Saturday, December 10, 2011

பாஞ்சாலியின் பிரார்த்தனை

                                               
[Bharathi.jpg]   




             பாரதியாரின்  பிறந்தநாளான  இன்று (11.12.11)அவரது நினைவாக  பாஞ்சாலிசபதத்தில்  கணவர்களும்   
 உதவாத நிலையில்  பூரண சரணாகதி நிலையில்  
திரௌபதி கண்ணனை ப்ரார்த்திக்கும் பகுதி
கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:

               பாஞ்சாலியின் பிரார்த்தனை  

                                              

"அரி, அரி, அரி!"என்றாள் ."கண்ணா!
       அபயமபயமுனக்கபயம்" என்றாள்.
கரியினுக்கருள் புரிந்தே-அன்று
      கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்!
கரிய நன்னிறமுடையாய்!-அன்று
     காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதோர் பொருளாவாய்!-கண்ணா!
    பேசரும் பழமறைப் பொருளாவாய்!
சக்கரமேந்தி நின்றாய் ! -கண்ணா!
    சார்ங்கமென்றொரு வில்லைக் கரத்துடையாய்!
அக்கரப் பொருளாவாய் ! -கண்ணா!
    அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய்! -கண்ணா!
    தொண்டர்கண்ணீர்களைத்   துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக் காப்பாய்,--அந்தச்
    சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய் !
வானத்துள்  வானாவாய்,--தீ,
    மண்,நீர்,காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -தவ
   முனிவர்தம் அகத்தினிலொளிர் தருவாய்;
கானத்துப் பொய்கையிலே -தனிக்
   கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து சீதேவி, -அவள்
    தாளிணை கைக்கொண்டு -மகிழ்ந்திருப்பாய்!
ஆதியிலாதியப்பா!--கண்ணா!
    அறிவினைக்கடந்த விண்ணகப்பொருளே !
சோதிக்குஞ்சோதியப்பா !--என்றன்
    சொல்லினைக்கேட்டருள் செய்திடுவாய் !
மாதிக்கு வெளியினிலே -நடு
    வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய்--கண்ணா!
    சுடர்ப்பொருளே ,பேரடற்பொருளே!
"கம்பத்திலுள்ளானோ?--அடா !
     காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செயுமூடா!"--என்று
     மகன்மிசையுறுமியத் தூணுதைத்தான்
செம்பவிர்குழலுடையான்;--அந்தத்
     தீயவல்லிரணியனுடல் பிளந்தாய்!
நம்பி நின்னடி தொழுதேன்;--என்னை
     நாணழியாதிங்கு காத்தருள்வாய்.
வாக்கினுக்கீசனையும் --நின்றன்
    வாக்கினிலசைத்திடும் வலிமையினாய் ,
ஆக்கினை கரத்துடையாய் --என்றன்
    அன்புடை எந்தை !என் அருட்கடலே!
நோக்கினிற்கதிருடையாய் !--இங்கு
     நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்!
தேக்குநல் வானமுதே!--இங்கு
    சிற்றிடையாய்ச்சியில் வெண்ணையுண்டாய்!
வையகம் காத்திடுவாய்!--கண்ணா!
    மணிவண்ணா,என்றன் மனச்சுடரே!
ஐய,நின்பதமலரே    --சரண்
   அரி,அரி, அரி, அரி, அரி!"என்றாள்.










12 comments :

RAMA RAVI (RAMVI) said...

வையகம் காத்திடுவாய்!--கண்ணா! மணிவண்ணா,என்றன் மனச்சுடரே! ஐய,நின்பதமலரே --சரண் அரி,அரி, அரி, அரி, அரி.

அருமையான பகிர்வு.

Sankar said...

மிக்க நன்றி லலிதாம்மா! பாரதி பாரதிதான்!

In Love With Krishna said...

Thanks for this post! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Awesome Lines of Bharathi! Dank u lalithamma for remembering and posting this one:)

அரி, அரி, அரி! என்றாள்
கண்ணா அபயம்
உனக்கு அபயம் என்றாள்!!!

கண்ணா, எனக்கு அபயம் அருள்-ன்னு தானே சொல்லணும்?
எதுக்கு உனக்கு அபயம் என்றாள்?
சொல்லுங்க பார்ப்போம்:))

Lalitha Mittal said...

krs,
அரியை 'அபயம்' என்று பூரண சரணாகதி யடைந்தபின் அவளுடைய பயம் அவனைச் சேர்ந்தாச்சு !இப்போ அது அவனுடைய பயம் !அதற்கு அவனேதான் அபயமளிக்கணும்!சரியா?

Lalitha Mittal said...

ராம்விஜி,

வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி!



சங்கர்,

ரொம்பநாளா மிஸ்ஸிங் ;வருகைக்கு நன்றி



ILWK,

nice that you were able to enjoy this ;thank you!

sury siva said...

அது இங்கேயும் இருக்கிறது.




subbu rathinam

Kavinaya said...

'பசுங்குழந்தாய்'. எவ்ளோ செல்லம்!

பாரதியின் அருமையான வரிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி லலிதாம்மா.

Lalitha Mittal said...

ரசித்தேன் சுப்புசார் ;நன்றி!

Lalitha Mittal said...

thanks kavinaya,
பாஞ்சாலியின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டும் பாரதியின் தனித்தமிழ்நடை தமிழிலக்கியத்திற்குத் தனிப்பெருமை !

Radha said...

பாரதியார் பிறந்தநாளை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி லலிதாம்மா. (முன்பே பதிவினைப் படித்துவிட்டாலும் இப்பொழுது தான் பின்னூட்டம் இட வாய்ப்பு அமைந்தது.) மகாகவிக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள் !

Lalitha Mittal said...

thanks radha![better late than never]

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP