Wednesday, September 08, 2010


சமீபத்தில் வலையில் ஆய்ந்து கொண்டு ரமாஸ்தோதிரத்தை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மிகவும் எளிமையான தமிழில் பொருள்பொதிந்த துதியை படித்தவுடன் இதை பதிவில் இடலாம் என்று தோன்றியது.கண்ணம் பதிவுதான் என்றாலும் ராமனையும் பாடலாம். அதிலும் இந்தத்துதியில் கண்ணனைப் பற்றியும் வருகிறது. நீண்டநாட்களாக எழுதாமல் இருந்த என்னயும் எழுத வைத்தது ராமகிருஷ்ணரின் கருணைதான். அனைவரும்படித்து பார்த்து ஆனந்தம் அடையலாம் இதை எழுதியவார் யார் என்று தெரியவில்லை.இசைச்சுட்டியும் கிடைக்கவில்லை. கேஆர்ஸ் மனது வைத்தால் கிடைக்கலாம்

பூதலத்தை யோரடி அளந்த ரூபமானபொற்
பாததாமரைச்சரண்பணிந்து பூசை செய்குவேன்
மாதவாகோவிந்தாஹரிகேசவாநாராயணா
நாதகீதவேதமந்த்ர ராமராமராமனே!


சூகரத்தின் வடிவெடுத்த சுந்தரா சௌந்தரா
ஏகலோகநாயகா நீயெங்குமாய் நிறைந்தவா
மேகமா யளாவிநின்ற வேதஞானதேசிகா
நாகமீதில் மேவுகின்ற ராமராமராமனே!


காரணா தாமோதரா கரியநீலவண்ணனே
பூரணா பயோதரா புராதனா நிராதனா
வாரணாதிமூலமென்ற போதுவந்த வாமனா
நாரணா யசோதைபுத்ர ராமராமராமனே!


வீரசிம்ஹ உக்ரமுற்ற விஜயன்மீதுதசரதன்
பாரின்மீது மைந்தனாகவந்த பஞ்சவர்சகாயனே
பூரணா க்ருபாகரா புதியதூணில்வந்துமுன்
நாரஸிம்ஹ ரூபமான ராமராமராமனே!


மாமனான கம்சனை வளைந்துகொன்று வென்றவா
பூமியுண்டுமிழ்ந்தவா புகழ்ந்தபொன்னரங்கனே
வாமனஸ்வரூபனான வாசுதேவதேவனே
நாம மாயிரம் படைத்த ராமராமராமனே!


கோடி சூரிய ப்ரகாச கொண்டல்மேக வண்ணனே
வாடிநொந்திடைந்திடாமல் வந்தருள்புரிந்தருள்
தேடிஅந்தகன் வெகுண்டுசீறி மேவி உன்னிடம்
நாடி வந்தபோது காரும் ராமராமராமனே!


தந்திதான் முன்னோலமென்ற போதுவந்த வாமனா
வந்துகாத்ததன்றுபோல் வந்துகாப்பதெந்தநாள்
செந்திருமணாளனான ஸ்ரீநிவாஸநாதனே
நந்திசேகரன் தரித்த ராமராமராமனே!


எண்ணி யன்பரானபேர் இடத்திருந்து வாவியே
புண்ணியநாம தேசிகா புவனரக்ஷகாரனே
வண்ணனே லீலாவிநோதவாசனே நின்மலரடி
நண்ணினேன் வைகுந்தமேவும் ராமராமராமனே!


தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன்
ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்
தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்
நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!


களபவாசனை மிகுந்த கரியமேகவண்ணனே
துளபமாலை மார்பினில் புனைந்த சுருதிவேதநாயகா
உளம் மகிழ்ந்து கருணைகொண்டு உன்னடிமையென்று நான்
நளினபாதம் தந்து காரும் ராமராமராமனே!


இல்லறத்தின் மாயையாலே ஏங்கினேன்மயங்கியே
புல்லறிவுகொண்டுயானும் போற்றி உன்னைப் பணிந்திலேன்
அல்லல் உற்றகாயமென்று அறிந்துவந்து என்னுளே
நல்லறிவு தந்து ரக்ஷி ராமராமராமனே!


சங்குசக்கரம்தரித்த சாருஸ்ரீநிவாசகா
எங்குமாய்நிறைந்தவா இலங்குமுந்நூல்மார்பனே
மங்குல்மேனியாள் இலங்கு மகரகுண்டலாதிபா
ரங்கநாயகா முகுந்தராமராமராமனே!


ஆழிமீது நின்றுயர்ந்த அச்சுதா முன்னாதியில்
ஏழுமராமரத்தை எய்தி ராவணாதிகள்
மாளவேசரம் தொடுத்த மாயனேமகிழ்ந்து
எந்நாளும் நீ உகந்துகாரும் ராமராமராமனே!


கோலினின்று உயர்ந்தவா குசத்தில் ஏறிநின்றவா
காளைகன்றுமேய்த்தவா முன்கம்சனைவதைத்தவா
சாலநான்முகனை யுந்திதன்னில்படைத்தவா
நாலுவேதமும் புகழ்ந்த ராமராமராமனே!


மத்ஸ்யரூப ராகவா வராகரூபராகவா
கொச்சை யாயருக்குகந்து குன்றெடுத்துநின்றவா
பச்சை ஆலில் துயின்ற பச்சைநீலவண்னனே
ரக்ஷகாஸ்ரீராகவா ஸ்ரீராமராமராமனே!


தஞ்சமாவதேதுன் பாததாமரைச்சரண்
மிஞ்சவேறு தப்புமில்லைமேகநீலவண்னனே
அஞ்சலஞ்சல் என்று கையமர்த்தி ஆதரிப்பராரையா
ரஞ்சிதப்ரகாசனான ராமராமராமனே!


விருந்துசெய்ய வேண்டுமென்று விதுரன்மனையிலேகியே
இருந்துமாயையாக வில்லிரண்டு துண்டமாக்கினாய்
பொருந்துமாயமோ மயக்க புண்டரீகமாயனே
நறுந்துளவ மணிந்தரங்க ராமராமராமனே!


மாயவாமுன்பாரதப் போர்வந்துதோன்றும் நாளையில்
நேயமாய் அர்ச்சுனர்க்கு நின்று தேரையூர்ந்தவா
ஆயனேஅனந்தமான ஆதிலட்சுமியென்னும்
நாயகிமணாளனான ராமராமராமனே!


பாவியென்றுபேர்கொடாதே பஞ்சபாதகங்களை
மேவிநூறு குற்றமே செய்தாலும் வந்துமெய்தனில்
காவலாகநீயிருந்து கருணைகொண்டுகாரையா
நாவினால் நிதம்துதிப்பேன்ராமராமராமனே!


அம்புவிழிமாதர்கள் ஆசைதன்வலைக்குள்ளே
இன்பசாகரந்தரித்த எண்னமற்றவஞ்சகன்
வம்புகோடிசெய்திடினும் மாயனேபொறுத்திடாய்
நம்பினேன்நான் உனதடிமைராமராமராமனே!


கந்தமர்துழாயணிந்த கருடகேசவாகனா
சொந்தடிமை இவனுமென்று சூக்ஷ்மபாதம் நல்கியே
இந்தவேளைவந்து ரட்சி ஏகலோகநாயகா
நந்தகேசவா முகுந்தராமராமராமனே!


சிகரகோபுரம்சிறந்த செய்யவீதிசூழவே
மகரதோரணம் சிறப்ப வரிசைமண்டபங்களும்
பகரமுற்றகொடிகளும் பணிந்துதான் அயோத்தியில்
நகரவாசமாயிருந்த ராமராமராமனே!


குற்றமென்ப தெதுசெய்தாலும் கொலைகள்செய்திருப்பினும்
பெற்றதாய்விரோதமுண்டோ பிள்ளையென்றுகொஞ்சுவாள்
அற்றதன்மையாவனோ யான்குறைசெய்தாலுமென்
நற்றமிழ் உகந்து காரும்ராமராமராமனே!


சாடிசெய்துரியோதனன் சபையில்திரௌபதிதனை
ஆடையுரித்தபோது ஆதிமூலமென்றிட
வாடிடாமல்நாணம்காத்து விளையுமாறுசேலைகள்
நாடியொன்று இலட்சமாக்கும் ராமராமராமனே!


கற்சிலையெனச்சபித்த அகலிகைசாபத்தையும்
உச்சிதமாகவென்று அந்தசாபம்நீக்கினாய்
ஜானகிதனைமேவ ஆசைதன்மிதிலைக்குளே
நற்சிலைவளைத்துநின்ற ராமராமராமனே!


வாசமாளிகைபொலிந்த மண்ணையுண்டவண்ணனே
கேசவாமுராரிநந்த கிருஷ்ணனேமனோகரா
தாசனென்றுபாததாமரைச் சரண்கொடுத்தருள்
நேசவேங்கடேசனான ராமராமராமனே!


ஆவல்கொண்டுபாரிலே அலைந்துமேயலாதிகள்நின்
சேவடிக்காளாய்வராத ஜென்மமென்னஜென்மமோ
பாவகாரியென்றெண்ணாமல் பாதுகாத்தருள்புரி
நாவலர்க்கன்பால் உகந்தராமராமராமனே!


ஏகவஸ்துவாகிநின்ற எங்கள்ரங்கநாயகா
சாகரத்தினின்றுயர்ந்த சஹஸ்ரநாமதேசிகா
மோகனாசௌந்திரா முராரிமோக்ஷகாரணா
காகவண்னன் ஆகிவந்த ராமராமராமனே!


ஜானகிமணாளனாய் தரணியையோரடியுமாய்
வானமோடளாவிநின்ற வராகவவதாரனே
நமோநமோநாராயணா முகுந்தநந்தகேசவா
ஞானதேசிகப்ரதாப ராமராமராமனே!


பலச்ருதி


செப்பியேவுந்திபோற்றும் செங்கண்மால்பாதம்போற்றி
முப்பதும்படித்தோர்கேட்டோர் முற்றிலுமெழுதினோர்க்குத்
தப்பில்லாவரங்கள்தந்து சந்ததிகிளைபெற்றோங்க
இப்புவிதனில்வாழ்ந்து எண்ணமற்றுஇருப்பர்தாமே

30 comments:

  1. மீள் நல்வரவு திராச ஐயா! நலமா? எப்படி இருக்கீங்க?
    கண்ணனும் முருகனும் திராச நலமா?-ன்னு அன்பா விசாரிச்சாங்க! :)

    பாடல் நல்லா இருக்கு! ராமாராமாராமனே-ன்னு ஈற்றடியில் முடிவது இன்னும் அருமை! பெருமானின் திருப்பெயர்கள் பல அருவியாக் கொட்டுது போல இந்தப் பாட்டில்!

    ReplyDelete
  2. நன்றி கேஆர்ஸ். வேலை பளு,இடைவிடத வெளியூர் மற்றும் வெளிநாட்டுபயணம் இவைகளால் நிறைய எழுத முடியவில்லை. இப்போது நேரத்தை ஓதுக்கி எழுத முயற்சி. அதன் விளைவே இந்தப்பதிவு. பார்க்கலாம்.

    ReplyDelete
  3. //செப்பியேவுந்திபோற்றும் செங்கண்மால்பாதம்போற்றி//

    பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //இதை எழுதியவார் யார் என்று தெரியவில்லை.இசைச்சுட்டியும் கிடைக்கவில்லை. கேஆர்ஸ் மனது வைத்தால் கிடைக்கலாம்//

    :)
    இதுக்கு நான் என்ன "மனது" வைக்கிறது திராச? "அறிவு" தானே வைக்கணும்! அது தான் என் கிட்ட இல்லையே!

    இது ஸ்ரீராம ஸ்தோத்திரம்-ன்னு பொதுவாக பஜனை கோஷ்டிகளில் பாடிக் கேட்டிருக்கேன்! அருணகிரியைப் போல நல்ல சந்தமா வரும்!

    வந்து காத்த தன்றுபோல்
    வந்து காப்ப தெந்தநாள்
    வாடி நொந்த டைந்திடாமல்
    வந் தருள் புரிந்தருள்!

    அற்ற தன்மை யாவனோ
    யான்குறை செய் தாலுமென்
    நற்றமிழ் உகந்து காரும்
    ராம ராம ராமனே!!

    ஒலிச் சுட்டி கிடைக்கறது கஷ்டம் தான்! நாம யாரும் பாடினாத் தான் உண்டு! :)

    பாடல் ஒரு Folk Song ஆகவே இருக்க வாய்ப்பு இருக்கு! நாடி வந்தபோது "காரும்" ராம ராம ராமனே! - இப்படிக் காப்பாற்றலைக் "காரும்" என்று சொல்வது நாட்டு வழக்கு தான்!

    தேசிகா என்று நிறைய இடத்தில் வருவதால், இதை வேதாந்த தேசிகரின் பக்தர்கள் யாரேனும் இயற்றி இருக்க வாய்ப்புண்டு! தசாவதாரங்களும் இதில் அழகாகப் பேசப்படுகின்றன! முப்பது பாட்டும் நாட்டுப்புற மணிகள்!

    ReplyDelete
  5. மிகவும் நன்றி சரவணன் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  6. //தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன்
    ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்
    தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்
    நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!//
    நல்ல பிரார்த்தனை பாடலாக இருக்கிறது ஐயா. நிறைய நாமங்கள்.எல்லா அவதாரங்களையும் நினைவு படுத்தும் பாடல்கள். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  7. இரவி சொன்னது போல் நல்லதொரு இசைப்பாடல் ஐயா. பதம் பிரித்துப் படித்தால் இன்னும் நன்கு புரிவது போல் இருக்கிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  8. வாருங்கள் ராதா. நன்குபடித்தால் தசாவதாரமும் இதில் வருகிறது ராமன் கிருஷ்னர் வரலாறும் வருகிறது; நன்றி வருகைக்கு.உங்களுக்கு நல்ல சங்கீத ஞானம்.

    ReplyDelete
  9. நீங்கள் சொல்வது மிகச்சரியே குமரன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் பலவிஷயங்களை எளிமையான வழியில் சொல்லியிருப்பது தெரிகிறது

    ReplyDelete
  10. Bhoothalathai Oradiyaal..1. பூதலத்தை ஓரடியால்
    you tube channel.....https://www.youtube.com/watch?v=fn5QhoJtREg

    ReplyDelete
  11. I was trying for the lyrics for quite some time. When I was young, I have heard Rama Katha Rathna Shri V. THYAGARAJAN of Nanganallur singing this in his discourse/kalakshebam

    ReplyDelete
  12. என் தாய் நான் பிறப்பதற்கு முன் இந்த பாடல் படித்தார்.இப்போது கேட்டதால் தேடி இதில் இருந்து எடுத்து கொடுத்தேன்.நன்றாக இருந்தது நானும் படித்து வருகிறேன்.இந்த பாடல் இசையில் யாரேனும் பாடி இருக்கிறதா கிடைக்குமா.படிக்கவே அருமையாக உள்ளது.இசையாக இருந்தால் நன்றாக இருக்கும்.யாருக்காவது கிடைத்தது இருந்தால் தரவும்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. There are a few uploads of this song in you tube.

      Delete
  13. ஐயா வணக்கம். இந்த பாடல் 1990s ல் பஜனையில் நான் பாடி இருக்கிறேன். இந்த புத்தகம் காணாமல் போய் விட்டது. தெரிந்த வரிகளை மட்டும் இப்போதும் பாடிக் கொண்டு இருக்கிறோம். பாடல் கிடைத்தது மிக்க சந்தோசம் நன்றிகள் கோடி.

    ReplyDelete
    Replies
    1. I got this sloka in 60s and forgot except this stanza shaman seithum arigilen . The n in 96 I located this sloka in a book 'Sillarai kattidam erubathu ' in which this was one of the sloka. This shop was in parry's near Adyar Ananda bhavan sweet shop

      Delete
  14. I received second prize for rendering these 30 stanzas by heart when I was 9 years old in 1952 . கம்ப ராமாயணம் ப்ரவசனம் நான் வசித்த தஞ்சை ஜில்லா அக்ரஹாரத்தில் நடைபெற்ற சமயம். புதுக்கோட்டை யை சார்ந்த , கம்பன் வல்லான், கம்பன் கவி முழக்கம், ராமநாத பரதேசி என்ற அடைமொழிகளை கொண்டு வித்வான் வே. த்யாகராஜன் இந்த பாடல்களை , ராமாயண ப்ரவசனத்திற்கு முன்பு தினம் பதித்தார். மனப்பாடமாக சொல்லும் 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு silver medal என்ற போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசு கிடைக்கப் பெற்றேன். மூன்று பரிசுகள் முறையே மூன்று ஆண் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இப்பாடல்கள் நினைவில் பசுமையாக இன்னும் இருக்கின்றன.

    ReplyDelete
  15. I heard this song in NADUTHEERVAI PATHI in Udayappan kudiyiruppu Monikettipottal post, nagarcoil, kkdt, 628751. Till now they're siinging with a folk music and they would produce high sound with dextral shell at the end of each stanza

    ReplyDelete
    Replies
    1. ஆலினிற் றுயின்றவா ! குருத்தி லேறி நின்றவா!
      காலிகன்று மேய்த்தவா! முன்கஞ்சனை வதைத்தவா!

      Delete
    2. கற்சிலை யெனச்சபித்த வகலிகை சாபத்தையும் கச்சிதமாக வந்துகந்து சாப நீக்கினாய்
      அச்சானகி யன்னை மேல் ஆசை கொண்டு மிதிலையில்
      விற்சிலை வளைத்து நின்ற ராம ராம ராமனே!

      Delete
    3. வாசமா லிகைபுனைந்து மண்ணையுண் வண்ணனே!
      கேவமு ராலிநந்த கிருஷ்ணனே மனோகரா!
      தாச னென்றுபாதத் தாமரைசரண் கொடுத்தருள்
      ராச வேங்கடேசனான ராமராம ராமனே!

      Delete
    4. ஆவல் கொண்டு பாரிலே அலைந்துமே யலாதுநின்
      சேவடி களாய்வராத சென்மமென்ன சென்மமோ
      பாவகாரிய மென்றெண் ணாமல்பாது காத்தருள்புரி
      நாவலர்க்கு பாய் சுமந்த ராம ராம ராமனே!

      Delete
    5. தஞ்ச மாவதேதுன் பாததாமரைச் சரணமே
      துஞ்ச வேறு தப்புமில்லை மேகநீல வண்ணனே!
      அஞ்ச லஞ்சலென் றுகையமர்த்தி யாதிரிப்டையே
      ரஞ்சிதப் பிரகாசனான ராம ராம ராமனே!

      Delete
  16. சீறி மேவி என்னிடம் நாடி வந்த போது காவாய்

    ReplyDelete
  17. தந்திதான் முன்னால மென்ற போது வந்ததீதமாய் வந்து காத்ததன்று போல

    ReplyDelete
  18. களப வாசனை மிகுந்த கரிய மேக வண்ணனே | துளப மாலை மார்புனைந்த சுருதி வேத நாயகா! உளமகிழ்ந்து கருணைகொண்டு உன்னடிமையென்று நளினி பாதம் தந்து காவாய் ராம ராம ராமனே!

    ReplyDelete
  19. சாடி செய் துரியோ தனன் சபையிலே திரெளபதை
    ஆடையன் றுரிந்தபோது ஆதிமூல மென்றிட
    வாடிடாமல் மானம் காத்து வனையுமாறு சீலைகள்
    நாடியொன்று இலட்சமாக்கு ராமராம ராமனே!

    ReplyDelete
  20. வந்தென் மெய்தனில்

    ReplyDelete
  21. மாமனான கஞ்சனை வளர்ந்து வந்து கொன்றவா
    பூமியுண் டுமிழ்ந்தவா புகழ்ந்த பொன்னரங்கனே
    வாமன ஸ்வரூபனான வாழ் தேவ தேவனே
    நாம மாயிரம் படைத்த ராம ராம ராமனே!

    ReplyDelete
  22. இந்த பாடலை எங்க தாத்தா பாடுவாங்க..

    ReplyDelete
  23. 🙏🙏🙏🙏🙏 Namasakaram., Nandrigal palakodi

    ReplyDelete