Wednesday, August 28, 2013

சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடு ஷ்யாமா !

 
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடு ஷ்யாமா !

ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறி வெண்ணையுண்டு களிப்பாய்.


இருள்நிறை சிறைதனில் பரிதியாய் உதித்த
அருட்பெருஞ்ஜோதியே,தேவகிநந்தனனே !,
            நாகம் குடைபிடிக்க , நதிவழிகொடுக்க ,
           கோகுலம் விரைந்த வசுதேவமைந்தனே !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.


பாலூட்டிக்கொல்லவந்த  பூதனையை
பல்லால் கடித்துயிர்குடித்த ஸ்ரீதரா !
   கயிற்றாலுனை  உரலில் கட்டிய தாய்முன்
   உரலை இழுத்தவண்ணம் தவழ்ந்த தாமோதரா!
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்
.

பெருமழையில் பரிதவித்தோரைக்காக்க
சிறுவிரலால் கிரிசுமந்த கோவர்த்தனா !
         விடநாகததையடக்கி அதன்மேல்
         களிநடம்புரிந்த காளிங்கநர்த்தனா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.


கோபியர்சுமந்த நீர்க்குடந்தன்னை
கல்லெறிந்துடைத்த  நந்தகிஷோரா !
      குறும்புத்தோழர் தோள்மேலேறி
      உரிவெண்ணை திருடிய நவநீதசோரா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.
 

குளிக்குங்கோபியர் ஆடையை மறைத்து
குறும்பாய்ச்சிரித்த கோகுலபாலா !
        ஈனர்கை சிக்கிய பாஞ்சாலியவள்
        மானங்காத்த  தீனதயாளா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.

கால்விரல்ருசிக்கும் சிசுவாய்ப்ரளய
காலத்தில் தோன்றிய ஆலிலைப் பாலா!
         ஓரடியால் உலகளந்து பலியை
         காலால்வதைத்த வாமனக்கோலா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.

சேய் அழைத்ததுமே  தூணிலே தோன்றி
தீயனை மாய்த்த  தூயா! நரசிங்கா! 
       எங்களுக்கிரங்கி  இங்கின்று வருவாய், 
      பங்கஜ நயனா! ஹே  பாண்டுரங்கா!
      
 
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.

5 comments :

இராஜராஜேஸ்வரி said...

சேய் அழைத்ததுமே தூணிலே தோன்றி
தீயனை மாய்த்த தூயா! நரசிங்கா!
எங்களுக்கிரங்கி இங்கின்று வருவாய்,

கண்ணன் பாட்டு
கருத்தை நிறைத்தது ..!

Kavinaya said...

கண்ணனின் லீலைகளை அருமையாகச் சொல்லும் மிகவும் அழகான பாடல் அம்மா. நன்றி.

நாடி நாடி நரசிங்கா! said...

nice:)

நாடி நாடி நரசிங்கா! said...

nice:)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_6058.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP