர்ந்த கள்வனவன்.

சுருளும் கற்றைக் குழலழகன்
மருளும் மானின் விழியழகன்
உருளும் சகடம் உதைத்தனவன்
அருளும் தீனதயா ளனவன்.

குழலூதும் கனி வாயழகன்
குன்றேந்தும் நுனி விரலழகன்
தழல்போலே உள் ஒளிர்வனவன்
கழல்பணிய மனங் குளிர்வனவன்!


--கவிநயா

Wednesday, October 20, 2010

வசந்தின் வசந்தம் - இன்று திருமண விழா!

கண்ணன் பாட்டு அன்பர்களே,
இன்னிக்கி (Oct 20, 2010) நம்ம கண்ணன் குழுவின் அன்பரும், சிறுகதை எழுத்தாளரும்...
கண்ணனின் காதலைக் கவின் தமிழில் பேசி மகிழும் நல்லன்பரும் நண்பருமான...
வசந்த்-இன் வசந்த விழா! திருமண விழா!
ஹேமா என்னும் அன்பான இணைப் பறவையைக் கைபிடித்துக் கால்பிடிக்கும் விழா! :)


வாருங்கள், அனைவரும் மலர் தூவி, அட்சதை தூவி வாழ்த்துவோம்!
இனிய திருமண வாழ்த்துக்கள் ஹேமா வசந்த்!
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!!
செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலக்க வாழ்த்துக்கள்!

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ், கைத்தலம் பற்ற, கண்ணன் குழலூதி ஆசி வழங்க.....
என் அன்பன் முருகனும் நானும் இனிதே வாழ்த்த, முருகனருள் முன்னிற்க....இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

இதோ, கல்யாணப் பதிவு! உங்க பதிவே தான்! :)
இதை அங்கே இட்டு, இன்னும் இங்கே இடவே இல்லை! இதோ இன்று இட்டோம்! இட்டும் தொட்டும் கவ்வியும் சிறு கை நீட்டீக் குறு குறு நடந்தும் கண்ணன் உங்கள் திருமணத்துக்கு வருகிறான்! பொன்னாபரணம் தருகிறான்!



பொன்னாபரணம்

ஆயர்பாடி அமைதியாக இருந்தது.

மேற்றிசையில் திரண்டிருக்கும் கரும்முகில்கள், மழையைப் பொழிவதற்குத் தயாராக இருக்கின்றன. சிறிசிறு தாமரை மொட்டுகளும், மலரத் தயாராக உள்ள அல்லி மலரின் மொட்டுகளும், குவிந்து நிற்கின்ற குவளை மலர்களின் முகத்தின் பிம்பங்களும் தெரிகின்ற நீர்க்குளம். தேங்கியிருக்கின்ற குளிர்ந்த நீரைக் குழப்பி விடுகையில், அடியிலிருந்து தெளிந்து வருகின்ற மண்ணின் கரைசல் போல், வீசுகின்ற தென்றல் காற்றில் அசைந்து அசைந்து, கலைந்து கொண்டிருக்கின்றன மேகங்கள்.

இணை இணையாக, பறந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகளும், வெண் புறாக்களும், ஜோடி நாரைகளும் அம்மேகங்களின் மேனியெங்கும் உரசி உரசிப் பறப்பதைக் காண்கையில், கூட்டமாக உள்ள காகங்களின் இடையே அரிசித் துகள்களைத் தெறித்தது போல் இருக்கும் அல்லவா?

அத்தகைய கரியத் தொகுதியைக் கிழித்துக் கொண்டு அண்ட சராசரமெங்கும் கிடுகிடுங்க, கிளை கிளைத்துப் பாய்கின்ற ஒரு மின்னல் போல், இராதையின் குரல் ஆயர்பாடியுள் பாய்கிறது.

குளிரில் தலையசைத்தவாறே தூங்கிக் கொண்டிருந்த, பெரிய மரங்களின் பூக்கள் படபடப்பாக அவள் இருந்த திக்கை நோக்கின. பின்னே என்ன செய்ய முடியும் அவற்றால்? அமைதியாக வீசிக் கொண்டிருந்த தென்றலும் அவளைப் பார்க்க அவசரமாக வேகமாக ஓடி வந்தால், பூக்களும் அந்தத் திக்கைத் திரும்பித் தான் பார்க்க வேண்டும் அல்லவா?

பொன்னூஞ்சலின் பூங்கயிற்றின் மேனியெங்கும் சின்னச் சின்னதாகப் பூக்கள் தவழ்ந்திருந்தன. வெள்ளை நிறம், சிவந்த நிறம், மஞ்சள் நிறம் என்று வானவில்லின் வர்ணங்களை பெய்கின்ற மழை நீர் கரைத்து தெறித்தால் எவ்வாறு சிதறியிருக்குமோ, அவ்வாறு பலப்பல வர்ணங்களால் பூக்கள் விரிந்திருந்தன. கூடவே பச்சைப் பசிய இலைகள்.

இலைகளுக்கெல்லாம் ஒரு வருத்தம் இருந்து வந்தது. 'வண்ண வண்ணமாக மலர்களைப் படைத்து, அவற்றை மட்டுமே வண்டினங்களைச் சுற்றிவரச் செய்கிறானே! நமக்கு மட்டும் ஏன் ஒரே நிறமாக பச்சை கொடுத்தான்?' என்று.

வெண்பஞ்சின் இழைகளை எல்லாம் எடுத்து, தொகுத்து தம் மேனி மேலெங்கும் வைத்து, தைத்துக் கொண்ட அன்னங்கள் , தமது சிவந்த மூக்குகளால் குளத்தின் குளிர் நீரைத் துழாவின. அவை எதைத் தேடியிருக்கும்? தம் நாசிகளுக்கு நல்ல மோதிரமாக இருக்குமோ? அன்றி, தம் இணைந்த விரல்களுக்கு நல்ல வளையாக இருக்குமோ?

சின்ன சின்ன உயரங்களில் அலைகள் எழுப்பும் கரைகள் வரிசையாக வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன. காற்றின் மென் தீண்டலுக்கும் தாங்காது நாணி, நழுவி, அவ்விடம் விட்டு நகர அலையலையாய் சென்று சாந்தமடைகின்றன நீர்ச் சுழல்கள்.

வானெங்கும் நீல நிறத் தூறல்கள். அது எவ்வாறு இருந்ததெனில், கடலின் நீரெல்லாம் ஆவியாகி வானை அடைத்துக் கொண்டார்ப் போல் இருந்தது. சோலையின் பாதையில் பூத்திருந்த பலவர்ணப் பூக்களைப் பார்த்து வர, பொன்னூஞ்சலில் அமர்ந்திருக்கும் கண்ணனையும் , இராதையையும் காண்கிறோம்.

வானின் நீல நிறம், குளத்தின் நீல நிறம் இவற்றோடு கலந்த காற்றின் நீல நிறம் கலந்த அந்த அழகன் இருக்கிறான். அந்தபடியால், அவனைக் காண முடிந்திருக்கவில்லை.

மிக அதிகாலையில் வானம் நீல நிறம் உடைத்தாய் இருக்கிறது. பின் மெல்ல, மெல்ல கதிரவன் தன் பொன் கிரணங்களால், நீலத்தைக் களைந்து வெளி வருகிறான். அப்போது வானிலிருந்து கதிர் வருகிறதா, கதிர் வானைத் தாண்டி வருகின்றதா என்ற ஐயம் வருகிறது அல்லவா? அஃதன்ன, இந்த வண்ணன் அணிந்திருக்கும் மஞ்சள் ஆடை அவனது நீலமேனியைப் போர்த்தியிருக்கும் பேரெழிலைக் காண குழப்பம் வருகிறது.

பொன்னாபரணங்களால் தன்னை மேலும் அழகுபடுத்திக் கொள்ளும் அவசியமற்ற அந்த அழகன், கொஞ்சமே கொஞ்சம் நகைகளை அணிந்துள்ளான். அவை மட்டுமா?

சிவந்த கோமேதகங்களும், மின்னுகின்ற வளைகளும், ஜ்வலிக்கின்ற முத்து நகைகளும் தத்தம் வாழ்நாளின் பயனைப் பெறும் வகையில் அவன் மேனியில் அலைபுரள்கின்றன. மார்பில் அணிந்த மணியாரங்களும், கரங்களில் குலுங்கிடும் பொன் வளைகளும், பாதங்களில் புரளும் வெள்ளிக் கொலுசுகளும், தோள்களில் மினுக்கிடும் தொல் அழகிய கணங்குகளும், விரல்களைச் சுற்றி விலையாடும் மோதிரங்களும்... அம்மம்ம... அந்த பேரெழிலனின் எழிலுக்கு முன் நிலவின் முன் மண்டியிட்ட விண்மீன்களாயின எனலாம்.

கண்ணனைக் கொள்ள முடியாத பொன்னிறம் தன் ஆசையை முழுதும் இராதையைக் கொண்டு நிரைவேற்றிக் கொண்டது. பொன் எனவா, மஞ்சள் எனவா இல்லை மாலையில் மறைகையில் கதிர் மிச்சம் வைத்து விட்டுப் போகும் விண்ணொளி எனவா, என்னவென்று சொல்வது இராதையின் அழகை?

இரவின் சாரமெல்லாம் குவிந்து, காற்றில் அலைபாய்கின்ற கருங்கூந்தல், அதில் மின்னல் கூற்றுகள் என மின்னும் மல்லிகைச் சரங்கள், கண்ணனது நீல நிறத்திலேயே குழைந்த நீலப் பட்டாடையை அணிந்திருந்தாள். அவள் இடையை வளைத்திருந்த கண்ணனின் கரங்களோடு போட்டி இட்டது பொன் ஒட்டியாணம். பூ மாலைகள், முத்தணிகள், கருகுமணி மாலைகள் என்று அவளது அழகுக்குக் அழகு செய்தன.

இரு மலர்கள் காற்றில் ஆடுகையில் மொழியும் வார்த்தைகளை பிறர் அறிய முடியுமா? அலையும், கரையும் பேசிக் கொள்ளும் அழகையெல்லாம் யாரேனும் கூற முடியுமா? காதலின் பெரு மெளன வெளியில் பொழிகின்ற அன்பை யார் தான் சொல்ல முடியும்?

காலத்தின் பாதையில் கரையாமல், கல்லின் வார்த்தை போல் நின்று விட்ட இனிய பொழுதுகளை எண்ணி, எண்ணி இராதை பாடுகின்ற பாடல் காற்றை நிரப்பி விடுகின்றது.



பொன்னூஞ்சலில் அமர்ந்திருக்கும் ஹேமா-வசந்த்-திருமண-ஒருமன வாழ்த்துக்கள்! :)

Tuesday, October 19, 2010

புள் ஏறி ஓடும் செம்மா கண்ணன் !

 ஹரி பஜனை
[ராகம்: நவரோஜ்]

கோபாலா ! ஹரி  கோபாலா !
கோகுல நந்தன கோபாலா !

கோபாலா ! ஹரி  கோபாலா !
கோகுல நந்தன கோபாலா !

ஓடும் புள் ஏறி
சூடும் தண் துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானே !
 (திருவாய்மொழி - 1-8-1)

அம்மானாய்ப் பின்னும்
எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட
செம்மா கண்ணனே !
  (திருவாய்மொழி - 1-8-2)

மேலே உள்ள  நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்: சென்னை [பள்ளிக்கரணை]  திருநாரணன் கோவிலின்  திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்

Sunday, October 10, 2010

நாராயணா ! ஹரி நாராயணா !

 
ஹரி பஜனை 
[ ராகம்: பிருந்தாவன சாரங்கா ]

நாராயணா ! ஹரி நாராயணா !
நாராயணா ! ஹரி நாராயணா !
 
ஸ்ரீ ஹரி கோவிந்த நாராயணா !
முர ஹரி கோவிந்த நாராயணா !
நர ஹரி கோவிந்த நாராயணா !
 
நாராயணா ! ஹரி நாராயணா !
நாராயணா ! ஹரி நாராயணா !



பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு*
திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ*
ஒரு மாணிக் குறள் ஆகி நிமர்ந்த* அக்
கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே.

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி; நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.
(திருவாய்மொழி 1-10-1, 1-10-8)

மேலே உள்ள  நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்: சென்னை [பள்ளிக்கரனை]  திருநாரணன் கோவிலின்  திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP