Saturday, December 22, 2007

ஓரக்கண்ணால் பார்த்த கண்ணன்

மார்கழியில் முடிந்தளவுக்குக் கண்ணன் பாடல்களைப் பதிவு செய்ய ரவி அழைப்பு விடுத்தார். எனக்குக் கண்ணன் பாடல்கள் எவ்வளவு பிடிக்குமோ, அந்தளவுக்கு வீரமணிஐயரின் பாட்டுக்களும் பிடிக்கும். இந்த இரண்டும் சேர்ந்திருந்தால் அது எவ்வளவு நன்றாகவிருக்கும். என்பங்குக்கு அப்படி ஒரு பாடலைப் பதிவு செய்தால் என்ன என்று எண்ணிய போது, யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப்பெருமானை நினைந்து, வீரமணிஐயர் பாடிய இப்பாடல் நினைவுக்கு வந்தது. ஆனால் பாடல் ஒலிவடிவத்தில் கிடைக்கவில்லை. உங்களைச் சும்மா விடலாமோ? :)

கல்யாண வசந்தராகத்தில், கல்யாணக் கோல வர்ணனையாக அமைந்த இப் பாடலை, முறையாக இசைகற்காத நான், என்னால் முடிந்தவரையில் பாடிப் பதிவு செய்துள்ளேன்.


Get this widget
Track details
eSnips Social DNA





கல்யாண வசந்த மண்டபத்தில் காலைத்தூக்கி
கண்ணன் அம்மிக்கல்லில் வைத்தானடி
கல்யாண வசந்த மண்டபத்தில்
எல்லாம் மறந்தேனடி ஏகனோடிணைந்தேனடி

நல்லாய் என் குருநாதன் நாயகனானடி
கல்யாண வசந்த மண்டபத்தில்
ஓமப்புகை நடுவே ஓரக்கண்ணால் பார்த்து
கோமளப்புன்னகையால் குழைந்தானடி

சியாமள வண்ணன் கண்ணன் செளந்தர்ய லாவண்யன்
பொன்னாலைப் பதிவாழும் புனிதன் வரதராஜன்
கல்யாண வசந்த மண்டபத்தில்


12 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இயலிசை வாரிதி வீரமணி ஐயரின் பாட்டா இது! அருமை அருமை! துவக்கத்திலேயே ராகத்தின் பெயரை போட்டு தூள் கிளப்புகிறார். கற்பகவல்லி பாட்டிலும் இடையிடையே கல்யாணி, ரஞ்சனி, பாகேஸ்ரீ என்று பெயர்கள் வரும்! அது போல் இருக்கு!

அருமையான பாடல் என்று பார்த்தால்...
அட நமக்குத் தெரிந்த குரல்!
மலைநாடான் குரல்!!

இனிய முயற்சி ஐயா! நல்லா இழைந்து பாடியுள்ளீர்கள்!!
வாழ்த்துக்கள்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வச்சி...தேவதை போல் நீ நடந்து வர வேணும்!

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி...

- இவை எல்லாம் கூட கல்யாண வசந்தம் தான்!

//இசை கற்காத நான்//

மலைநாடான் ஐயா
எங்க ஊர்ல ஒரு சொல் வழக்கு உண்டு...படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்-ன்னு:-)
பல நேரங்களில் இசை கற்காதவர்கள் பாடுவதே இயற்கையா இருக்கு!

ஓமப் புகையில் ஓரக் கண்ணா? - சூப்பர்! கல்யாண என்பது மட்டும் தூக்கலா கேட்குது, வசந்த மண்டபத்தில் என்னும் சொற்களை மட்டும் நீங்கள் கீழ் ஸ்தாயியில் ஹம் பண்ணறீங்க போல!

Dr.N.Kannan said...

மலைநாடன்! சபாஷ்!!

எந்த வாத்தியப் பின்னணியும் இல்லாமல், ஸ்ருதி சுத்தமாக ஒரு இனிய பாடல். ஈழத்து கிருஷ்ணபக்தி பற்றிச் சொல்லுங்கள். அங்கெல்லாம் அவர் மருமான்தான் தூள் கிளப்புகிறார் என்று கேள்வி?

கண்ணன்

cheena (சீனா) said...

பாடல் படித்தேன் அருமை -

எல்லாம் மறந்தேனடி
ஏகனோடிணைந்தேனடி

ஓமப்புகை நடுவே ஓரக்கண்ணால் பார்த்து
கோமளப்புன்னகையால் குழைந்தானடி

கண்ணன் ஓமப் புகை நடுவில் ஓரக் கண்ணால் பார்க்கிறான் - என்ன அருமையான் வாரிகள்

பாடல் கேட்க முடியவில்லை-ஏனென்று தெரியவில்லை

VSK said...

நல்ல முயற்சி!

முடிந்த அளவுக்கு நன்றாகவே ப்பாடியிருக்கிறீர்கள், திரு. மலைநாடன்.

மலைநாடான் said...

ரவிசங்கர்! பாராட்டுக்கு நன்றி. வீரமணிஐயர் எழுதிய, எனக்குத்தெரிந்த சில பாடல்களிலும் ராகங்களின் பெயர் ஏதோ ஒரு இடத்தில் வருவதை அவதானித்துள்ளேன். பாடல் எழுதும் போதே அதன் ராகம் தாளம் மெட்டமைப்போடு பாடல்களை எழுதிவிடும் வல்லவர் அவர். இதே ராகத்தில் ஜேசுதாஸ் அவர்கள் பாடிய ஒரு அழகான ஐயப்பன் பாடலும் உண்டு. வரிகள் ஞாபகத்துக்கு வரவில்லை.

குமரன் (Kumaran) said...

ஆகா. அருமை ஐயா. பாடலை மட்டும் படித்திருந்தாலே உருக்கியிருக்கும். அதோடு நீங்கள் பாடியும் கேட்டதால் மனம் மகிழ்ந்தது. 'எல்லாம் மறந்தேனடி ஏகனோடு இணைந்தேனடி' என்ற போது மனத்தில் ஏதோ ஒன்று நகர்ந்தது. ஒரு நொடியில் குழைந்தது.

மிக்க நன்றி ஐயா.

மலைநாடான் said...

ரவி!
கல்யாணவசந்தமென்னாலே கலக்கல்தானே?
நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்றைய பாட்டுக்களும் என் விருப்பத் தேர்வுகளே?

இந்தப் பதிவுக்கு "சைட் அடித்த கண்ணபிரான் " என்று தலைப்பு வைத்திருக்கலாமோ என்று, இப்போ தோன்றுகிறது. :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மலைநாடான் said...
இந்தப் பதிவுக்கு "சைட் அடித்த கண்ணபிரான் " என்று தலைப்பு வைத்திருக்கலாமோ என்று, இப்போ தோன்றுகிறது. :))//

உண்மையை மட்டும் பப்ளிக்கா போட்டு ஒடைக்கவே கூடாது!
பறவைகளில் நான் கருடன்!
பார்வைகளில் நான் சைட்டு-னு மறை மொழியாச் சொல்லி இருக்கேனே!
நீங்க பாக்கலியா? :-))))

மலைநாடான் said...

//எந்த வாத்தியப் பின்னணியும் இல்லாமல், ஸ்ருதி சுத்தமாக ஒரு இனிய பாடல்.//

கண்ணன்!
பாராட்டுக்கு நன்றி.

// ஈழத்து கிருஷ்ணபக்தி பற்றிச் சொல்லுங்கள். அங்கெல்லாம் அவர் மருமான்தான் தூள் கிளப்புகிறார் என்று கேள்வி?//

உண்மைதான். ஈழத்தில், கண்ணன் வழிபாட்டிலும் பார்க்க கந்தன்தான் போற்றப்படுகின்றார்.. பிறிதொரு தருணத்தில் விரிவாகப் பேசுவோம். நன்றி.

கரவையூரான் said...

மலைநாடன், வீரமணி ஐயாவின் பாடலை எங்க்ளுக்கு அறிமுகம் செய்து வைத்ததோடு மனம் குழைந்து பாடியும் இருக்கிறீர்கள். சந்தோசமாக இருக்கிறது.

Anonymous said...

Dear sir,,i just now found your site...i couldnt hear or download this kalyanavasantham song ..can u please give me a link to hear or to download it please??

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP