கிராமத்துக் கும்மியில் பல வகை உண்டு! சாதாரண கிராம வாழ்க்கை பற்றியும் கும்மியில் பாடலாம்! கடினமான தத்துவத்தையும் சல்லீசா கும்மியில் சொல்லி விட்டுப் போயிறலாம்!
நண்பர் ராகவ் மற்றும் பரவஸ்து சுந்தர் அண்ணா அவர்களால், ஒரு அருமையான பாட்டு கிடைச்சுது! இதை அவிங்க ஊர்ல கும்மியா பாடுவாங்களா-ன்னு நமக்குத் தெரியாது! ஆனால் இதே மெட்டில் அமைந்த பாடல்களை, எங்கூர்ல உடனே கும்மி ஆக்கீருவாங்க! :)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார் இறைவன் அடிசேரா தார்! பற்றுக பற்றற்றான் பற்றினை! அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு!
ஐயன் வள்ளுவனின் குறளை, எப்படி கும்மியாக்குறாங்க பாருங்க! ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது! சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்டி விடலாம்!
இப்போ தெரியுதுங்களா கும்மி மகாத்மியம்? ஏதோ நாட்டுப்புறக் கும்மி-ன்னு அவ்வளவு லேசா எடை போட்டுறாதீங்க! (பதிவுலக் கும்மி வேற! :) பாட்டைப் பார்க்கலாமா? வாழைப்பந்தல் கிராமத்தில் எவனோ ஒரு கிராமத்தான் காச் மூச்-ன்னு பாடறான்! கேட்டுக்கிட்டே படியுங்கள்! :) Gabcast! MadhaviPanthal #58
தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்! சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்டி விடலாம்! சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்டி விடலாம்! (தாண்டி விடலாம்)
சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்ட வேண்டியே ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது! - பேர் ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது! (தாண்டி விடலாம்)
இராமன் நல்ல ஓடக்காரன் தேடிப் பிடியுங்கள்! கிருஷ்ணன் நல்ல கப்பல்காரன் கண்டு பிடியுங்கள்! - எங்கள் கண்ணன் நல்ல கப்பல் என்றே கண்டு பிடியுங்கள்! பாண்டுரங்கன் பெயரைச் சொல்லி படகில் ஏறுங்கள்! பக்தர்களைக் காக்கக் காசு கேட்கவே மாட்டான்! - அவன் பக்தர்களைக் காக்கக் காசு கேட்கவே மாட்டான்!
ராமா ராமா என்றே சொல்லித் தாண்டி விடலாம்! கிருஷ்ணா கிருஷ்ணா என்றே சொல்லித் தாண்டி விடலாம்!
கண்ணா கண்ணா என்றே சொல்லித் தாண்டி விடலாம்! பாண்டு ரங்கா என்றே சொல்லித் தாண்டி விடலாம்!
தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்! சாரமற்ற சம்சாரக் கடல் தாண்டி விடலாம்! சாரமற்ற சம்சாரக் கடல் தாண்டி விடலாம்! (தாண்டி விடலாம்)
இந்தப் பாட்டின் வரிகளை நினைவில் இருந்து எழுதி அனுப்பிய * நண்பர் ராகவ்-க்கும், * பரவஸ்து சுந்தர் அண்ணாவுக்கும், அடியோங்கள் நன்றி!
ஒவ்வொரு வரி பற்றியும், அவர்கள் ஊரான பரமக்குடி-எமனேஸ்வரத்தில் இதைப் பாடியது பற்றியும், அவிங்களே வந்து குறிப்பு தருவாங்க! வாங்க எம(னேஸ்வரத்) தூதர்களே! :)
இன்னிக்கி கண்ணன் பாட்டுக்குள்ள ஒரு "கண்ணன் பாட்டு"! பாரதியாரின் கண்ணன் பாட்டு நூலில் இருந்து சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்னும் சூப்பர் பாட்டு! * இதைச் சினிமாவிலும் பாடுவாங்க! கர்நாடக சங்கீதத்திலும் பாடுவாங்க! * தமிழ் இசையிலும் பாடுவாங்க! மெல்லிசைக் கச்சேரியிலும் பாடுவாங்க! அப்படி என்ன தான் இருக்கு இந்தப் பாட்டில்? பார்க்கலாமா?
"சரி...மொதல்ல இது கண்ணன் பாட்டு தானா?"
"அட என்ன கேள்வி இது? பாரதியாரின் கண்ணன் பாட்டு என்னும் தொகுப்பில் தானே இருக்கு! கண்ணன் பாட்டே தான்!"
"இல்லை! இது பராசக்தி பாட்டு!"
"அடிங்க! இதைக் கண்ணன் பாட்டில் தானே பாரதி பாடுறான்? * இதுக்கு முந்தன பாட்டு = கண்ணன் என் சத்குரு! * இதுக்கு அடுத்த பாட்டு = தீராத விளையாட்டுப் பிள்ளை! அப்புறம் எப்படி இது பராசக்தி பாட்டு ஆகும்? கொழப்பம் பண்றதே பொழைப்பாப் போச்சு கேஆரெஸ் ஒனக்கு! "
"ஹிஹி! ஆனால் பாரதியார், இதுக்கு முன்னுரை எழுதும் போது, "பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு"-ன்னு எழுதறாரே!"
"ஆகா! அப்படியா சேதி! இது எனக்குத் தெரியாதே! கண்ணன் பாட்டுத் தொகுப்பில் பராசக்தி எங்கே வந்தா? எப்படி வந்தா?"
"அப்படிக் கேளு! அதை விட்டுப்போட்டு, கொழப்பம் பண்றேன், கொய்யாப் பழம் பண்றேன்-ன்னு சொன்னா எப்படி?" :)
"சரி, சரி...கோச்சிக்காதே! சொல்லுடா"
"இது பாரதியார் எழுதினாப் போல, "பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு" தான்! எதுக்கு அவர் கண்ணன் பாட்டில் பராசக்தியைப் பாடணும்?"
கண்ணனுடன் பிறந்த குழந்தை பராசக்தி! * அவன் கிருஷ்ணன் என்றால், இவள் கிருஷ்ணை! * அவன் சியாமளன் என்றால், இவள் சியாமளை! * அவன் கருப்பன் என்றால், இவள் கருப்பி!
கண்ணன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் ஒளிந்து விளையாடினான்! ஆனால் அவள்? பெற்ற தாயான யசோதை, பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காமல், கை மாறிய குழந்தை!
பெண் குழந்தையாச்சே விட்டுருவான் என்று நினைத்தார்கள் அடியவர்கள்! ஆனால் கருத்துப் பிழை கொண்ட கம்சன் விடுவானா என்ன? மூர்க்கத்தனமான பிடிப்புக்கு ஆண் என்ன? பெண் என்ன? குழந்தையைக் கொல்ல உசரத் தூக்கினான்! உதை வாங்கினான்! கம்சன் கையில் சிக்காமல், வானில் பறந்தாள் மாயா! காத்யாயினி! காற்றில் தெய்வமாய்க் கலந்தாள்!
இன்னிக்கும் ஆயர்/கோனார் வீடுகளில் (எங்க வீட்டில் உட்பட), மணம் ஆகாமல் மறைந்து போகும் இளம் பெண்களுக்கு, ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று படையல் போடுவார்கள்! புதுப் புடவையை ஒரு பொண்ணு போல சுத்தி, அதற்கு காதோலை-கருக மணி மாட்டி, நகை போட்டு, அதன் மடியில் தேங்காய் பூ பழம் வச்சி, பூசை போடுவார்கள்!
பாரதியும் அதையே செய்கிறான்! பாரதியின் கண்ணன் பாட்டில் கண்ணக் குழந்தை ஓடி விளையாடுகிறது! ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா அல்லவா? எனவே இன்னொரு குழந்தையான, இரவில் இடம் மாறிய பராசக்திக் குழந்தையை, கண்ணனின் தங்கச்சியை, கண்ணனுடன் ஓடி விளையாடச் செய்கிறான்! சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
சின்னஞ்சிறு கிளியான ஒரு குழந்தை பாடுவது...பேத்துவது :)) Dont Miss!
பிடிச்சமான ஒரு சுட்டியைக் கேட்டுக்கிட்டே படிங்க! பதிவின் கீழே இன்னும் பல சுட்டிகள், அசைபடங்கள் இருக்கு!