Thursday, March 31, 2011

பாப்பா ராமாயணம்

பாப்பா ராமாயணம்  

(இது தமிழெழுதப்படிக்கத்தெரியாத தமிழ்பாப்பாக்களுக்கு தமிழ் தெரிந்த
 பெரியவர்கள் படித்துக்காட்டியோ பாடிக்காட்டியோ நம் ராமரின் கதையை
 அவர்களின் இதயத்தில் பதிய  வைப்பதற்காக   எழுதப்பட்டது.  சுருக்கியதன் 
 விளைவாக   பல சம்பவங்கள்  இதில் சொல்லப்படவில்லை. விட்டுப்
 போனவற்றைப் பெரியவர்கள் பாப்பாக்களுக்கு கதையாய்ச்  சொல்லிக்
  குறை போக்குமாறு வேண்டுகிறேன்.இதில் பெரும்பகுதியைச் சுந்தர  
காண்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறேன் ராமநவமியன்று  அப்பகுதியைப்
 படிப்பது நல்லதெனக்  கேள்விப்பட்டதால் .   எம். எஸ் ஸின் 'சுத்தப்ரம்ம' 
 பாட்டைத்தழுவி எழுதியிருப்பதால்  அதே மெட்டில் பாடமுடியுமென்று
 எண்ணுகிறேன்)


              ஆனைமுகா!அருள்புரிவாய்!

    எழுதிடத் தொடங்கிய 'பாப்பா ராமாயணம்' ஒரு
            பிழையின்றி  அமைந்திட அருள்வாய் ஆனைமுகா!

             ---------------------------------------------------------

              பாலகாண்டம்

                                            
        'தசரதர் ' என்றொரு மன்னவராம்;  
         கோசல நாட்டினை ஆண்டனராம்.   

         மன்னர்க்கு மூன்று மனைவியராம்;
மகப்பேறின்றி வருந்தினாராம்.

    வேள்வி புரிந்து வேண்டினாராம்;
         பிள்ளைகள் நால்வர் பிறந்தனராம்.


    ராமன் அவர்களில் மூத்தவராம் ;
       கோசலை உதிரத்தில் பூத்தவராம்.

    பரதன் அவருக்கு அடுத்தவராம்;
கைகேயி பெற்றெடுத்தவராம்.

                 லக்ஷ்மணன்,சத்ருக்னன் கடையவராம்;
     சுமித்திரை ஈன்ற இரட்டையராம்.

                 குழந்தையர் நால்வரும் வளர்ந்தனராம்;
     மழலைப் பருவம் கடந்தனராம்.

கலைகள் யாவும் கற்றனராம்;
     ஆயுதப்பயிற்சிகள் பெற்றனராம்.

               வனத்திலோர் முனிவர் வசித்தனராம்;
       கௌசிகர் என்பது அவர் பெயராம்.

         யாகம் ஒன்றைத் துவங்கினராம்;
                     அரக்கர்கள் தூய்மையைக் கெடுத்தனராம்.

       யாகத்தை முனிவர் நிறுத்தினராம்;
  அயோத்தி நோக்கி நடந்தனராம்.

 கோசல மன்னனை நாடினராம்;
              ராமனின் உதவியை வேண்டினாராம்.

     அரசரும் அதற்கு இணங்கினராம்;
                லக்ஷ்மணனையும் உடனனுப்பினராம்.

          கௌசிகமுனி விடை பெற்றனராம்;
       பாலகருடன் வனம் சென்றனராம்.

               பணிதனைப் பாலர்க்குப் பகர்ந்தனராம்;
                   துணிவுடன் யாகத்தைத் துவங்கினாராம்.

     வில்லேந்தி பாலகர் திரிந்தனராம்
   விழிப்புடன் காவல் புரிந்தனராம்.

           அரக்கர்கள் அவ்விடம் புகுந்தனராம்;
             யாகத்தைத் தடுத்திட முயன்றனராம்.

     பாலகருடன் போர் செய்தனராம்;
    ராமனும் பாணங்கள் எய்தனராம்.


            அரக்க அரக்கியரைக் கொன்றனராம்;
           அஞ்சாமல் போரிட்டு வென்றனராம்

        கௌசிகர் யாகம் தொடர்ந்தனராம்;
       தடங்கலேதுமின்றி முடித்தனராம்.

      பாலர்க்கு ஆசிகள் பொழிந்தனரம்;
             மிதிலைக்கு அழைத்துப் போயினராம்.

     மிதிலை விதேகத் தலைநகராம்;
ஜனகர் விதேக மன்னவராம்.

       சீதையை மகளாய் வளர்த்தவராம்;
                  மகளுக்கு மணஞ்செய்ய விரும்பினராம்

          சுயம்வரம் ஒன்றினை நடத்தினராம்;
                 சிவவில்லைச் சபையில் வைத்தனராம்.

                    "வில்லை வளைப்பவர் வென்றவராம்"   
         என்றோர் அறிவிப்பு விடுத்தனராம்.

அரசகுமரர் பலர் வந்தனராம்;  
சிவவில்லருகே சென்றனராம்.

                சுலபமாய் வளைத்திட விரும்பினராம்.
         தூக்கவுமியலாமல் திரும்பினாராம்.

       கௌசிகர் சபையில் புகுந்தனராம்;
            ராமர்க்கு வில்பற்றிப் பகர்ந்தனராம்.

     முயன்றிட ராமரை ஊக்கினராம்;
               ராமரும் வில்லினைத் தூக்கினாராம்.


           எளிதினில் வளைத்துப் பிடித்தனராம்;
             நொடியினில் இரண்டாய் ஒடித்தனராம்.

   ஜானகி மணமாலை சூட்டினராம்;
            வானோரும் மகிழ்ந்து வாழ்த்தினாராம்.

            அனைவரும் அயோத்தி சேர்ந்தனராம்;
             ஆனந்தமாய்ப்  பன்னாள் வாழ்ந்தனராம்.

    ( ராம  ராம ஜெய ராஜாராம் ;ராம ராம ஜெய சீதாராம் 
      ராம ராம ஜெய ராஜாராம்;ராம ராம ஜெய சீதாராம்)
                   ---------------------------------------------------------------

Friday, March 25, 2011

ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி...



ராஜபுத்தானத்து அரசிகள் அந்த புரத்தை விட்டு வெளியே வந்ததாக சூரியனும் அறிகிலன். குடும்பத்து மூத்தவர்களுக்கு முன்பும் முகத்திரை அணிந்தே வலம் வந்தனர். நட்டு மக்களில் ஒருவரும் அவர்களின் வதனத்தை கண்டு அறிந்திலர்.

ஆனால், மீரா என்ற அந்த கவி படும் குயில், அரண்மனை எனும் ஸ்வர்ண கூண்டை விட்டு பறக்க வேண்டியதாயிற்று. அவளின் கிரிதரியைத் தேடி , அவளின் ஜீவதாரத்தைத் தேடி. அவளுடைய பதினாறாம் நூற்றாண்டு சமூகத்தினில், பெண்மை மற்றும் கலாச்சாரம் சார்ந்த கட்டுப்பாடுகளை தகர்த்தெறிவது ஒரு மகா பாவமாக கருதப்பட்டது.

இதற்க்கெல்லாம் மேலாக கிரிதாரியை அடையும் இயக்கத்தின் ஒரு முகமாக, தன்னை அவள் ராஜபுத்தானது சுட்டெரிக்கும் பாலைவனத்தின் நடுவே கண்டாள். மீராவின் மிருதுவான பாதங்களை மென்மையான மணல் துகள்கள் பொசுக்கியது. அலைந்தாள் திரிந்தாள், அந்த கருணையற்ற பாலையோ அவளுக்கு தர இயன்றதல்லாம் உடல் முழுதும் கொப்பளங்களும், புண்களும், முட்கீரல்களும்தான்.
தன் கிரிதாரியைத் தேடி அவள் பாலை நிலத்தில் திரிந்தது ஓர் வெப்பமான நிஜம். அந்த தருணத்திலும் அவளின் உடற் காயங்களை விட, மனக் காயங்களின் வலியானது மிகுந்தது. அழுதாள் ஆர்ப்பரித்தாள், அவன் வரவில்லை. தான் இத்துனை துயரம் எய்தியும் தன்னிடம் இரங்காத கிரிதரனின் இயல்பை எண்ணி வாடினாள்.
அவள் தன் உயிரையே உருக்கி அழும் அவ்வமயம், சூடான புழுதிப்புயல் வீசியது. எங்கும் தனிமை .. மாயவனை காணாள், மருகி நின்றாள். அவள் துன்பம் அனைத்தையும் ஒன்று திரட்டி கவிதை புனைந்தாள். அது கவிதை அல்ல, அவளின் தினக் குறிப்பு. அவள் பட்ட வேதனைகளை கூறும் ஒரு கண்ணாடி. அவள் காதல் ஆழத்தை நினைவுறுத்தும் ஒரு மேவாரி மொழிக் கிணறு.

ஹேரி மேய்ந தோ பிரேம் திவானி
மேரோ தரத் ந ஜானே கோயி..

எந்தன் வலி அறிவார் யாரும் இல்லை
ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி... எந்தன்

காயல் கி கதி காயல் ஜானே
கி ஜின் காயல் ஹோய ..

ஜோஹர் கி கதி ஜோஹர் ஜானே
கி ஜின் ஜோஹர் ஹோய.. மேரோ

காயத்தின் வலியை காயமடைந்தவளே அறிவள்..
தீயின் வெம்மையை தீக்குளித்தவளே அறிவள்..
எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...

சூலி ஊபரு சேஜ் ஹமாரே ; சொவனு கிசு விது ஹோய ?
ககனு மண்டலு மேய்; சேஜ் பியா கே கிசு விது மீலன்னு ஹோய ? மேரோ

முட்களின் மீது மஞ்சம் எனது நித்திரை எவ்விதமே..?
முதல்வனின் மஞ்சமோ வான வெளியில், இணைவது எவ்வழியோ ?
எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...

தரத் கீ மாரி வனு வனு டோலூன்
வேய்த் மிலா நஹி கோயி
மீரா கி பிரபு பீர் மிடேகி
ஜப் வேய்த் சாவரியா ஹோய.. மேரோ ..

வலியையும் விஞ்சி வனம் துழாவி நின்றேன்
வைத்தியன் ஒருவனையும் காணேன்..
மீராவின் பிரபு இனிமையை கொணர்வான்..
அவனே வைத்தியனாய் வருவான்...

(அது வரை ) எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...
ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி... எந்தன்

Saturday, March 19, 2011

ரங்தே சுனரியா (மீரா பஜன்)

                              ஹோலி ஸ்பெஷல்

(இந்த மீராவின் பாட்டை முதலில் ஹிந்தித்தமிழிலும்,அதன் கீழே நமது தமிழிலும் அளிக்கிறேன்;இது முழுமையான மொழிபெயர்ப்பில்லை;அனுப் ஜலோட்டா அவர்கள் பாடிய மெட்டிலேயே இதைப் பாடிப்பாருங்கள்!ஆனந்தமாக இருக்கும்!!ஹோலி வாழ்த்துக்கள்!!!)

                            

ரங்தே சுனரியா ;ரங்தே சுனரியா ;
           ஷ்யாமு பியா மோரே ரங்தே சுனரியா!

     துகிலில் வர்ணம் வீசு-என்
துணியில் வர்ணம் பூசு!
            முகில்வண்ணா!உன்நிறமென்
துகிலில் நன்றாய்ப்பூசு!

        1 )ஐஸீ ரங்தே கே ரங்க நாஹீ சூட்டே
                                        தோபியா தோயே சாஹே சாரி உமரியா (ரங்தே)

        1 )ஆயுள் பூராவும் வண்ணான்
     அடித்துத் தோய்த்தாலும்,
 ஒட்டிய உன் வண்ணம்
                                   விட்டுவிடாதவண்ணம் (துகிலில்...........)

                                   2 )லால் நா ரங்காவூமைதோ ஹரி நா ரங்காவூம்;
          அப்நேஹீ ரங்க்மே ரங்தே சுனரியா;
ஷ்யாமு பியாமொரே(ரங்தே)

      2 )செவ்வண்ணம் வேண்டாம் ;
    பச்சைநிறமும்  வேண்டாம் ;
             உந்தன் முகில் வண்ணத்தையே
                                                    என் துகிலில் பூசு!என்னன்புக்கண்ணனே!(துகிலில்)

                        3 )பினா ரங்காயே மைதோ கர் நாஹீ ஜாவூங்கி;
                         பீத் ஹீ ஜாயே சாஹே சாரி உமரியா (ரங்தே )

3 ) வாழ்நாளெல்லாமென்னைக்
 காத்திருக்கவைத்தாலும்  
       வர்ணம் பூசிக் கொள்ளாமல்
                 வீடு செல்லமாட்டேன்!(துகிலில்)

                                          ஜல் ஸே பத்லா கௌன் ஹை?
                      கௌன் பூமி ஸே பாரி?
                                    கௌன் அகன் ஸே தேஜ் ஹை?
                         கௌன் காஜல் ஸே காலி?

நீரினும் நுண்ணியது எது?
        பூமியினும் பாரமானது  எது?
                தீயினும் வெம்மையானது  எது?
                   மையினும் கருமையானது எது?

                                       ஜல் ஸே பத்லா ஞான் ஹை!
                 பாப் பூமி ஸே பாரி!
                                           க்ரோத் அகன் ஸே தேஜ் ஹை!
                                               கலங்க காஜல் ஸே காலி!(ரங்தே)

        நீரினும் நுண்ணியது ஞானம்!
        பூமியினும் பாரமானது பாபம்!
                     தீயினும் வெம்மையானது க்ரோதம்!
                                             மையினும் கறுமையானது களங்கம்!(துகிலில்)



 
                                   4)மீரா கே பிரபு கிரிதர் நாகர்
                                      பிரபு சரணன் மே,ஹரி சரணன் மே
                                      ஷ்யாம் சரணன் மே,லாகீநஜரியா(ரங்தே)

 
                                        4) மீராவின் கிரி தரன் சரணத்திலே,
                                            பிரபு சரணத்திலே,அரிசரணத்திலே,
                                           ஷ்யாம் சரணத்திலே
                                            இணைந்ததென்னிதயம் (துகிலில்)
                     --------------------------------------------------

           இந்தப்பாட்டில் வர்ணம் (வண்ணம்) என்ற சொல்லை
'குணம்'/'தன்மை'என்ற பொருள்பட புரிந்துகொண்டால்
இதிலுள்ள  தத்துவப்பொருள்  விளங்கிவிடும்.மாளிகையில்
 மகா ராணியாக இருக்க வேண்டியவள் பாமரமக்களிடையே
பிரேமை/பக்தியைப் பரப்ப பாமர பாஷையிலேயே
பாட்டமைத்துப் பாடித்திரிந்தது,கண்ணன் என்னும் கருணாகரன்
 அவளது உள்ளத்தில் நிறப்பிவைத்த பிரேமையையும்
,கருணையையும் எவ்வளவு அழகாகப் பிரதிபலிக்கிறது?!
 கண்ணனின் வண்ணத்தை வாரி வாரிப் பூசிக் கொண்டு
ஹோலி கொண்டாடுவோம்,வாங்க!!

                                           -------------------------------





Thursday, March 17, 2011

கண்ணன் கைத்தலம் பார் கனா கண்ட நாச்சியார் கருணைக்கு ஆவது எப்போது?


வைணவ மரபில் அப்பனாம் பெருமாளின் திருவருளைப் பெறுவதற்கு முதலில் தேவையானது அன்னையாம் திருமகளின் திருவருள். அப்பனின் கருணையே அம்மையாக வடிவ்ம் கொண்டிருக்கிறது. உலக மக்களுக்கு எல்லாம் தந்தையாக இருக்கும் பெருமானே பக்கம் சாரா பெருமகனாகவும் இருப்பதால் நாம் செய்த நல்லது கெட்டது பார்த்து தான் அவன் தீர்ப்பு அமையும். அவன் உகக்கும்படியாக (மகிழும்படியாக) நாம் செய்தது மிகவும் குறைவே என்று நமக்கு நன்கு தெரியும். அதனால் தாயாரின் திருவடியை முதலில் பற்றிவிட்டால் நாம் தந்தையாரின் திருவடியைப் பற்றும் போது நம் தாய் நமக்காக பெருமாளிடம் பரிந்துரைப்பாள். அப்படி பெருமாளின் ஒரு பக்கத்தில் (பாரிசத்தில்) அமர்ந்து திருவானவள் பரிந்துரைப்பதால் தான் அந்த நற்செயலுக்கு ஸ்ரீபாரிசு ..> சிபாரிசு என்று பெயர் வந்ததாகப் பெரியோர்கள் சொல்லுவார்கள்.

இந்த மரபினை ஒட்டியே திருப்பாவை பாடிய கோதை நாச்சியாரும் முதலில் நப்பின்னை பிராட்டியைச் சரண் புகுந்து அவள் துணையுடன் கண்ணனைச் சரணடைகிறாள். நப்பின்னையை ஒத்த இன்னொரு பிராட்டி தானே கோதையும். அப்படியிருக்க அவரும் நப்பின்னையைச் சரணடைய வேண்டுமோ என்றால் நமக்கு அந்த நல்வழியைக் காட்டியருளத் தானே அவதரித்தாள் கோதை? அந்த அவதார நோக்கத்தின் படி அந்த நல்வழியைத் தானே பின்பற்றி நமக்கு நல்ல ஆசிரியையாக அமைகிறாள்.

இப்படி இருக்க நாம் சரணடைவது யாரை? திருமகளையா? நப்பின்னை பிராட்டியையா? அவர்களைச் சரணடைந்தாலும் பெருமாளின் திருவருள் பெறத் துணையாவார்கள் தான். ஆனால் தாயாகவும் ஆசிரியையாகவும் இருக்கும் ஆண்டாளைச் சரணடைந்தால்? இன்னும் அது பெருமாளுக்கு உகப்பான செய்கையாக இருக்குமே?

அப்படி கண்ணன் கைத்தலம் பற்றும் கனாவினைக் கண்ட சூடிக் கொடுத்தச் சுடர்கொடியின் திருவடியைப் பற்றும் வாய்ப்பு எப்போது கிட்டும் என்று இந்தப் பாடலின் மூலம் வியக்கிறார் நாயகி சுவாமிகள்.

கண்ணன் கைத்தலம் பார் கனா கண்ட நாச்சியார்
கருணைக்கு ஆவது எப்போது?
புண்ணியஸ்தலமாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
போய் சேருவது எப்போது?

ஆயர் மகன் மேல் ஆசை கொண்டாள் அடிக்கு
அன்பு செய்வது நாம் எப்போது?
வேயர் புகழ் வில்லிபுத்தூருக்கு ஏக நாம்
விருப்பம் வைத்திடுவது எப்போது?

அச்சுதன் அனந்தன் மேல் ஆசை வைத்தாள் மலர்
அடி சிரம் அணிவது எப்போது?
முச்சகம் போற்றும் வில்லிபுத்தூருக்கு
முடிவில் செல்வது நாம் எப்போது?

துளசி வனம் தனில் உலக மகிழ் ஆண்டாளுக்கு
தொண்டு செய்திடுவது எப்போது?
குளம் மூன்றும் ஒன்றாய் வில்லிபுத்தூருக்கு ஏக
உளம் மகிழ்ந்திடுவது எப்போது?

அன்ன நடை எங்கள் ஆண்டாள் திருவடிக்கீழ்
அமர்ந்திடுவது எப்போது?
அன்னவயல் ஸ்ரீ புதுவைக்கு ஏக நாம்
ஆசை வைத்திடுவது எப்போது?

திருவாடிப்பூரத்தில் அவதரித்தாள் சே
வடிக்கீழ் புகுவது எப்போது?
திருப்பாவை அருளும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
செல்வது இனி நாம் எப்போது?

குயிலைக் கூவாய் என்னும் குயில் மொழியாள் அடிக்
கீழ் குடி ஆவது எப்போது?
குயிலினங்கள் ஆர் ஸ்ரீவில்லிபுத்தூர் தனில்
குடியேறி வாழ்வது எப்போது?

பெண்மணியாம் கோதை ஆண்டாள் திருப்பாதம்
பேணிப் பணிவது எப்போது?
கண்குளிர அப்பனை வில்லிபுத்தூர் தனில்
கண்டு களிப்பது எப்போது?

இண்டர் நடைக்குணம் கொண்டாடும் ஆண்டாள்
இணையடி பணிவது எப்போது?
அண்டர் முனிவர்கள் தொண்டர் ஏத்தும் புத்தூர்
கண்டு களிப்பது எப்போது?

திருவரங்கேசனை மருவி வாழ் ஆண்டாள் தன்
திருவடை அடைவது எப்போது?
இருநிலம் புகழ் வில்லிபுத்தூருக்கே போவேன் என்று
இயம்பி நடப்பது எப்போது?

நடனகோபாலனை நாடும் கோதைத் திரு
அடி நாடி வாழ்வது எப்போது?
வடபத்ரஸாயி அருளும் வில்லிபுத்தூர்
மருவி வாழ்ந்திடுவது எப்போது?




நண்பர் சிவமுருகன் முன்பொரு முறை 'மதுரையின் ஜோதி' வலைப்பதிவில் இட்ட நடனகோபால நாயகி சுவாமிகளின் இந்தப் பாடலை இங்கே மீள் பதிவு செய்கிறேன்.

Sunday, March 13, 2011

ஜெபி ராம்,ராம்,ஷ்யாம்,ஷ்யாம்

[மெட்டு..ஜக்மே சுந்தர்  ஹாய் தோ நாம் by Anup Jalotaa...இந்த ஹிந்திப்பாட்டு
கேட்க மிகவும் இனிமையாக இருப்பதுடன் என்போன்ற பாட்டு
ஞானமற்றவர்களும் பாடக்கூடியவகையில் சுலபமான மெட்டோடு
அமைந்திருப்பதால் இந்தப்பாட்டைத் தழுவி ஒரு தமிழ் பஜனைப்பாட்டு
எழுத முயற்சித்தேன்;பலன் கீழே!]
தினம் ராமநாமம் ஜெபிப்போம்;
கனஷ்யாமின் நாமம் ஜெபிப்போம்;
ஜெபி ராம் ராம் ராம் ராம், ஷ்யாம் ஷ்யாம் ஷ்யாம்;
ஜெபி ராம் ராம் ராம் ராம், ஷ்யாம் ஷ்யாம் ஷ்யாம்


             
சபரி ருசித்த பழம் உண்டவன் ராமன்,
சுதாமாவின் அவலை உண்டான் பரந்தாமன்;
இருவருமே எளியோர்க்காதாரம், 
எளிமையின் அவதாரம் [ஜெபி ராம்......ஷ்யாம் ]





     
ராவண மர்த்தனம் செய்தவன் ராமன்;
காளிங்கனர்த்தனம்  செய்தான் பரந்தாமன்;
இருவரும் தீயரை மாய்த்திட வந்த
திருவருளவதாரம்  [ஜெபி ராம் ..ஷ்யாம் ]




        
ஏகபத்னி வ்ரதன் சீதாராமன்;
ராசலீலை செய்தான் ராதாரமணன்;  
இருவருமே திவ்ய பிரேமஸாகரம்,    
பேரன்பின் அவதாரம் [ஜெபி ராம்......ஷ்யாம்


   

      
வானரர் மகிமை உணர்த்தியவன் ராமன்;  
ஆனிரை அன்புடன் மேய்த்தான் கோபாலன்;
விலங்கிலும் தெய்வத்தைக்காட்டிய இருவரும்
கருணையின் அவதாரம் [ஜெபி ராம் ...ஷ்யாம்]

Monday, March 07, 2011

குக்கூ கனவு

சுப்புத் தாத்தாவின் குரலில், இசையில்... மிக்க நன்றி தாத்தா! கேட்டுக்கிட்டே வாசிங்க!



ஒற்றைக் குயிலொன்று ஒருமரத்தில் நின்று
குக்கூ கூவென்று கூவுதடி;
கண்ணன்கை வேய்ங்குழல் தானென்று மயங்கி
சின்னக் குயில்கூத் தாடுதடி!

புற்றுக்குள் ளிருந்து நாகமொன்று வந்து
சீறிப் படமெடுத் தாடுதடி;
சென்னியில் நர்த்தனம் செய்வான் கண்ணனென்று
கற்பனை அதற்கு ஓடுதடி!

கானமயில்களு திர்த்திட்ட தோகைகள்
காற்றினி லேறிவிரை யுதடி;
மாயக்கண்ணன் தன்னைச் சூடிக்கொள்வா னென்ற
எண்ணத்தி லேவிளை யாடுதடி!

வானமெங்கும் சின்னச் சின்னக் கருமேகம்
சூல்கொண்டு மெள்ளவே நாணுதடி;
நீலகண்ணன் தன்னைப் போர்த்திக் கொள்வானென்ற
நிச்சயத் துடனே தோணுதடி!

பட்டுப் பூச்சிகளும் இட்டமுடன் வந்து
பட்டுத் துகிலாக வேண்டுதடி;
இட்டமுடன் அந்தக் குட்டிக் கண்ணன்தம்மை
ஆடையாக்கிக் கொள்ள ஏங்குதடி!

மல்லிகை மந்தாரம் பாரிஜாத மெல்லாம்
மலர்ந்திதழ் விரித்துச் சிரிக்குதடி;
தங்கஎழில் கண்ணன் வண்ணமணி மார்பில்
தவழ்ந்திடக் கனவு காணுதடி!

--கவிநயா

Sunday, March 06, 2011

கண்ணனாகக் கண்டால்



கண்ணனாக கண்டால் கல்லும் கமழ்ந்திடும்
மன்னவன் வடிவிற்கு நிகரில்லை மாரனும்..


வெண்ணை உண்டு உண்டு மேனி செழித்திடும் - அவன்
வண்ணத் திருமார்பை வண்டினம் மொய்த்திடும்
சின்னத் தனமனைத்தும் செய்து களித்திடும் - என்
கண்ணில் நீரைக் கண்டால் உள்ளம் குழைந்திடும்.
கண்ணனாக...


தண்ணிய வெண்ணிலவு மின்னிய கோபியர் - என
நன்னிய நாட்டியத்தில் நாட்டம் செலுத்திடும்
திண்ணிய மனமொன்றைக் கொண்டு திகழ்ந்திடும் - எனை
தன்னந் தனியனாய் வாட்டி மகிழ்ந்திடும்.
கண்ணனாக...

Tuesday, March 01, 2011

கண்ணன் தூணில் இருக்கிறானா? துரும்பில் இருக்கிறானா?


கண்ணன் எங்கே இருக்கிறான்? தூணில் இருக்கிறானா? துரும்பில் இருக்கிறானா?

இருங்க இருங்க. இந்த வசனம் கண்ணன் அவதாரத்தில் இல்லையே? அது ரொம்ப முன்னாடி நரசிம்ம அவதாரத்திலேயே வந்த வசனமாச்சே?

பின்னே. யாரு இப்படி கேட்டாங்க?

ஒரு வேளை யசோதா கேட்டாங்களா? நந்தகோபர்?

அட, யார் கேட்டா என்னப்பா? பதில் சொல்லுங்க.

கண்ணனோ, நரசிம்மனோ - இருவரும் (ஒருவரே!) எல்லா இடத்திலும்தானே இருக்காங்க.

அவங்க இல்லாத இடம்னு ஏதாவது இருக்கா?

எதிலும் இங்கு இருப்பான், அவன் யாரோன்னு பாடியிருக்காங்களே.

அப்போ, இந்த கேள்வி கேட்டது யாருப்பா? சொல்லப் போறீங்களா இல்லையா?

அது வேறெ யாருமில்லே. நம்ம புரந்தர தாஸர்தான்.

என்ன? சந்தேகமா? தாஸருக்கா?

நமக்குத்தான் கஷ்டமான நேரங்களில் பகவான் இருக்கானா இல்லையான்னு தோணும்.

ஆனா, அனைத்தும் அறிந்த ஞானியான தாஸருக்கும் அந்த சந்தேகம் வந்துடுச்சா?

அதுதான் கிடையாது.

அவர் கேள்விகள் கேட்பது நமக்காக.

அவர் பதில்கள் சொல்வது நமக்காக.

அவருக்கு சந்தேகம் வர்றது நமக்காக.

அதுக்கு அவரே விளக்கங்கள் கொடுப்பது நமக்காக.

கண்ணன் எங்கே இருக்கிறான்? அவனைப் பார்த்தீர்களா? என்று கேட்பது போல் கேட்டு, அதற்குண்டான பதிலையும் அவரே கொடுக்கிறார் - இந்த அழகான பாடலில்.

இப்போ பாடல்.


****

பிள்ளங்கோவிய செலுவ கிருஷ்ணன எல்லி நோடிதிரி
ரங்கன எல்லி நோடிதிரி


குழலூதிக்கொண்டு நின்றிருக்கும் கிருஷ்ணனை
எங்கு பார்த்தீர்கள்?
ரங்கனை, எங்கு பார்த்தீர்கள்?

எல்லி நோடிதரல்லி தானில்ல
தில்லவெந்து பல்லே ஜானர (பிள்ளங்கோவிய)


வெறும் கண்களால் எங்கு பார்த்தாலும் கிடைக்காத கிருஷ்ணன்
(பக்தியுடன் பார்த்தால் எங்குமே இருப்பான்) என்று அறிந்த மக்களே (பிள்ளங்கோவிய)

நந்தகோபன மந்திரங்கள சந்து கொந்தினல்லி
சந்த சந்தத கோப பாலர விருந்த விருந்ததல்லி
சுந்தராங்கத சுந்தரியர ஹிந்து முந்தினல்லி
அந்தகாகள கந்த கருகள மந்தே மந்தேயல்லி (பிள்ளங்கோவிய)


நந்தகோபரின் கோயில்களின் அக்கம் பக்கத்தில்
கோபாலத்து சிறுவர்களின் தோட்டங்களில்
அழகான கோபியர்களின் முன்னும் பின்னும்
ஆயர்பாடியின் கன்றுகளின் மந்தையின் நடுவில் (பிள்ளங்கோவிய)

ஸ்ரீ குருக்த சதா சுமங்கள யோக யோகதல்லி
ஆகமார்த்ததொளகே மாடுவ யாக யாகதல்லி
ஸ்ரீகே பாக்ய நாஷ வார்த்திப போக போகதல்லி
பாகவதரு சதா பாகி பாடுத ராகதல்லி (பிள்ளங்கோவிய)


குரு மற்றும் சத்பக்தர்கள் கூடும் இடங்களில்
ஆத்மார்த்த பக்தியுடன் செய்யப்படும் யாகசாலைகளில்
(நமக்குள் கொழுந்து விட்டு எரியும்) ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில்
பாகவதர்கள் எப்போதும் (கிருஷ்ணனை) புகழ்ந்து பாடும் ராகங்களில் (பிள்ளங்கோவிய)

ஈ சராசரதொளகே ஜனங்கள ஆசே ஈசெயல்லி
கேசரேந்த்ரன சுதன ரதத அச்ச பீடதல்லி
நாசதே மாதவ கேசவ எம்ப வாச கண்களல்லி
பிச்சுகொண்டத புரந்தர விட்டலன லோசனாக்ரதல்லி (பிள்ளங்கோவிய)


உலகத்து மக்களின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டு (இருக்கிறான்)
இந்திரனின் புதல்வனான அர்ச்சுனனின் தேரில் இருக்கிறான்
மாதவா, கேசவா என்று அன்புடன் குதித்து பாடும் பக்தனின் பேச்சில் மற்றும் கண்களில்
புரந்தர விட்டலா என்றழைக்கும் பக்தனின் விழியோரத்தில் (பிள்ளங்கோவிய)

*****

கண்ணன் ஆயர்பாடியில் இருக்கிறான் என்று ஆரம்பித்த தாஸர், கடைசியில், மாதவா, கேசவா என்று சொல்லிக் கொண்டே இருங்கள், உங்கள் மனதில், பேச்சில், கண்களில் என்று உங்களுக்குள்ளேயே, உங்களுடனேயே இருப்பான், வேறெங்கும் தேடவேண்டியதேயில்லை என்று அழகாக முடிக்கிறார்.

***

இந்த பாடலைப் வித்யாபூஷணர் பாடியுள்ள காணொளி இங்கே. (இரண்டாம் சரணத்தை பாடவில்லை இவர். முதலாம் மற்றும் மூன்றாம் சரணத்தை மட்டும் கேட்போம்).



***

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP