பள்ளி கொண்டது போதும், வா!
சுப்பு தாத்தா இரண்டு ராகங்களில் பாடி அசத்தி இருப்பது இங்கே! மிக்க நன்றி தாத்தா!
வாசல் பார்த்துக் காத்திருக்கேனே
வண்ணக் கண்ணா வா!
நேசந் தன்னை வாசம் பார்க்க செல்லக்
கண்ணா வா!
கோகுலத்தில் வாசம் செய்யும் சின்னக்
கண்ணா வா!
கோபியரை விட்டு இந்தக் கோதைக்காக
வா!
விரும்பிய தெல்லாம் விரும்பிக்
கொடுக்கும்
கரும்பினி யோனே வா!
கருங்குழல் இலேசாய்க் காற்றில்
அசைய
கருமே னியனே வா!
பாதச் சிலம்பு கட்டியம் கூற
பட்டுக் கண்ணா வா!
வேதப் பொருளே பேதைக்காக
வேகம் கொண்டு வா!
கள்ளச் சகடம் உதைத்த பாதம்
மெள்ளப் பிடிக்கவா?
வெள்ளத் தரவை விட்டு என்றன்
உள்ளத் திருக்க வா!
கள்ளச் சிரிப்பால் அடியவர் தம்மின்
உள்ளம் கவர்ந்த வா!
பள்ளி கொண்டது போதும் கண்ணா,
துள்ளி எழுந்து வா!
--கவிநயா