Wednesday, September 30, 2009

யமுனே நின்னுட நெஞ்சில்...!



ரு பொற்பொழுதாய் விரிகின்றது அக்காலம்.

வானின் மந்தகாசப் புன்னகை, வரப்போகும் இராச லீலையைக் காண வெட்கப்பட்டு பூத்த பொன் வர்ணம் எனறானது. பிரம்மாண்டமான பிரபஞ்சம் முழுதும் சிவந்த மாதுளை விதைகள் போல் விண்மீன்கள் மின்னத் தொடங்கின. காதலனின் முகத்தை ஒற்றி ஒற்றி தன் நிறம் போல் பூசிக் கொள்ளும் காதலியின் திருமுகம் போல் யமுனா நதி விண்ணின் சிவந்த நிறத்தை தன் மேனியெங்கும் அப்பிக் கொண்டு நகர்ந்தது. மதியத்தின் கதிரவனின் ஆதுரத் தீண்டல்களால் கன்றிப் போய்ச் சிவந்திருந்த பூக்களும், காய்களும், கனிகளும் வீசத் தொடங்கும் மாலைத் தென்றலில் மயங்கி அசைந்து கொண்டிருந்தன. தூர மலை முகடுகளின் உச்சிகளில் மொட்டு விட்ட செந்தாமரை போல் சிவப்புப் பொன்னிறம் பூத்திருந்தது.

பூங்காற்றின் நிலையைத் தான் என்னவென்று சொல்வது? வேணு கான நாயகனின் மதுர நாதத்தை தனக்குள் சுமந்து கொண்டு, போதையில் கிறங்கிப் போன பின் தள்ளாடித் தடுமாறிக் கையில் கிடைத்த பூக்களை எல்லாம் கிள்ளிப் பார்த்தது; பெரும் மரங்களின் கடும் மேனியின் மீதெல்லாம் மோதிக் கொண்டது; ஈரம் பூக்கத் தொடங்கி இருக்கும் மண் மேல் நடந்து, பின் முடியாது, விழுந்து, புரண்டு, கனிந்து, எழுந்து, குப்புறக் கவிழ்ந்து, அசைந்து யமுனா நதிக்கரையில் காத்திருக்கும் கோபிகையர்களுக்கெல்லாம் கண்ணனின் வருகையைக் குழறலாய்க் கூறியது.

விழிகளை இமை எப்போதும் காத்திருக்கும். ஆனாலும் இமை அசந்திருக்கும் போது பார்த்து கண்ணீர் கரை புரண்டு ஓடோடி வரும். போல், காதல் நிரம்பி மனத்தில் ததும்பிக் கொண்டிருக்கும். ஒரு சிறு கீறல், பூங்காற்றின் ஒரு சிறு கூறல் பட்டதும் பொங்கி வழிகின்றது, கோபியரிடமிருந்து..!

அந்த இராசத் திருமகனைக் காணாது விழித்திருக்கும் போதெல்லாம் வீணாய்த் தோன்றுகின்றது என்கிறாள் ஒருத்தி! அந்தக் கார்மேகவர்ணனை நினையாது கழித்திருக்கும் போதெல்லாம் காடுண்ட இருளென நகர்வதேயில்லை என்கிறாள் மாற்றொருத்தி! முட்டி போட்டுக் கொண்டு பால் கறக்கையில், நம்மை முட்டிக் கொண்டு, தாய் மடியை முட்டி, முட்டி அமுதருந்தும் கன்றினைப் போல் எந்நிலையிலும் நினைவுகளை முட்டி, தட்டி கிளம்பி கிறுகிறுக்க வைக்கின்றது அவன் திருமுகம் என்கிறாள் ஒருத்தி! தோப்புகளைத் தாண்டிச் செல்கையில் வீசும் ஊதற்காற்று அவன் திருவாய் ஊதும் காற்று போல் இசை எழுப்பி மேனியைச் சிலிர்க்கச் செய்கின்றது என்கிறாள் மற்றும் ஒருத்தி!

மோகன வர்ணமென எடுத்துப் பூசிக் கொள்கின்றது அவன் பிரிதலில் நான் கொள்ளும் நிறத்தை மாலை வானம் என்றாள் நாணத்தால் சிரம் கவிழ்ந்து, ஒருத்தி! குளிக்கையில் மஞ்சள் அள்ளி பூசுகையில், மனதில் ஒரு சிரிப்பு பூக்கச் செய்கின்றன அவன் விரல்கள் விளையாடிய தடங்கள் என்று வெட்கிக் கூறிச் சிரித்தாள், இன்னும் மஞ்சள் நிறம் கிளைக்கச் செய்யும் புன்னகையோடு ஒருத்தி!

இன்னும் இன்னும் காற்றின் காதுகளுக்கும், யமுனை ஆற்றின் அலைகளுக்கும் மட்டும் சொல்லிக் கொண்ட கதைகளை கோபியர் கூறிக் கொண்டே இருக்க, கண்ணன் அங்கு வந்தான்.

லையாமாருதம் வருகையில் நாணலென்ன செய்யும்? பேரலை காதலுடன் பொங்கி வருகையில் கரையோர வெண் சங்கு என்ன செய்யும்? இரவின் குளிர் இசைப் பாடி வருகையில் கானகத்தின் சிறு கிளைகள் என் செய்ய முடியும்? மதுர கானமென இசைத்துக் கொண்டே அந்தக் கள்ளன் வருகையில், காதலின் மனங்கள் தான் என்ன செய்ய முடியும்?

மெல்ல மெல்ல தன் இதழ்கள் திறக்கையில் சுற்றிக் கொண்டே இருந்த தேனீ, இன்பத்தின் பேரெல்லைக்கே சென்று தேன் துகள் குடத்தில் தலைக் குப்புற விழுதல் போலும், வான் மஞ்சள் இராகங்கள் வாசிக்கையில் நந்தவனத்தின் புஷ்பங்கள் பூத்து கலகலவென சிரித்து மகிழ்தல் போலும், சின்னச் சின்னதாய் அலைகள் வந்து மோதுகையில் சிலிர்த்து சிலிர்த்து கலகலக்கும் கரையோர பூச்சிகள் போலும், அந்த நாத நாயகனின் கானக் காதல் காற்றின் மேனியெங்கும் தடவித் தடவி நிரப்ப, அமிர்த குடத்தில் விழுந்து தத்தளிக்கும் மீன்களாயினர் கோபியர்.

பனித்துகள்களைக் கொண்டையாய் அணிந்து கொள்ள தயார்ப் படுத்திக் கொண்டிருந்த, பச்சைப் பசும்புற்கள் எல்லாம், தரையோடு ஆழப் புதையும் வகையில் யாவரும் ஓடோடி அந்த மாயனைச் சூழ்ந்தனர்.

மேகங்களும் மாமழையும் பெய்யும் போதெல்லாம் தன் வானுயர் மகிழ்வை தோகைகள் வழி சிந்தும் மயில்கள், இப்போது இந்தக் கார்மேகவர்ணனைக் கண்ட மாத்திரத்தில் பெரும் பரவசத்தில் அழ்ந்து சிறகுகள் விரித்து நடனமாடின. புள்ளிமான்களும், பேடைக் குயில்களும், சின்னப் புறாக்களும், பொன் வர்ணப் பறவைகளும் சீச்சுக் கீச்சென்று குரல் எழுப்பிக் கொண்டே எங்கும் பொங்கிப் பறந்தன.

பலவண்ண மலர்கள் பொலபொலவென தங்கள் சந்திரக் காதலனை வரவேற்கப் பூக்கத் தொடங்கின. வெண்ணிலாவின் நிறத்திற்கு முற்றிலும் வேறுபட்ட இந்த கரியனைக் கண்ட மாத்திரத்தில் சற்று குழம்பினாலும், தெளிவுற்று தம் கைகளால் கொப்பி அடிக்கத் தொடங்கின.

கோபியர் மட்டும் சும்மா இருந்தனரா...?

ந்த லீலைக் காதலனின் கன்னங்களைப் பிடித்து இழுப்பதும்; அவன் கைகளின் குழல் போலின்றி சுருண்டு சுருண்டு குழல்களாய் இருக்கும் கருங் கூந்தலை அள்ளி முத்தமிடுவதும்; அவன் கரங்களைப் பிடித்து தம் புறம் இழுத்து அணைப்பதும்; அவன் சிவந்த இதழ்களால் தினம் தினம், நிதம் நிதம் சுவைத்து, அவன் மூச்சுக் காற்றால் உயிர் பெற்று கருவத்தால் இசை பரப்பி, இசை பெறும் குழலாய்த் தாம் ஆக மாட்டோமா என்ற பெருமூச்சோடும்; அவன் மணிமார்பில் தவழும் பூமாலையின் ஒரு பூவாக மாட்டோமா என்ற ஆசையோடும்; அவனோடு விளையாடத் தொடங்கினர்.

அந்த இராச லீலை மன்னனின் விளையாட்டுக்களைத் தான் என்னவென்று சொல்லுவது?

பூக்கள் கிளைத்து மணம் வீசும் கன்னியின் கூந்தலைக் கலைத்துப் போடுகிறான். தன் கன்னத்தில் இதழ் பதிக்க வந்த ஒருத்தியின் முகத்தில் கொட்டி விடுகிறான். தன் குழலைப் பிடுங்க வரும் ஒருத்தியின் கைகளுக்கு அக்குழலாலேயே அடி ஒன்று வைக்கிறான். தன் பின் வந்து அணைக்க முயன்ற ஒருத்தியைப் பயமுறுத்த திடுமென திரும்பிப் பழிப்புக் காட்ட, அந்த மதுரமான திருமுகத்தில் பரவசமுற்று தடரென விழுகின்றாள், அவள்.

கொப்பி விளையாடி மகிழ்விக்கிறான். கைகளைப் பிடித்து சுழலாட்டம் செய்கிறான். நடனம் ஆடுகிறான். முதுகோடு சாய்ந்து கொண்டு பாடுகிறான். ஒருத்திக்கு தலை நிறைய பூக்கள் வைக்கிறான். ஒருத்தியின் தலையின் பூக்களைப் பறித்து, அவளது முகமெங்கும் ஊதுகிறான். நாதப் பெருங்குழலில் உயிர் உருக்கும் பூங்கானம் இசைக்கிறான்.

இராச லீலைகளை மெல்ல மெல்ல அவன் அரங்கேற்றுகையில் வெட்கத்துடன், வீசிக் கொண்டிருந்த குளிர்க்காற்றும் நிறம் மாறத் தொடங்கியது.

சந்திரமதியும் எட்டிப் பார்த்து, கள்ளத்தனத்தோடு சிரிக்க, வெட்கத்தால் கூச்சப்பட்ட கோபியர் உற்சாகப் பரவசத்திலும், உல்லாச சஞ்சாரத்திலும் யமுனையைப் பார்த்துப் பாடத் தொடங்குகிறார்கள்.

'யமுனே நின்னுட நெஞ்சில்.....'

Get this widget | Track details | eSnips Social DNA




***
பாடல் : யமுனே நின்னுட நெஞ்சில்...
மொழி : மலையாளம்
படம் : யாத்ரா
படம் வெளியான ஆண்டு : கி.பி. 1985 :)
கோர்ப்பவர் : இளையராஜா
(குரல்) சேர்ப்பவர் : ஜானகி.எஸ்.
ஈர்ப்பவர் : ஷோபனா மற்றும் பலர்.
பார்ப்பவர் : நீங்கள், மம்முட்டி மற்றும் பலர்.
:)

Tuesday, September 29, 2009

கிருஷ்ணா - இராதா.



மோகன இரவின் பின்னிலாக் காலம். கருவானத்தின் மேகக் கிழிசல்களில் பரவியிருக்கின்ற வெண் ஒளித்துகள்கள் நிலவின் இருப்பைச் சொல்கின்றன. கருங்குயில்களும், வெண் அன்னமும், நாரைக் கூட்டங்களும், தங்க மீன்களும், பச்சைத் தவளைகளும், கல்லிடுக்கின் தேரைகளும் தத்தம் கூட்டுக்குள் ஒடுங்கி விட்டன.

நள்ளிரவின் கூதற்காற்று என் மனம் போலவே சோக கீதம் பாடிக்கொண்டு வீசுகின்றது. அலையடித்துக் கொண்டிருக்கும் குளிர்க் குளத்தின் இயக்கங்களும் நின்று போய் விட்டன. நான் யாரிடம் என் வேதனையைக் கூறுவேன்?

கோரைப் புற்கள் கூடு கட்டிக் கொண்டுள்ள நீலக் குளமே, உன்னிடம் தான் கூற வேண்டும். என் இதயக் கூட்டுக்குள் சிக்கிக் கொண்ட மதன மோகனைப் போல் உன்னால் என்னைப் பிரிந்து சென்று விட முடியாதல்லவா..?

இல்லை..! இல்லை..! நீயும் என்னை விட்டுச் சென்று விடுவாய். என்னை விட்டு மட்டுமா..? யாருமற்ற தனிமையின் இரவுக் காலங்களில் மட்டும், பால் ஒளியைப் பொழியும் நிலவைச் சுமந்து களித்திருப்பாய். பகல் நேரம் வர வேண்டியது தான். இரவில் கொஞ்சிக் குலாவிய நிலவை மறந்து கதிரோடு சென்று ஒட்டிக் கொள்வாய். பாவம் நிலவு! என்னைப் போல் அதுவும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வர வேண்டும்.

முன்னொரு பிறவி என்று சொல்லத்தக்க காலம் உனக்கு நினைவிருக்கின்றதா?

து ஒரு மழைக் காலம். மேற்கின் மலைத் தொடர்களில் பொழிந்த செம்மண் நீர் எல்லாம் பாய்ந்து நிறைந்த நீர் நிலைகள். நீல ஆம்பல்கள், செந்தாமரைகள், பச்சை நிறத்தில் எங்கும் படர்ந்த ஆகாயத் தாமரைகள் என்று நாங்கள் அணிகின்ற ஆடைகளுக்கு கொஞ்சமும் குறையாமல் நீயும் அணிந்திருந்தாய். நம் தெருவெங்கும் ஈரம் பூத்திருந்தது. மாலை நேரங்களில் ஒளியால் நிரப்பும் சிறிசிறு விளக்குகள் கொண்ட எங்கள் வீடுகளை விட்டு, வெண்ணிலவின் ஒளியில் குளிக்கின்ற உன்னைத் தேடி வந்து கதை பேசுவோம்.

ஆஹா! என்னவென்று சொல்லுவேன்? அந்த மாயக் கண்ணன் அப்போது நம்மோடு இருந்தான். குளக்கரையில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில், இடை புகுவான். இடையைக் கிள்ளுவான். பொல்லாப் பிள்ளையாய் குளத்தில் இறங்கி, நீரை வாரி, வாரி எங்கள் மேல் இறைப்பான். நீயும் அலைகளால் ஆடி அதைக் கண்டு சிரிப்பாய். நாங்கள் கரைமண்ணை எடுத்து அவன் மேல் வீச, அதை அப்படியே விழுங்குவான். எங்கள் கூந்தல் பூக்களை அள்ளி, முகமெங்கும் தூவுவான்.

மரத்தின் மேல் ஏறி அமர்ந்து உலுக்குகையில், மாலையில் பெய்த ஈரத் துளிகள் எங்கள் மேல் தெறிக்கக் கண்டு விழுந்து,விழுந்து சிரிப்பான்.

'இரு..! இரு..! உன் அன்னையிடம் போய்ச் சொல்கிறோம்' என்று சொல்லிப் புறப்படுகையில், மண்ணை அள்ளிப் பூசிக் கொண்டு, 'இரு..! இரு..! உன் அன்னையிடம் போய்ச் சொல்கிறேன்' என்று விஷமச் சிரிப்புச் சிரிப்பான். மீறி யசோதாவிடம் சொல்லச் செல்கையில், ஓடிவந்து கன்னத்தில் முத்தமிட்டுச் செல்வான்.

கள்ளை உண்டவர் பிறகு நடக்க முடியுமோ? தேனை உண்ட வண்டு பிறகு பறக்க விரும்புமோ? அந்த மாதவனின் இதழ் பட்ட பின் அந்த நினைவில், முன்னர் நடந்தது, பின்னர் நடப்பதும் நினைவில் இருக்குமோ?

பின்பொரு நாள், நாங்கள் அந்தக் கோபாலனின் குறும்புகளைப் பேசியவாறு குளிக்க வந்தோம். அந்த மதுசூதனன் எங்கிருந்து கண்டானோ? எப்படி அறிந்தானோ? யார் சொன்னாரோ?, இந்த மரத்தின் மேல் அமர்ந்து கொண்டான். நாங்கள் அதைக் கவனியாமல், குளிக்கப் புகுந்தோம்.

கண்ட மாத்திரத்திலேயே, காண்போர் உள்ளத்தைக் கவர்ந்து கொள்ளும் கண்ணனுக்கு எங்கள் ஆடைகளையும் கவர்வதா கடினம்?. நாங்களும் பலவாறு துதித்தோம்.

'அட கண்ணா! மணிவண்ணா! கோவர்த்தனகிரி நாதா! காளிங்க ஸம்ஹாரி! குழலூதும் கோவிந்தா! ஆடைகளை கொடுத்து விடப்பா! கோபியர் கொஞ்சும் ரமணா! நீ என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். வெண்ணெய் வேண்டுமா? இனி நீ உறியடித்து பானைகளை உருட்டி, உடைத்து உண்ண வேண்டாம். நாங்களே உனக்கு ஊட்டி விடுகிறோம். ஹே! கோபாலா! உன் இனிமையான குழல் ஓசையில், பசுக்களும், ஆடுகளும், இடையர்களும், வன மரங்களும், பறவைகளும், விலங்குகளும், மலையும், காற்றும் மட்டும் மயங்கி நின்று விடுவதில்லை. நாங்களும் எங்கள் வேலையை விட்டு மெய் மறந்து விடுகிறோம். உன் வாசிப்பைக் கேட்டுக் கொண்டு தயிர் கடைகையில், வெண்ணெய் பொங்கிப் பெருகுகிறது. கிருஷ்ணா! உன் நாத ஓசையில் மயங்காத பேரும் உண்டோ? இதோ, இந்தக் குளத்தை கேட்டுப் பார்! சளசளவெனத் துள்ளிக் குதிக்கும் மீன்களும் அமைதியாகின்றன. அதோ அந்த மலையைக் கேட்டுப் பார்! மேலே வந்து மோதுகின்ற கருமேகங்களும், அமைதியாய் நின்று விடுகின்றன.யுகயுகமாய் ஓடிக் கொண்டிருக்கின்ற கிரகங்களும், சூரியனும், பிரபஞ்ச வெளியும் நின்று விடுகின்றன. அத்தகைய கருணை மகாப் பிரபு! நீ விளையாட கோபியர்கள் நாங்களா கிடைத்தோம்? எங்கள் மனத்தைக் கவர்ந்து விட்ட நாதா, இப்போது எங்கள் மானத்தையும் கவர வந்துள்ளாயோ? ஹே, கருமேக வர்ணா! ஆடைகளைக் கொடுத்து விடப்பா' என்று வேண்டினோம்.

இன்னும் பலவாறெல்லாம் வேண்டிக் கொண்ட பின் தான், அந்த அருமைப் பிள்ளை, ஆடைகளைக் கொடுத்தான். நீயும் கண்டு கொண்டுதானே இருந்தாய்?

ந்த நாட்களெல்லாம் ஒரு கனவாய்ச் சென்று விட்டன. இப்போது நமது மனம் கவர்ந்த மோகனன், ஒரு இராஜ்ஜியத்தின் தலைவன். அந்த நந்த கோபன் குமரன், பல பெரும் சேனைகளுக்கெல்லம் தளபதி. இனி அவன் நம் கோகுலத்திற்கு வருவானா? அவனை எண்ணி,எண்ணி கோபியர்களும், நானும் அந்த நிலவைப் போல் தேய்ந்து கொண்டே வருவதை அறிவானா? அந்த மன்னனைக் காணாமல் மற்றுமொரு இரவு கரைந்து கொண்டிருக்கின்றது என்பதை நிலவே, அவன் மாட மாளிகையின் உப்பரிகைகளில் நிற்கும் போது, சொல்வாயா? கூச்சம் சிறிதும் இல்லாமல், ஆடையைத் தள்ளி விட்டுச் செல்லும் தென்றல் காற்றே, அவனைத் தீண்டும் போதெல்லாம், கோபிகைவனத்தில், இராதா அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று சொல்வாயா?

யாரது..? யாரது? என்னைத் தொடுவது?

ஆ..! ஆ..! யார் நீலமேக வண்ணனா? என் உள்ளம் கவர்ந்த மன்னனா? ஆம்! அவனே தான். இல்லை..!அவனாய் இருக்க முடியாது. எங்கள் கண்ணன் இப்படிச் சிவந்தவனாய் இருக்க முடியாது. அவன் கருநிறத்தான். துவாரகையில், அரண்மனைப் பெண்கள் அனைவரும் முத்தமிட்டு, முத்தமிட்டு என் கண்ணனைச் சிவப்பாக்கி விட்டார்களோ? இல்லை..! என்னைப் பிரிந்துச் சென்று இவ்வளவு நாட்களாகி விட்டதை எண்ணி, வெட்கப்பட்டு இப்படி சிவந்திருக்க வேண்டும்.ஹே பிரபு! இன்னும் ஏன் முதுகுப் புறம் மறைந்து நிற்கிறீர்?

மதனராஜ! உனது மந்தகாசம் பெய்யும் புன்னகையில் அமுதம் உண்ணும் பாக்கியத்தை அருள மாட்டீரா? மஹராஜ! இரவின் கூரையில் வந்து கூடு கட்டி விட்டு, விடிகையில் பறந்து செல்கின்ற கனவு அல்லவே, நீர் இப்போது வந்தது? இனி என்னைப் பிரிய மாட்டீர் அல்லவா?

மோகன குமாரா! பாலாய்ப் பொழியும் நள்ளிரவு நேரத்தில் உன் அருகாமையில் பூங்குழல் எடுத்து எனக்காகக் கொஞ்சம் இசையும். தயவித்து என் வேண்டுகோளுக்கு இசையும். உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கி விட்டபின், உனக்காக உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் எனக்காகவும், இந்தக் குளத்துக்காகவும், இசைக்க மாட்டீரா?

மீரா பாடல்கள்.

Monday, September 28, 2009

மதுரச் சிற்பம்.



ருளைப் பூசி இருந்தது காற்று. குளுமையின் குரலில் ஒரு மெளன கானத்தை இசைத்தவாறே, வீசிக் கொண்டிருந்தது. 'ஸ்... ஸ்' என்று உச்சரித்தவாறு, காற்றை எச்சரித்தவாறு தன் குட்டிகளைச் சிறகுகளால் மெல்லப் போர்த்திக் கொண்டு, கண்கள் வழி உறக்கத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்தன தாய்ப் பறவைகள்.

விழிகள் போல் அகண்டும், விரிந்தும் இருந்த பச்சை இலைகள் மேல், இரவின் கருமை இழைந்திருந்தது. வெள்ளிக் கதிர்களின் வெள்ளோட்டம் இன்னும் இந்த கானகத்தின் கடைக்கண் பாதைகளுக்குள் பதியவில்லை.வெண் பனி முத்துக்கள் விழவா, வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்க, இலைகளின் மேல் தடவிச் சென்ற தென்றலின் கரங்கள் அவற்றைத் தள்ளிச் சென்றதில் சிந்தித்தவை சிந்தின.

வானில் இருந்து மினுமினுத்துக் கொண்டிருந்த மீன்களின் ஒளித் துணுக்குகள் சிதறிக் கொண்டிருந்தன. கானகக் குளத்தின் அலையாடிய நீரில் மிதந்து கொண்டிருந்த தாமரை இலைகள் ஒத்திசைவோடு அசைந்து கொண்டிருந்தன. செந்தாமரையின் இதழ்கள் கதிரவனின் ஒளியைக் காணாமல் கூம்பிப் போயிருந்தன.

மயக்கும் குளிரின் ரீங்காரங்கள் மட்டும் இசைந்து கொண்டிருந்த இந்த இரவின் ஆடையில் ஒரு ஜரிகை விளிம்பாக ராதை நடந்து வந்து கொண்டிருந்தாள்.

பட்டு வண்ண ஆடையின் ஓரங்களில் பதித்திருந்த வெண் முத்துகளுக்குப் போட்டியாக அவளது கண்ணீர்த் துளிகள் புள்ளி இட்டிருந்தன. நடக்கையில் தெறித்திட்ட பொற்காசுகளும், நகைகளும், மணியாரங்களும் அவளது கவனத்தைப் பெறவில்லை. பின் எதன் மீது தான் அவளது கவனமெல்லாம்? அவலது கைகளில் பிடித்திருந்த பொற்கூடையில் தான்.

வளது வீட்டுத் தோட்டத்தில் இராதா ஒரு மலர்ப் பந்தல் வளர்த்து வந்தாள். ஆநிரைகளை மேய்த்து விட்டு, மாலை மயங்கும் அந்தியில் மனை திரும்பிய பின், அவளை வேறு எங்கும் காணவியலாது. மலர்த் தோட்டத்தில் தான் காண முடியும்.

சும்மாவா அங்கு மலர்களை வளர்த்தாள்...?

"பூச் செடிகளே! என்னைக் காணவில்லை என்று வருந்தினீர்களா? இதோ வந்து விட்டேன். இது என்ன, நான் வந்தும் நீங்கள் முகம் வாடி இருப்பது ஏன்? ஓ.. நீங்கள் உங்கள் காதலனான கதிரவன் சென்று விட்டானே என்று கவலைப்படுகிறீர்களா? இந்த ஆண்களே இப்படித் தான். நீங்கள் ஏன் அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஆதவனைக் கண்டு காதல் கொள்ள வேண்டும்? உங்களுக்கு வேண்டியது தான்.

இக் காதலன் வருவான் என்று நாம் இரவெல்லாம் கண் விழித்திருக்க வேண்டியது. ஆனால் அவன் வருவதில்லை. உறங்காமல் பூத்த கண்களோடு, மனதை தேற்றிக் கொண்டு பகல் பொழுதிற்காக காத்திருப்போம். காலம் கண் முன்னே நழுவிச் செல்ல, காதலனது திருமுகம் காண்பதற்குள் கையசைத்து காணாமல் சென்று விடுகிறான். வாழ் நாளெல்லாம் இவ்வாறே கழிகின்றது.

உங்களுக்காவது தினமும் கதிரவன் வருகிறான்.

இந்த மாயக் கண்ணன் இருக்கிறானே? அவனை என்ன சொல்லிச் செல்வது என்றே தெரியவில்லை. வருவான் என்று கை நிறைய பட்சணங்களும் , தின்பண்டங்களும் எடுத்துச் சென்று பார்த்தால் நாளெல்லாம் அவன் வருவதில்லை. மண்ணிற்கும், மரங்களுக்கும் அவற்றை தாரை வார்ப்பதிலே நான் இழக்கின்ற மகிழ்வெல்லாம் அவை பெற்று உய்கின்றன.

வர மாட்டான் என்ற வருத்தத்தில் வாடி அமர்ந்திருக்கையில், எங்கிருந்தோ வந்து குதிப்பான். 'ஏனடி ராதே, எனக்கென்று என்ன கொண்டு வந்தாய்?' என்பான். கோடைக் கால மழைத்துளிகள் போல் அவன் கூறும் மொழிகள் கேட்ட பின் பூக்கின்ற கண்ணீர்த் துளிகள் அவன் கைகளில் துவண்டு விழுகின்றன.

ஆயர்பாடியின் நாயகன், நந்தரின் செல்வமகன் என் முன் கையேந்தி நிற்கையில், கொடுக்க ஏதுமில்லை என்ற வார்த்தைகள் எனக்குள்ளேயே வட்டமிட்டுச் செல்லும். தலை கவிழ்ந்து நான் நிற்பதைக் கண்ணுற்றதும், ஒரு விஷமச் சிரிப்போடு, அந்த மாயவன் குழல் இசைக்கத் தொடங்குவான்.

கேட்பது என்ற ஒன்றை மட்டுமே அறிந்த உயிர் போல் என் அத்தனை உணர்வுகளும் அவன்பால் இழுக்கப்பட்டுச் செல்லும். செவிப் புலன்களின் மடல்களில் தவழ்ந்து செல்லும் அக் குழலோசை, மாய லோகத்தின் மழைக் காலத்தைக் கண் முன் காட்டும். நம்மிடம் கேட்டு வரும் கண்ணன் கொடுத்து மறைவான், பிரபஞ்சத்தின் நாதம் தன்னை..!

இரவின் பிடிக்குள் சிக்கிய வெண்ணிலா மெல்ல மெல்ல கண்களுக்கு முன் மறைந்து, பகலின் வெம்மை இரவி எழுவது போல், மெதுவாகத் தேய்ந்த பின், நிஜவுலகுக்கு நம்மை இழுத்து வரும் அவனது இசை.

மொட்டுக்களே..! மெதுவாகப் புலருங்கள். அவசரம் வேண்டாம். நீங்கள் அலங்கரிக்கப் போவது அக் கருமேனியனின் திருப் பாதங்களை..! வண்டுகள் வருமிடத்து உங்கள் வாசல்களை அடைத்து வையுங்கள். 'இத் தேன் துளிகள் அவனது பாத அணிகளின் பொட்டுத் துளிகள்' என்று கூறி விடுங்கள். இலைகளே! இரவெல்லாம் சேகரித்து வைத்திருக்கும் பனித் துளிகளைப் பகலவனின் கைகளில் அள்ளிக் கொடுத்து விடாதீர்கள்.

பகலெல்லாம் பசுக்களை மேய்த்து விட்டு, வெம்மையின் சூட்டில் பொறிந்து போயிருக்கும் அவன் கால்களை நனைத்து பேறு பெறுங்கள்...."

அப்படியொரு ஆசையோடு வளர்த்து வந்த தோட்டத்தில் இருந்து பார்த்துப் பார்த்துப் பொறுக்கி எடுத்த மலர்களையும், குளிர்ந்த இலைகளையும், மண்ணின் மணம் வீசும் வேர்களையும் அல்லவா அவள் அள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறாள்!

யர்பாடியில் இருந்து கானகத்திற்குச் செல்லும் பாதை இரவால் போர்த்தப்பட்டிருந்தது. ஒளியின் சிறு துகள்களும் அங்கே தென்படவில்லை. தோட்டத்தின் நீர்க்குளத்தில் அவளோடு சிறகடித்து விளையாடும் அன்னப் பறவைகளை அழைத்துக் கொண்டு ராதா வருகிறாள்.

வேறு ஏதேனும் ஒளி வேண்டுமா என்ன? உயிரின் கயிற்றைப் பிடித்து அசைக்கின்ற மென் அசைவில் அழைக்கின்ற நாத இசை அல்லவா அங்கு ஒளி ஊட்டிக் கொண்டிருந்தது..! காட்டின் இலைகளிலும், கிளைகளிலும், பூக்களிலும், தென்றல் காற்றின் கைப் பிடித்து கானகமெங்கும், வானகமெங்கும் வியாபித்திருந்த கண்ணனின் மென் குழலோசை அல்லவா அங்கு வழி அமைத்துக் கொண்டிருந்தது! தேன் துளிகள் நிரம்பிய காற்றின் அணுக்களில் மயங்கிய மரங்களின் மோனத்தில் இலயித்த இலயிப்பும் அல்லவா அங்கே அவளுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தது..!

இராதா வந்தே விட்டாள்.

"இராதே..! என் அன்புக்குரியவளே..! ஈதென்ன இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறாய்..? உனக்காக எவ்வளவு காலம் காத்துக் கொண்டிருப்பது..?" அந்த மதுசூதனன் கேட்டான்.

கண்களில் பெருகிய ஈரத்தோடு அவன் முன் தண்டனிட்ட ராதா மொழிந்தாள்.

"கண்ணா..! இரவின் கர்ப்பத்தில் ஆயர்பாடி நுழைந்த மாயவா! சிறிது நேரம் காத்திருப்பதற்குச் சொல்கிறாயே?

உனக்காக எத்தனை யுகங்கள் நான் காத்திருந்தேன்? கழிந்த பிறவிகளின் நிழல்களைச் சுமந்து இப்பிறவியில் உனைக் கண்டு கொண்டேன். பகலின் வெம்மையில் நனைந்த தேகத்தில் பூக்கின்ற வேர்வைத் துளிகள் போல், எத்தனை நினைவுகள்? யமுனா நதிக்கரையில் தோணி ஓட்டிக் கொண்டு செல்கையில், அந்த நீல நிற நீர் உன்னை அல்லவா காட்டியது? நிமிர்ந்து பார்க்கையில் பிரபஞ்சமெங்கும் சூழ்ந்திருந்த அந்தக் கரு வானம், உனது மேனி வண்ணத்தை அல்லவா சொல்லிச் சென்றது?

மனையின் ஒவ்வொரு தூணையும் கேட்டுப் பார். இறந்த அந்த மரங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே செல்கின்றன, ஏன் தெரியுமா? எனது கண்ணீரால் அவற்றுக்கு நீர்ப் பாய்ச்சுகிறேன். உளறிச் சென்ற தெருக்களின் மண்ணைக் கேட்டுப் பார்.என் பாதங்களின் தடங்களின் அருகில் உனது நிழல் விழுகின்றதா என்று நான் நின்று, நின்று சென்ற நேரங்களைச் சொல்லும். வைகறையில் குளிக்கின்ற யமுனையின் கரைகளைக் கண்டாயானால், நான் பொழிந்த கண்ணீரின் தாரைகள் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறதா என்று கேள். நீ காளிங்கனை வதம் செய்து, குருதியில் கரைய வைத்த யமுனையைத் தூய்மை செய்தது அவை தான் என்று சொல்லும்.

இக்கானகத்தின் மரங்களில் சாய்ந்து பார். உனது மேனியில் வலி உண்டாக்கக் கூடாதென, நான் செதுக்கி வைத்த வனப்பில், வலியைக் கூறும்.

காலங் காலமாய், கற்ப கோடி ஆண்டுகளாய் நாம் சேர்ந்திருந்த கனவுப் பொழுதுகளின் மிச்சங்கள் உனக்கு நினைவிருந்தால், அவை உனக்குச் சொல்லும். ராதா உனக்காக காத்திருந்த வலி நிறைந்த பொழுதுகளின் நிழல்களை..!"

"ராதே..! உனக்குக் கோபம் ஆகாதேடி..! இசை கேளடி ஆதுரமாய்..!" குழலின் நாயகன் இசைக்கலானான்.

"ஏ மாதவா! வெயிலின் வெப்பத்தில் கொதித்திருக்கும் குளத்தின் நீரைக் குளிரச் செய்கின்றது மோகன நிலவின் மயக்கும் கிரணங்கள். புழுக்கத்தின் மேனியிலும் ஈரத்தைத் தூவிப் பூக்கச் செய்யும் பனிக்காற்றின் பரவல். ஆண்டாண்டு காலத்தின் இரவையெல்லாம் கணப்பொழுதில் கலைத்துச் செல்லும் சிறு பொறியின் ஒளி...! அது போல் எத்துணை கோபத்தோடு உன்னோடு ஊடல் கொள்ள ஓடோடி வந்த என் இதயத்தை சாந்தப் படுத்துகின்றது உனது மாயக் குழலோசை.

உனக்காகப் பூத்திருந்த இம் மலர்களை எடுத்துக் கொள். உனது பாதங்களில் ஒரு பூ போல் நானும் விழுந்திருக்க, உனது நாதக் குரலில் இசைக்கின்ற இந்த இரவின் காலத்தில் விடிவே இருக்கக் கூடாதென அருள் செய்ய மாட்டாயா...?"

அங்கே அரங்கேறுகிறது காதலின் பொன் அர்ச்சனை...!

காஞ்சிபுரம் டு திருவரங்கம் - கப்பலில் போக முடியுமா?

காஞ்சிபுரம் டு திருவரங்கம் - பேருந்தில் போகலாம்! ரயில்ல போகலாம்! கார்-ல போவலாம்! எங்களைப் போல வருத்தப்படாத வாலிபர்கள் பைக்-ல கூட ஜாலியாப் போகலாம்! ஆனா கப்பல்-ல போக முடியுமா? - முடியும்!

எப்படி? அதைத் தான் இன்னிக்கி பதிவில் பார்க்கப் போகிறோம்!


ராமாநுஜதயா பாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் !!
ஜெகதாசார்யரான இராமானுஜரின் கருணைக்கு பாத்தியமானவரும், ஞானம் மற்றும் வைராக்ய குணக்கடலாகிய வேங்கடநாதன் எனும் வேதாந்த தேசிகரை வணங்குகிறேன்.

வேதாந்த தேசிகர் திரு அவதார தினமாகிய இன்று அவரைப் பற்றிய ஒரு பாடலை அனுபவிப்போமா.. அது ஒரு கப்பல் பாட்டு!
திருவில்லிபுத்தூரில் இன்றைய தினம் நடக்கும் உற்சவத்தைப் பற்றி பரவஸ்து. நாராயணதாஸன் (எனது பெரியப்பா) விவரித்ததை இங்கு சென்று அனுபவியுங்கள்.
இங்கே!


இன்று,


புரட்டாசித் திருவோணம் எனும் உத்தமமான நாள்!
வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திருநாள்-
திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடுநாள்
தீதாகிய பல மாயக் கலிகளை சிக்கென வென்றிடுநாள்.
பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிக நாள்
வாதியர் வாழ்வறுத்த கவிதார்க்கிக சிம்மம், பற்பல
கலை வல்ல பாவலன் வேதாந்தார்யன் உதயம் செய்திடுநாள்
_____________________________________________________


108 திருப்பதிகளில் முதலாவதான திருவரங்கம். ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் தலைநகரம். அங்கு ஒருநாள்,

ஸ்ரீமத் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்திற்கு, ஸ்ருதப் பிரகாசிகை எனும் விளக்கவுரை எழுதிய ஸ்ரீசுதர்ஸன பட்டரை சந்திக்க நாலாயிர திவ்ய ப்ரபந்த வ்யாக்யானகர்த்தா திரு. பெரியவாச்சான் பிள்ளை அவர்களும், 18 ரகஸ்ய க்ரந்தங்கள் ஸாதித்தருளிய திரு. பிள்ளை லோகாசார்யர் அவர்களும் வந்தன்ர்.

பெரியவாச்சான் பிள்ளை: தேவரீர் ! அடியோங்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேணும் !

சுதர்ஸன பட்டர் : வாரும் வாரும் ! ஏன் இந்த ஓட்டம் ?

பிள்ளை லோகாசார்யர் : ஸ்வாமி, வடக்கிலிருந்து மாயாவாதிகள் சிலர் வாதப்போர் புரிய வந்துள்ளனர். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கு தேவரீர் தான் ஆலோசனை வழங்க வேண்டும்.

சுதர்ஸன பட்டர்: ராமானுஜ சித்தாந்தத்திற்கு ஒருநாளும் ஒரு குறையும் வராது. வந்திருக்கும் மாயாவாதிகளை தூப்புல் வேங்கடநாதன் ஒருவனால் தான் எதிர்கொள்ள முடியும். உடன் அவரை வரவழையுங்கள்.
_______________________________________________________________________


தூப்புல்

விஷயம் கேள்விப்பட்ட வேங்கடநாதன், இராமானுஜ சம்ப்ரதாயம் செழித்து விளங்க புறப்படுகிறார்...
வேங்கடநாதன் எனும் கப்பல் காஞ்சியில் இருந்து கஸ்தூரி ரங்கரின் கோவிலை நோக்கி புறப்படப் போகிறது.
ஜெயத்தை பறைசாற்ற வடகலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க,
திருவேங்கடமுடையான், பார்த்தசாரதி, வீரராகவனும் கப்பலில் முதலில் ஏறிக் கொள்ள,
ஆழ்வார்கள் பதின்மரும் கப்பலில் ஏறியவுடன்..
மாலுமியாக ஹயக்ரீவர் அமர
________________________________________________________________________


ஓம்கார சத்தத்தை எழுப்பிக் கொண்டு கப்பல் செல்லும் அழகையும், ஸ்வாமி வேதாந்த தேசிகரின் வெற்றியை பறைசாற்றும் ஒரு அருமையான பாடலையும் கேட்டு அனுபவியுங்கள்.



காசினியோர் தாம் வாழும் காஞ்சி நகர் வந்துதித்து
தேசமெல்லாம் பவனி வரும் எங்கள் தேசிகக் கப்பல் இது !!

நாலு வேதங்களும் நங்கூரமாக
நலமுடைய வடகலைக் கொடியொன்றை நாட்டி
திருமொழிகள் முதலான பிரபந்தங்கள் எல்லாம்
திடமான கொடியிலே கயிறாக மாட்டி
ஆழ்வார்கள் பதின்மரும் அதன்மேலே ஏறி
அடைவுடன் வழிதேடி சுக்கான் திரும்ப
காஞ்சி நகர் விட்டு கிளம்பியே கப்பல்
ஸ்தூரி ரங்கருடை கோவிலைத் தேடி

பரமகுரு எங்களுடை தேசிக கப்பல்
பாலாறு கரை தாண்டி வருகுதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

கருணை எனும் கடல் நடுவே
ஞானம் எனும் பாய் விரித்து
மறையவர்கள் ஜெய ஜெயவென
மகிழ்ந்து வரும் கப்பல் இது

ஆறு சாஸ்திரங்களும் பீரங்கியாக
ஹயக்ரீவர் அவர்களுக்கு அதிகாரியாக
கப்பலின் மேல்வரும் துரைகளின் பேர்கள்
கணக்குடன் சொல்லுவேன் ஞானமுடன் கேளீர்

திருமலையிலே வாழும் திருவேங்கடத்தான்
திருவலிக்கேணியில் பார்த்தசாரதியும்
திருவள்ளூர் அதிகாரி வீரராகவனும்
திருவிடந்தை மேவு லக்ஷ்மிவராகன்
இத்தனை துரைகளும் இதன்மேலே ஏற
விசையுடன் கப்பலும் இவ்விடம் விட்டு

தெளிவுடை பெண்ணை நதிக் கரைதன்னில் வந்து
திருக்கோவலூர் கண்டு திரும்புதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

உலகமெலாம் இருள் நீங்க
உடையவர் தம் மதம் விளங்க
அறு சமயக் கொடியறுத்து
அமர்ந்து வரும் கப்பல் இது

தர்மங்கள் ஆனதொரு பலகைகள் சேர்த்து
தர்ப்பங்கள் ஆனதொரு பாய்மரம் நாட்டி
அருமறைகள் ஆனதொரு ஆணிகள் தைத்து
அரங்க மாநகர் தேடி அதிவேகமாக
பதிகள் நூற்றெட்டிலும் முதலான கோயில்
பிரதிவாதியாலே ஒரு பழுதாகாதென்று

திருக்கோவலூர் விட்டு கிளம்பியே கப்பல்
திருச்சோழ் நாட்டை ஓர் நொடியிலே தாண்டி
காவேரிக் கரைதன்னில் உதயத்தில் வந்து
கஸ்தூரி ரங்கருடைக் கோவிலைக் கண்டு
கண்ணாலே ஆனந்த பாஷ்பங்கள் உதிர
கமலங்கள் போல இரு கைகளைக் கூப்பி
அத்தலத்துள்ளோர் அனைவர்களாலே ஆராதனம் நின்ற செய்தியைக் கேட்டு

செழிப்புடைய வடதிருக்காவேரி தாண்டி
ஸ்ரீரங்க நகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

பதின்மர்கள் துதிசெய்ய கோவிந்தா
பாம்பணை மேல் பள்ளி கொள்ளும்
ரவிகுலத்தோர் குலதெய்வம் எங்கள் ரங்கருடை சன்னிதிக்கு
இவ்வுலகில் ஒருவரும் ஈடில்லையென்று
எங்கள் குரு தேசிகரை லேசாக எண்ணி
கிருஷ்ணமிஷ்ரன் வந்து கட்சிகள் சொல்ல

கண்டாவதாரரை கண்டித்து மேலும் சாஸ்திரங்களான
பீரங்கியாலே சண்டப்ரசண்டமாய் சண்டைகள் செய்து
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிர் நிற்க மாட்டாமல் எழுந்திருந்தோட
அப்போது ரங்கருக்கு ஆராதனை செய்ய

அங்குள்ள பேர்களுக்கு ஆக்ஞைகள் பண்ணி
ஸ்ரீரங்க நகர் விட்டு கிளம்பியே கப்பல்
திருப்பேர்நகர் தாண்டி ஆடுதுறை வந்து
கும்பகோணம் வந்து ஒருநாள் இருந்து
கோதண்டபாணியுடை பாதங்கள் கண்டு
திருவாழி திருநகரி சீர்காழி வந்து
திரைகடல் போல் வரும் கொள்ளிடம் தாண்டி
சித்திர கூடம் வந்து ஒருநாள் இருந்து
தேவாதி நாதனை கண்டு கை தொழுது

அழகுடைய கருடநதி கரைதனில் வந்து
அயிந்தை மாநகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

பாடியவர்கள் : என் அத்தைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கமலா மற்றும் அவர் சகோதரி கோமளம்.

Get this widget Track details eSnips Social DNA
புரட்டாசித் திருவோணத்தில் அவதரித்த எங்கள் தூப்புல் கவிதார்க்கிக சிங்கம், வேதாந்த தேசிகர் அடிபணிகிறேன்.

நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ,
மாநகரில் மாறன் மறை வாழ - ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Wednesday, September 09, 2009

மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா



தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் போது தானாக வந்து விழும் வார்த்தைகளுக்கு ஒரு உருவம் தந்தால் எப்படியிருக்கும்? இதை கவிநயா அக்காவிடம் இரவிசங்கர் கண்ணபிரானிடமும் தான் கேட்கவேண்டும். அது போன்ற நிலை எப்போதாவது ஒரு முறை தான் அபராத சக்ரவர்த்தியான இந்தப் பித்தனுக்கு ஏற்படும்.

மொன்னு க3னி பொ4வரேஸ் மீ முகு3ந்தா – மொகொ3
மோக்ஷி தெ2வன் மொன்னு தோவி கோவிந்தா3
பொன்னா ஜா2ட் ஹிங்கி3 க2ளே மாத3வா - மொர
பொ3ன்னொ பு2ட்டி ஜேட3ரேஸ்ரே கேஸவா

மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா - எனக்கு
மோட்சம் தர மனம் வைப்பாய் கோவிந்தா
புன்னை மரம் ஏறி ஆடிய மாதவா - எனது
பானை உடைந்து போகின்றதே கேசவா

பாய்ம்பொடே3த் தூ ஹாத் சொட்னா அச்யுதா3 - தொர
பாயிர் பொடேஸ் ஹாத் தே3 ஸ்ரீ அனந்தா
மாய் பா3பு3ன் மொகொ3 தூஸ் ரே மாத3வா – ரெங்க3
ஸாயி மொகொ3 ஸாரே ஸ்ரீ கேஸவா

வணங்கினால் நீ கைவிடாய் அச்சுதா - உந்தன்
தாள் அடைந்தேன் கை கொடு ஸ்ரீ அனந்தா
தாய் தந்தை எனக்கு நீயே மாதவா - ரெங்க
சாயி என்னைப் பார்ப்பாய் ஸ்ரீ கேசவா

ராத் தீ3ஸுந் நாவ் மெனரெஸ் ராக3வா – தொகொ3
ராக் காய்ரே ராக் ஸோட்ரே ராக3வா
ஸாத் லோகு3ம் பொ4ரி ரியெஸி வாமனா - மொர
ஸாத் ரனோ மெல்லரேஸி உத்தமா

இராப்பகலாய் பெயர் சொல்கிறேன் இராகவா - உனக்கு
சினம் என்ன சினம் விடுவாய் இராகவா
ஏழுலகும் நிறைந்திருந்தாய் வாமனா - என்
உடனிருக்க வேண்டும் சொன்னேன் உத்தமா

***

திருமந்திரமாம் எட்டெழுத்து மந்திரத்திற்குப் பொருளுரைக்கும் ஒரு தொடரை எழுதி நிறைவு செய்து மாதவிப் பந்தலும் நிறைவு பெற்றது என்று அறிவித்திருக்கிறார் சிறு வயதிலேயே நிறைய பட்ட, எம்பெருமானாரின் இன்றைய தோற்றம் என்று சொல்லலாம்படியான, நம் நண்பர் இரவிசங்கர். எங்கே ஆனாலும் என்றைக்கு ஆனாலும் தொடர்ந்து அவருடைய் தொண்டு நிகழ்ந்து கொண்டு வரவேண்டும். அதற்கு என் கண்ணன் அருள் புரியவேண்டும்.

என்னை இப்படி தனியன் ஆக்கத் தானா இவன் மேல் தனியன் எழுதவைத்தாய் எம்பெருமானே?!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP