Thursday, November 18, 2010

கோவிந்தக் கிளி

கோவிந்தா… கோவிந்தா’

பிருந்தை உள்ளே நுழையும் போதே கிளியின் குரல்தான் அவளை வரவேற்கிறது.

வீட்டில் நிசப்தத்தின் ஆட்சி. பெரியாழ்வார் வீட்டில் இல்லை போலிருக்கிறது. கோதை என்ன செய்கிறாள்? ஒரு வேளை உறங்கிக் கொண்டிருக்கிறாளோ? இந்த எண்ணம் வந்தவுடன் தன் கொலுசுச் சத்தத்தை அடக்கிக் கொண்டு மெதுவாக அடி எடுத்து வைக்கிறாள். ஆனால், கிளியின் கூவலுக்கு எழாதவளா என் கொலுசுக்கு எழுந்திருக்கப் போகிறாள், என்று கூடவே தோன்றுகிறது.

அதோ… தரையில் துவண்ட கொடி போல் கிடக்கிறாள் கோதை. விழிகள் திறந்துதான் இருக்கின்றன. சரிதான்… அவள்தான் உண்பதையும் உறங்குவதையும் மறந்து எத்தனையோ காலமாகிறதே.

பக்கத்தில் போய் மெதுவாக அமர்கிறாள், தோழியின் மோனத்தைக் கலைக்க மனமில்லாமல். அவளைப் பார்க்கப் பார்க்க, கழிவிரக்கத்தால் கண்கள் கசிகின்றன, பிருந்தைக்கு. எப்படி ஆகி விட்டாள், என் தோழி!

சிவந்திருக்க வேண்டிய கன்னங்களுக்குப் பதில் உறக்கமிழந்த கண்கள் சிவந்திருக்கின்றன. வெளுத்திருக்க வேண்டிய கண்களுக்குப் பதில் முகமும் அதரங்களும் வெளிறிப் போய்க் கிடக்கின்றன. வசந்த கால மலரைப் போல் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தவள், இப்போது இலையுதிர் கால உதிர்ந்த சருகைப் போல் கிடக்கிறாள்.

கன்னத்தில் விழுந்து கண்களை மறைத்துக் கொண்டிருந்த கூந்தலைப் பரிவுடன் விலக்கி விடுகிறாள், பிருந்தை. அந்த ஸ்பரிசத்தில் கோதையின் கருவிழிகள் இலேசாக அசைகின்றன.

“யார் அது?..... ஓ…. வா… பிருந்தை”

அந்த வார்த்தைகளிலேயே களைத்து விட்டவள் போல் மீண்டும் மௌனமாகி விட்டாள் கோதை.

திரட்டி வைத்த வெண்ணெய் எதையும் உருக விடாமல் உடனடியாக உண்டு உண்டு, பேழை வயிறோனாய்* இருக்கும் அந்த நீலக் கண்ணன், இந்தப் பெண்ணை மட்டும் இப்படி இரக்கமில்லாமல் உருக விட்டு, இவள் பேதை வயிறை இப்படிக் காய வைத்து விட்டானே!

“கோபாலா… கோபாலா…” மறுபடியும் கொஞ்சுகிறது கிளி.


கைகளைத் தரையில் ஊன்றி, சற்றே நகர்ந்து தோழியின் மடியில் தலை வைத்துக் கொள்கிறாள் கோதை.

ஊன்றிய கைகளிலிருந்து வளையல்கள் தானாகக் கழன்று விழுகின்றன. அவற்றை எடுத்து தோழியின் கைகளில் மறுபடியும் போட்டு விடுகிறாள், பிருந்தை.

“பாரடி இந்தக் கிளியை… எப்போது பார்த்தாலும் அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறது…”, என்று தோழியிடம் முறையிடுகிறாள் கோதை, சின்னக் குழந்தையைப் போல.

“வேறு என்னடி செய்யும் பாவம்? நீதானே அவன் பெயர்களை மட்டுமே அதற்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறாய்? உன் மேல்தான் தவறு!”

“ஆமாமடி. அவன் பெயரையே எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆவலில் அப்படிச் செய்தேன். ஆனால் இப்போது அவன் பெயரைக் கேட்டாலே என் ஏக்கமும் துக்கமும் அதிகரிக்கிறதேடி…. என்ன செய்வேன்?”

“உலகளந்தான்… உலகளந்தான்” என்று அழைக்கிறது கிளி, இப்போது.

“ஏய் கிளியே… சற்று சும்மா இருக்க மாட்டாய்!”, பிருந்தைக்கே பொறுமை போய்விடும் போல் இருக்கிறது.

“என்றைக்கேனும் உணவு தராமல் இருந்து விட்டால், முறையிடுவதற்காக இப்படித்தான் அவனை அழைக்கும்.**

கிளி சிறகடித்து வந்து பிருந்தையின் தோளில் அமர்ந்து கொள்கிறது.

“என்னை விட இந்தக் கிளிதான் அவன் பெயரை அதிகம் சொல்லியிருக்கும் என்று தோன்றுகிறதடி”, என்றவள், “இந்தக் கண்ணன் இருக்கிறானே… அவன் சரியான கள்வனடி”, என்கிறாள், சம்பந்தமில்லாமல்.

“அதுதான் தெரிந்த செய்தியாயிற்றே… அதற்கென்னடி இப்போது?” என்கிறாள் பிருந்தை பேச்சை வளர்க்க எண்ணி. இந்த மட்டுமாவது கோதை மோனத்தைக் கலைத்து இந்த உலகிற்கு வந்தாளே என்று இருக்கிறது அவளுக்கு.

“மனிதர்களை விட அவனுக்கு மற்ற உயிர்களிடத்தில்தான் அதிகப் பற்று போலும் என்று சமயத்தில் தோன்றுகிறதடி”

“எப்படிச் சொல்கிறாய்?”

“ம்… பாரேன்… மாடு கன்றுகள் இறப்பதைப் பொறுக்க முடியாமல்தானே அவன் காளிங்கனைக் கொன்றான்?”

“ஆமாமடி”

“கஜேந்திரன் அழைத்தவுடன் நொடியும் தாமதிக்காது கருடனில் ஏறிக் கணத்தில் வந்து விட்டானே?”

“உண்மைதான்”

“ஆயர்பாடியில் ஆவினங்களைக் காப்பதற்காக தன் பிஞ்சு விரலில் குன்றைக் குடையாக எடுத்தவனல்லவா அவன்?”

“ம்…”

“அதனால்தான், நான் அழைத்தால் வராதவன், என் கிளியின் குரலைக் கேட்டாவது ஓடோடி வந்து விட மாட்டானா என்று ஏக்கமாக இருக்கிறதடி…”

“ஓஹோ... இப்போதல்லவா புரிகிறது, நீ இந்தப் பொல்லாத கிளியைச் சகித்துக் கொண்டிருப்பதன் காரணம்!”, ஆச்சரியத்தில் கண்கள் பெரிதாக விரிகின்றன, பிருந்தைக்கு.

“என்றுதான் வருவானோ என் கண்ணன்?” பெருமூச்சொன்று தப்பிச் செல்கிறது, கோதையிடமிருந்து.

“ஒரு வேளை நான் இப்படி உருகி உருகிக் கரைய வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம் போலும்... அவன் விருப்பப்படி இருப்பதுதானே என்னுடைய விருப்பமும்!”

இதைச் சொல்லும்போது இத்தனை நேரமும் சோகமாக இருந்த கோதையின் முகம், ஏதோவொன்று புரிந்து விட்டாற் போல சட்டென்று ஒளி பெற்று, சந்தோஷத்தில் பொலிகிறது.

**
*1ம் பத்து 4-ம் (பெரியாழ்வார்) திருமொழி
தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.

**12-ம் (நாச்சியார்) திருமொழி
கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9

**

32 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சூப்பர்!

- இப்படிக்கு
ரவி-கிளி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒரு வேளை நான் இப்படி உருகி உருகிக் கரைய வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம் போலும்... அவன் விருப்பப்படி இருப்பதுதானே என்னுடைய விருப்பமும்!//

அவன் உள்ள உகப்புக்கென்றே இருப்பேன்...

அடச்சீ...எத்தன் பேரை எத்தனை முறை தான் கூவுவாய்? இனி முருகா என்று கூவினால் தலையைத் திருகி விடுவேன், ஜாக்கிரதை, ஹேய், எனக்காக கந்தா என்று கூவுகிறாயா?

Anonymous said...

அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்.........
இதைத் தவிர வேறேதும் சொல்லத் தெரியவில்லை.... தெய்வானுபவம்...., மிக்க நன்றி
-வெங்கட்

Radha said...

சூப்பர் !
இப்படிக்கு,
கன்று-ராதா :-)
http://www.harekrsna.de/yasoda/gopal-calf3b.jpg

Kavinaya said...

//சூப்பர்!//

ரவி-கிளி இப்படிச் சொன்னது இந்தக் கவி-கிளிக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது :) நன்றி கண்ணா. ம்... அப்படின்னா நீங்க அவன் பெயரைத்தானே அதிகம் சொல்லுறீங்க? :)

//அவன் உள்ள உகப்புக்கென்றே இருப்பேன்...//

அதேதான் :)

//ஹேய், எனக்காக கந்தா என்று கூவுகிறாயா?//

அது சரி... அதுக்கு வேற கிளி வாங்கி அப்படி சொல்லிக் குடுக்கவும்! :)

Kavinaya said...

//அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்.........
இதைத் தவிர வேறேதும் சொல்லத் தெரியவில்லை.... தெய்வானுபவம்...., மிக்க நன்றி
-வெங்கட்//

உங்களுக்கு அவ்வளவு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி வெங்கட்! மிகுந்த நன்றிகள்.

Kavinaya said...

//சூப்பர் !
இப்படிக்கு,
கன்று-ராதா :-)

http://www.harekrsna.de/yasoda/gopal-calf3b.jpg//

மிக்க நன்றி, கன்று-ராதா :) படம் அற்புதம்! சுட்டுட்டேன். :)

குமரன் (Kumaran) said...

கோதைத் தமிழ் பதிவில் இருக்க வேண்டிய இடுகையோ? :-)

Kavinaya said...

//கோதைத் தமிழ் பதிவில் இருக்க வேண்டிய இடுகையோ? :-)//

:) அவ்ளோ நல்லாருக்குன்னு எடுத்துக்கவா? :) நன்றி குமரா.

தமிழ் said...

அருமை

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்

குமரன் (Kumaran) said...

ரொம்ப நல்லா இருக்குங்கறதுல ஐயமே இல்லை. இடுகையின் கருப்பொருளும் கோதைத் தமிழ் பதிவிற்கு ஏற்ற மாதிரி இருக்குல்ல. அதைச் சொன்னேன். :-)

In Love With Krishna said...

மிக மிக மிக அழகான போஸ்ட்!
நன்றி!! :))

பிருந்தை என்பது யார்?
கோதையின் தோழி என்பது இது வரை தெரியாது!
கொஞ்சம் explanation please?

Kavinaya said...

//அருமை

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்//

இதுவே நீளமாயிடுச்சுன்னு நினைச்சிட்டிருந்தேன். நீங்க இப்படிச் சொன்னதும் சந்தோஷமாயிடுச்சு :) நன்றி திகழ்.

Kavinaya said...

//ரொம்ப நல்லா இருக்குங்கறதுல ஐயமே இல்லை. இடுகையின் கருப்பொருளும் கோதைத் தமிழ் பதிவிற்கு ஏற்ற மாதிரி இருக்குல்ல. அதைச் சொன்னேன். :-)//

எனக்குக் கூட (லேட்டா) தோணுச்சு :)

இந்த மாதிரி ஏதாவது எழுதணும்கிற ஆசைக்கு வித்திட்டதே உங்களுடைய கோதைத் தமிழ்தான். எத்தனை வருஷம் கழிச்சு எழுதியிருக்கேன் பாருங்க :) மிக்க நன்றி குமரா.

Kavinaya said...

//In Love With Krishna said...
மிக மிக மிக அழகான போஸ்ட்!
நன்றி!! :))//

ரசித்தமைக்கு மிக்க நன்றி!

//பிருந்தை என்பது யார்?
கோதையின் தோழி என்பது இது வரை தெரியாது!
கொஞ்சம் explanation please?//

பிருந்தை, கோதையின் தோழியரில் ஒருவளான்னு எனக்குத் தெரியாது. நான் கற்பனையாத்தான் எழுதினேன். குமரன் / கேயாரெஸ் / ராதா - ஆல் தம்பீஸ், தெரிஞ்சவங்க சொல்லுங்க...

நாடி நாடி நரசிங்கா! said...

http://www.harekrsna.de/yasoda/gopal-calf3b.jpg//

கன்று-ராதா :) படம் அற்புதம்!Iam also copy & use this nice picture in my blog . மிக்க நன்றி,

நாடி நாடி நரசிங்கா! said...

பிருந்தை, கோதையின் தோழியரில் ஒருவளான்னு எனக்குத் தெரியாது. நான் கற்பனையாத்தான் எழுதினேன்:))

கோதையின் பிறந்த ஆண்டையே அக்கு வேறா ஆணி வேறா ஆராய்ச்சி பண்ணி தோராயமா கண்டு பிடிச்சிருக்காங்க!கோதையின் தோழியை பற்றி என்ன சொல்றது.
தோழி தோழி ன்னு பொதுவா பல பாசுரங்களில் கோதை பயன்படுத்தி இருப்பாங்க. குறிப்பிட்டு எந்த தோழியின் பெயரையும் கூறாததால் நாம் அனைவரும் கோதையின் தோழிகளே.:)

Radha said...

ராதையின் தோழியர் பற்றி குமரன் இங்கே சொல்லி இருக்கிறார்.
http://godhaitamil.blogspot.com/2007/03/blog-post_10.html
அங்கே வ்ருந்தா (துளசி) என்பவள் தான் இங்கே பிருந்தை என்று மாறினாள் போலும். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ராதையின் தோழியர் பற்றி குமரன் இங்கே சொல்லி இருக்கிறார்//

குமரன் கணக்கு பண்ணாச் சரியாத் தான் இருக்கும்!:)

பிருந்தை (எ) விருந்தை கோதையின் தோழியே தான்! விருந்தா-வனத்தே கண்டோமே-ன்னு வேறு பாடுறா! :)
Actually, I like this name Vrinda!

இன்னும் சில தோழிகள் பேரு:
* அனுக்ரகை - திவ்ய சூரி சரிதத்தில், நம்மாழ்வார் சொல்லச் சொல்ல, திவ்யதேச எம்பெருமான்களை, சுயம்வரத்துக்கு அழைப்பவள்

* நற்செல்வன் தங்கை = இது கோதையே பேரிட்டுச் சொல்வது! - நனைத்து, இல்லம் சேறாக்கும்! நற் செல்வன் தங்காய்!
நற்செல்வன் கண்ணனின் ஆருயிர்த் தோழன்! அவன் தங்கை கோதைக்குத் தோழியாம்! அவளையும் எழுப்புகிறாள் திருப்பாவை 12ஆம் பாட்டில்!

* இன்னொரு தோழி, ச்சே..தோழன் கூட உண்டு கோதைக்கு, அவன் பேரு...அவன் பேரு...ஏதோ raviஆம்! ஏதோ பாசுரத்தில் கூட வரும் :)

சுபத்ரா said...
This comment has been removed by the author.
Anonymous said...

//“அதனால்தான், நான் அழைத்தால் வராதவன், என் கிளியின் குரலைக் கேட்டாவது ஓடோடி வந்து விட மாட்டானா என்று ஏக்கமாக இருக்கிறதடி…”//

:'(

Kavinaya said...

//குறிப்பிட்டு எந்த தோழியின் பெயரையும் கூறாததால் நாம் அனைவரும் கோதையின் தோழிகளே.:)//

சரிதான் :) வாசிப்புக்கு நன்றி ராஜேஷ்.

Kavinaya said...

//http://godhaitamil.blogspot.com/2007/03/blog-post_10.html
அங்கே வ்ருந்தா (துளசி) என்பவள் தான் இங்கே பிருந்தை என்று மாறினாள் போலும். :-)//

நன்றி ராதா. குமரன் பதிவில் வாசிச்சதுதான் மனசில் பதிஞ்சிருந்தது போல :)

Kavinaya said...

//குமரன் கணக்கு பண்ணாச் சரியாத் தான் இருக்கும்!:)//

ஆமாம் :) கண்ணன் பண்ணினாலும்தான்! :)

//இன்னொரு தோழி, ச்சே..தோழன் கூட உண்டு கோதைக்கு, அவன் பேரு...அவன் பேரு...ஏதோ raviஆம்! ஏதோ பாசுரத்தில் கூட வரும் :)//

தோழிகள் பெயரெல்லாம் தோழனுக்குத்தானே நல்லாத் தெரியும், அதான் புட்டு புட்டு வச்சுட்டீங்க! நன்றி, கோதையின் தோழரே :)

Kavinaya said...

வாங்க ராதை!

துளசி கோபால் said...

அருமை!

ரசித்தேன்!


கோபாலா.....கோபாலா.....

கிளியின் கூவல்:-)))))

Kavinaya said...

//அருமை!

ரசித்தேன்!//

வாங்க துளசிம்மா!

//பிருந்தை (எ) விருந்தை (எ) துளசி கோதையின் தோழியே தான்!//

தோழியே வாசித்ததில் பரம சந்தோஷம்! :) நன்றிம்மா.

In Love With Krishna said...

Thanks- doubt clear seydha ellorkkum! :)
Kothai-yai paartheengla? Avan thiruvadi-yai alangarikkum 'thulasi' dhaan thozhi-yaam!
Avan thirumeni-yai alangarithu, avan narumanam niraindha 'vrindai' dhaan thozhiyaam!!
Haiyyo! Haiyyo!!!

ஷைலஜா said...

ஆஹா அற்புதமான இந்தப்பதிவை பார்க்காமல் பொழுதை வீணடித்திருக்கிறேனே கிளி என்றால் உடனே பறந்து அவ்ந்திருக்கவேண்டாமோ? மிக அழகு நயம் கவிநயா இந்தப்பதிவு!~

தக்குடு said...

sooooooo sweet! romba nanna irukku read pannaerthukkey avloo sweetta irukku akka...:)

Kavinaya said...

//ஆஹா அற்புதமான இந்தப்பதிவை பார்க்காமல் பொழுதை வீணடித்திருக்கிறேனே கிளி என்றால் உடனே பறந்து அவ்ந்திருக்கவேண்டாமோ? மிக அழகு நயம் கவிநயா இந்தப்பதிவு!~//

அரங்கத்துக் குயிலே இப்படிச் சொல்வது மிக்க மகிழ்ச்சி தருகிறது :) நன்றி அக்கா.

Kavinaya said...

//sooooooo sweet! romba nanna irukku read pannaerthukkey avloo sweetta irukku akka...:)//

உங்க பின்னூட்டமும் அப்படியேதான் தக்குடு. ச்சோ ச்வீட் :) வாசித்தமைக்கு நன்றி தம்பீ.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP