Thursday, June 19, 2008

99. krs பாட்டு எழுதுவானா? ஷைலஜா பாடுவாங்களா?

KRS பதிவு எழுதுவான்! பாட்டு எழுதுவானா? அதை ஷைலஜா பாடுவாங்களா?

இனிமேல் அரங்கன் மாதவிப் பந்தலில் இடம் பெற மாட்டான்-ன்னு நட்சத்திர வாரத்தில் நடைபெற்ற அரசியல் சூட்டில் ஏதோ வீறாப்பாகச் சொல்லிட்டேன்! கதையும் பாதியில் நிக்குது! ஆனால் மனசு மட்டும் சுத்தி சுத்தி அங்கே தான் வருது!
ஒய்யார நடை அழகு, சக்கரப் படை அழகு, வெண்முத்துக் குடை அழகு, பிரசாத வடை அழகு - இப்படி இத்தனை அழகு இருந்தா, வீறாப்பு எம்புட்டு நாள் தாங்கும்?
வீறாப்பை உடைக்க வந்த வீராங்கனை...அவங்க பேரு ஷைலஜா!

திருவரங்கப்ரியா என்ற புனை பெயரில் அரங்கனே வந்தான் போலும்!
* ஷைலஜாவின் குரல் நம்மில் பலருக்கும் அறிமுகம் தான்! அக்கா பாடினால் கனகதாரா(பொன்மழை) கொட்டாது, ஆனா மைசூர்பாக் நிச்சயமாக் கொட்டும்!
* நாகி என்பவர் ஷைலு அக்காவின் தோழீ! தேர்ந்த கர்நாடக இசைப் பாடகி! பல கச்சேரிகள் செய்துள்ளார்!
* கேஆரெஸ் என்பவன் ஷைலுவின் செல்லத் தம்பி! திருட்டுத்தனமா பல கவுஜ எழுதி இருக்கான்! ஆனால் பதிவுலகத்தில் பல பேருக்குத் தெரியாது! இதோ இன்னிக்கி தெரிஞ்சி போச்சு!:-)

முதலில், பாடலைப் படிச்சி எப்படி இருக்கு-ன்னு சொல்லுங்க! பாடல் பிறந்த கதையை அப்பறம் சொல்லுறேன்!
ஷைலஜாவும், நாகியும் சேர்ந்து பாடறாங்க! ரொம்ப அழகா ராகம் எல்லாம் போட்டு, இனிமையாப் பாடுறாங்க! இந்தாங்க கேட்டுக்கிட்டே படிங்க!




(அமீர் கல்யாணி ராகம்)
கண்டேன் அரங்கத்தில் ஓரழகை - கண்டு
கொண்டேன் அவன்முத்துப் பேரழகை!
தின்றேன் அரங்கத்தின் தீஞ்சுவையை - தின்று
மென்றேன் அவனிதழ் தமிழ்ச்சுவையை!

கருநாகப் பாயில் உறங்கிடும் கரியவன் - என்
மருதேகப் பாயில் உறங்கிட உரியவன்!
வாரானோ அந்த வாமனச் சிறியவன் - அளந்து
பாரானோ என்னை மாமலைப் பெரியவன்?

(கண்டேன் அரங்கத்தில்)

(பாகேஸ்ரீ ராகம்)
காவேரி பாய்ந்து ஓடிடும் சோலைகள்
காதலன் தோளினில் சூடிடும் மாலைகள்
கோவிலின் கோபுரம் ஓம்-கிடும் ஓங்கிடும்
கோதையின் பூமனம் ஏன்-கிடும் ஏங்கிடும்!


(ஹம்சாநந்தி ராகம்)
மத்தள வரிசங்க நாதம் வரும் - தள
தத்தள தளாங்கு கீதம் வரும்!
தித்திக்கும் தீந்தமிழ் வேதம் வரும் - அதில்
எத்திக்கும் அவனிரு பாதம் வரும்!


வீணையில் விரகச் சேர்த்தம் வரும் - அவன்
வியர்வையில் துளசீ தீர்த்தம் வரும்!
காதினில் மந்திர ஓதல் வரும் - அவன்
கலந்திடக் கலந்திடக் காதல் வரும்!


(பெஹாக் ராகம்)
காதல் வரும், குழல் பாடல் வரும் - கேலிச்
சீடல் வரும், உடன் ஊடல் வரும்!
மோதல் வரும், பின் மோகம் வரும் - அந்த
மோகத்தில் ஏங்கிடக் கூடல் வரும்!


(சிந்துபைரவி ராகம்)
ஆழ்ந்த பின்னாலொரு ஆடல் வரும் - எல்லாம்
ஆழ்வாரே என்றொரு ஆவல் வரும்!
ஆண்டாள் ஆண்டான் தேடல் வரும் - பெண்ணே
யாவுமே அவனென்ற நாடல் வரும்!

(கண்டேன் அரங்கத்தில்)



என்னாங்க! பாட்டு புடிச்சி இருந்துச்சா? கவுஜ ஓக்கேவா? :-)
கண்ணன் பாட்டின் 99-ஆம் பாட்டை, அடியேன் புனைந்து, அக்கா பாடணும் என்பது அரங்கன் திருவுள்ளம் போலும்! அரங்க நகரப்பனுக்குப் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை! பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!

மக்களே! கவிதை உருவான கதை இது தான்!

"கேஆரெஸ், ஆழ்வார்-ன்னா யாருங்க? ஏதோ பன்னிரெண்டு பேரு-ன்னு சொல்றாங்களே! அவங்களா?"

"எதுக்குப்பா மாப்பி கேக்குற? அதுவும் திடீர்னு? தல அஜீத் நடிச்ச ஆழ்வார் படம் பத்தி கூட ரொம்ப பேஸ் மாட்டியே நீ?"

"அடச் சும்மா தான்! நான் ஒன்னு கேட்டா, கோச்சிக்க மாட்டியே கேஆரெஸ்?"

"அடச்சீ, நமக்குள்ள என்ன இம்புட்டு பீடிகை? சும்மா கேளுமா!"

"இல்லை, வெறும் பன்னெண்டு பேரை மட்டூம் ஆழ்வார்-னு சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படின்னா, அவங்களுக்கு அப்புறம் வேற யாருமே பெருமாள் மேல பக்தி பண்ணலையா? எதுக்கு பன்னெண்டு பேரை மட்டும் எப்பவும் கொண்டாடிக்கறாங்க? அப்படின்னா மத்தவன் எல்லாம் என்ன ஒன்னும் பக்தி இல்லாதவனா? எதுக்கு குறிப்பிட்ட சிலரை மட்டும் இப்பிடி Institutionalize பண்ணனும்?"

"உம்...."

"என்ன ரவி, உம்-கொட்டுற? நான் சொல்லட்டுமா? ஆழ்வார்கள் எல்லாம் அந்தணர்கள்! அதுனால, இப்படியெல்லாம் சும்மா செட்டப் பண்ணி வச்சிட்டுப் போயிட்டாங்க! சரி தானே?"

"ஹிஹி! நீ இங்கிட்டு வரியா? ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர்ல, ஒன்பது பேர் ஸோ கால்ட் தாழ்ந்த சாதி! சிலர் பிறப்பு அறியாத குழந்தைகளும் கூட!"

"என்னாது??? என்னடா சொல்லுற நீயி?"

"ஆமாம்! அந்தப் பன்னிரெண்டு பேர்ல, யார் யார் என்னென்ன சாதி-ன்னு இன்னோரு நாள் பட்டியல் போட்டுக்கலாம்! அதை விட, இப்போ நீ கேட்ட இன்னோரு முக்கியமான கேள்விக்கு வாரேன்! அவிங்களுக்கு அப்பறம் யாருமே பக்தி பண்ணலையா? எதுக்கு அவிங்களுக்கு மட்டும் இவ்ளோ சிறப்பு?"

"ஆமாம்! அதையே தான் நானும் கேக்குறேன்! அது என்னா பன்னண்டே பன்னண்டு பேரு கணக்கு?"

"எத்தனி பேருன்னு சொன்ன மாப்பி நீ?"

"பன்னிரெண்டு பேரு டா!"

"இல்லை! ஆழ்வார்கள் இன்னிக்கி தேதியில் மட்டும் 660 கோடி!"

"ஆகா...இது என்னடா புது கணக்கு சொல்ற நீ? இது என்ன கணக்கா? கப்சாவா?? இல்லை புதிரா? புனிதமா??"


Hymns of The Drowning!


வாழ்க்கையில் எப்பேர்பட்ட கொடியவனும், ஒரு நொடியாவது,
எம்பெருமானிடத்தில் அம்மா, அப்பா, இறைவா என்று ஏதோ ஒரு வழியில், மனசறிய ஆழ்கிறான்! இளமையிலோ, முதுமையிலோ, குழந்தையாகவோ, பெரியவனாகவோ,
ஆத்திகனோ, நாத்திகனோ...யாராயினும்
அழாதவர்களும் இல்லை! ஆழாதவர்களும் இல்லை!

ஆக, அழுதவர் எல்லாரும் ஆழ்வார்கள் தான்!
ஆழ்ந்தவர் எல்லாரும் ஆழ்வார்கள் தான்!

நாம் எல்லோருமே ஒரு வகையில் பார்த்தால், ஆழ்வார்கள் தான்! என்ன, நாம் நமக்காக மட்டும் அழுகிறோம்! அந்தப் பன்னிரெண்டு பேர், நம் அனைவருக்காகவும் ஆழ்ந்தார்கள்!
மறைகளில் மறைந்து இருந்ததை, முதன் முதலாக, எல்லாருக்கும் பொதுவில் கொண்டு வந்து வைத்தார்கள்! தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!

போதாக்குறைக்கு, தேன் தமிழை, தெய்வத் தமிழாய் ஆக்கினார்கள்!
அதனால் தான் இந்தப் பன்னிரெண்டு என்ற கணக்கே தவிர, அவர்களுக்குப் முன்னும் பின்னும் பல பேர் வந்தார்கள் தான்! அவர்கள் அனைவருக்கும் சிறப்பு தான்!
எந்தரோ மகானு பாவுலு தான்! அந்தரிகி வந்தனமுலு தான்!

நீயே கூட ஒரு ஆழ்வார் தான் மாப்பி! உன் பேர்ல-யே பாட்டு எழுதிறட்டுமா?
அதான் எழுதினேன்! பாத்து சொல்லு! நீயும் ஒரு ஆழ்வார் தானே?
ஆழ்ந்த பின்னாலொரு ஆடல் வரும் - எல்லாம்
ஆழ்வாரே
என்றொரு ஆவல் வரும்!
ஆண்டாள் ஆண்டான் தேடல் வரும் - பெண்ணே
யாவுமே அவனென்ற நாடல் வரும்!



அடுத்த பதிவு: கண்ணன் பாட்டு - 100
என்ன பாட்டாக இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்!
யாரு பாடப் போறா? சொல்லுங்க பார்ப்போம்?? Stay tuned till Monday:-)

35 comments :

இலவசக்கொத்தனார் said...

பன்னிரெண்டு ஆழ்வார்களா? சமீபகாலமா பதிமூன்றுன்னு இல்ல கேள்விப்படறேன்!! :))

Kavinaya said...

கண்டேன் கவிதையின் பேரழகை - அந்த
கண்ணனின் தமிழின் சீரழகில்
நனைந்தேன் பாடலின் இனிமைதனில் - நான்
குழைந்தேன் தீங்குரல் தேன்சுவையில்!

அசத்திடீங்க மூணு பேரும்! ஒவ்வொரு வரியா சொல்லி பாராட்ட ரொம்ம்ம்ம்ப நேரமாகும். அதான்... :)

ஷைலஜா said...

//ஒய்யார நடை அழகு, சக்கரப் படை அழகு, வெண்முத்துக் குடை அழகு, பிரசாத வடை அழகு - இப்படி இத்தனை அழகு இருந்தா, வீறாப்பு எம்புட்டு நாள் தாங்கும்//

அதானே....இச்சுவை தவிர இந்திரலோகம் ஆளும் அச்சுவையே பெரிதில்லை எனும்போது?:)

//ஷைலஜாவின் குரல் நம்மில் பலருக்கும் அறிமுகம் தான்! அக்கா பாடினால் கனகதாரா(பொன்மழை) கொட்டாது, ஆனா மைசூர்பாக் நிச்சயமாக் கொட்டும்!//

இது வம்புதான?:0:)


//ஆழ்வார்கள் இன்னிக்கி தேதியில் மட்டும் 660 கோடி!"//


ஆரம்பிச்சாச்சா வரப்போறாங்க துடப்பத்தோட:)


//அதான் எழுதினேன்! பாத்து சொல்லு! நீயும் ஒரு ஆழ்வார் தானே?
ஆழ்ந்த பின்னாலொரு ஆடல் வரும் - எல்லாம்
ஆழ்வாரே என்றொரு ஆவல் வரும்!
ஆண்டாள் ஆண்டான் தேடல் வரும் - பெண்ணே
யாவுமே அவனென்ற நாடல் வரும்! //

ஆழ்ந்த அர்த்தம் கொண்டபாடல்! பாட்டுக்கு இசை அமைத்த என் தோழி நாகிக்கு நன்றி...எழுதிய ரவியாழ்வாருக்கு கோடி நன்றி

Raghav said...

இதை படிக்கும் போதே என் மனதில் " சங்கராழ்வான் " என்று தான் தோன்றியது. மாமுனி சுகப் பிரம்மம் அனைத்தையும் பிரம்மமாகவே நினைத்தார். அது போல் " சங்கராழ்வான் " க்கு,

"உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை" யாவும் ஆனந்த துயில் கொண்ட அரங்கனாக காட்சியளிப்பதில் வியப்பேதுமில்லை. அரங்கனை நாம் விட்டாலும் நம்மை அவன் விட மாட்டான்.

சரணம் சரணம் சங்கரா சரணம்

jeevagv said...

நன்றாக அமைந்துள்ளது, வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
பன்னிரெண்டு ஆழ்வார்களா? சமீபகாலமா பதிமூன்றுன்னு இல்ல கேள்விப்படறேன்!! :))//

யோவ் அண்ணாச்சி!
நீரு கேள்விப் படுவீரு!
பதிலை நாங்க படணுமா? :-)

மொத்தம் ஆழ்வார் 660 கோடி! சொல்லி இருக்கோம்-ல! அதுல கொத்தாழ்வாராமே! பாத்து கிறீரா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
கண்டேன் கவிதையின் பேரழகை - அந்த
கண்ணனின் தமிழின் சீரழகில்
நனைந்தேன் பாடலின் இனிமைதனில் - நான்
குழைந்தேன் தீங்குரல் தேன்சுவையில்!//

சூப்பர்! பாட்டுக்கு எசப்பாட்டா?
மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்-என்
மவுனத்தை இசையாக மொழி பெயர்த்தாய்
ங்கிற மெட்டு!

//அசத்திடீங்க மூணு பேரும்! ஒவ்வொரு வரியா சொல்லி பாராட்ட ரொம்ம்ம்ம்ப நேரமாகும். அதான்... :)//

நன்றிக்கோவ்!
ஷைல்ஸ்! கவி அக்கா கிட்ட இருந்து பாராட்டை வாங்கிக்குங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
அக்கா பாடினால் கனகதாரா(பொன்மழை) கொட்டாது, ஆனா மைசூர்பாக் நிச்சயமாக் கொட்டும்!//
இது வம்புதான? :0:)//

வம்பா?
வம்பினால் வந்த அம்பா? இல்லை
அம்(ன்)பினால் கொய்த மைபா! :-)

//ஆழ்வார்கள் இன்னிக்கி தேதியில் மட்டும் 660 கோடி!"//
ஆரம்பிச்சாச்சா வரப்போறாங்க துடப்பத்தோட:)//

துடப்பம் அது கடப்பம்! கடப்போம்!

துயர் துடைக்க ஒரு துடைப்பம்! அதில் தடை போம்! முடை போம்! அன்பில் நாரண என்றொரு நடை போம் என்று விடை போம்!

வரவங்க கொண்டு வருவது வெண் சாமரமா மாறிவிடும்! :-)

ஷைலுக்கா
நாகி அவர்களுக்கு பதிவின் லிங்க் அனுப்பிச்சிருங்க!

கானா பிரபா said...

கேட்டேன் அரங்கனின் பாட்டை

அருமை அருமை அருமை. தொடர்ந்து வித்தியாசமான பலகாரங்களோடு கண்ணன் பாட்டு களை கட்டுத்து.

M.Rishan Shareef said...

என்ன கேயாரெஸ் அங்கிள்?
இப்படி நம்ம மை.பா ஸாரி ஷைலஜா அக்காவோட போட்டோவும் குரலும் போட்டிருக்கீங்க..

யாராவது தமிழ்பட டைரக்டர்களோ,இசையமைப்பாளர்களோ பார்த்தா உடனே சினிபீல்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க..
அப்புறம் நம்ம பதிவுலகமும்,ஸ்வீட் உலகமும் என்னாகுறது? :(

சினி பீல்டுக்குப் போயிட்டாங்கன்னா முதல்ல ப்ளொக் பீல்டை மறந்துடுவாங்க..
உதித் நாராயணன் கூடப் பாடினாங்கன்னா தமிழ மறந்துடுவாங்க.

நாலஞ்சு படம் முடிச்சிட்டாங்கன்னா நம்ம எல்லோரையும் மறந்துடுவாங்க..
எதுக்கு அங்கிள் போட்டீங்க? :(

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கவிநயா said...

!

//அசத்திடீங்க மூணு பேரும்! ஒவ்வொரு வரியா சொல்லி பாராட்ட ரொம்ம்ம்ம்ப நேரமாகும். அதான்... :)//

நன்றிக்கோவ்!
ஷைல்ஸ்! கவி அக்கா கிட்ட இருந்து பாராட்டை வாங்கிக்குங்க!

************
வாங்கிக்கொண்டேன் அதை உங்களுக்கும் நாகிக்கும் பகிர்ந்துடறேன்.....நன்றி கவிநயா.

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வம்பினால் வந்த அம்பா? இல்லை
அம்(ன்)பினால் கொய்த மைபா! :-)//

இந்த மைபா ஏந்தான் இப்படி எல்லா இடத்துலயும் நுழையுதோ ரங்கரங்கா!!
//
துடப்பம் அது கடப்பம்! கடப்போம்!

துயர் துடைக்க ஒரு துடைப்பம்! அதில் தடை போம்! முடை போம்! அன்பில் நாரண என்றொரு நடை போம் என்று விடை போம்!

வரவங்க கொண்டு வருவது வெண் சாமரமா மாறிவிடும்! :-)//

:):) தமிழ் சிலம்பம் ஆடுது போங்க!

//ஷைலுக்கா
நாகி அவர்களுக்கு பதிவின் லிங்க் அனுப்பிச்சிருங்க!//
அனுப்பிட்டேன் ரவி..உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னாங்க.

ஷைலஜா said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
என்ன கேயாரெஸ் அங்கிள்?
இப்படி நம்ம மை.பா ஸாரி ஷைலஜா அக்காவோட போட்டோவும் குரலும் போட்டிருக்கீங்க..

யாராவது தமிழ்பட டைரக்டர்களோ,இசையமைப்பாளர்களோ பார்த்தா உடனே சினிபீல்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க..
அப்புறம் நம்ம பதிவுலகமும்,ஸ்வீட் உலகமும் என்னாகுறது? :(//

இதெல்லாம் ஓஓஓவர் ரிஷு:):)

//
நாலஞ்சு படம் முடிச்சிட்டாங்கன்னா நம்ம எல்லோரையும் மறந்துடுவாங்க..
எதுக்கு அங்கிள் போட்டீங்க? :(//


அதுக்குத்தான் நான் போகல் ரிஷான்.
இங்கயே இருந்து உங்க எல்லாரையும் மை பாவால(அதாவது என்னுடய பாடலால்):) மகிழ்விக்கநினைப்பதுவேயன்றி வேறொன்றறியேன் பராபரமே!!!

Dr.N.Kannan said...

நல்ல மெட்டு. ராக மாலிகையோ?

குமரன் (Kumaran) said...

பாட்டும் பாடினதும் ரொம்ப நல்லா இருக்கு. ஒரு தடவை கேட்டேன்; படித்தேன். இன்னும் பல தடவை கேட்கலாம்; படிக்கலாம். செய்வேன்.

அதென்ன முன்முடிவோட இருக்கீங்க இரவிசங்கர்? அக்கா பாடுனா மை.பா. மட்டும் தான் கொட்டுமா? பொன்மாரி பெய்யாதா? அம்புட்டு உறுதியா பெய்யாதுன்னு சொல்றீங்க?

மெளலி (மதுரையம்பதி) said...

//கேஆரெஸ் என்பவன் ஷைலுவின் செல்லத் தம்பி!//

கேயாரஸ் செல்லத்தம்பி மட்டுமா வெல்லத்தம்பியும் கூட... :-)

பாடல் தெரிந்ததுதான். கூடப் பாடறியான்னு கேட்டுட்டு, தெரியாதேன்னப்போ நானிருக்கேன்னு சொல்லித்தரேன்னு சொல்லிட்டு, என்னை பாட விடாம ஏமாற்றியதை என்ன சொல்ல?, எங்க சொல்ல?...
செல்லம்-வெல்லமெல்லாம் காது கொடுத்தாவது கேட்குமா?....முதலில் இந்த பின்னூட்டமாவது வெளியாகுமான்னு பாக்கலாம். :-)

//பன்னிரெண்டு ஆழ்வார்களா? சமீபகாலமா பதிமூன்றுன்னு இல்ல கேள்விப்படறேன்!! //

ரீப்பிட்டே!!!!
கொத்ஸ் நீங்க கேள்விப்பட்டது மட்டுமே...வலையுலகிற்கு சம்பந்தமில்லா பலர் அந்தமாதிரி சொல்வதையும் மெயில்களில் பார்த்திருக்கிறேன்....

660 கோடி ஆழ்வார் இருந்தாலும், 12க்கு அடுத்து 13ஆம் ஆழ்வார்..எம்மாழ்வார் என்பதில் பெருமிதமடைகிறேன் :-)

//சினி பீல்டுக்குப் போயிட்டாங்கன்னா முதல்ல ப்ளொக் பீல்டை மறந்துடுவாங்க..
உதித் நாராயணன் கூடப் பாடினாங்கன்னா தமிழ மறந்துடுவாங்க.//

ராசா, ரிஷானு....அக்கா ஆல்ரெடி சின்னத்திரைக்கு போனது உனக்கு தெரியாதாப்பா?...

ஹிஹி பாட்டை இன்னுமேத்தான் கேட்கணும், கேட்டுட்டு திரும்பி வருகிறேன். :)

மெளலி (மதுரையம்பதி) said...

பாட்டையும் கேட்டுட்டேன்...பாடகர்கள் சூப்பராப் பாடியிருக்காங்க....வாழ்த்துக்கள்..

எம்மாழ்வார் வாழ்க...அவர் கவித்துவம் வளர்க!!!

ஷைலஜா said...

நா.கண்ணன் said...
நல்ல மெட்டு. ராக மாலிகையோ?

>>> ஆமாம் கணணன் ஸார் ...ராகமாலிகைதான்.முதல்
பாராவுக்கான ராகம் அமீர்கல்யாணி சினிமாபாடல் மனதுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் என்றபாட்டு போல அதைப்பாடச்சொன்ன பெருமைரவிக்கே சேரும் மற்றவை நன்கு இசை அறிந்த என் சிநேகிதி நாகி இசை அமைத்த பாடல் இது.

ஷைலஜா said...

குமரன் (Kumaran) said...
பாட்டும் பாடினதும் ரொம்ப நல்லா இருக்கு. ஒரு தடவை கேட்டேன்; படித்தேன். இன்னும் பல தடவை கேட்கலாம்; படிக்கலாம். செய்வேன்.//

பாடல் அதன் வரிகளால் சிறப்பு பெற்றுள்ளது.

.//அதென்ன முன்முடிவோட இருக்கீங்க இரவிசங்கர்? அக்கா பாடுனா மை.பா. மட்டும் தான் கொட்டுமா? பொன்மாரி பெய்யாதா? அம்புட்டு உறுதியா பெய்யாதுன்னு சொல்றீங்க?//
குமரன்!! இந்த மைபா என் ஆயுசுக்கும் கூடவே வந்து கடசிகாலத்துல நான் பாடுனா பல்லெல்லாம் கொட்டறமாதிரி செய்யப்போகுது பாருங்க::)நன்றி வருகைக்கும்கருத்துக்கும்

9:16 AM, June 20,

ஆ.கோகுலன் said...

//தின்றேன் அரங்கத்தின் தீஞ்சுவையை - தின்று
மென்றேன் அவனிதழ் தமிழ்ச்சுவையை!//

அவசரத்தில் 'தமிழ்' ஐ மறந்துவிட்டு படித்ததில் பதறிப்போனேன் ஒருதரம்..
அப்புறம் நிதானமானேன்.. :))

//ஆத்திகனோ, நாத்திகனோ...யாராயினும்
அழாதவர்களும் இல்லை! ஆழாதவர்களும் இல்லை!

ஆக, அழுதவர் எல்லாரும் ஆழ்வார்கள் தான்! ஆழ்ந்தவர் எல்லாரும் ஆழ்வார்கள் தான்!//

மிகவும் அருமை. பாராட்டுக்கள் KRS..!

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
//கேஆரெஸ் என்பவன் ஷைலுவின் செல்லத் தம்பி!//

கேயாரஸ் செல்லத்தம்பி மட்டுமா வெல்லத்தம்பியும் கூட... :-)
///>>>>>

வாங்க மதுர......நீங்களும் வெ.த .
என்ன சந்தேகம்? ஒரே பேட்டை ச்சும்மா வம்பு வச்சிக்காதீங்க ஆம்மா?:)

//பாடல் தெரிந்ததுதான். கூடப் பாடறியான்னு கேட்டுட்டு, தெரியாதேன்னப்போ நானிருக்கேன்னு சொல்லித்தரேன்னு சொல்லிட்டு, என்னை பாட விடாம ஏமாற்றியதை என்ன சொல்ல?, எங்க சொல்ல?...
செல்லம்-வெல்லமெல்லாம் காது கொடுத்தாவது கேட்குமா?....முதலில் இந்த பின்னூட்டமாவது வெளியாகுமான்னு பாக்கலாம். :-)//


பின்னூட்டம் வந்தாச்சு...!!!!அதிலெல்லாம் நாங்க நேர்மைத்திலகங்கள்!!

//...பாடகர்கள் சூப்பராப் பாடியிருக்காங்க....வாழ்த்துக்கள்..

எம்மாழ்வார் வாழ்க...அவர் கவித்துவம் வளர்க//


நம்மாழ்வார் போல எம்மாழ்வாரா?:) மதுரக்குறும்புப்பா!!

Sridhar V said...

//எம்மாழ்வார் வாழ்க...அவர் கவித்துவம் வளர்க//

என்று வாழ்த்திவிட்டு, அப்படியே இங்க வந்து பாருங்கன்னு கேட்டுகிட்டு போலாம்னு வந்தேன் :-))

Kavinaya said...

கண்ணா. உங்க பாடலைப் படிச்சப்புறம்தான் நான் எழுதறதை எல்லாரும் ஏன் "எளிமை, எளிமை" ன்னு சொல்றாங்கன்னு புரியுது! உங்க கவுஜ வாழ்க! உங்க பக்தி வளர்க! நிறைய எழுதுங்க. எழுதறதை எங்களுக்கும் காண்பிங்க :) சில கவிதைகளைப் படிக்கும்போது தானாகவே கவிதை பிறக்கும். அதுதான் அந்தக் கவிதையின் வெற்றி, அப்படின்னு எனக்குத் தெரிஞ்ச கவிஞர் ஒருத்தர் சொல்லுவார்! அதே போலதான் உங்க பாடல் கேட்டதும் எனக்கும் கவுஜ வந்துருச்சு!

தமிழாடுஞ் சோலையிலே
இசையாடுங் காலையிலே
சின்னஞ்சிறு வண்டெனவே
தேன்பருக வந்தேன்!
தேன்பருகி தான்மயங்கி
தள்ளாடி நின்றேன்!

Kavinaya said...

செ.த. மௌலி கவனிக்கவும்:

//பின்னூட்டம் வந்தாச்சு...!!!!அதிலெல்லாம் நாங்க நேர்மைத்திலகங்கள்!!//

'நாங்க'ல 'நீங்க' இல்லை! :)

நாராயண! நாராயண!! :))

//நம்மாழ்வார் போல எம்மாழ்வாரா?:) மதுரக்குறும்புப்பா!!//

:))

குமரன் (Kumaran) said...

//உங்க பாடலைப் படிச்சப்புறம்தான் நான் எழுதறதை எல்லாரும் ஏன் "எளிமை, எளிமை" ன்னு சொல்றாங்கன்னு புரியுது!//

:-))

புலவர்கள் கவிதை எழுதினால் அப்படித் தான். எம்மாழ்வார் பெரும்புலவர். :-)

Kavinaya said...

//புலவர்கள் கவிதை எழுதினால் அப்படித் தான். எம்மாழ்வார் பெரும்புலவர். :-)//

உண்மைதான் குமரா!

எம்மாழ்வாரே! அடியேன் தண்டம்! :)

மெளலி (மதுரையம்பதி) said...

//தேன்பருகி தான்மயங்கி
தள்ளாடி நின்றேன்!//

என்னது தள்ளாட்டமா...யக்கா தேன் தான் பருகினீங்களா?....பாட்டில்ல தேன்னு தான் போட்டுருக்கா..நல்லா பாருங்க..ஏதாச்சும் திராக்ஷா ரசமா இருக்கப் போகுது :)

மெளலி (மதுரையம்பதி) said...

//புலவர்கள் கவிதை எழுதினால் அப்படித் தான். எம்மாழ்வார் பெரும்புலவர். :-)//

வாங்க குமரன்...நீங்க இரண்டாம் முறை வந்து எம்மாழ்வார்ன்னு சொன்னதும்தான் அந்த பட்டத்துக்கு ரெக்கக்னெஷன் கிடைச்சுருச்சு..ஹூப்பர் :))

ஷைலஜா said...

கவிநயா said...
//செ.த. மௌலி கவனிக்கவும்:

அதிலெல்லாம் நாங்க நேர்மைத்திலகங்கள்!!//

'நாங்க'ல 'நீங்க' இல்லை! :)

நாராயண! நாராயண!! :))//

>>>>>>>>>>>>
முதல்ல மௌலி செ.த இல்ல...அருமை வெ.த என்பதை குறித்துக்கொண்டு 12மூறை இம்போசிஷன் எழுதவும்:):) அப்புறம்
'நாங்க'வில் 'நீங்க' இல்லைன்னதுக்கும், நா.நா என்றதற்கும் உங்க மைபாக்கா(நான் என்று ஆன்மீகப்பதிவில் சொல்வது
அத்தனை சரியல்ல ஆகவே இப்படி:):) சிரிச்சி சிரிச்சி உங்கள மனச்சிறைல தள்ளிட்டாங்க:)

S.Muruganandam said...

சிகரத்தை நெருங்கும் சமயமும் முத்தான பதிவு வாழ்த்துக்கள் KRS.

Kavinaya said...

//அருமை வெ.த என்பதை குறித்துக்கொண்டு 12மூறை இம்போசிஷன் எழுதவும்:):)//

யப்பா! மௌலியும் வெ.த. தான் X 12! போதுமா?

//'நாங்க'வில் 'நீங்க' இல்லைன்னதுக்கும், நா.நா என்றதற்கும் உங்க மைபாக்கா(நான் என்று ஆன்மீகப்பதிவில் சொல்வது
அத்தனை சரியல்ல ஆகவே இப்படி:):) //

எந்த 'நா'வா இருந்தாலும் அதுல 'நீ' இல்லைதானே :) சரிசரி, உங்க சமாளிஃபிகேஷனை போனாப் போவுதுன்னு ஒத்துக்கறேன் :)

//ஏதாச்சும் திராக்ஷா ரசமா இருக்கப் போகுது :)//

தேன் குடிச்சாலும் தள்ளாட்டம் வரும், வெ.த.! தேனை மதுன்னும் சொல்றதுண்டே. எவ்ளோ குடிக்கிறீங்கங்கிறதைப் பொறுத்து. குடிச்சுப் பாருங்களேன் :)

வல்லிசிம்ஹன் said...

இ.கொ பதிமூணு பதினாலு ஆகீருக்கே பதிவுலகத்தில்.
இருவரும் சகோதர சகோதரிகளா.!!!!!!!!!!!!

இதைவிட முத்தாய்ப்பா ஒண்ணும் செய்ய முடியாது.
ரவி பாட்டும் அழகு குரலும் அழகு
பாடியவர்களின் பக்தியும் அழகு.

எல்லாம் அரங்கனுக்கே.

ஷைலஜா ரொம்ப நன்றாக இருந்ததும்மா..

ஐ ஹேவ் யட் டூ கம் அவுட் ஆஃப் திஸ் சர்ப்ரைசிங் நியூஸ்:)

தி. ரா. ச.(T.R.C.) said...

அக்கா தமபி எல்லாரும் சேர்ந்த பாட்டு அமர்க்களம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாழ்த்துச் சொன்ன அன்பர் நன்பர் அனைவருக்கும் நன்றி!

//புலவர்கள் கவிதை எழுதினால் அப்படித் தான். எம்மாழ்வார் பெரும்புலவர். :-)//

குமரன், நீங்களுமா இப்படி ஏத்தி விடறது?
எங்கிருந்து தான் இப்பிடி பேரை எல்லாம் புடிக்கறாங்களோ?

எம்மாழ்வாரா??
விளையாட்டுக்குக் கூடத் தகுமா?

//உண்மைதான் குமரா!
எம்மாழ்வாரே! அடியேன் தண்டம்! :)//

கவி அக்கா,
நீங்க அடியேன்!
நான் வெறும் தண்டம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா
இந்தப் பட்ட விளையாட்டு எல்லாம் வேணாமே! அதுக்குப் பதில் என்னைத் திட்டி விளையாடுங்க. அது ஓக்கே!:-)

இந்தப் பட்ட விளையாட்டுக்குக் கூட அடியேனுக்கு தகுதி இல்ல!
ப்ளஸ்,
பதிவின் contents விட்டுட்டு, தேவை இல்லாத சில புகைச்சல்களுக்குப் பதிவுலகில் இது வழி வகுக்குது-ன்னு நினைக்கிறேன்!
இவன் ஆணவம் புடிச்சவன் என்று வேறு நினைத்துக் கொள்கிறார்கள்! அதனால் பதிவின் சாராம்சத்தைப் பார்க்கத் தவறி விடறாங்க! அதான்!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP