Tuesday, August 31, 2010

கோகுலத்தில் பசுக்கள் + எஸ்.ஜானகி + MSV + கண்ணன்!

நாளை...கண்ணன் பிறந்த நாள்!

ஒரு திரு முருகன் வந்து "உதித்தனன்" உலகம் உய்ய என்பது போல்...
ஆயர் குலத்தினில் "தோன்றும்" அணி விளக்கை!!
பிறப்பு அற்றவன் உலகில் பிறந்தால் அது = பிறந்தனன் அல்ல! உதித்தனன்/தோன்றினன்!
தாயைக் குடல் விளக்கம் செய்து, ஆயர் குலத்தில் "தோன்றும்" அணி விளக்கை!!

தோன்றும் அணி விளக்கு, தமிழ்க் கடவுளாம் மாயோனுக்கு, எம்.எஸ்.வி அலங்காரம் செய்வாரா?

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி முருகனுக்கு என்றே தந்த பாடல்கள் ஏராளம் ஏராளம்!
ஆனால் அவர் கண்ணனுக்குத் தந்த பாடல்கள் ஏராளம் இல்லை என்றாலும்...
ஒவ்வொரு பாடலும் தாராளம் தாராளம்!
அந்த இசை நுணுக்கத்திலும், இசை இன்பத்திலும் தாராளம், தாராளம்!

கிருஷ்ண கானம் என்ற தொகுப்பு! "வெளித் தோற்றம் போலவே உள்ளமும் கருப்பாய்க் கொண்டவனுக்கென்றே" எம்.எஸ்.வி தொடுத்த பாமாலை!

அந்த மாலையில் மொத்தம் எட்டு விதமான மலர்கள்! எட்டு விதமான வாசனைகள்! ஒவ்வொன்றுமே ஒவ்வொரு ஈர்ப்பு!
* சுசீலாம்மாவின் தேன் குரலும் உண்டு, ஜானகியின் கீச்கீச்-சும் உண்டு!
* TMS-இன் கம்பீரமும் உண்டு! SPB-யின் நளினமும் உண்டு!
* எல்.ஆர். ஈஸ்வரி-யின் கும்மாளம் பறக்கும்! வீரமணியின் ஏகாந்தமும் தொனிக்கும்!
* இத்தனை பாடகர்களுக்கு மத்தியில், கண்ணனுக்குத் தன் குரலையும் சேர்த்தே தரத் துடிக்கும் எம்.எஸ்.வி! துவக்கத்தையே எம்.எஸ்.வி தான் துவங்கி வைக்கிறார்!

1. அமர ஜீவிதம் சுவாமி, அமுத வாசகம் - எம்.எஸ்.வி
2. ஆயர்ப்பாடி மாளிகையில் - எஸ்.பி.பி
3. கோகுலத்தில் ஒரு நாள் ராதை - பி.சுசீலா
4. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் - எஸ்.ஜானகி
5. கோபியரே கோபியரே - எல்.ஆர். ஈஸ்வரி
6. கோதையின் திருப்பாவை - கி. வீரமணி
7. குருவாயூருக்கு வாருங்கள் - பி.சுசீலா
8. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - TMS

இப்போ சொல்லுங்க!
கண்ணனுக்கென்றே எம்.எஸ்.வி கட்டிய மலர்கள்...இன்னும் வாடாமல், மணம் வீசிக் கொண்டு தானே இருக்கின்றன?
வாடா மலர் கொண்டு, பாடீர் அவன் நாமம் நாடீர் நாள் தோறும், வீடே பெறலாமே!
தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து...பாட்டைக் கேட்போமா?



இசை அரசி சுசீலாம்மா தான்! - அனைத்து இசைகளுக்கும்!
இன்-இசை அரசி எஸ்.ஜானகி - இன்னிசைக்கு மட்டும்!

ஜானகிக்கே உரித்தான "கிக்"கான கீச் கீச் குரலில், கீசு கீசென்றெங்கும் கோகுலத்துப் பசுக்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாடுறாங்க! இதோ கேட்டுக் கொண்டே படியுங்கள்!

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி

மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த

பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை

ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட

பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)



பாட்டைக் கொஞ்சம் பிரிச்சி மேஞ்சா அந்தரங்கச் சுகம் தெரியும்! அந்த ரங்கச் சுகம் புரியும்!

அட படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!

என்ன ஒரு அழுத்தம், வரிகளிலே! படிப்பில்லாத ஆட்களுக்குக் கூட, வேதத்துக்கே பொருள் விளங்குதாம்!
எப்படி? = பாதத்திலே போய் விழுந்தால்!

அதான் இதோ திருவடிகள்,
இதைப் பற்றிக் கொண்டார்க்கு எல்லாம்...
உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான்!
என்று காட்டி நிற்கிறான் திருவேங்கடமுடையான்!

படிப்பில்லாத ஆட்களே எனக்குப் போதும்! கற்றாரை யான் வேண்டேன் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்!
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன் தன்னை, பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் என்கிறாள் ஒரு இடைச்சி, என் தோழி!

வேதங்களுக்கே கிடைக்காத திருவடிகள், படிப்பில்லாதவர்க்கு எளிதில் கிடைப்பதால், அவர்களுக்கு வேதப் பொருள் தானாகவே விளங்கி விடுகிறது!
ஞான யோகம், கர்ம யோகம் என்றெல்லாம் படிப்பில்லாதவர்கள் ரொம்ப கஷ்டப்படுவதில்லை! தங்கள் அறிவைக் காட்டிலும் அவன் அன்பையே கைக்கொள்கிறார்கள்! "தாங்களே" தங்கள் ஞானத்தால் தேடி அடைந்தோம் என்ற தொனி படிக்காதவர்களிடத்தில் இல்லை!

அதனால் தான்.....தமிழ் மாலைகளே எமக்குப் பெரிதும் உவப்பு!
செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி,
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே - என்று வேதக் கடலான தேசிகனே பாடி விடுகிறார்!!
பொருள் புரியாமல் இத்தனை நாள் தவித்து, ஆழ்வார்களின் ஈரத் தமிழ் மாலைகளை ஓதிய பின்னால், புரியாத வேதங்களும் புரிந்து விடுகின்றனவாம் அவருக்கு! இப்படிச் சொன்னதற்காக அவரைத் தள்ளி வச்சிறாதீக! :)


நாலுபடி பால் கறக்குது இராமாரி!
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

ஒரு படி = எட்டு ஆழாக்கு!
நாலு படி = 32 ஆழாக்கு!
கிட்டத்தட்ட ஆறு லிட்டர்!

அது எப்படி ஆறு லிட்டர் பாலை ஒரே மாடு, அதுவும் படக்-க்குனு கொடுக்குது?
கறக்க எல்லாம் வேணாமாம்! சும்மா கண்ணன் பேரை ஜாலியாச் சொல்லிக்கிட்டே, பாத்திரத்தைக் காட்டினாலே போதுமாம்! ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப...!

கன்றுக்குட்டிகள் எல்லாம் முதல் முறையா மேய்ச்சலுக்குப் போகும் போது, தாகம் அடிக்குது! முல்லை நிலத்து ஆறோ வேகமா ஓடுது! நேரா ஆற்றில் இருந்து தண்ணி குடிக்க இதுங்களுக்குப் பயமா இருக்கு! அம்மா பசுவும் அருகில் இல்லை! இதுக என்ன பண்ணுங்க?

ஒரு முறை வேணும்-ன்னா, வாளியில் தண்ணி பிடிச்சிக் கொடுக்கலாம்! ஆனா இதுங்களுக்குன்னு எப்பத் தான் வீரம் வர்றது? மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பது தானே வாசகம்! கண்ணனும் அதையே செய்கிறான்! எப்படி? தன்னைத் தான் தாழ்த்திக் கொண்டே!

தன்னையே ஒரு மாடு ஆக்கிக் கொள்கிறான்!
ஆமாம்! கைகளையே முன்னங் கால் ஆக்கி, கால்களை மடிச்சி, கரையில் கால்களுக்கு முட்டுக் கொடுத்து ஊன்றி, ஆற்றின் வேகத்துக்கு அசைந்து கொடுப்பது போல் கொடுத்து, குடிச்சிக் காட்டுறான்!

அவனைப் பார்த்து ஒவ்வொரு கன்னுக்குட்டியும் அப்படியே செய்கிறது! செய்யாத கன்னுக்குட்டிகளையும் பயம் போக்கி, செஞ்சிக் காட்டுறான்! அத்தனை குட்டிகளுக்கும் முகத்தில் சிரிப்பு!

இதைப் பார்த்த தாய்ப் பசுக்கள் எல்லாம், கண்ணன் மேல் ஒரு இனம் புரியாத வாஞ்சை! அதான் நாலுபடி பால் கறக்குது இராமாரி! மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

கண்ணன் மாடுகளை மேய்க்கும் உழவுகோலை (சாட்டையை) ஒரு போதும் பயன்படுத்தியதே இல்லை! அவன் அன்பே அவற்றைக் கரை சேர்த்து விடுகின்றன! = நல்ல மேய்ப்பன்!
பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், மேய்ப்பன் உங்களுக்கு என் ஜீவனையே கொடுக்கிறேன்!! ஆமென்!



இப்போ லேடீஸ் மேட்டர்! யாராச்சும் லேடீஸ் வந்து இதுக்குப் பொருள் சொல்லுங்கப்பா! அப்பறமா நானும் சொல்லுறேன்! :)

சேலை திருத்தும் போது அவன் பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!

என்ன அழுத்தம்? என்ன சுகம்? என்ன பொருள் மேற்கண்ட வரிகளுக்கு? :)


ஆங்...சொல்ல மறந்து போனேனே!
எட்டு பாடல்களும் ஏழு பேர் பாடுகிறார்கள்!
ஆனால் அத்தனையும் எழுதியது ஒரே ஒருவர் தான்!
யாராய் இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?

எம்.எஸ்.வி தொடுத்த வாடா மலர் மாலைக்கு, பூக் கொணர்ந்தவன் வேறு யார்? கண்ணனுக்கே தாசனான நம் கண்ணதாசனே!

வரிகள்: கண்ணதாசன்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்

9 comments :

குமரன் (Kumaran) said...

கண்ணன் வெளியேயும் இனிக்கும் கரும்பு/கருப்பு; உள்ளேயும் இனிக்கும் கரும்பு/கருப்பு! :-)

**

கன்னியர் பால் வஞ்சமில்லை என்ற வரியைப் படித்தவுடனே கண்ணதாசன் வரி போல் இருக்கிறது; இது கண்ணதாசன் எழுதியது தான் என்று நினைத்தேன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்ணன் வெளியேயும் இனிக்கும் கரும்பு/கருப்பு; உள்ளேயும் இனிக்கும் கரும்பு/கருப்பு! :-)//

ஓ...அப்படியா குமரன்? கருப்பு காந்திப் போய் கசக்கும் அல்லவா? நீங்க இங்கே இனிக்கும்-ன்னு சொல்றீங்க?

//கன்னியர் பால் வஞ்சமில்லை என்ற வரியைப் படித்தவுடனே கண்ணதாசன் வரி போல் இருக்கிறது; //

கண்ணதாசன் எல்லாம் தாச புத்தி கொண்டவர்! வஞ்சம் இல்லை என்று அவர் ஒருவர் எழுதினால் வஞ்சமில்லை-ன்னு ஆயிருமா என்ன? போலிப் பண்பாளனின் பாங்கைப் போற்றுவதிலும் பேருவகை கொள்ளல் அனைவரும் செய்வதன்று!

Radha said...

"படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! "

இது எவ்வளவு எளிமையா இருக்கு !

ஆனா....
"அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன் தன்னை, பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் "

"செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி,
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே"

இதுக்கு எல்லாம் யாராவது படிச்சவங்க வந்து பொருள் சொன்னா தான் புரியுது. :-)
Happy Gokulashtami ! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா
இனிய கண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

//படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! "

இது எவ்வளவு எளிமையா இருக்கு !//

அடுத்த லைனை வழக்கம் போல சாய்ஸில் விட்டுட்டீங்களா? :)

படிப்பில்லாத ஆட்கள் கூட = யோகம் செய்யாதவர்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால் = சரணாகதி செய்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி! = வேதமும் வசப்படும்!

//செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி,
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே"
- இதுக்கு எல்லாம் யாராவது படிச்சவங்க வந்து பொருள் சொன்னா தான் புரியுது. :-)//

இதை அவர் சொன்னதே படிச்சவங்களுக்குத் தான்! அவங்களுக்கு நல்லாவே புரியும்! :)
படிக்காதவங்க இதைப் பற்றிக் கண்டுக்கத் தேவையே இல்லை! அவங்களுக்குத் தான் யாரும் பொருள் சொல்லாமலேயே, "எது பொருள்"-ன்னு விளங்கிடுதே! :))

தமிழ் said...

கேட்கக் கேட்க உள்ளம் மகிழும் பாடல்.

நான் ப‌டித்துப் ப‌டித்து ப‌ர‌வ‌ச‌ம் அடைந்த‌ பி.சி க‌ணேச‌ன் அவ‌ர்க‌ளின் உரை இது

/
கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!

த‌ண்ணீர்ப் பாம்புக்கு ந‌ஞ்சு கிடையாது.அத‌னால்தான் அஞ்சாப் புற‌ம் கிட‌க்கும் நீர்ப்பாம்பு.ந‌ல்ல‌ பாம்பு ந‌ஞ்சைக் கொண்டிருப்ப‌தால் ம‌றைந்து வாழும். நீர்ப் பாம்பிட‌ம் ந‌ஞ்சு இல்லாத‌ கார‌ண‌த்தால் துணிச்ச‌லுட‌ன் வெளியில் ந‌ட‌மாடும். நீர்ப்பாம்பு ந‌ஞ்சு போன‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் என்று க‌விஞ‌ர் யோசிக்கிறார்.க‌ண்ண‌ன‌வ‌ன் ந‌ட‌னமிட்டு காளிந்தியை வென்ற‌பின் தான் த‌ண்ணிப் பாம்பில் ந‌ஞ்சு இல்லாம‌ல் போய் விட்ட‌து என்று கார‌ண‌ம் கூறுகிறார் க‌விஞ‌ர்.

இந்த‌க் கார‌ண‌த்திற்குப் பின்னே இருக்கும் ஆழ‌மான‌ பொருளை அழ‌காக‌ விள‌க்கின்றார்.ம‌னித‌ர்க‌ளிட‌ம் உள்ள‌ ந‌ச்சுத் த‌ன்மையைப் போக்குகின்ற‌ ச‌க்தி க‌ண்ண‌னுக்கு உண்டு.க‌ண்ண‌னிட‌ம் ப‌க்தி கொள்கின்ற‌வ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌த் த‌ங்க‌ளுடைய‌ தீய‌ குண‌ங்க‌ளை இழ‌ந்து ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ மாறி விடுவார்க‌ள் என்ப‌தே இத‌ன் பொருள்.காளிங்க‌ன் என்னும் கொடிய‌ பாம்பினை அட‌க்கி அத‌ன் மேல் க‌ண்ண‌ன் ந‌ர்த்த‌ன‌ம் செய்த‌து அவ‌னுடைய லீலைக‌ளில் ஒன்று.

தமிழ் said...

இந்த‌ இடுகையும் வாசித்துப் பாருங்க‌ள்

தமிழ் said...

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!


ந‌ட‌க்க‌ முடியாத‌வ‌னும், த‌ள்ளாடுகின்ற‌ நோயாளியும் கோவிந்தா கோவிந்தா என்று கூவிக் கொண்டு ப‌டிக‌ளில் ஏறிச் செல்லுகின்ற‌ காட்சி ஓர் அபூர்வ‌மான‌ காட்சியாகும்.ம‌லையேறுகின்ற இந்த‌ அசாத்திய‌மான‌ ச‌க்தி அவ‌ர்க‌ளுக்கு எங்கிருந்து கிடைக்கிற‌து ? ந‌ம்பிக்கையிலிருந்து கிடைக்கிற‌து, ப‌க்தியிலிருந்து கிடைக்கிற‌து.

க‌விஞ‌ர் வார்த்தைக‌ளை அள‌ந்து ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்கிறார்.ப‌க்தி செய்வ‌தைப் ப‌ற்றிச் சொல்கிறார்.ப‌டிப்ப‌டியாய் ம‌லையேறி ப‌க்தி செய்தால் என‌ச் சொல்கிறார்.ப‌டிப்ப‌டியாய் ஏறித்தான் இறைவ‌னின் அருளுக்குப் பாத்திர‌மாக‌ முடியும்.முய‌ற்சி தேவை.ந‌ம்பிக்கை தேவை.ப‌க்தி தேவை.அவ்வாறு ப‌க்தி செய்ய‌ ஆர‌ம்பித்தால் துன்ப‌ங்க‌ள் எல்லாம் பொடிப் பொடியாய் நொறுங்கி விடுகின்ற‌ன‌.இந்த‌ வாச‌க‌த்தில் ப‌க்தியின் வ‌லிமை வ‌லியுறுத்த‌ப் ப‌ட்டிருக்கிற‌து.ஆத‌ம் ச‌க்திக்கு அடித்த‌ள‌மே ந‌ம்பிக்கைதான். ந‌ம்பினால் எல்லாமே ந‌ட‌க்கும்.நினைப்ப‌து அனைத்தும் ந‌ட‌க்கும்.

அடுத்து வரும் வரிகளில் மிக உன்னதமான, மகத்தான தத்துவம் ஒன்றினைக் கவிஞர் வெளியிடுகிறார்.படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால் வேதத்துக்கெ பொருள் விளங்குது என்கிறார்.படித்து அறிவது படிப்பு.படிக்காமலே பெறுவது ஞானம்.நிறைய படிப்பதால் ஞானம் வந்து விடுவதில்லை.நிறைய படிப்பதால் விசியங்களைக் கூடுதலாகத் தெரியலாம்.மகாவீரரும் புத்தரும் ஏசு பிரானும் படித்து ஞானம்
பெற்றவர்களல்ல.அவர்களை விடப் படித்தவர்கள் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் ஞானம் பெற்றவர்களாக இருக்க வில்லை. இறைவனை உணர்தல் என்பது ஒரு நிலை.புத்தர் பல வருடங்கள் கல்விமான்களை நாடி உபதேசம் பெற்றார்.அப்போதும் அவருக்கு ஞானம் கிடைத்து விட‌வில்லை.ஆறு வருடம் காட்டில் கடுந்தவம் புரிந்து உடலை வருத்திக் கொண்டார்.அப்போதும் ஞானம் கிடைத்து விடவில்லை.இவையெல்லாம் பயனற்றவை என்று அனுபவத்தால் அறிந்து, ஒரு மரத்தடியில் அமர்ந்து சிந்தித்த போது அவருக்கு மனத்தெளிவு ஏற்பட்டு ஞானம் பிறந்தது.

ப‌டிக்காம‌லே கூட‌ வேத‌த்தின் பொருளை விள‌ங்கிக் கொள்ள‌ முடியும். பாத‌த்தில் போய் விழுந்தால் வேத‌த்தின் பொருள் எப்ப‌டி விள‌ங்கும் ? இறைவ‌னை உண‌ர‌ வைப்ப‌துதான் வேத‌ம்.அத‌ற்கான‌ நெறிமுறைக‌ளை வேத‌ம் வ‌குத்துக் காட்டுகிற‌து.வேத‌த்தின் நோக்க‌ம் ம‌னித‌ன் த‌ன்னை உணர‌ வைப்ப‌தாகும். ப‌ரிபூர‌ண‌ ப‌க்தி செலுக்கின்ற‌போது இறைவ‌னுட‌ன் ஒன்றிக்க‌ல‌ப்ப‌து சாத்திய‌மாவ‌தால் த‌ன்னை உண‌ர்வ‌தும் கைகூடிவிடுகிற‌து.வேத‌ம் எதைச் சொல்கிற‌தோ அதைப் ப‌க்தி உண‌ர்த்தி விடுகிற‌து.இந்த‌ ம‌க‌த்தான‌ ஆன்மீக‌ உண்மையினைக் க‌விஞர் வெகு அனாயாச‌மாக‌ச் சொல்லி இருக்கிறார்.

பாட‌ல் முழுவ‌தையும் ஒரு முறைக்குப் ப‌ல‌ முறை ப‌டித்தால்/கேட்டால் கீதையில் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ ப‌க்தி யோக‌த்தைக் க‌ண்ண‌தாச‌ன் மிக‌ எளிமைப்ப‌டுத்திச் சொல்லிருப்ப‌து விள‌ங்கும்.க‌ர்ம‌ மார்க்க‌ம், ஞான‌ மார்க்க‌ம், ப‌க்தி மார்க்க‌ம் ஆகிய‌ மூன்றிலுமே ப‌க்தி மார்க்க‌ம்தான் மிக‌வும் எளிமையான‌து.எவ‌ரும் பின்ப‌ற்ற‌க்கூடிய‌து.பாம‌ர‌ர்க‌ளிலிருந்து ப‌டித்த‌வ‌ர்க‌ள் வரை, ஏழைக‌ளிலிருந்து செல்வ‌ந்த‌ர்க‌ள் வரை எவ‌ரும் எளிதில் பின்ப‌ற்ற‌க்கூடிய‌து ப‌க்தி மார்க்க‌ம்.

பார்க்க‌ப் போனால் லெள‌கீய‌ வாழ்க்கையில் எல்லாரும் கடைப்பிடிக்க‌க்கூடிய‌ மார்க்க‌ம் ப‌க்தி மார்க்க‌ம் ம‌ட்டுமே. அன்பைக் கொடுத்தால் போதும்.இறைவன் அருள் சுர‌க்க‌க் காத்திருக்கிறான்.நீங்க‌ள் இறைவ‌னை நோக்கி ஐந்த‌டி சென்றால், உங்க‌ளை நோக்கி ப‌த்த‌டி வ‌ருவ‌த‌ற்கு அவ‌ன் அணிய‌மாக‌ இருக்கிறான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திகழ் இன்னொரு நல்ல பின்னூட்டமும் இட்டிருந்தார்கள்! தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டதோ என்னவோ...இதோ...

திகழ் has left a new comment on your post "கோகுலத்தில் பசுக்கள் + எஸ்.ஜானகி + MSV + கண்ணன்!":

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!

ந‌ட‌க்க‌ முடியாத‌வ‌னும், த‌ள்ளாடுகின்ற‌ நோயாளியும் கோவிந்தா கோவிந்தா என்று கூவிக் கொண்டு ப‌டிக‌ளில் ஏறிச் செல்லுகின்ற‌ காட்சி ஓர் அபூர்வ‌மான‌ காட்சியாகும்.ம‌லையேறுகின்ற இந்த‌ அசாத்திய‌மான‌ ச‌க்தி அவ‌ர்க‌ளுக்கு எங்கிருந்து கிடைக்கிற‌து ? ந‌ம்பிக்கையிலிருந்து கிடைக்கிற‌து, ப‌க்தியிலிருந்து கிடைக்கிற‌து.

க‌விஞ‌ர் வார்த்தைக‌ளை அள‌ந்து ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்கிறார்.ப‌க்தி செய்வ‌தைப் ப‌ற்றிச் சொல்கிறார்.ப‌டிப்ப‌டியாய் ம‌லையேறி ப‌க்தி செய்தால் என‌ச் சொல்கிறார்.ப‌டிப்ப‌டியாய் ஏறித்தான் இறைவ‌னின் அருளுக்குப் பாத்திர‌மாக‌ முடியும்.முய‌ற்சி தேவை.ந‌ம்பிக்கை தேவை.ப‌க்தி தேவை.அவ்வாறு ப‌க்தி செய்ய‌ ஆர‌ம்பித்தால் துன்ப‌ங்க‌ள் எல்லாம் பொடிப் பொடியாய் நொறுங்கி விடுகின்ற‌ன‌.இந்த‌ வாச‌க‌த்தில் ப‌க்தியின் வ‌லிமை வ‌லியுறுத்த‌ப் ப‌ட்டிருக்கிற‌து.ஆத‌ம் ச‌க்திக்கு அடித்த‌ள‌மே ந‌ம்பிக்கைதான். ந‌ம்பினால் எல்லாமே ந‌ட‌க்கும்.நினைப்ப‌து அனைத்தும் ந‌ட‌க்கும்.

அடுத்து வரும் வரிகளில் மிக உன்னதமான, மகத்தான தத்துவம் ஒன்றினைக் கவிஞர் வெளியிடுகிறார்.படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால் வேதத்துக்கெ பொருள் விளங்குது என்கிறார்.படித்து அறிவது படிப்பு.படிக்காமலே பெறுவது ஞானம்.நிறைய படிப்பதால் ஞானம் வந்து விடுவதில்லை.நிறைய படிப்பதால் விசியங்களைக் கூடுதலாகத் தெரியலாம்.மகாவீரரும் புத்தரும் ஏசு பிரானும் படித்து ஞானம்
பெற்றவர்களல்ல.அவர்களை விடப் படித்தவர்கள் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் ஞானம் பெற்றவர்களாக இருக்க வில்லை. இறைவனை உணர்தல் என்பது ஒரு நிலை.புத்தர் பல வருடங்கள் கல்விமான்களை நாடி உபதேசம் பெற்றார்.அப்போதும் அவருக்கு ஞானம் கிடைத்து விட‌வில்லை.ஆறு வருடம் காட்டில் கடுந்தவம் புரிந்து உடலை வருத்திக் கொண்டார்.அப்போதும் ஞானம் கிடைத்து விடவில்லை.இவையெல்லாம் பயனற்றவை என்று அனுபவத்தால் அறிந்து, ஒரு மரத்தடியில் அமர்ந்து சிந்தித்த போது அவருக்கு மனத்தெளிவு ஏற்பட்டு ஞானம் பிறந்தது.

ப‌டிக்காம‌லே கூட‌ வேத‌த்தின் பொருளை விள‌ங்கிக் கொள்ள‌ முடியும். பாத‌த்தில் போய் விழுந்தால் வேத‌த்தின் பொருள் எப்ப‌டி விள‌ங்கும் ? இறைவ‌னை உண‌ர‌ வைப்ப‌துதான் வேத‌ம்.அத‌ற்கான‌ நெறிமுறைக‌ளை வேத‌ம் வ‌குத்துக் காட்டுகிற‌து.வேத‌த்தின் நோக்க‌ம் ம‌னித‌ன் த‌ன்னை உணர‌ வைப்ப‌தாகும். ப‌ரிபூர‌ண‌ ப‌க்தி செலுக்கின்ற‌போது இறைவ‌னுட‌ன் ஒன்றிக்க‌ல‌ப்ப‌து சாத்திய‌மாவ‌தால் த‌ன்னை உண‌ர்வ‌தும் கைகூடிவிடுகிற‌து.வேத‌ம் எதைச் சொல்கிற‌தோ அதைப் ப‌க்தி உண‌ர்த்தி விடுகிற‌து.இந்த‌ ம‌க‌த்தான‌ ஆன்மீக‌ உண்மையினைக் க‌விஞர் வெகு அனாயாச‌மாக‌ச் சொல்லி இருக்கிறார்.

பாட‌ல் முழுவ‌தையும் ஒரு முறைக்குப் ப‌ல‌ முறை ப‌டித்தால்/கேட்டால் கீதையில் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ ப‌க்தி யோக‌த்தைக் க‌ண்ண‌தாச‌ன் மிக‌ எளிமைப்ப‌டுத்திச் சொல்லிருப்ப‌து விள‌ங்கும்.க‌ர்ம‌ மார்க்க‌ம், ஞான‌ மார்க்க‌ம், ப‌க்தி மார்க்க‌ம் ஆகிய‌ மூன்றிலுமே ப‌க்தி மார்க்க‌ம்தான் மிக‌வும் எளிமையான‌து.எவ‌ரும் பின்ப‌ற்ற‌க்கூடிய‌து.பாம‌ர‌ர்க‌ளிலிருந்து ப‌டித்த‌வ‌ர்க‌ள் வரை, ஏழைக‌ளிலிருந்து செல்வ‌ந்த‌ர்க‌ள் வரை எவ‌ரும் எளிதில் பின்ப‌ற்ற‌க்கூடிய‌து ப‌க்தி மார்க்க‌ம்.

பார்க்க‌ப் போனால் லெள‌கீய‌ வாழ்க்கையில் எல்லாரும் கடைப்பிடிக்க‌க்கூடிய‌ மார்க்க‌ம் ப‌க்தி மார்க்க‌ம் ம‌ட்டுமே. அன்பைக் கொடுத்தால் போதும்.இறைவன் அருள் சுர‌க்க‌க் காத்திருக்கிறான்.நீங்க‌ள் இறைவ‌னை நோக்கி ஐந்த‌டி சென்றால், உங்க‌ளை நோக்கி ப‌த்த‌டி வ‌ருவ‌த‌ற்கு அவ‌ன் அணிய‌மாக‌ இருக்கிறான்.
/

Posted by திகழ் to கண்ணன் பாட்டு at 10:36 PM, August 31, 2010

Unknown said...

என்ன கவி பாடினாலும்
உந்தன் கவி காவியமாம் கண்ணணே நீ நடந்தல் நாட்டியமே
கோபனே நீ சிரித்தால் பூ ச்சரமே
ஆயர் பாடி உந்தன் ஆலயமே .....
கண்ணா சிறு வயதில் பாடி பழகிய பாடல்களை வலைபதிவி ல் பார்த்து பாடி பரவசமானேன் .....சித்ரம்//

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP