Friday, December 23, 2011

தூண்டிற் புழுவினைப் போல்...

          (கணிக்)கண்ணபிரான் [&co] ஒலிபரப்பிய
கோதைத்தமிழ்ப்பா(வை)காதைத்தீண்டி இழுக்க,
அரங்கன் பைந்நாகப்பாய் சுருட்டிக்கொண்டு
மாதவிப்பந்தல் நோக்கி நடை கட்டிட்டான் ;
பாய் ஜாக் பண்ணப்பட்ட அரங்கனை இங்கு
மீட்டு வர பாரதியின் காதல்கீதம் கீழே!



கண்ணன்  என் காதலன்

தூண்டிற்  புழுவினைப்போல் ---வெளியே
           சுடர்விளக்கினைப் போல் ,
நீண்ட பொழுதாக-- எனது
          நெஞ்சந்துடித்ததடீ!
கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை
           கொண்டு மிகவும் நொந்தேன் ;
வேண்டும் பொருளையெல்லாம்--மனது
          வெறுத்து விட்டதடீ!

பாயின்மிசை நானும் --தனியே
             படுத்திருக்கையிலே,
தாயினைக்கண்டாலும்,--சகியே!
              சலிப்பு வந்ததடீ!
வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே!
              வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!
               நுங்களுறவையெல்லாம் .

உணவு செல்லவில்லை ;--சகியே!
               உறக்கங் கொள்ளவில்லை.
மணம்   விரும்பவில்லை;--சகியே!
              மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதி யில்லை ;--எதிலும்
               குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே --சுகமே
               காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ!--சகியே!
              படுக்கை  நொந்ததடீ!
கோலக்கிளி மொழியும் --செவியில்
              குத்தலெடுத்ததடீ !
நாலு வயித்தியரும் --இனிமேல்
            நம்புதற்கில்லைஎன்றார்;
பாலத்துச் சோசியனும் --கிரகம்
            படுத்துமென்றுவிட்டான்

கனவு கண்டதிலே-- ஒருநாள்
             கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை --எவனோ
              என்னகந் தொட்டுவிட்டான் .
வினவக் கண் விழித்தேன் ;--சகியே!
              மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே --புதிதோர்
                மகிழ்ச்சி கண்ட தடீ !

உச்சி குளிர்ந்ததடீ;--சகியே!
            உடம்பு நேராச்சு ;
மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல்
            மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ!--எதிலும்
             இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ!--சகியே!
            அழகு வந்ததடீ !

எண்ணும்  பொழுதிலெல்லாம் --அவன்கை
           இட்ட விடத்தினிலே
தண்ணென்றிருந்ததடீ !--புதிதோர்
           சாந்தி பிறந்ததடீ!
எண்ணி  எண்ணிப் பார்த்தேன் ;--அவன்தான்
            யாரெனச் சிந்தை  செய்தேன்;
கண்ணன் திருவுருவம் --அங்கனே
            கண்ணின் முன் நின்றதடீ!
.


  

12 comments :

Sankar said...

லலிதம்மா என்ன ஒரு ஒற்றதிர்வு...!! நேற்று ராத்த்ரி முழுக்க தூங்கற வரைக்கும், இந்த கவிதை தான் வாசிச்சிட்டு இருந்தேன்.. :) :)

"உணவு செல்லவில்லை ;--சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை;--சகியே!
மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதி யில்லை ;--எதிலும்
குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே --சுகமே
காணக் கிடைத்ததில்லை."

இந்த மாதிரி எழுத பாரதியாலதான் முடியும்..

Rathnavel Natarajan said...

ஆஹா. அருமை.
வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

லலிதாம்மா, என்னால முடிஞ்சது. இந்தப் பாடலைப் பாடறேங்கற சாக்குல பேசியிருக்கேன். இரண்டு தடவை. ரெண்டையும் இடுகையில இணைச்சிருக்கேன். ரெண்டுல எது நல்லா இருக்கோ அதை வச்சுக்கலாம். :-)

Kavinaya said...

மிக அருமை. குமரன் குரலோடு மிக சுகமாக இருந்தது! மிகவும் நன்றி லலிதாம்மா, குமரன்.

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா.

ஷைலஜா said...

அருமையாக இருக்கிறது . பாரதியால் தான் ஒரு பெண்ணின் மனநிலையை முழுமையய கூற முடிகிறது.

குமரன் (Kumaran) said...

அக்கா. இங்கேயும் அதே கேள்வி. பாட்டைக் கேட்டீங்களா? :-)

Radha said...

குமரன்,
அருமை. அருமை. எம்.எஸ் அம்மா பாடிய "மாலைப் பொழுதினிலே ஒரு நாள் மலர் பொழிலினிலே..." பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா? இந்தப் பாடலை செஞ்சுருட்டியில் பாரதி அமைத்து இருக்கிறார் என்பதை மனதில் கொண்டு பாடினீர்களா இல்லை எதேச்சையாக அமைந்ததா? எதேச்சையாக அமைந்தது என்றால் பாரதியோடு சேர்த்து உங்களுக்கும் சலாம். :-)
~
அன்புடன்,
ராதா

Lalitha Mittal said...

1) ரத்னவேல் ஸார்,

முதல் வருகை(?)க்கு நன்றி .


2)கவிநயா,

நான் எதிர்பாத்தபடி ரசித்து அனுபவித்ததில் மிக்க மகிழ்ச்சி!


3)சங்கர் ,

பாரதியின் பிறந்தநாள் தொடங்கி தினமும் ஒரு பாரதிக்கவிதை ரசித்துப்படித்து வரேன் ;இந்தப் பாட்டு இவ்வளவு அழகா இருந்தும் யாரும் பாடலையே என்று ரொம்ப வருத்தப் பட்டேன்;குமரன் பாடியதில் எனக்கு ஆறுதல் கிடைத்தது .


4)ஷைலஜா,

ராதா,

வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி !


5)குமரன்,

இவ்வளவு அருமையான பாட்டை யாரும் பாடவில்லையே என்று ஏங்கி இருக்கையில் மிகத்தெளிவான உச்சரிப்புடன் அழகா பாடி இணைத்தது அளவில்லா மகிழ்ச்சியளித்தது !இரண்டாவதில் sound ரொம்ப feeble(something wrong with my ears??)முதலாவது மிகத்தெளிவு !!நன்றி .

குமரன் (Kumaran) said...

சுப்புத்தாத்தா பாடித் தந்ததை இடுகையில் இணைத்திருக்கிறேன். நல்ல பா3வத்துடன் எழுதியிருக்கிறீர்கள் ஐயா.

குமரன் (Kumaran) said...

இராதா,

எம்.எஸ். அம்மா பாடிய கல்கியின் 'மாலைப் பொழிதினிலே' பாடலை நிறைய தடவை கேட்டிருக்கேன். தி.ரா.ச. ஐயாவும் முருகனருளில் அதனை இட்டிருக்கிறார்.

http://muruganarul.blogspot.com/2008/07/malap-pozuthinile-kalki.html

எனக்கு இராகம் தெரியாது. பாரதியார் எந்த இராகத்தில் அமைத்திருக்கிறார் என்றும் தெரியாது. பாரதியார் பாடல்களைப் படிக்கத் தொடங்கிய போதிலிருந்து இதே மெட்டில் தான் பாடிக்கொண்டிருக்கிறேன். 'மாலைப் பொழுதினிலே' பாட்டின் பாதிப்பு என்னையறியாமல் வந்திருக்கலாம். :-)

Kavinaya said...

சுப்பு தாத்தா பாடியதை இப்போதான் கேட்க முடிந்தது. மிகவும் அருமை தாத்தா! நன்றி.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP