Wednesday, April 27, 2011

சாய்பாபாவின் குரலிலே ஒரு கண்ணன் பாட்டு!

ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கட்கு நல்லடக்க நாளிலே அஞ்சலி!

அவரைப் பற்றி, பலரும் பலவும், புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசினாலும், காணொளியில் நுணுக்கினாலும்....
ஒரே புள்ளி: Sai Baba is "also" a Social Worker! So, let his soul rest in peace!

* "ஸ்வாமி நீலு" என்று கிராமத்துப் பெண்கள் சொல்லும் வறண்ட கிராமக் குடிநீர்
* மாணவர்களிடம் வசூல் செய்யாத "கல்வித் தந்தை"
* நோயாளிகளிடம் வசூல் செய்யாத "மருத்துவத் தந்தை"
* Very few places in India for a free open heart surgery!
* தமிழால் வளர்ந்து தமிழரை அழிப்பது போல், ஆன்மீகத்தால் வளர்ந்து ஆன்மீகத்தை அழிக்காத பான்மை!

பெரியவர் இரணியகசிபு: "அஹம் பிரம்மாஸ்மி = நான் கடவுள்!"
பிள்ளைப் பிரகலாதன்: "மனிதன் குற்றங் குறை உடையவனே!
அவன் 'பகவான்' அல்லன்! பகவானை அடைபவன்!"

வியத்தலும் இலமே! இகழ்தலும் இலமே!
ஒரு ஆன்மா அமைதியுற வேண்டுவோம்!!
சத்ய சாயி பாபா அவர்கட்கு அஞ்சலி!


அவர் குரலிலேயே ஒலிக்கும், கூட்டுப் பாடல், கண்ணன் பாடல்.....இன்று கண்ணன் பாட்டிலே!!




க்ஷீராப்தி சயனா நாராயணா
ஸ்ரீலக்ஷ்மி ரமணா நாராயணா
(திரு-பாற்கடல் துஞ்சிடும் நாராயணா
திரு-மாமகள் கொஞ்சிடும் நாராயணா)

நாராயணா லக்ஷ்மி நாராயணா
நரஹரி ரூபா நாராயணா
(நாராயணா திரு நாராயணா
ஆள்-அரி உருவே நாராயணா)

வைகுண்ட வாசா நாராயணா
வைதேகி மோகன நாராயணா
(வைகுந்த வேந்தமே நாராயணா
நப்பின்னை காந்தமே நாராயணா)

நாராயணா ஹரி நாராயணா
நதஜன பரிபால நாராயணா
(நாராயணா அரி நாராயணா
நாதியில்லார் தாங்கும் நாராயணா)

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!

Monday, April 18, 2011

சுத்தி சுத்தி குழப்பியடிக்கும் ஒரு கண்ணன் பாட்டு!

ஹரிதாசர்கள் பாட்டுன்னா எப்படி இருக்கும்?


கிருஷ்ணா நீ பேகனே பாரோ.


அல்லி நோடலு ராமா இல்லி நோடலு ராமா.


இப்படி பெரும்பாலும் மிகவும் எளிமையாக, கன்னடமே தெரியலேன்னாக்கூட தட்டுத் தடுமாறி, ஓரளவுக்கு புரிஞ்சிக்கக்கூடியதா இருக்கும். ஆனா, இன்னிக்கு பார்க்கப் போகிற பாடல் அப்படி இல்லை.


ஸ்ரீ கனகதாசர் எழுதியுள்ள - ஈதநீக வாசுதேவனு - என்ற இந்த பாடல் - முழுக்க முழுக்க குறியீடுகளால் நிரம்பியுள்ளது. மற்ற பாடல்களைப் போல் எளிதாக விளக்கமுடியாமல் எவ்வளவு விரிவாக சொல்ல வேண்டியிருக்குன்னு நீங்களே பாருங்க. ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து எழுதி, அதன் பொருளை புரிந்து கொண்டு, பிறகு மொத்த சரணத்தையும் ரசிச்சி அனுபவிக்குமாறு இருக்கும். மொதல்லே இந்த பாடலையும், அதன் பொருளையும் பாத்துடுலாம்.


****


ஈதநீக வாசுதேவனு லோகதொடேயா


தாசகொலிது தேரலேறி தேஜி பிடிது நடேசிதாத (ஈதநீக)


உலகத்தைக் காக்கும் கடவுள், இந்த வாசுதேவன் இவனே


தன் பக்தனுக்காக தேரேறி சாரதியாக சென்றவன் இவனே


தனுஜேயாள்வ தன்னநய்யன பிதன முந்தே கௌரவேந்திரன


அனுஜயாளிதவன சிரவ கத்தரிசுதா


அனுஜயாளிதவன பெங்கி முட்டதந்தே காய்தா ருக்மன


அனுஜயாளிதவன மூர்த்தியன்னு நோடிரோ (ஈதநீக)


சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஜயத்ரதனின் தலையை துண்டிப்பேன் - இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சொன்ன அர்ஜுனனை தீக்குளிக்காமல் காத்த ஸ்ரீ வாசுதேவனின் அழகான மூர்த்தியை பாருங்கள் (ஈதநீக)


க்ரூரனாத பணிபபான தருணிஜனு நிரீக்ஷிசி யாக


வீரநெஜ்ஜே எசுகே ஒப்புதன்னு ஈக்ஷிசி


தாருணிய பததளொங்கி சரண பஜப நரன காய்தா


பாரகர்த்தனாத தேவ ஈத நோடிரோ (ஈதநீக)


சூரிய புத்திரனான கர்ணன் போரின்போது நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் எய்தபோது பூமியை காலால் அழுத்தி தேரை கீழே அழுத்தி அர்ஜுனனைக் காத்த ஸ்ரீ கிருஷ்ணனை பாருங்கள் (ஈதநீக)


வ்யோமகேஷ இப்ப தெஷேய ஆமஹா மஹிமேயுள்ள


சாமஜவனு ஏறி பருவ சக்தியனு ஈக்ஷிசி


பிரேமதிந்தா எரவநோட்டி டிங்கரிகன காய்தா


சார்வபௌம படதாதி கேசவன நோடிரோ (ஈதநீக)


ஈசன் இருக்கும் திசையிலிருந்து மிகவும் பலம் பொருந்திய யானையின் மீதேறி வந்து சண்டையிட்ட (பகதத்தனின்) விஷ்ணு அஸ்திரத்தை தன் மார்பில் மாலையாக ஏந்தி அர்ஜுனனைக் காத்த அந்த கேசவனை பாருங்கள் (ஈதநீக)


***


என்னடா, பாட்டுக்கும் பொருளுக்கும் சம்மந்தம் இருக்கற மாதிரியே தெரியலையேன்னு நினைக்கிறீங்களா? பொறுமை பொறுமை.


விளக்கத்துக்கு போவதற்கு முன், இந்த பாட்டின் காணொளியை பாத்துடுவோம். PBS தன் அருமையான குரலில் மிகமிக பக்தி/ உணர்ச்சிபூர்வமாக பாடி, ராஜ்குமார் நடித்துள்ள காட்சியில் இந்தப் பாடல்.



***


இப்போ பாடலின் விளக்கம். முதலில் பல்லவி, பிறகு ஒவ்வொரு சரணமா பார்க்கலாம். ரெடி? ஜூட்.


பல்லவி:


அருஞ்சொற்பொருள்:


ஈத = இவர்


ஈக = இப்போ


தாசகொலிது = தாச + கொலிது = பக்தன், இந்த இடத்தில், அர்ஜுனன். So, அர்ஜுனனைக் காப்பாற்ற


தேஜி = குதிரை


விளக்கம்:


தன் பக்தன் அர்ஜுனனைக் காப்பாற்ற, தேரிலேறி பார்த்த-சாரதியாய் சென்ற, இந்த உலகத்தை ரட்சிக்கும் வாசுதேவன் இவனே.


சரணம் 1:


அருஞ்சொற்பொருள்:


தனுஜே = த + அனுஜே = அரக்கன் + சகோதரி = அரக்கனின் சகோதரி = (மகாபாரதத்தில் வரும்) ஹிடிம்பா


ஆள்வ தன்னநய்யன பிதன = ஆள்வ + அண்ண + அய்யன + பிதன = கணவனின் அண்ணனின் தந்தையின் தந்தை. அதாவது, ஹிடிம்பாவின் கணவன் பீமன், அவர் அண்ணன் தருமர், அவர் தந்தை யமதேவன் (அம்சம்), அவர் தந்தை சூரியதேவன்.


கௌரவேந்திரன அனுஜெயாளிதவன = கௌரவேந்திரனின் + அனுஜே + ஆளிதவன. அதாவது, துரியோதனின் + சகோதரியின் + கணவனின் = ஜயத்ரதனின்


மூன்றாம் வரி:


அனுஜெயாளிதவன பெங்கி முட்டதந்தே காய்த


அனுஜே + ஆளிதவன = சகோதரியின் + கணவன் = (கிருஷ்ணனின் சகோதரி) சுபத்ராவின் கணவன் அர்ஜுனன்.


பெங்கி = நெருப்பு


முட்டதந்தே = சுடாமல்,


எரிக்காமல் காய்த = காப்பாற்றிய அதாவது, அர்ஜுனனை நெருப்பு சுடாமல் காப்பாற்றிய


நான்காம் வரி:


அனுஜே + ஆளிதவன = சகோதரியின் + கணவன் = (ருக்மனின்) சகோதரி ருக்மிணி. அவர் கணவர் கிருஷ்ணன்.


மூர்த்தியன்னு நோடிரோ = ரூபத்தை பாருங்கள்.



விளக்கக் கதை:


சக்கர வியூகத்துக்குள் நுழைந்த அபிமன்யு, வெளியில் வர முடியாதவாறு அந்த வியூகத்தை மூடிய ஜெயத்ரதனே, அபிமன்யுவின் மரணத்திற்கு காரணம் என்ற அர்ஜுனன், அடுத்த நாள் மாலைக்குள், ஜயத்ரதனை கொல்வேன் என்று சபதம் செய்தான். அப்படி கொல்ல முடியாவிடில், அன்று மாலையே நெருப்பில் குதித்து தன்னுயிரையும் மாய்த்துக் கொள்வேன் என்றும் கூறினான். பின்னர் கிருஷ்ணனின் உதவியால், ஜயத்ரதனை கொன்றான் அர்ஜுனன். இப்படியாக, அர்ஜுனன் உயிருக்கு பங்கம் வராமல், அர்ஜுனனைக் காப்பாற்றினான் கிருஷ்ணன்.


சரணம் 2 :


அருஞ்சொற்பொருள்:


க்ரூரனாத = மிகவும் அபாயமான


பணிபபான = பணிப + பாண = நாகம் + அஸ்திரம் = நாகாஸ்திரம்


தருணிஜனு = தருணி + ஜனு = சூரியனுக்கு + பிறந்த. அதாவது, சூரியனுக்கு பிறந்த, கர்ணன்.


நிரீக்ஷிசி = தக்க சமயத்துக்கு, தக்க சமயத்தில்


வீரநெஜ்ஜே எசுகே = மிகவும் வீரத்துடன், எய்த அம்பு


பப்புதன்னு = வருவதை


ஈக்ஷிசி = பார்த்து


தாருணிய பததளொங்கி = பூமியை காலால் அழுத்தி


சரண பசப நரன காய்த = சரணாகதி செய்த நரனை (அர்ஜுனனை) காப்பாற்றிய


பாரகர்த்த = அனைத்து செயல்களுக்கும் காரணமானவன். அதாவது, பிறப்பு, இறப்பு, காத்தல் ஆகிய அனைத்திற்கும் காரணமான


விளக்கக் கதை:


நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் மட்டும்தான் பிரயோகிக்க வேண்டுமென்றும், அதுவும் ஒரே ஒருமுறைதான் பயன்படுத்த வேண்டுமென்றும், கர்ணனிடம் குந்தி வரம் பெற்றிருந்தார். அதன்படி, கர்ணன் அதை பிரயோகிக்கும்போது, அர்ஜுனனைக் காக்க வேண்டி, கிருஷ்ணன், பூமியை அழுத்தி, தேரை சற்று கீழே அழுத்தி, அர்ஜுனன் மார்புக்கு வந்த அந்த நாகாஸ்திரத்தை, கிரீடத்தில் படுமாறு செய்து, அர்ஜுனனைக் காப்பாற்றினார்.


சரணம் 3 :


அருஞ்சொற்பொருள்:


வ்யோமகேஷ = வ்யோம + கேஷ = காற்று + முடி. அதாவது, தன் தலைமுடியை காற்றில் வலை போல் விரித்து, பாய்ந்து வரும் கங்கையை அடக்கியதால், சிவனுக்கு 'வ்யோமகேசன்' என்று பெயர்.


இப்ப தெஷேய = இருக்கும் திசையில்.


சாமஜ = யானை


சக்திய = (இந்த இடத்தில்) நாராயண அஸ்திரம்


எரவநோட்டி = இடையில் (நடுவில்) புகுந்து


டிங்கரிகன = தாசனை (பக்தனை)


விளக்கக் கதை:


சிவன் இருக்கும் திசை. அதாவது கைலாயம் இருக்கும் திசை வடகிழக்கு. அந்த திசையில் இருந்த ப்ரக்ஜ்யோதிஷா என்னும் ஊரின் அரசன் பகதத்தன். தன் யானையான 'சுப்ரதீபன்' மீதேறி, கௌரவர்கள் சார்பாக போரிட்ட மாவீரன். அந்தப் போரில் ஒரு முறை, பகதத்தன், வைஷ்ணவாஸ்திரம் என்னும் அஸ்திரத்தை ஏவ, அதனால் அர்ஜுனனுக்கு கண்டிப்பாக மரணம் ஏற்படுமென்று தெரிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன், நடுவில் புகுந்து அதை தன் மார்பில் ஏற்றார். அது அவர் கழுத்தில் மாலையாக விழுந்தது.


***


அவ்வளவுதான். இப்படியாக, இந்த பாட்டில், அர்ஜுனனைக் காப்பாற்றிய கிருஷ்ணனின் மகிமையை புகழ்ந்து பாடியுள்ளார் ஸ்ரீ கனகதாசர். இப்போ மறுபடி அந்த காணொளியை பாருங்கள். சூப்பரா புரியும்.


அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.


***


Tuesday, April 12, 2011

இராமன் கதை கேளுங்கள்! இராமா கனவேமிரா!

கண்ணன் பாட்டு நேயர்கள் அனைவருக்கும் இனிய இராம நவமி வாழ்த்துக்கள்!
இன்றைய கண்ணன் பாட்டு, இராமன் பாட்டு! இராகவன் பாட்டு! அதுவும் இசைஞானி இளையராஜா இசையில்...


சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்) திரைப்படம் அனைவருக்கும் தெரியும்! அவ்வப்போது கமலஹாசனின் நடிப்புத் திறனை உண்மையாலுமே உரைகல்லால் உறைத்துக் காட்டும் சிலவே சில படங்களுள் இதுவும் ஒன்று! விஸ்வநாத் இயக்கம் அல்லவா!

* அன்று ஒரு இராகவன், வயிற்றில் லவ-குசர்களோடு அவளைக் காட்டுக்கு அனுப்பினான்!
* இன்று சினிமாவில், லவனோடு கூடிய இந்தச் சீதையை இராகவன் கைப்பிடிக்கிறான்!


சற்றே குன்றிய கமல், மகனுடன் விதவையாய் நிற்கும் ராதிகா - இவர்களுக்குள் என்ன பெருசா பொருத்தம் இருக்கு?
= பொருத்தம் இருந்து தானா காதல் வாழ்க்கை மலருது?
* சீதை இராமனை விட மூத்தவள் அல்லவா!
* அவள் பொன், இவன் கரி அல்லவா!

ஆனாலும் ராதிகா படும் துன்பங்களுக்காக, கமல், இராமனிடம் வேண்டுகிறான்(ர்), அல்லாவுக்குத் தீ மிதிக்கிறான்(ர்)! ஆனால் ஒன்றும் நடக்கவில்லை!

பாட்டி, அவளுக்கென்று ஒரு துணை வேண்டுமெனச் சொல்ல, ஒரு விவரமும் புரியாத கமல்...
எம்பெருமானுக்கும் தாயாருக்கும் நடக்கும் திருமாங்கல்ய தாரணத்திலே, அதே தாலியைப் பற்றி அந்தப் பேதைக்குச் சூட்டுவதும்...
இராகவன் சீதையை மணக்கும் காட்சி போலவே, கமல் ராதிகாவை மணக்கும் காட்சி, அழகாகச் சித்தரித்து வரும் சித்திரம்! தெலுங்கில் பாடல் இன்னும் இனிமையாக இருக்கு! = ராமா கனவேமிரா!


ஒரு கதாகாலட்சேபம், நாதஸ்வர-தவில், வில்லுப்பாட்டு, வீணை மட்டல் என்று பலவும் கலந்து, சினிமா இசை + மரபு இசை என்று இணைத்துக் கொடுத்திருப்பார் இளையராஜா!
அதைச் செவ்வனே செய்து முடித்திருப்பார் SPB! சிரிப்பு, சுயம்வரக் கேலி, பக்தி, உருக்கம், திருமாங்கல்ய தாரண ஏக்கம் என்று அத்தனையும் கலந்து...

இதோ, இராம நவமி அன்று அவள்-இராகவன் திருக்கல்யாண வைபோகத்தை...
பாட்டிலே பாவித்துப் பாருங்கள்! - பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே!

சாஸ்திர விரோதமான சினிமா என்றெல்லாம் எண்ணாமல்,
அதிலும் எம்பெருமானையே காணும் உள்ளம், அதுவே இராகவனைப் பற்றும் உள்ளம்...
இராமன் கதை கேளுங்கள்! இராமா கனவேமிரா!


(Telugu Version amidst Epic Scenes)


or
(Tamil Version just audio)


ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ
ரகுராமன் கதை கேளுங்கள்!
(ராமன் கதை கேளுங்கள்)

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை
அவள் விழிகண்டு, குடிகொண்டு, மணமாலை தந்த
(ராமன் கதை கேளுங்கள்)

(சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க,
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி...
கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்)

ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ
ரகுராமன் கதை கேளுங்கள்!
(ராமன் கதை கேளுங்கள்)

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்
இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

நடந்தாள்...சீதை நடந்தாள்
விழி மலர்ந்தாள்...சபை அளந்தாள்
வரவு கண்டு, அவள் அழகு கண்டு சிவ
தனுசின் நாணும் வீணை போல அறுந்தது!
(ராமன் கதை கேளுங்கள்)

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார் - சிலர் எழுந்தார்
தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா?
ஆஹா வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா?
(ராமாய ராம பத்ராய ராமச் சந்தராய நமஹ)

தசரத ராமன் தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

படபட படபட படபட படபட
ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!

ஜெயஜெய ராமா சீதையின் ராமா
ஜெயஜெய ராமா சீதையின் ராமா
தசரத ராமா ஜனகனும் மாமா
தசரத ராமா ஜனகனும் மாமா


சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராமா கல்யாண வைபோகமே!
சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராமா கல்யாண வைபோகமே!

காணக் காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராம கல்யாண வைபோகமே!

ராமனே அதோ பாரப்பா.....
அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை
அவள் விழிகண்டு, குடிகொண்டு, மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்!
ராமன் கதை கேளுங்கள்!

படம்: சிப்பிக்குள் முத்து
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SPB)
வரிகள்: வைரமுத்து
ராகம்: ரீதி கெளளை


* ஆயிரம் மனஸ்தாபங்கள் இருப்பது போல் தெரிந்தாலும்...
* அவனை விட இவள் மூத்தவளே என்றாலும்...
* அவன் இவளைப் புரிந்து கொண்டானோ, இவள் அவனைப் புரிந்து கொண்டாளோ...
* அவள் கற்பை இவன் சோதித்தானோ, அவன் கற்பை இவள் காத்தாளோ...
* இவள் காடேகினாளோ, இல்லை அவன் தனிமைக் காட்டுக்குள் வாழ்ந்தானோ...

அவனுக்கு இவள்!
இவளுக்கு அவன்!

இந்த இணை ஜோடி மயில்கள்...திவ்ய தம்பதிகள்...இவர்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!

Monday, April 11, 2011

பாப்பா ராமாயணம்


 பாப்பா ராமாயணம்
(பன்னிரண்டாம் பகுதி)

(ஸ்ரீராமநவமி எனும் புனிததினமான இன்று, முதல் பகுதியிலிருந்து இந்த பன்னிரண்டாவது பகுதிவரை ஒருவரிவிடாமல் ஒருமுறை படிப்பவர்கள், 1008 முறை ராமநாம உச்சாரணம் செய்த  திருப்தியையும் பெறலாம்)


யுத்தகாண்டம்


  விபீஷணர் வன்முறை வெறுப்பவராம்;
தர்மத்தைக்    கடை    பிடிப்பவராம்.

   அண்ணனைத் திருத்திட முயன்றனராம்;
      பாசத்தால்  பொறுமையாய் இருந்தனராம்.

நீதிநெறியை            நினைவூட்டினராம்;
சீதையை     விடுவிக்க வேண்டினராம்

தம்பியை தசமுகன் வெறுத்தனராம் ;
சீதையை        விடுவிக்க மறுத்தனராம்.

விபீஷணர் வேந்தனைத் துறந்தனராம;
ராமரைச்      சந்திக்க    விரைந்தனராம்.




நாயகனைப்    புகலடைந்தனராம்;
நடந்ததை அவருக்கு நவின்றனராம்.

   அனைவரும்    கற்கள் சுமந்தனராம்.      .
             பாலம்    அமைக்க  முனைந்தனராம்;                 


  அணிலாரும் மண் தந்து உதவினராம்.
அதன் செயலை ராமர் புகழ்ந்தனராம்.



அன்பாய்      அணிலைத்    தடவினராம்;
முதுகில் முக்கோடுகள் பதித்தனராம்.

அனைவரும் பாடுபட்டுழைத்தனராம்;
கடல்மேல்     பாலம்   அமைத்தனராம்.



சுலபமாய்க்     கடலைக் கடந்தனராம்;
லங்காபுரிதனை     அடைந்தனராம்.

  ராவணன் சேனையை அனுப்பினராம்;
  வானரருடன்     போர்  தொடுத்தனராம்.

     இந்த்ரஜித்  லக்ஷ்மனனைத் தாக்கினராம்;
    மூர்ச்சித்து லக்ஷ்மணன் சாய்ந்தனராம்.



மருத்துவர்     நாடியைப்  பார்த்தனராம்;
  சஞ்சீவினி      மூலிகை  வேண்டினராம்.

அனுமன்       வடதிசை       பறந்தனராம்;.
   சஞ்சீவினிமலை  கொண்டு வந்தனராம்.

லக்ஷ்மணன்   புத்துயிர்       பெற்றனராம்;
         கொடியோரைப் போரிட்டுக் கொன்றனராம்.

   தசமுகன்  தலைகள்   தாழ்ந்தனராம்.
   தாளாத்   துயரத்தில்  ஆழ்ந்தனராம்.

     சினத்துடன்   போர்க்களம் புகுந்தனராம்;
     ராமருடன்   கடும்போர்  புரிந்தனராம்.

     ராமர்   பாணமழை    பொழிந்தனராம்;
     ராவணன்   வலிமை   இழந்தனராம்.




தீயோனை    ராமர்       வீழ்த்தினராம்;
தூயரை இன்பத்தில் ஆழ்த்தினராம்.

   ஜானகி பதியோடிணைந்தனராம்.        
                    ஆனந்தக்  கடலில் நீந்தினராம்.                          



           விபீஷணனை   ராமர்  அழைத்தனராம்;
          இலங்கையின் வேந்தனாயமர்த்தினராம்;

அனைவரும் இலங்கை துறந்தனராம்;
அயோத்தி   நோக்கிப்    பறந்தனராம்.




       பரதன்  அண்ணனை அணைத்தனராம்;
   அரச பொறுப்பை ஒப்படைத்தனராம்.

ராமரை வசிஷ்டர் அழைத்தனராம்;
            அரியணையில் சீதையோடமர்த்தினராம்.

பட்டாபிஷேகம் செய்வித்தனராம்;
அனைவரும் கண்டு களித்தனராம்.





 ராமர் ஆட்சிப்பொறுப்பேற்றனராம்
    நீதிதவறாமல்      நாடாண்டனராம்.      

          மக்களும் குறையின்றி வாழ்ந்தனராம்;
           'ராம ராஜ்யம் '   என்று புகழ்ந்தனராம்.     

ராம ராம ஜெய ராஜாராம்;
  ராம ராம ஜெய சீதாராம்.

ராம ராம ஜெய ராஜாராம்;
ராம ராம ஜெய சீதாராம்.
----------

Sunday, April 10, 2011

பாப்பா ராமாயணம்


பாப்பா ராமாயணம்
(பதினொன்றாம் பகுதி) 

சுந்தரகாண்டம் (பாகம்-8 )

சர்க்கம்-49 முதல் - 68 வரை
அரக்கனை அனுமன் ஏறிட்டனராம்;
    வலிமையுணர்ந்து வியப்புற்றனராம்.

           ப்ரஹஸ்தன் அனுமனை அணுகினராம்;
''ஏன் வந்தாய்?'' என வினவினராம்.

மாருதி மன்னனை நோக்கினராம்;
    தன் நிலையைத் தெளிவாக்கினராம்.

          ராமரின் பெருமையைப் பகர்ந்தனராம்;
அவரது வீரத்தைப் புகழ்ந்தனராம்.

''சீதையின் பதி''எனக் கூறினராம்;
      சீதையை விடுவிக்கக் கோரினராம்.

                 மோஹத்தால் மன்னன் மதி கெட்டனராம்;
                    ''குரங்கைக்கொல்''என்றாணை இட்டனராம்.   

     தசமுகன் தம்பி விபீஷணராம் ;           
    ''தவறு தூத வதம்''என்றனராம்  .           

  நீதிதனை நினைவூட்டினராம்;              
                  நன்மொழியால் மனம் மாற்றினராம்.               

                      அரக்கன்  சினம் சற்று தணிந்தனராம்;                 
                    மரணதண்டனையைக் குறைத்தனராம்.           

                         தீச்சொல்லால் அனுமனைத் தூற்றினராம்;           
                வாலினைக் கொளுத்திடக் கூறினராம்.          

               அரக்கரும் அனுமனைப் பிடித்தனராம்;           
         வாலைத் தீஇட்டுக் கொளுத்தினராம்.       

       மாருதி கட்டைக் களைந்தனராம்;              
            எரிந்திடும் வாலுடன் அலைந்தனராம்.          


      லங்காபுரிதனைக் கொளுத்தினராம்;
      கிஷ்கிந்தா செல்லக் கிளம்பினராம்.

தாயை எண்ணித் தயங்கினராம்;
       ''தீயுண்டதோ?''எனக் கலங்கினராம்.

             அன்னையை தரிசிக்கத்துடித்தனராம்;
         அசோகவனத்துக்கு விரைந்தனராம்.

நாயகியைக் கண்ணுற்றனராம்;
       நிம்மதிப் பெருமூச்சு விட்டனராம்.

''தீயைத்தீ சுடுமோ?'' என்றனராம்;
நெஞ்சார வாழ்த்தி நின்றனராம்.

       அன்னையிடம் விடை பெற்றனராம்;
            அண்ணலைக்காணப் புறப்பட்டனராம்.


கடலைத் தாவிக் கடந்தனராம்;
நண்பரைநோக்கி நடந்தனராம்.

வானரத்தோழரைக் கூடினராம்;
           சீதையைக் கண்டதாய்க் கூறினராம்.

                கூட்டமாய்     ராமர்முன் சென்றனராம்;
          ''கண்டேன் சீதையை!'' என்றனராம்.

               ராமரின்   மகிழ்ச்சியைக் கண்டனராம்;
                  அளவில்லா ஆனந்தம் கொண்டனராம்.

             நடந்ததை விவரமாய் விளக்கினராம்;
   சீதை கூறியதை உரைத்தனராம் .

        சூடாமணிதனைக் கொடுத்தனராம்;
             ராமர் அதைக்கையில் எடுத்தனராம்.

            மார்புடன் அதனை அணைத்தனராம்;
               சீதையைக்கண்டாற்போல் களித்தனராம்.
                                                                                                                   

              அன்புடன் அனுமனைத் தழுவினராம்;
               கண்ணீரால் அவனுடல் கழுவினராம்.




                        சீதையின் நிலையெண்ணிக் கலங்கினராம்;
     பேதையை மீட்கக் கிளம்பினராம்.

(ராம ராம ஜெய.....சீதாராம்)
       

Saturday, April 09, 2011

பாப்பா ராமாயணம்-(பத்தாம்பகுதி)


பாப்பா ராமாயணம்-(பத்தாம்பகுதி)

சுந்தரகாண்டம்-(பாகம்-7 )

சர்க்கம்-43  -முதல் - 48 - வரை


  அஞ்சனிமகன் மனம் மகிழ்ந்தனராம்;
மண்டப   உச்சியில்  அமர்ந்தனராம்.

''மாருதி நான்''   என  முழங்கினராம்;
     ''வாயுவின் மகன்''  என விளக்கினராம்.

பேருரு    எடுத்துத் தோன்றினராம்;
    ''ராமர்க்கே ஜெயம்''எனக் கூவினராம்.

காவலர் கூவலைக் கேட்டனராம்;
கேசரிமைந்தனைத்  தூற்றினராம்.

பலபெருமாயுதம்   ஏந்தினராம் ;       
         அனுமனை முற்றிலும் சூழ்ந்தனராம்.      

ஆயுதங்கொண்டு   தாக்கினராம்;         
           மாருதி தூண் ஒன்றைத்தூக்கினராம்.         

  வேகமாய்ச் சுழற்றியடித்தனராம்;          
         பகைவரைக் கொன்று ஒழித்தனராம்.          

                     ப்ரஹஸ்தனின் மகனிதை கண்டனராம்;               
          'ஜம்புமாலி'    என்பதவன் பெயராம்.             

                       அனுமன்மேல் பாணமழை பொழிந்தனராம்;           
                  அஞ்சனிமகன் வெகுண்டெழுந்தனராம்.             

              இரும்புலக்கையொன்றை வீசினராம்;            
         எதிரியைக்கொன்று வீழ்த்தினராம்.             

      செய்திகேட்டு வேந்தன் சீறினராம்;             
ஏழு  அரக்கர்களை ஏவினராம்.               

   ஏழ்வரும்   மந்திரி புத்திரராம்;                 
            மழையென அம்புகள் பெய்தனராம்.                

                வானரர் வலிமையைக் காட்டினராம்;                
                       அனைவரையும் அடித்துப் போட்டனராம்.               

                      கொடியோரைக் கொன்று குவித்தனராம்;               
            தகவலறிந்த மன்னன் தவித்தனராம்.             

       தசமுகன் துயரத்திலாழ்ந்தனராம்;               
            படைத்தலைவர்களைக் கூட்டினராம்.           

             அவர்களில் ஐவரைத் அழைத்தனராம்;            
                குரங்கைப்பிடித்துவரப் பணித்தனராம்.              

       ஐவரும் படையுடன் கிளம்பினராம்;         
       அனுமனைப்பிடிக்க முயன்றனராம்.          

     பாய்ந்து படுகாயப் படுத்தினராம்;              
      மாருதி கடும்போர் தொடுத்தனராம்.         

ஐவரையும் வதம் செய்தனராம்;            
தோரணவாயில்       எய்தினராம்.           

                  தசமுகன்  நிலைகுலைந்தலைந்தனராம்;            
           தன்மகன்  அக்ஷனை அழைத்தனராம்.            

                     அனுமனை வதம் செய்யப் பணித்தனராம்;             
                  அக்ஷனும்          ஆயுதமெடுத்தனராம்.                


வானரருடன்  போர் புரிந்தனராம்;       
       பாணங்கள் சரமாரிப் பொழிந்தனராம்.     

        வாயுபுத்திரன் கொதித்தெழுந்தனராம்;      
                 அக்ஷனைக் கால்களிடைப் பிடித்தனராம்.      

கைகளால் உயரத்தூக்கினராம் ;        
பலமுறை சுழற்றி வீசினராம்.           

       விழுந்த அரக்கன்மகன்  மாண்டனராம்;       
மாருதியும்  வாயில் மீண்டனராம்.      

     அறிந்தமன்னன் மனம்பதைத்தனராம்;  
          அதிர்ச்சியால் செயலற்றிருந்தனராம்.      

இந்திரஜித் அவனது புத்திரராம்;        
                 இந்திரனைப் போரில் ஜெயித்தவராம்.             

                     ராவணன்      மகனை      அழைத்தனராம்;          
                          அனுமனை       அழித்திட       அனுப்பினராம்.            

            இந்த்ரஜித் ஆயுதங்கள் எடுத்தனராம்;       
                  அனுமனைவதம் செய்யத் துடித்தனராம்.      

                 ப்ரம்மாஸ்திரந்தனைத் தொடுத்தனராம்;      
  வாயுபுத்ரன்மேல் விடுத்தனராம்       

           அனுமன் கட்டுண்டு விழுந்தனராம்;         
              பொறுமையாய் கட்டுபட்டிருந்தனராம்.      


                  கட்டவிழ்வதை அவர் உணர்ந்தனராம்;     
     கட்டுண்டதுபோல் நடித்தனராம்.    

              மன்னர்முன் சமர்ப்பிக்கப் பட்டனராம்;
    ''யார்?''என வினவப்பெற்றனராம்.

          ''தூதன் நான் ''என்றவர் நவின்றனராம்
        ''சுக்ரீவர்   அனுப்பினர் '' என்றனராம்.

(ராம ராம ஜெய...சீதாராம்)

Friday, April 08, 2011

பாப்பா ராமாயணம் (ஒன்பதாம்பகுதி)


            பாப்பா ராமாயணம் (ஒன்பதாம்பகுதி)

    சுந்தரகாண்டம்-(பாகம்-6 )

சர்க்கம்-  38 -முதல் - 42  - வரை
        அனுமன் ''அடையாளம்'' கேட்டனராம்;
''ராமர்க்கு அளிப்பேன்''என்றனராம்.

     சீதை முன்னினைவினிலாழ்ந்தனராம்;
கண்ணீரால் துகில் நனைந்தனராம். 

     நிகழ்ந்ததை அனுமர்க்குக் கூறினராம்;
  பதிக்கு நினைவுறுத்தக் கோரினராம்.

          குடிலொன்றிலவள் அமர்ந்திருந்தனராம்;
மடியில் ராமர் துயின்றிருந்தனராம்.

காகம் ஒன்றைச் சீதை கண்டனராம்;
       தேகத்தை அது கொத்தத் துடித்தனராம்.

உதிரத்தினாலுடை நனைந்தனராம்;
அதனால் பதி துயில்கலைந்தன ராம்.

        நிகழ்ந்ததை அறிந்தவர் வெகுண்டனராம்;
         தர்ப்பாசனப்புல்லொன்றை எடுத்தனராம்.

புல்லைக் கணையாக்கி எய்தனராம்;
                   காகத்தின் கண்ணொன்றைக் கொய்தனராம் .

      இதனை அனுமன் செவி மடுத்தனராம்;
     நினைவுறுத்த வாக்கு கொடுத்தனராம்.

சீதை சூடாமணி களைந்தனராம்;      
பதியிடமளித்திடப் பணித்தனராம்.
   

வீரர் சூடாமணி பெற்றனராம்;      
         விரலில் அதையணிந்து நின்றனராம்.

    வைதேகியின் பதம் பணிந்தனராம்;
வலம் வந்தே கரங்குவித்தனராம்.

              அண்ணலை மனத்தால் துதித்தனராம் ;
ஆனந்தக்கண்ணீர் வடித்தனராம்.

(ராம ராம ஜெய ......சீதாராம்)

அன்னைக்கு தைரியமூட்டினராம்;
அபலைக்கு ஆறுதல் கூறினராம்.

         வானரர் வலிமையை விளக்கினராம்;
'உதவுவர்'என வாக்களித்தனராம்.

      'வெற்றி உறுதி' என முழங்கினராம்;
         'அழிவர் அரக்கர்'என மொழிந்தனராம்.

                               துணிவினைத் துணைகொள்ளத் தூண்டினராம்;
                   கவலையைக் களைந்திட வேண்டினராம்.

           வைதேகி உத்சாகம் அடைந்தனராம்;
               வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினராம்.

           அனுமன் வேகமாய்த் தாவினராம்;
    மரங்களைப் பிடுங்கி  வீசினராம்.


  மண்டபங்கள்பல இடித்தனராம்;
     அசோகவனத்தை அழித்தனராம்.

             கோட்டை வாயிலில் அமர்ந்தனராம்;
             அரசனைக் காணக் காத்திருந்தனராம்.

          ஓசையால் அரக்கியர் விழித்தனராம்;
         வனத்தின் அழிவினை அறிந்தனராம்.

        வானரச்செயல் என உணர்ந்தனராம்;
        வேந்தனுக்குரைக்க விரைந்தனராம்.

செவியுற்ற ராவணன் சீறினராம்;
           குரங்கைக் கொன்றுவிடக்  கூறினராம்.

கிங்கரர் ஆயுதமெடுத்தனராம்;      
 அஞ்சனி மகனை அடித்தனராம்.    

             கோபத்தால் மாருதி கொதித்தனராம்;     
கோர உருவம் எடுத்தனராம்.         

''ராமர்க்கே வெற்றி'' என்றனராம்;  
   தோரண வாயிலில் நின்றனராம்.    

இரும்பு உழல்தடி எடுத்தனராம்;    
    தாக்கிய கிங்கரரை அடித்தனராம்.     

    அடிபட்டனைவரும் இறந்தனராம்;      
அரசன் செவியுற்றதிர்ந்தனராம்.         

       ப்ரஹஸ்தனின்  மகனை ஏவினராம்;      
       ''குரங்கைக் கொல்''எனக் கூவினராம்.     

(ராம ராம ஜெய ....சீதாராம்)

Thursday, April 07, 2011

பாப்பா ராமாயணம்(எட்டாம்பகுதி)


              பாப்பா ராமாயணம்(எட்டாம்பகுதி)

                    சுந்தரகாண்டம்(பாகம்-5 )

சர்க்கம் -28-- முதல்  -37-    வரை
  மரத்தினை  மைதிலி நெருங்கினராம்;  
            கரத்தால் கிளையொன்றைப் பிடித்தனராம்.

  முடியினைக் கயிறாய் முறுக்கினராம்;
     தூக்கிட்டுக்கொள்ளத் துணிந்தனராம்.      

   நாதனை நெஞ்சினில் நினைத்தனராம்.
  நற்சகுனம் பல கண்டனராம்.                   

(ராம ராம ஜெய ....சீதாராம்)

இடக்கண் துடிப்பதை உணர்ந்தனராம்;
இடப்புயமுந்துடிப்பதுணர்ந்தனராம்.       

இடத்தொடையுந்துடிக்க நின்றனராம்;
ஆடை நழுவிடக் கண்டனராம்.             

சகுனங்களால் மனம் மகிழ்ந்தனராம்;  
நடக்கும் நல்லதென நினைத்தனராம்.

கலக்கமும் கவலையும் நீத்தனராம்;   
அமைதியால் முகமலர் பூத்தனராம்.    

மாருதி மறைவாய் அமர்ந்தனராம்;     
நிகழ்வதெல்லாம் பார்த்திருந்தனராம்.

உத்தமி உள்ளத்தை உணர்ந்தனராம்;
ஆறுதல் கூறிடத் துடித்தனராம்.           

அரக்கியர் உறங்கிடக் கண்டனராம்;
தக்க தருணமென எண்ணினராம்.     

நம்பிக்கைப் பெறவழி தேடினராம்;   
ராமரின் பெருமையைப் பாடினராம்.

(ராம ராம ஜெய......சீதாராம்)

தனக்குத்தானே பேசிக்கொண்டனராம்;
     சுருக்கமாய் நிகழ்ந்ததை நவின்றனராம்.

      தான்வந்த நோக்கத்தை மொழிந்தனராம்;
செவியுற்ற சீதை நிமிர்ந்தனராம்.          


கவனமாய்ப் பார்வையிட்டனராம்;    
குரங்கொன்றைக் கண்ணுற்றனராம்.

வானரக்குரல்கேட்டு வியந்தானராம்;
       செவியுற்ற செய்தியால் மகிழ்ந்தனராம்.

கனவென்றையம் கொண்டனராம்;   
''துயிலின்றிக் கனவேது?''என்றனராம்.

     தெய்வத்தை மனத்தால் தொழுதனராம்;
   கேட்டவை மெய்த்திட வேண்டினராம்.

மாருதி கீழே இறங்கினராம்;                   
   மைதிலியை மெல்ல நெருங்கினராம்.

    பணிவாய்க் கைகூப்பி வணங்கினராம்;
இனிமையாய்ப் பேசத்துவங்கினராம்.

இதுவரை நடந்ததை விளக்கினராம்;
சீதையின் அச்சத்தைப் போக்கினராம்.

சீதையின் அருகில் சென்றனராம்      
அன்னையோ ஐயம் கொண்டனராம்.

'ராவணனோ?'என பயந்தனராம்;         
அனுமன் அவள்மனமறிந்தனராம்.     

'ராம தூதன் நான்' என்றனராம்;             
ராமர் பணித்ததைப் பகர்ந்தனராம்.  

வைதேகி வினாபல வினவினராம்;
வாயுமகனும் விடையளித்தனராம்.

ராமலக்ஷ்மணரைப் புகழ்ந்தனராம்;
அங்க அடையாளம் பகர்ந்தனராம்.

கணையாழிதனை எடுத்தனராம்;       
ராமரளித்ததெனக் கொடுத்தனராம்.



கணையாழியை சீதை வாங்கினராம்;
            கணவரையே கண்டதுபோல் களித்தனராம்.

   அனுமனின் அன்பால் நெகிழ்ந்தனராம்;
  வீரனின் வலிமையை வியந்தனராம்.

,'வருவாரோ,பதி?'என விசும்பினராம்;  
'காண்பேனோ?' எனக்கதறினராம்.       

கேசரி நந்தனன் குனிந்தனராம்;       
முதுகிலமர்ந்திடக் கூறினராம்.        

     'சுமந்துசெல்வேன்'என உரைத்தனராம்;
அமர்ந்திட அன்னை மறுத்தனராம்.  

    அனுமன் ஐயம் நீக்க  நினைத்தனராம்;
விசுவரூபத்தில்  நின்றனராம்.              



அன்னை அனுமனைப் புகழ்ந்தனராம்;
அவர்மேல் அமரவோ மறுத்தனராம்.  

'பதி மீட்பார்' எனப் பகர்ந்தனராம்;         
       அனுமனுமவள் கற்பை உணர்ந்தனராம்.

(ராம ராம ஜெய...சீதாராம்)

Wednesday, April 06, 2011

பாப்பா ராமாயணம் (எழாம்பகுதி)


             பாப்பா ராமாயணம் (எழாம்பகுதி)

                   சுந்தரகாண்டம் (பாகம்-4 )

சர்க்கம்-21-முதல் -27-வரை


செவியுற்ற சீதை சினந்தனராம்;              
தீயைத் தொட்டதுபோல் துடித்தனராம்.

         அரக்கன்முன் துரும்பினைப் போட்டனராம்;
அதற்கவன் சமமெனக் காட்டினராம்.      

"ராமரே,பதி!"எனக்கூவினராம்;                  
நெருங்கினால் அழிவெனச் சீறினராம்.

'ராமபாணம்'பற்றி விளக்கினராம்;         
"தோல்வி திண்ணம்"என சபித்தனராம்.

   செவியுற்ற ராவணன் வெகுண்டனராம்;
இரண்டுமாத கெடு வைத்தனராம்.        

முடியுமுன் இணங்கிடக் கூறினராம்;  
மறுத்தால் மரணமெனக் கூவினராம்.


அன்னையோ அஞ்சாமல் நின்றனராம்;
"அழிவுக்கு வழி இது"என்றனராம்.             

கோபத்தால் ராவணன் கொதித்தனராம்;
 அங்குமிங்கும் நிலையற்றலைந்தனராம்.

கோர அரக்கியரை விளித்தனராம்;        
சீதைமனத்தை மாற்றப் பணித்தனராம்.


செல்ல மனமின்றி நகர்ந்தனராம் ;
மாளிகை நோக்கி நடந்தனராம்.      

       அரக்கியர் அன்னையைச் சூழ்ந்தனராம்;
            ராமரை இழிச்சொல்லால் இகழ்ந்தனராம்.

    ராவணனின் புகழ் பாடினராம்;                 
சீதையோ செவிகளை மூடினராம்.    

     அவள்மனத்தை மாற்ற முயன்றனராம்;
தோல்வியடைந்து சலிப்புற்றனராம்.

கடுஞ்சொல் கூறிக் கடிந்தனராம்;      
மைதிலி மென்மனமொடிந்தனராம்.   

தீச்சொல் தாளாது துடித்தனராம்;        
   மௌனமாய்க் கண்ணீர் வடித்தனராம்.

தாயைத் தீயர் பயமுறுத்தினராம்;      
   மன்னனை மணக்க வற்புறுத்தினராம்.

மைதிலி பொறுமை இழந்தனராம்;     
"ராமரே பதி" என முழங்கினராம்.         

சிம்சுபா மரம் நோக்கி நடந்தனராம்.
         தீயோர்  அவளைப்பின் தொடர்ந்தனராம்.



கையினில் ஆயுதம் எடுத்தனராம்;    
கொன்று தின்றுவிடத் துடித்தனராம்.

கண்ட நம்நாயகி கலங்கினராம்;        
ஆயினும் தன்னிலை பிறழ்ந்திலராம்.

அரக்கனை மணந்திட மறுத்தனராம்;  
    கொன்று விழுங்கும்படி உரைத்தனராம்.

    தனது தலையெழுத்தை நொந்தனராம்;
துன்பந்தாங்காது தொய்ந்தனராம்       .

கணவரின் பிரிவால் வருந்தினராம்;
இணையும் நம்பிக்கை இழந்தனராம்.

அரக்கனை எண்ணி நடுங்கினராம்;
உயிர்விட முடிவு எடுத்தனராம்.      



அங்கொரு முதியவள் வந்தனராம்;
திரிசடை என்பது அவள் பெயராம்.

     சீதையின் சிறப்பினை அறிந்தவராம்;
அரக்கியர் ஏச்சினை அடக்கினராம்.

              கனவொன்று கண்டதாய் உரைத்தனராம்;
          கனவினில் நிகழ்ந்ததை விளக்கினராம்.

ராமரைக் கனவினில் கண்டனராம்;
"அரியோ?"என ஐயம் கொண்டனராம்.

வில்லேந்தி ராமர் வந்தனராம்;       
தசமுகனுடன் போர் புரிந்தனராம்.

தோல்வியுற்றரசர் இறந்தனராம்;    
ராமருடன் சீதை இணைந்தனராம்.

அரக்கர் அனைவரும் அழிந்தனராம்.;
    விபீஷணர் வேந்தராய் அமர்ந்தனராம்.


(ராம ராம ஜெய.....சீதாராம்)


Tuesday, April 05, 2011


                   பாப்பா ராமாயணம்(ஆறாம்பகுதி)

                    சுந்தரகாண்டம் -(பாகம்-3 )

            சர்க்கம்-13-முதல்-20- வரை



அனுமன் பொறுமை இழந்தனராம்;
     "கொன்றனரோ?''எனக் கலங்கினராம்.

தேடா இடமெல்லாந்தேடினராம்;   
           வைதேகியைக் காணாது வாடினராம்.   

    அடர்வனமொன்றைக் கண்டனராம்;
'போகா இடம்' என எண்ணினராம்.

 'அசோக வனம்' என அறிந்தனராம்;
புகுந்து தேடிவிட நினைத்தனராம்.

     மனத்தினில் ராமரை வணங்கினராம்;
    வனத்தினை நோக்கி விரைந்தனராம்.

(ராம ராம ஜெய..சீதாராம்)


        'விருட்'டென வனத்தினுள் புகுந்தனராம்;
மரத்துக்கு மரந்தாவி குதித்தனராம்.

  சிம்சுபா மரமொன்றைக்கண்டனராம்;
உச்சிக்குத்தாவிச் சென்றனராம்.        

       அடர்ந்த இலைகளிடை மறைந்தனராம்;
         பார்வையைக்  கீழ்நோக்கித்திருப்பினராம்.

வனமெங்கும் பார்வை இட்டனராம்; 
ஏழையொருத்தி தென்பட்டனராம்.       

அழுக்காடை அணிந்திருந்தனராம்;     
ஆபரணமேதும் அணிந்திலராம்.           


                    அரக்கியரிடை அமர்ந்திருந்தனராம்;              
               நாய்களிடை மானெனத் தெரிந்தனராம்.
                 
        அவளை அனுமன் கண்காணித்தனராம்;
'சீதையே'என அனுமானித்தனராம்.

தாயை விடுவிக்கத் தவித்தனராம்;
ராமருடன் சேர்க்கத் துடித்தனராம்.

இணைந்து தரிசிக்க விரும்பினராம்;
ராமநாமத்தை ஸ்மரித்தனராம் .       

(ராம ராம ஜெய ....சீதாராம்)

அனுமன் சிந்தனையிலாழ்ந்தனராம்;
  'முயற்சி வெற்றி'என மகிழ்ந்தனராம்.

             அன்னையின் கோலத்தைக் கண்டனராம்;
அளவற்ற துயரங்கொண்டனராம்.     

             'பொறுமையில் பூமி'யென உணர்ந்தனராம்;
தக்க தருணம் பார்த்திருந்தனராம்.   

மரக்கிளையில் சாய்ந்தமர்ந்தனராம்;
    மனத்தினுள்  ராமரை நினைத்தனராம்.

(ராம ராம ஜெய ....சீதாராம்)

சந்திரன் ஒளிக்கதிர் பரப்பினராம்;       
மாருதி பார்வையைத் திருப்பினராம்.


        தலைவியுந்தெளிவாய்த் தெரிந்தனராம்;
சுற்றிலும் அரக்கியர் இருந்தனராம்.

  கோரப்பல்,கூர்நகங் கொண்டவராம்;
சீதைக்குக் காவலாய் நின்றனராம்.

    மான்போல் மைதிலி மருண்டனராம்;
தீயெனக் கற்பினில் திகழ்ந்தனராம்.

அனுமன் தரிசித்து மகிழ்ந்தனராம்;
ஆனந்தக் கண்ணீர் உகுத்தனராம்.  

வேத ஒலியைச் செவிமடுத்தனராம்;
விடியற்காலை என உணர்ந்தனராம்.

அரசன் ஒலிகேட்டு விழித்தனராம்;     
வைதேகியைக்காணத் துடித்தனராம்.

ஆடையாபரணம் அணிந்தனராம்;      
ஜானகியைக் காண விரைந்தனராம்.

பலரும் புடைசூழச் சென்றனராம்;     
குலமகளை அணுகி நின்றனராம்.     

தூயவள் தேகத்தை மறைத்தனராம்;
த்யானத்தில் தரைமேலமர்ந்தனராம்.

நாதனை மட்டுமே நினைத்தனராம்;
நோக்கிய ராவணன் திகைத்தனராம்.

     அன்னையை அரக்கன் நெருங்கினராம்;
அழிவினை நோக்கி நகர்ந்தனராம்.



ராமரை இகழ்ந்து ஏசினராம்;       
சீதையைப் புகழ்ந்து பேசினராம்.

       தன்னை மணந்திடத் தூண்டினராம்;
       ராமரைத் துறநதிட வேண்டினராம்.

(ராம ராம ஜெய.....சீதாராம்)










  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP