Friday, July 24, 2009

திருப்பாவை பாடிய செல்வியின் பிறந்த தினம் - வாழ்த்த வர்றீங்களா?



இன்று விரோதி வருடம், ஆடி மாதம், 9ம் தேதி பூர நட்சத்திரம் (ஜூலை 25) ரொம்ப்ப்ப்ப முக்கியமான நாளுங்க.. நிறைய பேருக்கு தெரிந்தது தான், அதனால எல்லாரும் சேர்ந்து நம்ம திருப்பாவைச் செல்விக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிருங்க.. எப்புடி வாழ்த்துறதுன்னு கேக்குறீகளா? நமக்கு Happy Birthday to you பாட்டைத் தவிர வேற எதுவும் தெரியாதேப்பான்னு சொல்றது கேக்குது. இதோ என்னோட ஸ்வீட் அத்தை எப்புடிக் கொஞ்சிக் கொஞ்சி பாடுறாங்கன்னு கேளுங்க.

திருப்பாவைச் செல்விக்கு அறிமுகம் வேண்டாம்.. என்ன இப்புடிச் சொல்லிட்டேனேன்னு பாக்காதீங்க, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மொத்தம் எத்தனை பாட்டுன்னு கேட்டா எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்க பாப்போம் :) ஆனா ஆண்டாள்னு சொன்ன உடனே திருப்பாவை முப்பது பாட்டும் தான் தோணும். மார்கழித் திங்கள் கை நிறைய பொங்கல்ங்கிற முதல் வரியாவது கண்டிப்பாக எல்லாருக்கும் தெரியும் தானே :)

இன்னைக்கு இங்க இப்போ ஆண்டாள் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியா பதிவுலக வரலாற்றில் முதன்முறையாகன்னு எல்லாம் விளம்பரப்படுத்தாம எங்க அத்தை அந்தக் குட்டிப் பெண்ணை பத்தி ஒரு பாட்டு பாடப் போறாங்க.. அதனால் ஆண்டாளை வரவேற்பதற்கு முன் எங்க அத்தையை இங்க அறிமுகப்படுத்துறதுல நான் பெருமைப்பட்டுக்குறேன் :)



ஸ்ரீவில்லிபுத்தூர் கமலா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் எங்க அத்தை ஒருமுறை பெங்களூர் வந்தப்போ, அவங்களோடவும், சில உறவினர்களுடனும் வெளியில் சென்றிருந்தோம்.. மற்றவர்கள் ஷாப்பிங் செய்ய்ச் செல்ல, அத்தையும் நானும் அலைய வேண்டாம் என்று ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அத்தை பேசவில்லை, பாட ஆரம்பித்து விட்டார்கள்.. கண்ணனை, கோதையை, ஆசார்ய இராமானுசரை, ஸ்ரீமத் வேதாந்த தேசிகரை என்று ஒவ்வொருவருக்காகவும் தன்னை மறந்து, அதிக மக்கள் நடமாடும் பகுதியில் பாடிக் கொண்டே இருந்தார். எங்களைச் சுற்றி ஒரே ரசிகப் பெருமக்கள். சரி போதும் போதும்... இதோ நமது முக்கிய விருந்தாளி, வந்து
விட்டாள்.

கட்டியம் சொல்பவர், நம் ஆண்டாள் வருகையை உரத்த குரலில் சொல்கிறார்.. வாருங்கள் அனைவருமாக வரவேற்போம்.

‘ஆண்டாள் வந்தாள்!
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்!
பட்டர்பிரான் திருமகள் வந்தாள்!
பாட வல்ல நாச்சியார் வந்தாள்!
திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!
ஞான செழிப்புமிக்க கோதை வந்தாள்!
அன்பை அருளச் செய்த ஆண்டாள் வந்தாள்!
திருமாலைப் பிரியாத நிலமகள் வந்தாள்!
உடையவள் வந்தாள்!
தோகை மயிலாள் வந்தாள்!
ஞானத் தலைவி வந்தாள்…’’

இதோ எம் தலைவியை,
மாணிக்கம், வைரத்தினாலான ஊஞ்சலில் அமரவத்து,
பட்டர்பிரான் கட்டி வைத்த திருநந்தவனத்தில் இருந்து தொடுத்து வந்த மலர் மாலை கொண்டு வந்து சார்த்தி,
அரங்கன் மார்பில் சாற்றிய சந்தனம் கொடுத்து,
கண்ணனின் தோள் அங்கவஸ்த்திரம் கொண்டு பொன்னாடை போர்த்தி,
திருமாலிருஞ்சோலை அழகனுக்கு நிவேதனம் செய்த அக்கார அடிசில் தந்து,
அவளின் உற்ற தோழியாம், பச்சைக்கிளி வந்து அவள் கையில் அமர,
ஒரு அதிஅற்புதமானதொரு சூழல்


அரங்கன் வந்து காப்பு கட்ட கனாக் கண்ட ஆண்டாளைப் போல, நம்முடன் ஆண்டாள் மீண்டும் வந்து இருக்க மாட்டாளா என்று நான் தினம் கனவு காண்கிறேன்..

சரி ஆண்டாளைக் காக்க வைக்க வேண்டாம்.. பிறந்ததினக் கொண்டாட்டத்திற்கு நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.. அதனால் அத்தையின் பாட்டைக் கேட்டுக் கொண்டே.. ஆண்டாளின் ஊஞ்சலை மெதுவாக ஆட விட்டுக் கொண்டாடுவோம் வாருங்கள்.

ஆடிப்பூரத்துத்த ஆடிப்பூரத்துதித்த ஆண்டாள் நம் கோதை...
ஆண்டாள் நம் கோதை...
அணியரங்கருடன் ஊஞ்சல் அணியரங்கருடன் ஊஞ்சல்
ஆடினாள் அப்போதே.... ஆடிரூஞ்சல்..

பாடிப்பாமாலை தந்த பாடிப்பாமாலை தந்த
பட்டர்பிரான் கோதை... பட்டர்பிரான் கோதை..
பணியரங்கருடன் ஊஞ்சல்.. பணியரங்கருடன் ஊஞ்சல்...
ஆடினாள் அப்போதே..லாலி..

ஸ்ரீலத்துழாயடியில்.. ஸ்ரீலத்துழாயடியில்..
சிசுவாய் மலர்ந்தாள்.. கோதை சிசுவாய் மலர்ந்தாள்
நாதன் வடபத்ரர்க்கு.. மாலை சூட்டிக் கொடுத்தாள் ஆடிரூஞ்சல்..

திருப்பாவை பாடித்தந்த.. திருப்பாவை பாடித்தந்த
தீஞ்சுவைக் கனியே.. தீஞ்சுவைக் கனியே..
பன்னிரு ஆழ்வாரில்.. பாங்கான கோதாய்.. பாடிரூஞ்சல்..

திருவாடிப் பூரத்து.. திருவாடிப் பூரத்து
ஜெகத்துதித்தாள் வாழி...
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழி.. ஆடிர் ஊஞ்சல்.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெரியாழ்வார் பெற்றெடுத்த
பெண்பிள்ளை கோதாய்..பெண்பிள்ளை கோதாய்..
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான கோதாய்.. ஆடிர் ஊஞ்சல்..

ஒருநூற்று நாற்பத்து.. ஒருநூற்று நாற்பத்து
மூன்றுரைத்தாள் வாழி.. உயர் அரங்கற்கே கண்ணி
உகந்தளித்தாள் வாழி.. ஆடிர் ஊஞ்சல்..

மருவாரும் திருமல்லி.. மருவாறும் திருமல்லி
வளநாடு வாழி..வண்புதுவை நகர்க்கோவை...
வண்புதுவை நகர்க்கோவை.. மலர்ப்பதங்கள் வாழி லாலி.. லாலி..


சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வடபெருங்கோயிலுடையான் திருவடிகளே சரணம்



  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP