Monday, January 30, 2012

ஹரி தும ஹரோ! (காந்தி - மீரா - எம்.எஸ்)

இந்தப் பாடல் காந்தியண்ணலின் விருப்பப் பாடல்! ஒரு நாள் எம்.எஸ் வந்திருந்த போது, அவர் குரலில் கேட்க ஆசைப்பட்டு, திடீரென்று அவரைப் பாடச் சொன்னார்!
எம்.எஸ்.அம்மா, 'தனக்கு இந்தப் பாடலை எப்படிப் பாடணும் என்பது தெரியாதே, முன்னே பின்னே இதைப் பாடியதில்லையே' எனத் தயங்க...

"அப்படியானால் பரவாயில்லை, நீ பாட வேணாம், உன் குரலில் இந்தப் பாட்டைப் பேசியாச்சும் காட்டு" என அண்ணல் கேட்க...
அதில் நெகிழ்ந்து போய்...பாடலையும் பொருளையும் கற்றுக் கொண்டு...அடுத்த நாள் பதிவு செய்து, அண்ணலுக்கு Air Mail-இல் பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்தார்!

இந்தப் பாடலையே, அண்ணலின் படுகொலைக்குப் பின், பல முறை வானொலியில் ஒலிபரப்பினார்கள்!


ஹரி.........
தும ஹரோ...ஜன் கி பீர்

அரி...அய்யா...
அன்பரின் துயரம் தீர்!
--------



திரெளபதி கி  லாஜ் ராக்ஹி......
தும படயோ சீர்
(ஹரி தும ஹரோ)

திரெளபதை தன்-மானம் காக்க.....
துகில் வளர்க்க விரைந்தீர்!
(அரி.....அய்யா)
--------

பக்த காரண, ரூப நரஹரி,
தர்யோ ஆப் சரீர்
ஹிரண்ய கஸ்யப, மார லீந்ஹோ,

தர்யோ நாஹின தீர்
(ஹரி தும ஹரோ)


சிறுவன் பொருட்டு, ஆள்-அரி உருவம்,
நன்று நீர் எடுத்தீர்!
சீறும் இரணியன்,  சாபம் தொலைந்திட,

அன்று நீர் முடித்தீர்!
(அரி.....அய்யா)

--------

பூடதே கஜ, ராஜ ராக்யோ,
கியோ பாஹர நீர்
தாச மீரா, லால கிரதர,

துக் ஜஹான் தஹான் பீர்
(ஹரி தும ஹரோ)


காதல் களிறின், காலைத் தூக்கி,
காத்து அருள் செய்தீர்!
தாச மீரா, கிரி-தாரி இங்கோ,

துக்க வலி பெய்தீர்!
(அரி.....அய்யா)

வரிகள்: மீரா
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
மொழி: இந்தி
Jan 30 - அண்ணலின் நினைவு நாள்!

Saturday, January 28, 2012

என் கண்ணனைக் கண்டாயா?


மண்ணே மரமே செடியே கொடியே
கண்ணனைக் கண்டாயா - என்
கண்ணனைக் கண்டாயா?

கண்ணனைக் கண்ட காரணத்தாலே
சமைந்து நின்றாயா – நீ
சமாதி கொண்டாயா?

புல்லே பூவே புதரே என்றன்
கண்ணனைக் கண்டாயா – என்
கள்வனைக் கண்டாயா?

கள்வனைக் கண்ட காரணத்தால்
மெய்சிலிர்த்துக் கொண்டாயா – புளகம்
அரும்ப நின்றாயா?

மலையே மடுவே குன்றே குடிலே
கண்ணனைக் கண்டாயா – என்
மன்னனைக் கண்டாயா?

மன்னனைக் கண்ட காரணத்தாலே
மலைத்து நின்றாயா – நீயும்
சிலையாய் ஆனாயா?

மழையே வெயிலே பனியே என்றன்
கண்ணனைக் கண்டாயா – அவன்
கனிமுகங் கண்டாயா?

கனிமுகங் கண்ட காரணத்தாலே
பனியெனக் கரைந்தாயா – உன்
மனதினை இழந்தாயா?

மயிலே குயிலே கிளியே வளியே
கண்ணனைக் கண்டாயா – என்
கண்ணனைக் கண்டாயா?

கண்ணனைக் கண்ட காரணத்தாலே
மயக்கம் கொண்டாயா – உன்னை
மறந்து நின்றாயா?

இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
என்னிடம் சொல்லுங்கள்

கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
அவனிடம் சொல்லுங்கள்!


--கவிநயா

Friday, January 13, 2012

பஜகோவிந்தம் (தமிழில்) - 1



பஜகோவிந்தம்
(எனது வலையில் [சர்வம் நீயே] சென்ற ஆண்டு பதிவிட்ட
தமிழ் பஜகோவிந்தத்தில் எம் எஸ் பாடிய பத்து பதங்களின்
தமிழ்ப்பதங்களை இங்கு கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக
அளிக்கிறேன் ;குற்றங்குறைகளை கண்ணன் மன்னிப்பான் )


(1)
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
.பஜகோவிந்தம் மூடமதே |
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே

Seek Govind,Seek Govind,Seek Govind,o fool!When the appointed time comes[death],
grammar -rules surely will not save you.(சுவாமி சின்மயானந்தா)

துதி கோவிந்தனை,துதிகோவிந்தனை ,
கதி கோவிந்தனே, மடமதியே!
கதவினைக்காலன் தட்டிடும் நேரம்
உதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம் ?

(2).
மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
.குரு சத்புத்தி மனசி வித்ருஷ்ணாம் |
யல்லபசே நிஜகர்மோபாத்தம்
.வித்தம் தேன விநோதயசித்தம் ||

O fool!Give up the thirst to possess wealth.Create in your mind,devoid of passions ,
thoughts of the Reality.With whatever you get [as a reward of the past] entertain
your mind [be content] (சுவாமி சின்மயானந்தா)

மூடா!பொன்பொருள் மோகம் அறுப்பாய் ;
நாடுவாய் மெய்ப்பொருள் நிர்மல நெஞ்சால் ;
பாடுபட்டுழைத்து நீதேடிடும் தனத்தால்
கூடிடும் சுகத்துடன் குறையின்றி வாழ்வாய்.

(5)
யாவத்வித்தோபார்ஜனசக்த--
ஸ்தாவன்நிஜபரிவாரோ ரக்த :|
பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரதேஹே
வார்த்தா கோபி ந ப்ருச்சதி கேஹே ||

As long as there is the ability to earn and save so long are all your dependents
attached to you.later on ,when you come to live with an old infirm body,no one at home
cares to speak even a word with you!!(சுவாமி சின்மயானந்தா)

சம்பாதித்திடும் தெம்புள்ளவரையில்
அன்பைப் பொழிந்திடும் உன்பரிவாரம்,
ஓடாய் உழைத்துநீ ஓய்ந்திடும் நேரம்
வேண்டாதவனாய் ஒதுக்கிடும் உன்னை.

(11)
மா குறு தனஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷத்கால : சர்வம் |
மாயாமயமிதமகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷா விதித்வா ||

Take no pride in your possession,in the people at your command,in your youthfulness;
time loots away all these in a moment ;leaving aside all these ,after knowing their
illusory nature,realise the state of brahman .(சுவாமி சின்மயானந்தா)

பணம்,படை,இளமையால் ஆணவம் வேண்டாம் ;
கணத்தினிலழிபவை இவையென அறிவாய் ;
மாயாமயமிந்த வாழ்வென உணர்ந்தே
தூயப்ரம்ம நிலைதனை யடைவாய் .

(18)
சுரமந்திரதரு மூலநிவாசஹ
ஷய்யாமூதலமஜினம் வாசஹ |
ஸர்வப்பரிக்ரஹமோகத்யாகஹ
கஸ்ய சுகம் ந கரோதிவிராகஹ ||

Who can disturb a man's happiness,if he can be happy ,living in the open halls
of temples or under the trees lying on the bare ground and wrapped in skins
giving up every possession and enjoyment ?(சி.ராஜகோபாலாச்சாரி)

உறங்கிட ஆலயமும் மரநிழலும் ;
உடலினை மூடுவதோ தோலாடை ;
இங்ஙனம் யாவும் துறந்தவர் மனத்தில்
பொங்கிடும் மகிழ்ச்சி மங்குவதேது ?

(20)
பகவத்கீதா கிஞ்சித தீதா
கங்காஜலலவகணிகா பீதா |
சக்ருதபி ஏன முராரி சமர்ச்சா
த்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா ||

A little study of Bhagavad gita ,drinking a drop of ganga water,a casual worship of
murari--these will save you from debate with death .(சி.ராஜகோபாலாச்சாரி)

சில வரியேனுங் கீதை படிப்போரும்,
துளியேனுங் கங்கை நீர் குடிப்போரும்,
அரங்கனைக் கணமேனுந் துதிப்போரும்,
கலங்குவதில்லை கூற்றுவன் வரினும்.

(21)
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனிஜடரே சயனம் |
இஹ சன்சாரே பஹுதுஸ்தாரே gain death,and
க்ருபயா பாரே பாஹி முராரே ||

Again birth,again death,and again lying in mother's womb--this samsaaraa process
is very hard to cross over...save me Muraare!through thy infinite kindness!(சுவாமி சின்மயானந்தா)

மாண்டபின் ஜனனம்;மறுபடி மரணம் ;
மீண்டுந்தாயின் கருப்பையிலுறக்கம்;
பிறவிக்கடலிதைக் கடப்பது கடினம்;
கரை சேர்த்தருள்வாய் ,முராரி!சரணம் .

(27)
கேயம் கீதா நாம சஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் |
நேயம் சஜ்ஜன சங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம் ||

Sing the Gita and the thousand names of God;continuously meditate on
Lakshmi's Lord;turn the mind to the company of the good;give away your
wealth to the needy.(சி.ராஜகோபாலாச்சாரி)

கீதையும்,அரங்கனின் ஆயிரம்பேரும்
ஓதி நினைப்பாய் கமலையின் பதியை;
நிதம் நாடிடுவாய் நல்லோர் நட்பை;
இதயங்குளிர்வாய் இல்லார்க்கீந்தே!

(29)
அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத ஹ சுகலேஷஹ சத்யம் |
புத்ராதிபி தனபாஜாம் பீதிஹி
சர்வத்ரைஷா விஹிதா ரீதிஹி ||

'wealth is calamitous',thus reflect constantly;the truth is that there is no happiness
at all to be got from it.To the rich,there is fear even from his own son.This is the way
with wealth everywhere.(சுவாமி சின்மயானந்தா)

செல்வத்தால் தொல்லையே சுகமென்றுமில்லை;
உள்ளத்திலுறுதியாய்ப் பதி இவ்வுண்மையை.
தனயனும் சொத்தால் உன்பகையாவான் .
மனித இயல்பிதை மறந்திடவேண்டாம் .

(31)
குருசரணாம்புஜ நிற்பர பக்தஹ
சம்சாராதசிராத்பவமுக்தஹ |
செந்த்ரியமானச நியமாதேவம்
த்ரக்ஷ்யசி நிஜஹ்ருதயச்தம் தேவம்

O Devotee of the lotus feet of the teacher !May you become liberated soon from the
samsaaraa through the discipline of sense -organs and the mind.You will come to
experience [behold]the Lord that dwells in your heart .(சுவாமி சின்மயானந்தா)

குருவின் பதகமலம் பற்றிய பக்தா!
அறநெறி நின்று, ஐம்புலனடக்கி
விடுபடு பிறவிப் பிணியிலிருந்து ;
உணர்ந்திடுன்னுளமுறை பரம்பொருள்தன்னை !




சுப்பு ஐயா குரலில் ...

Thursday, January 05, 2012

தேவகியின் புலம்பல்

யசோதாவையும், கிருஷ்ணனையும் நினைக்கும் போதெல்லாம், தேவகியையும் நினைக்காமல் இருக்க முடியாது. பரம்பொருளை குழந்தையாகப் பெறுகிற அளவு தவப்பலன் கொண்டவள், அவன் லீலைகளை அருகிலிருந்து அனுபவிக்க முடியாமல் போனது எவ்வளவு வருத்தமான விஷயம்?


பூப்போலச் சிரித்து மயக்கி
தேன்போலப் பேசி இனித்து
மான்போல குதித்துக் களிக்கும் கண்மணியே – உன்னை
காணாமல் கண்ணிரண்டும் உறங்கலையே…

காதோடு கதைகள் பேசி
மனதோடு கவிகள் பாடி
நீராடும் விழியில் ஆடும் கண்மணியே – உன்னை
காணாமல் கண்ணிரண்டும் உறங்கலையே…

வானோடும் நிலவைப் போல
மனதோடும் உன் நினைவு
தேயாமல் வளருதடா கண்மணியே – உன்னை
காணாமல் கண்ணிரண்டும் உறங்கலையே…

விழியோடு இமையைப் போல
கவியோடு பொருளைப் போல
என்னோடு நீ இருந்தால் கண்மணியே – என்
உயிர் தானாய் அமைதி கொள்ளும் கண்மணியே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.babyphotos.co.in/2010/09/baby-lord-krishna-photos.html. இங்கே இன்னும் அழகான படங்களும் இருக்கு.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP