Friday, September 28, 2007

68: மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!


நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின் பெருமை மிக்க வயிற்றில் வாய்த்தவனே! தென்னிலங்கை அரசனின் மகுடங்கள் தரையில் சிந்தும் படி செய்தவனே! செம்பொன்னால் அமைக்கப்பட்டு யாராலும் (எந்தப் பகைவராலும்) தொடப்படாத கன்னிநன்மா மதில் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே! என்னுடைய இனிய அமுதமே! இராகவனே! தாலேலோ!

புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

தாமரை மலர் மேல் அமர்ந்து இந்த உலகை எல்லாம் பிரமன் உருவில் படைத்தவனே! மிகுந்த வலிமை கொண்ட தாடகையின் வலிமை எல்லாம் அழியும் படி வில்லை வளைத்தவனே! உன்னைப் பார்த்தவர் எல்லாம் தங்கள் மனத்தை உன்னிடம் வழங்கும் படி பேரழகுடைய, திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எட்டு திசைகளையும் ஆளும் வல்லமையுடையாய்! இராகவனே! தாலேலோ!



கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!

தேனும் மகரந்தங்களூம் நிறைந்த பூக்களைச் சூடியதால் அவை நிறைந்த கருங்குழலை உடைய கோசலையின் குலத்தில் உதித்த குழந்தையே! என்றும் தங்கும் பெரும் புகழ் கொண்ட சனகனின் மருமகனே! தசரதனின் மகனே தாசரதீ! கங்கையை விட புனித மிக்க தீர்த்தங்கள் நிறைந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எங்கள் குலத்தின் இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் நான்முகப் பிரமனைப் படைத்தவனே! தசரதனின் பெருமை மிக்க குழந்தையே! மிதிலை இளவரசியின் மணவாளனே! வண்டு கூட்டங்கள் பூக்களில் மது உண்டு இசை பாடும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! வலக்கையில் மிகப் பெரிய வில்லினை ஏந்தியவா! இராகவனே! தாலேலோ!

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!

நாட்டை ஆளும் உரிமையையும் அதோடு பெரும் செல்வத்தையும் பரத நம்பிக்கே அருளி தீராத அன்பு கொண்ட இளைய பெருமாள் இலக்குவனோடு அரிய காட்டை அடைந்தவனே! அழகை ஆளும் மலை போன்ற மார்பினை உடையவனே! திருக்கண்ணபுரத்தரசே! தார் (மாலை) அணிந்த நீண்ட திருமுடியை பூண்ட என் தசரதன் மகனே! தாலேலோ!



சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!

சுற்றம் (ஊரார் உறவினர்) எல்லாம் பின் தொடர்ந்து வர தொன்மையான காட்டை அடைந்தவனே! வேறு கதி அற்றவர்களுக்கு அரிய மருந்து போன்றவனே (எல்லாம் தரும் அமுதம் போன்றவனே)! அயோத்தி நகருக்கு உரிமையானவனே! கற்றவர்கள் என்றும் வாழும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! சிற்றன்னையாம் கைகேயியின் கட்டளையைத் தலை மேல் கொண்ட சீராமா! தாலேலோ!

ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!

ஆலின் இலைமேல் சிறு பாலகனாய் உருக்கொண்டு பிரளயக் காலத்தில் உலகமெல்லாம் உண்டவனே! வாலியைக் கொன்று கிஷ்கிந்தை அரசை இளைய வானரமாம் சுக்ரீவனுக்குக் கொடுத்தவனே! தென்றல் காற்று (காலின் மணி) நதியின் கரையின் மேல் அலை அடிக்கும் படி செய்யும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! ஆலி நகருக்கு அதிபதியே! அயோத்தி மன்னனே! தாலேலோ!

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

பாறைகளால் அணை கட்டி மதிள் சூழ்ந்த இலங்கையை அழித்தவனே! அலை வீசும் பாற்கடலைக் கடைந்து அமரருக்கு அமுதம் அருளியவனே! கலைகள் எல்லாம் வல்லவர் நிறைந்து வாழும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! வலக்கரத்தில் வில் தாங்கியவனே! காவலனே! சீராமா! தாலேலோ!


தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!

சுருண்டு விழும் நறுமணம் கொண்ட முடியை உடைய தயரதன் தன் குலத்தில் உதித்த குழந்தையே! வளைந்து நிற்கும் ஒரு வில்லைக் கொண்டு மதிள் சூழ்ந்த இலங்கையை அழித்தவனே! கழுநீர்ப்பூக்கள் எல்லாத் திசைகளிலும் அலரும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! பக்தர்களுக்கு அருள் தருபவனே! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தேவர்கள், அசுரர்கள், திசைகள் என்று எல்லாவற்றையும் படைத்தவனே! எல்லோரும் வந்து திருவடிகளை வணங்க திருவரங்க நகரில் துயில் கொண்டவனே! காவிரி என்னும் நல்ல நதி பாயும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! நெடிய சிறந்த வில்லை வலக்கரத்தில் உடையவனே! இராகவனே! தாலேலோ!

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

பகைவர்களால் என்று தொடப்படாத பெரிய மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் காகுத்தன் தன் திருவடி மேல் தாலேலோ என்று சொன்ன தமிழ்மாலையாம், பகைவரைக் கொல்லத் துடிக்கும் வேலை வலக்கையில் ஏந்திய வெண்கொற்றக் குடையைக் கொண்ட குலசேகர மன்னன் (சேர மன்னன்) சொன்ன இந்த வேத நூலைப் போன்ற பத்து பாடல்களும் வல்லவர்கள் இறைவனுடன் என்றும் தோழமை கொண்ட பக்தர்கள் ஆவார்கள்!

சேர மன்னராய் இருந்து அடியவர்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் பாடியது.

பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கேட்டு மகிழலாம்.

26 comments :

jeevagv said...

//பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கேட்டு மகிழலாம்.//
கேட்பதற்கு சுட்டி ஏதும் காணோமே?

(அல்லது)

எனக்குத் தான் கேட்கும் அருள் இல்லையோ!?

VSK said...

கண்ணில் நீர் வரவழைக்கும் பாடலை, அதன் குணம்ம் மாறாமல் பாடிய ஜெயஸ்ரீயின் குரலில் கேட்டதும் இன்னமும் நீர் பெருகுகிறது!
நன்றி குமரன்!

ராமந்லக்ச்ஷ்மண் பாடியதும் கிடைத்தால் போடுங்கள்!
மிக அருமையாய் இருக்கும்!

குமரன் (Kumaran) said...

ஜீவா, இடுகையின் நடுவில் பாருங்கள். யூ ட்யூபில் இருந்து எடுத்து இட்டது இருக்கிறது. கேட்டு அனுபவியுங்கள். அருள் பெறுங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பல நாட்கள், அதுவும் அலுவல் முடிந்து களைத்து வரும் நாட்கள் - அப்போது இரவில் கேட்கும் பாடல் குமரன்! குலசேகராழ்வார் ராமனுக்குப் பாடும் உருக்கமான தாலாட்டு!

தான் ஆணாய் இருந்து தாலாட்டுவதால் தானோ, பாடலில் பல இடங்களில் "தாசரதீ!" என்று விளிக்கிறார்?

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
//தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!//
-அனைத்தும் அவன் படைப்புகளே என்று காட்டும் வரிகள்

//யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே//
-யாவரும் வந்து வணங்குமாறு தான் அன்றும் இன்றும் என்றும் உள்ளான் அரங்க நகரப்பன்!

அது சரி...கொஞ்ச நாளாய் என்ன கண்ணன் பாட்டில் ஒரே திருக்கண்ணபுரமாய் இருக்கு? :-)
மடல்காரன், பாலு வந்த வேளையா? :-))

மடல்காரன்_MadalKaran said...

அன்புள்ள கேஆர்ஸ்,
எல்லாம் அவன் செயல்
நாமெல்லாம் சிறு துரும்பினும்
சிறிய எறும்பு ..
ஆழ்வார் தன்னிலை மறந்து பாடிய வரிகள் என் நிலை மறக்கச்செய்தது..

கவிஞர் வாலியின் பாட்டுதான் நினைவுக்கு வருது

// நூல கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா ..//

அன்புடன், கி.பாலு

Shobha said...

Yen kuzhandaikalukku yen amma paadiya paatu, rombave nostalgic.
Padangal arumai, Vaduvur Ramara?
Thirukkannapuram Muniyodaran Pongal sappitta madiri irundadu. Nandri
Shobha

மெளலி (மதுரையம்பதி) said...

புரட்டாசி சனிக்கிழமை இந்த பாசுரங்களை கேட்க தந்தமைக்கு நன்றி குமரன்.

தி.ரா.ச அவர்களே, கோபிக்காதீர்கள்....பாம்பே ஜெயஸ்ரீ பாடிய வெகுசில நல்ல பாடல்களில் இதுவும் ஒன்றாத் தோன்றுகிறது.... :-).

G.Ragavan said...

குமரன் ஒரு ஐயம். தென்னிலங்கை கோனா? தென்னிலங்கைக் கோனா? இரண்டாவதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

குலசேகர ஆழ்வாருக்கு முன்னும் பின்னும் சேரமான் குடும்பம் சைவமாக இருந்தது. அதே குடும்பத்தில் இருந்து ஒரு சைவ இலக்கியமும் இருக்கிறது என்று நினைக்கிறேன். சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

குமரன் (Kumaran) said...

ஆமாம் எஸ்.கே. பாடிக் கேட்காமலேயே மிக அருமையாக இருக்குப் பாசுரங்கள் இவை. பல நாட்கள் பாடி மகிழ்ந்தவை. அண்மையில் பாடியதைப் பார்த்தவுடன் சேமித்து வைத்தேன். இந்தப் புரட்டாசி சனிக்கிழமை எதாவது பெருமாளைப் பற்றி எழுதலாம் என்று பார்த்த போது இது கண்ணில் பட்டது. உடனே பொருளுடன் எல்லாப் பாசுரங்களையும் இட்டேன். நீங்கள் சொன்னது போல் கண்ணில் நீர் பெருக வைக்கும் அருமையான பாசுரங்கள் இவை.

ராமன் லக்ஷ்மணன் பாடியது கிடைக்கிறதா பார்க்கிறேன். கிடைத்தால் இடுகையில் இணைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். இரவில் கேட்பதற்கு மிகவும் நல்ல பாசுரங்கள் இவை. சக்ரவர்த்தி திருமகனை தாசரதீ என்று விளித்தது பொருத்தம் தானே இரவிசங்கர்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னரே இந்த யூ ட்யூப் வீடியோவை எடுத்து வைத்திருந்தாலும் சென்ற இடுகையில் சின்ன அம்மிணி இந்த வாத்ஸல்யத்தைப் பற்றிச் சொன்னவுடன் உடனே நினைவிற்கு வந்தது. அதுவும் மனத்தில் இருக்க நேற்று தேடிய போது கிடைத்து உடனே இட்டேன்.

குமரன் (Kumaran) said...

உண்மை பாலு. ஆழ்வார் உருகி உருகிப் பாடிய இந்தப் பாசுரங்கள் நம் உள்ளத்தை என்றும் உருக்குபவை தான்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி ஷோபா. ஆமாம் வடுவூர் இராமனின் திருப்படங்கள் தான் இவை. இரவிசங்கர் அருளியவை. என் மகனுக்கும் இந்தப் பாடலைப் பாடலாம் போலிருக்கே நீங்க சொல்றதைப் பாத்தா. முயன்று பார்க்கிறேன்.

திருக்கண்ணபுரம் முனியோதரன் பொங்கலைப் போல் இரவிசங்கரும் போன இடுகையில் சொல்லியிருந்தார். அதனைப் பற்றி மேல் விவரங்கள் சொல்லுங்களேன்.

குமரன் (Kumaran) said...

மௌலி. புரட்டாசி சனிக்கிழமை என்று தான் இந்த பாசுரங்களை இட்டேன் . நீங்களும் அதே நினைவுடன் கேட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

இரண்டிற்கும் என்ன வேறுபாடு இராகவன்? நான் இணையத்தில் தேடியவரை தென்னிலங்கை கோன் என்ற பாடமே இந்தப் பாசுரத்திற்கு இருக்கிறது. அப்படி தேடியதில் கிடைத்தது இன்னொன்று. மன்னு புகழ் கோசலை என்று இங்கே எழுதியிருக்கிறேன். ஆனால் பல இடங்களில் மன்னு புகழ் கௌசலை என்ற பாடம் இருக்கிறது.

குலசேகர ஆழ்வாருக்கு முன்னும் பின்னும் சேரமான் குடும்பம் சைவர்களாக இருந்ததற்குத் தரவுகள் என்ன இராகவன்? சொன்னால் தெரிந்து கொள்வேன்.

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
இரண்டிற்கும் என்ன வேறுபாடு இராகவன்? நான் இணையத்தில் தேடியவரை தென்னிலங்கை கோன் என்ற பாடமே இந்தப் பாசுரத்திற்கு இருக்கிறது. அப்படி தேடியதில் கிடைத்தது இன்னொன்று. மன்னு புகழ் கோசலை என்று இங்கே எழுதியிருக்கிறேன். ஆனால் பல இடங்களில் மன்னு புகழ் கௌசலை என்ற பாடம் இருக்கிறது. //

புட்டி பாலுக்கும் புட்டிப் பாலுக்கும் உள்ள வேறுபாடுதான். வேறென்ன.

// குலசேகர ஆழ்வாருக்கு முன்னும் பின்னும் சேரமான் குடும்பம் சைவர்களாக இருந்ததற்குத் தரவுகள் என்ன இராகவன்? சொன்னால் தெரிந்து கொள்வேன்.//

வரலாறுதான். வேறென்ன. எங்கு படித்தேன் என்ற நினைவில்லை. கவியரசர் கூட சேரமான் காதலி என்ற புதினத்தில் கூறியிருக்கிறாரே.

குமரன் (Kumaran) said...

சரி. புட்டி பாலுக்கும் புட்டிப்பாலுக்கும் என்ன வேறுபாடுன்னாவது சொல்லுங்க இராகவன்.

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
சரி. புட்டி பாலுக்கும் புட்டிப்பாலுக்கும் என்ன வேறுபாடுன்னாவது சொல்லுங்க இராகவன். //

கிழிஞ்சது போங்க. என்ன குமரன்..கிண்டலடிக்கிறீங்களா? ரெண்டுல ஒன்னு இலக்கணப் பிழைன்னு தோணுது. திருவரங்கக் கோன்னுதானே சொல்வோம். திருவரங்கம் கோ என்றா சொல்வோம்?

G.Ragavan said...

http://www.tamil.net/projectmadurai/pub/pm0007/pm0007.pdf

குமரன், இங்கும் தென்னிலங்கைக் கோமான் கிடைப்பார்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
கிழிஞ்சது போங்க. என்ன குமரன்..கிண்டலடிக்கிறீங்களா? ரெண்டுல ஒன்னு இலக்கணப் பிழைன்னு தோணுது.//

குமரன்
இலங்கைக் கோமான் = இலங்கைக்"கு"க் கோமான்.
ஐ, ஆல், கு , இன் ன்னு வருமே..அதுல "கு".
நான்காம் வேற்றுமைத் தொகை. அதில் ஒற்று மிகும்.

தஞ்சைத் தலைவன்
மதுரைச் செம்மல்...அது போல...
இலங்கைக் கோமான்

ஆனா...ஜிரா சொன்ன புட்டிப் பால் நமக்குத் தெரியாதுங்கோ...
"புட்டி" தமிழா-ன்னு தூத்துக் குடியார் தான் குடிச்சி விட்டுச் சொல்லோனும்! (அட புட்டிப் பாலைச் சொன்னேங்க! :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் நீங்கள் செலெக்ட் செய்த ராகம் அப்படிபட்டது. அதான் மக்களை கவர்ந்தது.

@மௌளி சார் நான் ஏன் கோபிக்கப் போகிறேன். எல்லாப் பாட்டும் எனக்கு இசைந்த பாட்டுதான் யார் படினாலும் கேட்பேன்.

V.Subramanian said...

தமிழ் கூறும் நல்லுலகம் பெருமை யுடைத்து.
இயன்ற வரை முயன்று நம்முடைய பங்களிப்பைத் தரவேண்டியது ஒவ்வொரு மகனின் கடமையாம்.

பண்டு படைப்புகளைப் பாதுகாக்க வழியற்றபோதும் வாய்மொழியாய்க் கூறி செவிமடுத்து மனனம் செய்து சீடர்கள் பல்லோர் மூலம் பரப்பிய தொலை நோக்கிய நம் முன்னோர்களின் சேவடியைப் பணிந்து நம் இளவல்களுக்கு நாமும் வழிகாட்டுவோம். இரட்டைகளால் நிறைந்த இவ்வுலகில் நன்மை ஒன்றையே தெளிந்தெடுத்து அவர்களுக்குக் கொடுப்போம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.
v.dotthusg@gmail.com

குமரன் (Kumaran) said...

மிக அருமையாகச் சொன்னீர்கள் திரு. சுப்ரமணியன். மிக்க நன்றி.

Anonymous said...

very good work !!

குமரன் (Kumaran) said...

நன்றி ராதாம்மா.

Unknown said...

தாசன் அடியேன்

Anonymous said...

You can find the video after second paragraph

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP