Tuesday, January 22, 2008

85.தைப்பூசம்-ஜோதி தரிசன வீடியோ-வள்ளலார் பாடும் கண்ணன் பாட்டு!

வள்ளலார் ஜோதியுரு அடைந்த திருநாள் தைப்பூசம்! - இன்று ஜனவரி 23-2008! (ஆங்கிலத் தேதியென்றால், January 30, 1874! காந்தியடிகளும் பின்னாளில் இதே நாளில் மறைந்ததும் ஒரு ஒன்றான நிகழ்வு தான்!)

காரேய்க் கருணை இராமானுசா என்று சொல்லுவார்கள்! அது பதினோராம் நூற்றாண்டு!
ஆனால் அண்மையில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) வந்துதித்த இன்னொரு காரேய்க் கருணைப் பெருஞ்சோதி நம் வள்ளல் பெருமான்!
ஜீவ காருண்யம் - அனைத்துயிர்க்கும் கருணை - இது செழிக்கவே வந்துதித்த அண்ணல் திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார்!

வேற்றுமைகளும் மத மாச்சர்யங்களும் ஓங்கி இருந்த காலம் அது! வெறும் கூச்சலே வழிபாடாகிப் போன கொடுமை!
தீப மங்கள ஜோதீ நமோ நம என்று இறைவனை ஜோதி வடிவத்தில் வழிபட்டு, அதன் மூலம் வேற்றுமையை ஒழித்த வெள்ளுடை வேந்தர் பெருமான்!

வள்ளலார் இளங்காளைப் பருவத்தில், செக்கச் செவேல்-னு ரொம்ப அழகா இருப்பாராம்! கண்டவர் மயங்கும் முகஅழகு, வடிவழகு (ஆண்களுக்கு handsome என்று சொல்கிறோமே, அது)! அப்போது திருவொற்றியூரில் தன் அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். சென்னைப் பாரிமுனையில் உள்ள கந்த கோட்டத்துக்கு நடந்தே வந்து சேவிப்பது இராமலிங்கரின் வழக்கம்! தம்பு செட்டித் தெரு-ன்னு இப்பவும் சொல்லுவாங்க! அது வழியா நடந்து வருவார் அண்ணல்!

எதிரே வரும் மங்கையர் யாராச்சும் எதேச்சையாகத் தன்னைப் பார்த்து, தன் முகப்பொலிவால் மயக்குறக் கூடாதேன்னு, இழுத்த துணியைப் போர்த்திய படி, குனிந்த தலை நிமிராமல், பாடல்களை ஜபித்துக் கொண்டே வருவாராம்! - இப்படியும் ஒரு பிள்ளை! அதுவும் இள வயதில்! :-)

மற்றவனைப் பார்த்து "நீ முதல்ல திருந்துடா"ன்னு சொல்லும் காலம் இது! ஆனா பிறர் குற்றங்களையும் தன் குற்றங்களாக ஏற்று, நீ திருந்திக் கொள்-னு சொல்வதைக் காட்டிலும், தன்னைச் சரி செய்து கொள்கிறார் பாருங்கள்! இவரை என்னவென்று சொல்வது! - புனித பிம்பமா? இல்லை மனிதருள் புனிதரா?

அப்படி நடந்து வரும் போது பாடின ஒரு பாட்டு தான்...
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார், உறவு கலவாமை வேண்டும்!!
- இந்தப் பாடல் மிகவும் பிரபலம்! சென்னைக் கந்த கோட்டத்து முருகப் பெருமான் மேல் பாடியது!
- அதே போல் கண்ணன் மீதும் இராமன் மீதும் பல பாடல்கள் புனைந்து வாழ்த்தி உள்ளார் வள்ளலார் பெருமான்!

திருவருட்பா திருமுறையில் இவற்றை சேர்ந்திசையாகத் தொகுத்து தந்துள்ளார்! குறிப்பாக ஜீவ காருண்யம், புலால் மறுத்தல் கொள்கைகளில் இராமபிரானைக் காட்டி வள்ளலார் செய்துள்ள பாடல்கள்/கட்டுரைகளை ஒரு முறை வாசிக்க வேண்டும்! இன்றைய கண்ணன் பாட்டில் வள்ளலார் அளித்த அருட்பாவைப் பார்ப்போம்!



திருவருட்பா - இரண்டாம் திருமுறை - 100/101 வது பாடல்! கீழே கேளுங்கள்! (நன்றி: vallalar.org - தர்மலிங்க சுவாமிகள் குழுவினர்)
Kaaraaya_Vanna_Val...

இராம நாம சங்கீர்த்தனம்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்குசக்ர தர நீள்

சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே

தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்

நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!


இராம நாமப் பதிகம்
பொன்னுடையார் வாயிலில் போய் வீணே காலம்
போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி


என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
என்செய்கேன் என்செய்கேன் ஏழையேன் நான்

(இதே ஆழ்வார் வரிகள் யாருக்காச்சும் நினைவுக்கு வருதா? :-)

பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா


உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ? என்
ஒரு முதல்வா சீராமா உணர்கி லேனே!



கீழே வடலூர் சத்திய ஞான சபையில், ஜோதி தரிசனத்தை youtube video-வில் கண்டு மகிழுங்கள்! - இதையும் வழக்கமான ஒரு பூசையாக மட்டும் பார்த்து விடாதீர்கள்! :-)
தரிசனத்தின் போது ஜீவ காருண்யத்தைக் கொஞ்சம் மனத்தில் இருத்துவோம்! இனி அடுத்தவர் மனம் நோகப் பேசுவதைக் குறைத்துக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டே தரிசியுங்கள்! - அதுவே போதும்! வள்ளலார் ஜீவ காருண்ய வழிக்கு முதல் படி!



வள்ளலார் அருளிய முத்துக்களில் சில:

1. அன்பும் கருணையுமே முக்திக்கு வழி!
2. இறைவனிடம் சுத்த தேகம் வேண்டிப் பெறுவதொன்றே வீடுபேறு அளிக்கும்!
3. மந்திர மாய ஹோம ஜெபங்கள் முக்தியின் சாதனம் அல்ல!

4. எவ்வுயிர்க்கும் இரங்கும் ஜீவ காருண்யமே முக்தியின் வழி!
5. உயிர்களைக் கொல்லாமை, வறியவர்க்கு ஈதல், பசித்தார்க்கு உணவிடல், சாதி பேதங்கள் அற்ற நல்லிணக்கம் - இவையே ஜீவ காருண்யத்தை இதயத்தில் வளர்க்கும் வழிகள்!

அருட் பெருஞ் ஜோதி, தனிப் பெருங் கருணை!
அருட் பெருஞ் ஜோதி, அருட் பெருஞ் ஜோதி!!

Thursday, January 17, 2008

84. முருகனுக்கு மட்டுமா? கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்!

காவடி-ன்னாலே அது முருகனுக்கு மட்டும் தானே! அது எப்படிடா கண்ணனுக்குப் போயி எடுப்பாங்க? எங்கிட்டு எடுப்பாங்க-ன்னு தானே கேக்கறீங்க! மேலே படிங்க! தமிழ்க் கடவுளுக்குக் காவடி எடுக்கும் வழக்கம், தமிழ் மக்களிடையே காலம் காலமாக வந்த ஒன்று! - தெரிஞ்சது தான்!

சரி, தமிழ்க் கடவுள் யாரு? - முருகப் பெருமான்! - மிகவும் சரியான விடை! ஆனா கேள்விக்குண்டான எல்லா விடைகளையும் சொன்னாத் தான் மதிப்பெண்ணு, மதிப்பொண்ணு எல்லாம் கொடுக்கப்படும் :-) இன்னொரு தமிழ்க் கடவுள் யாருன்னும் சொல்லுங்க!

223

பழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் தெய்வங்கள் சேயோன், மாயோன்!
குறிஞ்சிக் கடவுள் = சேயோன் = முருகன் = பெருமான்
முல்லைக் கடவுள் = மாயோன் = கண்ணன் = பெருமாள்
மற்ற திணைகளான மருதம், நெய்தற், பாலைக்கு எல்லாம் தனித்தனித் தெய்வங்கள் இருந்தாலும், பெரும் தெய்வங்களாக எல்லா இலக்கியங்களிலும் பேசப்படுவது இந்த மாயனும், சேயனும் மட்டுமே!

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் முதற்கொண்டு, சிலப்பதிகாரம் முதலான காப்பியங்கள், பிற்கால இலக்கியங்கள் - என்று எல்லாவற்றிலும் இந்த இருவரின் ஆளுமை அதிகமாகத் தான் இருக்கு!
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
என்பது தொல்காப்பியம்! சிலப்பதிகாரத்திலும் விழாக் காலங்களில் இவர்கள் இருவரின் கோயில்களில் நடக்கும் வழிபாடு பற்றிச் சிறப்பாகப் பேசப்படுகிறது! ஒருவேளை மக்கள் அதிகம் புழங்கிய இடங்களாகக் குறிஞ்சியும் முல்லையும் இருந்திருக்கலாம்; அதனால் தானோ இவர்கள் மட்டும் இத்தனை பெரிதாகப் பேசப்படுகிறார்கள்?

ஆக தமிழ்க் கடவுள் என்றாலே அது மாயோனும், சேயோனும் ஆகிய இந்த இருவருமே தான்!
நண்பர் ஜிராவின் உதவியுடன், இது பற்றித் தனி ஆராய்ச்சிப் பதிவாகப் பின்னொருகால் இடுகிறேன்!
இராம.கி ஐயாவையும் சில பாடல்களுக்குப் பொருள் கேட்டுத் தெளிய வேண்டும்! இன்னிக்கி காவடி மேட்டருக்கு மட்டும் வருவோம்!


சின்ன வயசுல (மூனாங் கிளாஸ்-னு நினைக்கிறேன்) என்னைய திருப்பதிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காய்ங்க வூட்டுல!
விளையும் பயிர் தான் முளையிலேயே தெரியுமாமே! சரியான டகால்டி பார்ட்டின்னு அப்பவே என்னை முடிவு கட்டிட்டாங்களாம்! :-)

ஏன்னா....திருப்பதியில நான் அரோகரா அரோகரா-ன்னு கூவிக்கிட்டு இருந்தேனாம்!
வர்ற வழியில, திருத்தணியில் ஹால்ட்டு! அங்கிட்டு கோவிந்தா கோவிந்தா-ன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தேனாம்! நான் கல்லூரி லெவலுக்கு வந்த பின்னும் கூட, இதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எங்க மறைந்த ஆயா!(பாட்டி)

நான் மட்டும் தான் இப்படி டகால்ட்டி பேர்வழின்னு நெனைக்கறீங்களா? நம்மள விட ஒருத்தர் செம டகால்ட்டியா இருக்காரு!
ஊத்துக்காடு வேங்கட கவி-ன்னு ஒருத்தரு! அழகான பல தமிழிசைப் பாடல்களை எல்லாம் கொடுத்திருக்காரு! அலைபாயுதே கண்ணா பாட்டு அவர் எழுதினது தான்! ஏ.ஆர். ரஹ்மான் ராயல்டி ஏதாச்சும் கொடுத்தாரான்னு தெரியலை! அவரு கண்ணன் மேலே காவடிச் சிந்து பாடி இருக்காரு!

பொதுவா காவடிச் சிந்து-ன்னா அது முருகனுக்குத் தான்!
காவடி எடுக்கும் களைப்பு தெரியாம இருக்க, வழிநடைப் பாடலா இதைப் பாடுவாங்க! செஞ்சுருட்டி இல்லீன்னா சிந்து ராகத்தில் இருக்கும்! சும்மா பாட்டைக் கேட்டாலே போதும்,
தையத் தையத் தக்கத் தானா - திமி
தையத் தையத் தக்கத் தானா -ன்னு கால்கள் தானாவே ஆடும்!
அப்படி ஒரு அருமையான காவடிச் சிந்தை, கண்ணபிரான் மேல் பாடி இருக்காரு இந்த ஊத்துக்காட்டுக் கவி!
வாங்க...இன்னிக்கி கண்ணன் பாட்டுல, கண்ணனுக்குக் காவடி எடுப்போம்! கண்ணான கண்ணனுக்கு அரகரோகரா!:-)


மேலே மலேசிய பத்து மலைக் காவடிய உத்துப் பாருங்க! என்னாத் தெரியுது? :-)



எது பிடிச்சிருக்கோ, அதைக் கேட்டுக்கோங்க! என் தெரிவு அருணா சாய்ராம்! தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் நச்சரிப்பு பண்ணாலும், இவங்க சும்மா கும்மறாங்க! காவடி-ன்னாலே கும்ம வேணாங்களா? :-)
யேசுதாஸ் பாடும் காவடிச் சிந்து
அருணா சாய்ராம்
நித்ய ஸ்ரீ பாடுவது
பம்பாய் சகோதரிகள்

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)

தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!

(கண்ணன்)



கீழே ஒருத்தரு இந்தப் பாட்டுக்கு நாட்டியம் ஆடறாங்கப்பா! சும்மா கெடைச்சுது யூ-ட்யூப்பில்! சுட்டுப் போட்டுட்டேன்!

ஷைலஜாவுக்குப் புத்தாண்டு சபதம்! அப்புறம் அம்பிக்கு 2007 இல் புடிச்ச பதிவு! சீனா சாருக்கு மொக்கைச் சரம் பதிவு! - எல்லாம் எக்கச் சக்கமாப் பாக்கி இருக்கு!
சீனா சார் - இந்தப் பதிவை எல்லாம் ப்ளீஸ், மொக்கையில் கணக்கு எடுத்துக்க மாட்டீங்களா? :-)


இன்னிக்குத் தைக் கிருத்திகை-யாம்ல! திராச முருகனருள்-ல பாட்டு போட்டுருக்காரு! இங்கிட்டு கண்ணனுக்குக் காவடி எடுத்துட்டு, அங்கிட்டு முருகனுக்கு ஒரு கும்புடு போட்டுட்டு வந்துருங்க!

Friday, January 11, 2008

கண்ணனும் கந்தனும் !!!!

மார்கழி மாசம் வந்தாலே சென்னைல எல்லாருக்கும் கச்சேரி தான் உயிர், உணவு, சுவாசம் எல்லாம்.. ஆனா இங்க பெங்களூர் வந்த பிறகு கச்சேரி எல்லாம் எங்க நடக்குதுன்னு கூட தெரியாது.. (அதுக்காக சென்னைல எத்தனை கச்சேரி பார்த்து இருக்கேன்னு எல்லாம் கேட்க கூடாது.. )

ஜெயா டிவில இந்த முறை மார்கழி மகா உத்சவம் ரொம்ப நல்ல இருந்தது.. எல்லாரும் ஒரு புது விதமான தலைப்புல பாடினாங்க.. அதுல நித்யஸ்ரீ மஹாதேவன் கண்ணனும் கந்தனும் அப்படிங்கற தலைப்புல பாடினாங்க..
எல்லாரும் பார்த்து ரசிச்சி இருந்தாலும் இன்னொரு முறை பார்பதற்கும் கேட்பதற்கும் எப்பவுமே இன்பம் தான்.. அந்த நிகழ்ச்சில அவங்க கண்ணனையும் கந்தனையும் இணைச்சு ஒரு விருத்தம் பாடினாங்க பாருங்க.. அஹா.. அதை உங்க எல்லாரோடையும் பகிர்ந்துகர்த்துல ஒரு பெரிய மகிழ்ச்சி எனக்கு...


Wednesday, January 09, 2008

82. சீர்காழி-சுசீலா: கண்ணான கண்ணனுக்கு அவசரமா?

சீர்காழியுடன் சுசீலாம்மா சேர்ந்து பாடிய பாட்டுக்களை வரிசையாச் சொல்லுங்க பார்ப்போம்! இன்னிக்கி கண்ணன் பாட்டிலும், அப்படி ஒரு பாட்டு தான்!
ஆலயமணி என்னும் படத்தில் இருந்து கண்ணான கண்ணனுக்கு அவசரமா? கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையான்னு திடீர்-னு சரோஜாதேவி கார் டிக்கியில் இருந்து எழுந்து காருக்குள் வருவாங்க! காதல் பாட்டின் நடுவில் ஆராரோ தாலாட்டு எல்லாம் கூட வரும்!

பாட்டின் கடைசியில் ஒரு டயலாக்!
நீ ஒரு விசித்திரமான பொண்ணு! நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா? எனக்கு ஒண்ணுமே புரியல - இது இன்னிக்கும் வலையுலகக் கதைகளில் கூட, வலம் வந்து கொண்டு தான் இருக்கு!
அது எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்லுறேன்னு பாக்குறீங்களா? பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் என்று ஒரு தொடர்-தொடர்கதை (Relay Story) முயற்சி ஓடிக்கிட்டு இருக்கு! அடுத்து நான் எழுதணுமாம்! பாவம் பதிவுக் கதையுலகம்! அதுல இதே டயலாக்கை வைக்கப் போறேன்! :-)

பாட்டை இங்கே கேளுங்க! கீழாற வீடியோ பாருங்க!




வானம்.....பாடி...
ஆஹாஹஹா...ஆஹாஹஹா...
ஆஹாஹஹா...ஓஹோஹோஹோ...

கண்ணான கண்ணனுக்கு அவசரமா - கொஞ்சம்
பின்னாலே பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா - அது
பேசாமல் பேசுவது கேட்கலையா

(கண்ணான )

பொன்னான கண்மணிக்குப் புரியாதா - கொஞ்சம்
முன்னாலே வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கல்யாணத் தேரோடக் கூடாதா

(பொன்னான)

உள்ளத்தில் வீடு கட்டி உள்ளே ஓர் தொட்டில் கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா

ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
கன்னத்தில் முத்தமிட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா

(கண்ணான)

மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
அந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வண்ணம் கண்டு
இந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா

(கண்ணான)

"வானம்பாடி...நீ ஒரு விசித்திரமான பொண்ணு...நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா? எனக்கு ஒண்ணுமே புரியல"


குரல்: சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
படம்: ஆலயமணி

Tuesday, January 08, 2008

அனுமத் ஜெயந்தி: சொல்லின் செல்வன் அனுமன்!

உலகில் எத்தனையோ அமரகாவியங்கள் உருவாகியுள்ளன. ஆனால் நம்முடைய பாரத இதிகாசங்களான ராமாயணம் மஹாபாரதம் போல மானுட வாழ்வின் ஒட்டுமொத்த செறிவுகளை பிரதிபலிக்கும் ஒரு இயக்கம் வேறு எங்கும் இல்லை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்றும் பொருந்தும் விதமாக அதன் உணர்ச்சிக் களன் அமைத்திருப்பது இன்றைய ஹைடெக் விஞ்ஞானத்தில் உன்னதமான ஒரு கண்டுபிடிப்புக் கூடத் தரமுடியாத ஆச்சரியமாகும்.

ராமாயண நாயகன் ராமனைப் போல மகாபாரத நாயகன் கண்ணனைப் போல விலங்கினமான வானரைனத்துப் பிரதிநிதியான அனுமன் இந்த இரு இதிகாசங்களிலும் விஞ்சி நின்று தனித்துத் தெரிகிறான்.

இதுவும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒரு சிறப்பு அம்சம். விலங்குகளுக்கு பாவ புண்ணியங்கள் இல்லை.

ஏனென்றால் அவை மனத்தால் வாழ்பவை அல்ல. மனிதனே மனத்தால் வாழ்பவன். மனம் என்று வந்த உடனேயே நேற்று- இன்று- நாளை என்ற மூன்று காலங்கள் வந்துவிடுகின்றன..நேற்றைய நிகழ்வுகள் இன்றைய தாக்கமாகி இன்றைய தாக்கமே நாளைய வாழ்விற்கு அடிப்படையாகி ஒரு வட்ட சுழற்சி ஏற்பட்டு விடுகிறது. இது முடிவில்லாத வாழ்க்கைப்பயணம்.

எப்படி இருப்பினும் மானுடப்பிறப்பு என்பதே அரிதானது.

தாவும் குணம் கொண்டவனும் மனத்தவனுமான வானரன் ஒருவன் அந்த குணத்தை வென்று தர்மத்தின் தூதுவனாக பக்தியின் இருப்பிடமாகத் திகழ்ந்ததால் அவன் அழகானவன் - சுந்தரன் ஆனான்! அதனால் தான் சுந்தரகாண்டம் வந்தது.

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயு-அஞ்சலை புத்திரனாய் அவதரித்தவன் அனுமன்.
இங்கிதம் அறிந்து பேசும் அனுமனை சொல்லின் செல்வன் என்கிறார் கம்பர்பெருமான்.
அதற்கு உதாரணம்..

இலங்கையில் சீதையைக்கண்டு திரும்பிய அனுமன் வானரவீரர்களுடன் கிஷ்கிந்தைக்கு திரும்புகிறான்.
ஒரே உற்சாகக் கூக்குரல்கள்..குதூகல ஒலிகள்! அவ்வளவு வானரவீரர்களும் வேகமாய் நடந்துவந்து சுக்ரீவனிடம்,: ப்ரபுவே! நமது அனுமன் வெற்றியுடன் திரும்பி இருக்கிறான். அனுமனால் நமக்கெல்லாம் பெருமை.
சீதாபிராட்டியை சிறையினின்றும் மீட்க நாம் உடனே படையெடுத்துச் செல்லலாம் வாருங்கள்" என்றனர்.

ஆனால அனுமன் மட்டும் மூலையில் அடக்கமாய் ஏதும் பேசாது அமைதியாய் நின்று கொண்டிருந்தார்.
அவனை அழைத்து ராம சுக்ரீவன் முன்பு அழைத்துக் கொண்டு நிறுத்திய ஜாம்பவானும் அங்கதனும்,"ப்ரபோ! அனுமன் ஜெயவீரன். அவன் வாயினாலேயே அனைத்து விவரங்களும் அறிவது தான் தங்களுக்கு நிம்மதி" என்று கூறி அனுமனைத் தூண்டி விட்டனர்.
அனுமன் பேசத்தொடங்கினான்.
"கண்டேன் கற்பின் அரசி சீதையை: என்று ஆரம்பித்தான்.

சீதையைப்பற்றி செய்தி கேட்க ஆவலாயிருக்கும் ராமனுக்கு சீதையைக் கண்டதாய் சொல்ல ஆரம்பித்தால் சீதையை எனக் கூறி அடுத்து சொல்ல இருக்கும் அந்தக் கண நேரத்திற்குள் சீதைக்கு ஆபத்து என ராமன் நினைத்து பதட்டமடையக்கூடும் என நினைத்து மகிழ்ச்சி தரக்கூடியதும் மன நிம்மதி தரக்கூடியதுமான கண்டேன் எனும் சொலலி முதலில் கூறுகிறான் என்கிறார் கம்பர்.
மேலும் கண்டேன் சீதையை என்று கம்பன் பாடவில்லை.
கண்டனன் கற்பினுக்கணியை என்றே கம்பன் பாடல் கூறுகிறது.

ஒருக்கால் சீதை ராமனின் வீர பராக்கிரமங்களைக்கேட்டு மயங்கி இலங்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறாளோ என்ற எண்ணம் ராமனுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக கற்பினுக்கணியை என்கிறான் கம்பன்.
ராமனே தங்கள் தேவி தங்களைத்தவிர வேறு எதையும் நினைப்பதில்லை. இராவணனையும் அவனது செல்வங்களையும் ஒரு சிறு துரும்புக்கு சமமாய் எண்ணுகிறாள். இதை நான் என் கண்ணால் கண்டேன்.எனவே சீதை கற்பின் செல்வி என்கிற இவ்வளவு விஷயங்களையும் ஒரே வரியில் சொல்லி விடுகிறான்.

கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்....என்று பாடல் தொடங்குகிறது.

அனுமன் பிறந்த நாள் ஆற்றல் பிறந்த நாள்! இந்த நன்னாளில் அவனைத்தொழுது வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP