Tuesday, September 19, 2017

திருக்குறுங்குடி.



துளி கொஞ்சம் தாராயோ - வெண்ணெய்த்
துளி கொஞ்சம் தாராயோ..
எலியுடனே காத்திருக்கும் எங்கள்மேல்
அளிகொண்டு கண்ணாநீ...
(துளிகொஞ்சம்)


ஆவினங்கள் அடிசேர ஆனந்த
ஆயர்பாடி குடிசேர மாமலை
கோவர்த்தன கிரி தாங்கி தன்
கோகுலம் காத்த விரலளவு
(துளிகொஞ்சம்)


அடைந்திருக்கும் விழிதிறக்க
அடைந்திருக்கும் வழிதிறக்க
அடைந்திருக்கும் செருக்கழிய
முடைந்திருக்கும் மணமொழிய
கடைந்தெடுத்த ஞான நறுநெய்யில்
(துளிகொஞ்சம்)

அழைப்பாயா?


மோகன மதுபாலா..! மேக வர்ணா..! மோக யதுகிரிநாதா..! மதுரநாதப்ரபு..! வா வா..! எனை அழைக்க! பிரிவிலுழல்கிறேனே, காணவில்லையா? எரிநெய்யாய் எரிகிறேனே, சுடவிலையா? நீயும் நானுமென ஒரு பறவைக்கூட்டில் அமர்ந்து குழலிசைக்க மடிமேல் துயிலக் கூறாயா?

பண்டரிநாதா..! அழகே..! அமுதே..! குழல் குமுகா..! தழல் தழுவிப் புகைகிறேனே? எங்கே சென்றாய்? நீலத்திருமேனி தவழக் கைகளில் அள்ளி அணைத்திடவே ஆசை பெருகுதடா..! ஷ்யாமா! சாரதகுரு! குசேலநண்ப! குருகோவிந்தா! குன்றேறிக் குலம் காத்த கருமணியே! ரதிவிஹாரி..! ரதிபரோபகாரி..! ரதிசாரதி..! ரதிரதிரதி..! அன்னதாதா..! அமுதபாதா! மதுசூதனா! கிரிதரா..! கிருஷ்ணதேவரே...!

பாண்டுரங்கா! பாரதராஜா! மங்கை மணாளா! மீராப்ரேமா! ஆண்டாள் ஆனந்தா! மயில்பீலி மதுரா மன்னா! ப்ருந்தாவனப்ரபு! ராமா! ராதாநாதா..! அய்யா! அம்மா! அண்ணா..! நீயே எல்லாம்..! நீயே எங்கும்..! காணுமிடமெலாம் கண் காணும் கார்முகிலே! நீரும் நீயே! அனலும் நீயே! அங்கும் நீயே! இங்கும் நீயே! எங்கும் நீயே! நானும் நீயே..!

மலர் சொரிந்து நிறைக்கிறேன்! மரெங்கும் சந்தனம் பூசுகிறேன்! மாலே! மதுரையம்பதி அன்னை அண்ணா!  பாற்கடல் பரந்தாமா..! கோவிந்தா! ரங்கா! காவேரி மைந்தா! வா..! வா..! முதற்கரிச்சான் கூவும் முதற்சொல்லே! வானெங்கும் நிறைந்த ஓங்காரமே! முத்தமிட்டுக் கொஞ்சக் கூறாயா? அச்சுதா! தாமோதரா! நாராயணா! அனந்தா! பத்மநாபா! மோகினிரூபா!

தேனே! தென்னனலே! நூறாயிரம் ரூபம் காட்டும் மாயவா! துவாரகையே! பாஞ்சன்யமே! பாலே! கொழு நெய்யே! செழுநுரையே! நிறைமணமே! வல்லபா! தீராப் பெயர்களில் உனை அழைக்க அழைக்க நாவினிமை சொல்லினிமை தமிழினிமை கோடி மடங்கு!

யசோதபுத்ர! பலராம சோதரா! நந்த மைந்த! கோகுலப்ரிய! ஆயர்பாடி ஆவே! வில்லிபுத்தூர் மருகா! ஸ்ரீ ரங்கராஜா! திவ்யபுருஷா! மாலை சூடி அழகேற்றியவளைக் கொண்டு சென்ற ராஜமன்னாரே! போதை தெளியவிலையே! யாதும் தெளிவில்லையே! யாதவ கோவே! கோபாலா! கோபாலா! ஆலிலை அமர்ந்த அன்பே! வாமனா! வா! வா! கேடில் விழுச்செல்வமே! கரி காக்க கருடனேறி வந்த கருணையே!

காதலா! காதலா! கோபியர் கொஞ்சும் ரமணா! கொஞ்சம் வாராயா? கொஞ்ச வாராயா? தஞ்சம் தாராயா? துஞ்சப் பாராயா?

சுதாகரா! சுலோக்‌ஷணா! சுத்தப்ரம்மா! சகல்லோக சத்வமே! சத்யனே! சமுத்ரதேவ! சுகராகா! ஸ்ருதிபாவா! உனுள் எனை உள்ளிழுத்துக் கொள்ள மாட்டாயா? பரிதி மேலெழு கதிரே! பனியென உறிஞ்சிக் கொள்ளாயா? குயிலே! குறும்பே! 

Jaya Janardhana Krishna Radhika Pathe

நீலாம்பல் நெடுமலர்.


முற்றத்து மென்மணலில் கட்டிய சிற்றிலைச்
சுற்றத்துத் தோழியர் சூழ்ந்திருக்க - முற்றாய்க்
குறுங்கை அளைந்து குலைத்துப் பறந்த
சிறுவனைக் கண்டாயோ நீ.

"ஏனடி யாரிவன்? கூறடி யார்மகன்?
நானடி தேடினேன் தேய்ந்திட" - "வீணடி,
நீலனோ பாலனோ நீள்தடி ஆயனோ
காலனோ கண்ணனோ பேர்".

கதிரெழும் போதில் நதியலை மீதில்
குதித்துக் களித்து வெளுப்பின் - அதிரூப
மைந்தன் உடையோடு செல்ல இடையினைப்
பைந்தார் மலரால் மறை.

சத்தமின்றிச் சாய்த்தபின் முத்தமிட்டு மீட்டெடுத்தான்
எத்தனவன் எந்தலைவன் எண்ணத்தைப் - பித்தாக்கித்
தித்திக்கும் நாவாலே திக்கெட்டும் தீப்பரவ
வித்தைகள் செய்தான் அவன்.

வெண்கழுத்தில் கண்புதைத்து மென்குரலில் என்னுடலைத்
தண்ணிலவோ தாமரையோ தானொளிரும் - பொன்மணியோ
மின்னொளியோ மீன்விழியோ மீட்பில்லை என்றவனைப்
பெண்ணென்று சூழ்ந்தேன் இனித்து.

கண்ணுண்டான் கள்ளூறும் கன்னியிதழ்க் கொண்டபின்
பெண்ணுண்டான் பொன்முலையில் சொல்புதைத்து - என்னுண்டான்
ஏதுண்டான் என்றறியேன் மண்ணுண்ட வாயாலே
மீதுண்பான் நாளும் இனி.

"நாணிலையோ?" என்றதற்கு "நங்கையிட மன்றென"
"ஏனிலையோ?" என்றதற்கு "ஏடிநீ - நானிலையோ?
தன்னுடலைத் தானறியத் தேவையன்று நாணமே
உன்னுடலில் உள்ளாதல் நான்".


ன்னிசைச் சிந்தியல் வெண்பா::

மாதொரு பாகனும் மால்திரு மார்பனும்
தூதொரு கண்ணனைக் கேட்டது “எப்படி?”
“வேய்ங்குழல் வித்தை!” சிரிப்பு.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP