Wednesday, November 24, 2010

அந்த நாளும் வந்திடாதோ !

மீரா திரைப்படத்தில் இருந்து இன்னுமொரு அற்புதமான பாடல். ராஜ்ஜியத்தை, உறவினர்களைத் துறந்த மீரா, தன் கிரிதரனைத் தேடி கால்நடையாக யாத்திரை மேற்கொள்கிறாள். பல ஊர்களில் அலைந்து திரிந்து பிருந்தாவனம் அடைகிறாள். கண்ணன் வளர்ந்த இடம் என்று அறிந்தவுடன் அவள் உள்ளத்தில் உதித்த பாடலாக இந்தப் பாடல் வருகிறது. உங்களுக்கும் பிடிக்கலாம். :-)

பாடலை எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் இங்கே கேட்கலாம்.

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்
விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ !

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி 
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த)
மானினம் நாணிடும் மங்கையரோடு
மாதவத்தோரும் மயங்கிடுமாறு
தேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேல் என செய்தான் !
கானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேய்த்திட - அன்று
புனித மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு

போதமிலா ஒரு பேதை மீரா
ப்ரபு கிரிதாரி இதய சஞ்சாரி 
வேதமும் வேதியர் விரிஞ்சனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த (அந்த)

18 comments :

நாடி நாடி நரசிங்கா! said...

:)

குமரன் (Kumaran) said...

கல்லூரிக்காலத்தில் கிருஷ்ணபிரேம் என்ற என் நண்பர் மீரா படத்தின் பாடல்களை எல்லாம் எழுதிக் கொடுக்கச் சொல்லி ஹார்மோனியத்தோடு உட்கார்த்து பாடிக் கொண்டிருப்பார். நீங்கள் மீரா படத்தின் பாடல்களை எல்லாம் வரிசையாகப் போடுவதைப் படித்தால் மிகவும் மகிழ்வார் இராதா. அதனால் இந்த இடுகையின் சுட்டியை அவருக்கு அனுப்பியிருக்கிறேன்.

ஒவ்வொரு சரணத்திற்கும் பொருத்தமான படங்களாகத் தேடிப் பிடித்து இட்டிருக்கிறீர்கள். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒவ்வொரு சரணத்திற்கும் பொருத்தமான படங்களாகத் தேடிப் பிடித்து இட்டிருக்கிறீர்கள். :-)//

படங் காட்டுவது என்பது ராதாவுக்கு கை வந்த கலை என்று அந்தக் கிரிதாரிக்கே தெரியும்! :)

Kavinaya said...

அந்த நாளும் வந்திடாதோ? :(

அருமையான பாடல் / பதிவிற்கு நன்றி ராதா.

Radha said...

வாங்க ராஜேஷ். இந்தப் பதிவில் உள்ள படங்களையும் சுட்டுக் கொள்ளலாம். :-)

Radha said...

பாடல்/பதிவு பிடித்திருந்தது குறித்து மிகுந்த சந்தோஷம் அக்கா. :-)

Radha said...

//படங் காட்டுவது என்பது ராதாவுக்கு கை வந்த கலை என்று அந்தக் கிரிதாரிக்கே தெரியும்! :)//
சூப்பரா படம் போட்றது, ஓவரா பீலா விடரது, உண்மையை சொல்லாமல் மறைப்பது, ரொம்ப நல்லவனா நடிக்கறது....என்று என்னைப் பற்றி கிரிதாரிக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. :-) Still He has no other option and has to bear with me. :-)

Radha said...

குமரன்,
மீரா - இந்தப் படத்தை பார்க்கும் முன்னர் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை... முதலிய படங்களை பார்த்திருந்தேன். மீரா எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. கல்லூரி நாட்களில் எனது நண்பர்களுடன் நடந்த நிறைய விவாதங்களுக்கு, அதி மேதாவித்தனமான கேள்விகளுக்கு விடையாக அமைந்த படம். எம்.எஸ் அம்மா மறைந்த தினத்தன்று எதேச்சையாக தொலைக்காட்சியில் இந்தப் படத்தில் எம்.எஸ் அவர்களின் அறிமுக காட்சியை ஒளி பரப்பினார்கள். "முரளீ மோஹனா..." என்ற அந்தக் குரல் இன்றளவும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
உங்கள் நண்பருக்கு ஹலோ சொன்னதாக சொல்லவும். :-)

Radha said...

//போதமிலா ஒரு பேதை மீரா
ப்ரபு கிரிதாரி இதய சஞ்சாரி
வேதமும் வேதியர் விரிஞ்சனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த (அந்த) //

யாரும் கேட்கும் முன்னரே சொல்லிடறேன். :-)
போதம் - அறிவு
விரிஞ்சன் - பிரம்மா
வேதங்களும், அதனை ஓதுவோரும், பிரமனும் தேடும் பாத மலர்கள் - அவை நோகும்படி பிருந்தாவனத்தில் நடந்தான்.
மதுரா, த்வாரகாவில் எல்லாம், பஞ்சவர்க்கு தூதாக நடந்த போது எல்லாம் மிதியடி உபயோகித்திருப்பான். :-)

KANA VARO said...
This comment has been removed by the author.
சுபத்ரா said...

Nice song..

Anonymous said...

”கண்ணன் பாட்டு”க்கு என் ப்ளாகில் லின்க் கொடுத்திருக்கிறேன்...உங்களைக் கேளாமலே! மன்னிக்கவும்..
http://raadhaiyinnenjame.blogspot.com/
தொடரலாமா எனக் கூறவும்!!

அன்புடன்
ராதை.

Radha said...

ராதை,
என்ன ஒரு காரியம் செய்தீர்கள் ! கண்ணன் பாடல் குழுவினர் ஒவ்வொருவராக வந்து உங்களை கேள்வி மேல் கேள்வி கேட்க போகிறார்கள். தற்பொழுது சென்னை மாநகரத்தில் நல்ல மழை. நாளையும் மழை பெய்யுமாம். தமிழகம் எங்கும் நாளை மழை உண்டு என்று சொல்கிறார்கள்.
நீங்க தமிழ்நாட்டில் தான் இருக்கீங்களா?

Radha said...

@ராதை/சுபத்ரா,
கண்ணன் பாடல் குழுவினர் சார்பாக நன்றி. :-)

Anonymous said...

ரொம்ப பயந்துட்டேன் Radha!

***

நன்றி எதுக்கு? :-) உங்கள் ப்ளாகைப் பார்த்தாலே உங்களது ஒன்றுபட்ட உழைப்பும் ஆனந்த ஈடுபாடும் ஷ்ரத்தையும் நல்ல தெரியுது. அதற்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் நமஸ்காரங்கள் :-)

Radha said...

அஹா ! நீங்கள் பயப்படும்படியாக எல்லாம் இங்கே யாரும் இல்லை ராதை.
உங்கள் முதல் பின்னூட்டத்தை பார்த்து "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை." என்ற குறள் நினைவிற்கு வந்தது. கொஞ்சம் விளையாட்டுத்தனமாக பதில் அளித்து உங்களை பயம் கொள்ள செய்து விட்டேன் என்று நினைக்கிறேன். :-)

Radha said...

Redirecting the namaskarams to Krishna ! :-)
Our group members, especially my friends Ravi (who took extreme care to design the layout of this blog) and Kumaran (founder/moderator of this blog), will be happy to know that people are liking this blog. :-)

ராதை/Radhai said...

ப்ளாகில் நான் முதன்முதலில் பார்த்து ஆச்சர்யப் பட்டது எல்லாமே ஆன்மீகப் படைப்புகள்! எவ்வளவு அருமையாகக் கவிதை, கதை மற்றும் வேறு பல படைப்புகளை ஆர்வத்தோடு வெளியிடுகிறீர்கள்!!

அப்புறம், கண்ணன்னு வருகின்ற பாடல்களின் வரிசையைப் பார்த்து அதிசயித்துப் போனேன்.. நான் தேடிக் கொண்டிருந்த ஒன்று அது.

தொடரட்டும் உங்கள் சேவை.

என்னுடைய “ராதையின் நெஞ்சமே”யில் சும்மா காதல் கவிதைகள் மாதிரி எழுதி வருகிறேன். வேறு சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் இல்லை :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP