Friday, February 26, 2010

அருள் பாடும் பறவை - பக்த மீரா


ராகம்: கமாஸ்

மறைந்த கூண்டில் இருந்து விடுதலை பிறந்த பறவை விரைந்தோடுதே !
நிறைந்த வெளி நீல வானிலே தன்னை மறந்து இறைவன் அருள் பாடுதே ! - மடை
திறந்த வெள்ளம் போல் என் உள்ளம் கண்ணனின் மலர்ந்த கருணை கழல் நாடுதே !
பிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர் உவந்து ஆனந்த கடலாடுதே !

பாடல் பின்னனி:
பக்த மீரா அரண்மனை வாழ்வைத் துறந்து, கண்ணனைத் தேடும் ஆனந்த பயணத்தைத் தொடங்கும் கட்டம். இந்தப் பாடல் சோகத்தையும் ஆனந்தத்தையும் ஒருங்கே தர வல்லது. பாடல் தரும் அனுபவம் கேட்பவர் மனநிலையைப் பொருத்த விஷயம். :)

பாடலை எம்.எஸ் அவர்களின் தேன் போன்ற  குரலில் இங்கே கேட்கலாம்.
~
கிரிதாரியின்,
ராதா

Sunday, February 21, 2010

ஆரா அமுதனைப் பாடிப் பற !




"முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள்" என்று  அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற !
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற !!

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப் பற !
தூமணி வண்ணனைப் பாடிப் பற !!


மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற !
ஆநிரை மேய்த்தானைப்  பாடிப் பற !!

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆரா அமுதனைப் பாடிப் பற !
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற !!

மேலே உள்ள பெரியாழ்வார் பாசுரங்களை எம்.எஸ் அவர்களின் தெய்வீகமான குரலில் இங்கே கேட்கலாம். பாசுரங்களின் பொருளை இங்கே காணலாம்.
~
கிரிதாரியின்,
ராதா

Tuesday, February 02, 2010

ஆயிரத்தில் ஒருவர் !



(குரு ராமானுஜர் இங்கே)





’கூரத்துச் சம்பா
குமரகோட்டத்துக்கீரை
கோபுர வாயிற்படி காற்று
வெள்ளைக்குளத்துத் தீர்த்தம்
வரதரது வாசம்
!

கூரம் என்னும் ஊரின் சிறப்பினை, இந்த நாட்டுப்புறப்பாட்டில் அறியமுடிகிறது.

கூரத்தின் நிலம் மிகவும் செழிப்பானதாம் இதில் விளையும் சம்பா நெல் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது.

இன்று கிராமமாகக் காட்சி அளிக்கும் கூரம் முன்னொருநாளில் கூரமாநகரமாக திகழ்ந்தது.காஞ்சிக்கு 12கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரில் ஸ்ரீராமமிஸ்ரர் பெருந்தேவி தம்பதிகளுக்கு சௌம்யவருஷம் தைமாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் வியாழக்கிழமையில் ஓர் ஆண்குழந்தைபிறந்தது. பிறப்பிலேயே ஸ்ரீவத்சத்தின் புனிதக்குறி விளங்கியதால் ஸ்ரீமன் நாராயணனின் சங்கின் அம்சமாக இருக்குமோ என வியந்து பெற்றோர் குழந்தைக்கு ஸ்ரீவத்ச சின்ஹர் என்று பெயர் சூட்டினர். பிற்காலத்தில் அர்ச்சாவதாரத்தில் ஏனைய ஆழ்வாரகளைப்போல ஈடுபாடு உள்ளது கண்டு இவரை எல்லாரும் ஆழ்வான் என அழைக்கலாயினர் காஞ்சிப்பெருமானின் நட்சத்திரமும் ஹஸ்தமே ஆகும்.

கூரத்தாழ்வார் பொறுமையின் வடிவம். ஒருசமயம் ஆழ்வார் நட்ந்துகொண்டிருக்கையில் வயல்வழி ஓரமாக ஒரு தவளையை பாம்பு விழுங்கிக்கொண்டிருந்தது அந்த தவளையோ இறக்குமுன்பு பரிதாபமாக கத்திக்கோண்டிருந்தது இதுகண்டு அவர் யார்தான் இந்தத் தவளையைக் காப்பார்களோ என நினைத்து மயக்கமாய் விழுந்தாராம் அவருக்கு அவ்வளவு மெல்லிய மனது.


மற்றொருசமயம் ஒருவாழைத்தோட்டத்தில் வழியே சென்றுகொண்டிருந்தபோது ஒருமரத்தில் அப்போதுதான் வாழை இலையை ஒருவன் அறுத்துக்கொண்டு போயிருந்தான் அந்த அறுத்த இடத்தில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது அதுகண்டு ஆழ்வார் மனம்பொறுக்காமல்மூர்ச்சித்து விழுந்தார் என்று கூறுவர்.

உடையவர் ஒருநாள் ஓர் ஊமையை அழைத்துக்கொண்டு மடத்திற்கு வந்தார்.வந்தவர் நேராக தமது அறைக்குச்சென்றார் பிறகு அந்த ஊமையைப்பார்த்து தனனை விழுந்துவணங்கி திருவடிகளை தலையிலே ஏற்கும்படி செய்கையால் கூற அந்த ஊமையும் திருவடி தஞ்சம் என்று உணர்ந்து அவ்வாறே செய்தான் இதைப்பார்த்த ஆழ்வார் ,’ஐயோ எவ்வளவு சாஸ்திரங்கள் கற்று என்னபயன் ?இந்த ஊமைக்குக்கிடைத்த பாக்கியம் நமக்குக்கிட்டவில்லையே நானும் ஊமையாய் இல்லாமற்போனேனே” என்றுவருந்தினாராம்.

அரங்கனிடம் மோட்சவரம் பெற்று ஆன்ந்தக்கூத்தாடியபடி வந்தவரை கவலையுடன் எதிர்கொண்டார் ராமானுஜர்.

“ஆழ்வானே என்னைவிட்டுப் போகபோகிறீரா? எப்படி மனம் வந்தது என்னைப்பிரிவதற்கு?’

அதற்கு கூரத்தாழ்வார்,” சுவாமி! பரமபதத்தில் புதிதாக வருபவர்களை அங்குள்ள நித்யசூரிகள் அழைத்துக்கொள்வது வழகக்ம்.... தாங்கள் முன்சென்று நான்பின்சென்றால் தாங்கள் என்னைஅழைக்க வேண்டிவரும். தாங்கள் என் குரு! குருவானவர் சிஷ்யனை வரவேற்பது அபசாரமல்லவா? ஆகையால் நான் சென்று, முன்னின்று தங்களைவரவேற்கத் தயாராய் இருப்பேன்” என்றுகூறினார்

கடைசிநேரமும் வந்தது.






(சீடர் கூரேசர் இங்கே)


எதிராஜர் திருமந்திரம் ஓத, ஆழ்வான் தனது தனதுதலையைத் தனது சிறந்த சீடரான பிள்ளை ஆழ்வான் மடியில் வைத்தார். த்னதுதிருப்பாதங்களை சாந்தமே உருக்கொண்டவரும் பொறுமைக்கு பிராட்டிக்கு அடுத்தபடியுமானவராய் கருதப்பட்டவரும் ,அனைவர்க்கும் தயா குணம்படைத்தவரும் கைபிடித்த நாளிலிருந்து கடமை வழுவாது கணவனுக்குக் குறிப்பறிந்து பணிவிடை செய்த உத்தம பத்தினியுமான ஆண்டாள் மடியில் வைத்தார்.

திருமகன்கள் பராசரபட்டரும், வேதவியாசபட்டரும் மற்றும் எம்பாரும் முதலியாண்டவனும் நடாதூர் அம்மானும் கண்ணீர்விட்டபடி நின்றிருக்க தம் குரு ராமானுஜரைப்பார்த்தபடி இரு கைகளையும் கூப்பியபடியே கூரத்தாழ்வார் பரம பதம் அடைந்தார். இத்தகைய பாக்கியம் யாருக்குக்கிடைக்கும்?

மொழியைக்கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம்
குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்

என்று திருவரங்கத்தமுதனார் ராமானுஜ அந்தாதியில்குறிப்பிட்டுள்ளார். முக்குரும்பாகிய குழி என்பது, கல்விச்செருக்கு தனச்செருக்கு குலச்செருக்கு என்பதாகும் இம்மூன்றையும் ஒழித்தவர் ஆழ்வான்.

அஷ்டபிரபந்தம் எழுதிய திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐய்யெங்கார், ’அந்தமில் பேரின்பத்து அழிவில்லாத பெருவீட்டில் அழிவில்லாத உடல்பெற்று வாழும் பரமாச்சாரியரான கூரத்தாழ்வான் திருவடிகளை எப்போதும் கூடுவேன்’ என்றுபாடுகிறார்


இன்று(3.02-2010) கூரமாநகரம் ஆழ்வானின் ஆயிரமாவது பிறந்தநாளை கோலாகலமாக் கொண்டாடுகிறது.ஆழ்வானின் அருள்பெறுவோம் ஆனந்த நிலையடைவோம்!

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே!
தென் அரங்கன் சீரருளை சேர்ந்திருப்போன் வாழியே!
பாராளும் எதிராசர் பதம்பணிந்தோன் வாழியே!
நாராயணனே நமக்குசரண் என்றான் வாழியே!

பொருள் விரிக்கும் எதிராசர் பொன்னடியோன் வாழியே!
பொன்வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே!
ஏராரும் அஸ்தத்தில் இங்கு உதித்தான் வாழியே!
எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே!



(பாடலுக்கு உதவிய ’கூரத்தாழ்வார்கதை’ எனும் புத்தகத்திற்கு நன்றி)

கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்!

_____திருவரங்கப்ரியா--------------

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP