Sunday, September 23, 2007

67. திருக்கண்ணபுரத்து என் கருமணியே!

நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள ஊர் கண்ணபுரம். அந்தத் திருக்கண்ணபுரம் கண்ணன் பற்றி, கண்ணன் பாட்டு வலைப்பூவில் இதோ இரு பாடல்கள். சீர்காழியின் கு(ழ)ரலில் கண்ணனை நம் கண் முன்னே நிறுத்துகிறார் கவிஞர்.

இதுவரை சென்றதில்லை அங்கு!-அதுவரை பாடலை கேட்கலாம் இங்கு!!
கருமை நிறக் கண்ணன்-அருமை குழல் மன்னன்
அவன் குடை நிழல்-இவன் மயங்கும் குழல்
அவன் அருள் மழை-இவன் காணும் கரை!

ஸ்தலம் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்..

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கண்ணபுரத்து என் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ - என்று ஆழ்வார் தாலாட்டும் திருக்கண்ணபுரம் செளரிராஜனின் செளந்தர்யத் திருமேனி இதோ!


செளரிராஜப் பெருமாள்

கண்ணபுர நாயகித் தாயார்




பாடல் 1:

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும்

நின்றமணித் திருக்கோலம் நினைவினிலே நிறைந்திருக்கும்
என்றும் அவன் திருப்பாதம் நெஞ்சிலே உறைந்திருக்கும்

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் ..

முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும்
முடியழகும் சடையழகும் ஒன்றை ஒன்று வென்றிருக்கும்
தன்னழகு ஈடில்லா தனியழகு சிறந்திருக்கும்
மன்னவனின் சன்னிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும்


கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் …

சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான்
செக்ற்நிற பட்டாடை தக்கபடி உடுத்திடுவான்
சங்கு முழங்குதற்கு செங்கை பிடித்திடுவான்
சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான்.


கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் …

பூமாதும் புவிமாதும் புடை சூழ கண்ணனுக்கு
பூமாலை சூட்டியவள் புகழ் மாலை பாடிவர
வேறோர் வலைச்சி வலை வீசிட
நால்வருடன் விளையாடும் கோமானை வேறேங்கும் கண்டதுண்டோ

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் …

பாடலை ரசிக்க இங்கே சொடுக்க..


Get this widget
Track details
eSnips Social DNA




பாடல் 2:



கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்.
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்.

திருக்கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்.
வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லாம் அவனின் இணையடியே என்பேன்.


கண்ணபுரம்...

நித்திய புஷ்கரனி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலாவதக விமானத்தை நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன்.


கண்ணபுரம்...

கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்.
பெருமான் சன்னிதி முன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப் பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்.


கண்ணபுரம்..

எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன்.
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா என்ற
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்.
கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன்.
கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்.


கண்ணபுரம்..

பாடலை ரசிக்க இங்கே சொடுக்க..
Get this widget
Track details
eSnips Social DNA



அன்புடன், கி.பாலு

15 comments :

வடுவூர் குமார் said...

ஒரே ஒரு முறை போயிருக்கிறேன்.
அமைதியான இடம்,குறைவான மக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கண்ணன் பாட்டு வலைப்பூவிற்கு மடல்காரன், கி.பாலுவை நட்புடன் வரவேற்கிறோம்!

கண்ணனமுதை சொல்லமுதாய், சுவையமுதாய், இசையமுதாய், தொடர்ந்து தாங்க பாலு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கண்ணபுரத்துக்கு என்றே எழுதப்பட்ட பாடல் போல! கவிஞர் யாரோ?
அப்படியே நித்திய புஷ்கரணி உத்பலாதக விமானம்...னு தலம் பற்றிய தகவல்களை பாட்டிலே அள்ளித் தெளிக்கிறார்!

கண்ணபுரத்துக் கருமணிக்கு கட்டுகட்டாய் கருங்கூந்தல் ஜடை உண்டு! முன்பு இல்லாத சடை, பக்தனுக்காக பின்னால் வந்தது!

சடை மட்டுமா? மணக்க மணக்க முனியோதரன் பொங்கல் காட்டி, பக்தன் முனியோதரன் பெருமையை அர்ச்சகர்கள் எல்லாரும் அறியச் செய்தார் பெருமாள்!

கதைகளை நம்ம குமரனும் ஜிராவும் வந்து சொல்லட்டும்!

இராம.கி said...

மார்ச்சு 30, 2005 தொடங்கி ஏப்ரில் 04, 2005 வரை "காணவொரு காலம் வருமோ?" என்ற தலைப்பில் 11 இடுகைகள் (11 பாக்கள் அடங்கிய பதிகமாய் சௌரிராசன் பற்றி) அடியேன் எழுதியது வளவு பதிவில் இருக்கும். படித்துப் பாருங்கள்.

அன்புடன்,
இராம.கி..

மடல்காரன்_MadalKaran said...

வந்தனம் சொன்ன கேஆர்ஸ்-க்கு நன்றிகள்.
மற்றவர்கும் என் வணக்கங்கள்.
இந்த வலைப்பூவுக்கு நான் புதிது. முயன்று தருவேன் பாடல் இனிது.

அன்புடன், கி.பாலு

தறுதலை said...

//நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள ஊர் கண்ணபுரம்//

நாகைக்கு அருகேயா திருவாரூருக்கு அருகேயா?
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நாங்களும் போயிருக்கிறோம், இந்தக் கண்ணனைப் பார்த்து உருகாமல் இருக்க முடியாது. அந்தக் குளமும் கோபுரமும் கண்ணிலேயே நிற்கிறது.
அதுவும் சீர்காழியின் குரலில் அவனைக் கண்ணாரக் கண்டு கேட்கலாம்.

எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு அருமையான பாடலைக் கொடுத்ததற்குப் பாராட்டுகள் பாலு.
வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

வாங்க பாலு. வரும் போதே மிக அருமையான பாடல்களுடன் வருகிறீர்கள். சென்ற இடுகையில் வந்த திருவல்லிக்கேணி பாடலும் அருமையாக இருந்தது.

திருக்கண்ணபுரம் செல்லும் பாக்கியம் எனக்கு இன்னும் கிட்டவில்லை. இந்த இடுகையில் இருக்கும் முதல் பாடலைப் பல முறை கேட்ட நினைவு இருக்கிறது. இரண்டாவதையும் கேட்டிருக்கிறேன். ஆனால் முதல் பாடல் வரிகளைக் கூர்ந்து கேட்டது போல் இரண்டாவது பாடல் வரிகளைக் கேட்டதில்லை. நேற்றும் இன்றும் இந்த இரு பாடல்களையும் கேட்டும் படித்தும் மிக்க மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

//முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும்
முடியழகும் சடையழகும் ஒன்றை ஒன்று வென்றிருக்கும்
தன்னழகு ஈடில்லா தனியழகு சிறந்திருக்கும்
மன்னவனின் சன்னிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும்
//

இந்த வரிகள் பெருமாளை உடனே போய் பார்கக் வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன.

//சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான்
செக்ற்நிற பட்டாடை தக்கபடி உடுத்திடுவான்
சங்கு முழங்குதற்கு செங்கை பிடித்திடுவான்
சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான்.
//

இந்த வரிகள் அவன் திருமேனி அழகை நன்கு காட்டுகின்றன.

//பூமாதும் புவிமாதும் புடை சூழ கண்ணனுக்கு
பூமாலை சூட்டியவள் புகழ் மாலை பாடிவர
வேறோர் வலைச்சி வலை வீசிட
நால்வருடன் விளையாடும் கோமானை வேறேங்கும் கண்டதுண்டோ
//

இந்த வரிகள் எனக்குத் தெரியாத கதைகளைச் சொல்கின்றன. தெரிந்தவர் இந்தக் கதைகளைச் சொன்னால் மகிழ்வேன்.

//என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்//

ஆகா. 'ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்' தொடருக்கு ஆசாரியர்கள் சொல்லும் பொருளை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டது இந்த வரி.

//கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன்.
கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்.
//

நாராயணனே நமக்கே பறை தருவான்

***

இரவிசங்கர். சவுரி வந்த கதையை முன்பு படித்திருக்கிறேன். முனியோதரன் பொங்கல் கதையை இன்று தான் இந்த இடுகையில் இருக்கும் தலத்தைப் பற்றிய சுட்டியின் மூலம் அறிந்தேன்.

நீங்கள் சொல்ல வேண்டிய கதைகளுக்கு என்னையும் இராகவனையும் கை காட்டினால் எப்படி?

Anonymous said...

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கண்ணபுரத்து என் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ//
இந்தப்பாட்டையும் போட்ருங்க. வாத்ஸல்யத்துல பாம்பே ஜயஷ்ரி பாடினது நல்லா இருக்கும்

கார்த்திக் பிரபு said...

hi add me my page link in ur blog

its a googlepage for tamil free e books

http://gkpstar.googlepages.com/

thanks for adding my page

Anonymous said...

வணக்கம்.

மிகுந்த தயக்கத்துடனான ஒரு பின்னூட்டம்; ஏனெனில் கடவுள் - நம்பிக்கை - போன்ற விடயங்களில் துளியும் நம்பிக்கை இதுவரை எனக்குக் கிடையாது; ஆயினும் வைணவத்தமிழ் ஒரு மயக்கத்தை எப்போதும் தருகின்றது என்பதாலும் திருக்கண்ணபுரம் குறித்தான ஒரு அரிய நூல் என்னிடமுள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்பியும் பின்னூட்டமிடுகிறேன். நன்றி.

திருக்கண்ணபுரத்தில் தனது கடைசி காலத்தை கழித்த எனது கொள்ளுபாட்டி (வீர வைணவர் - சமாஷணம் எடுத்துக் கொண்டவர்) நினைவாக
நான் தமிழகத்திலிருந்து எடுத்து வந்த நூல், " ஸ்ரீசௌரிராஜஸ்தவம்". 1960 ல் இலவசமாக வெளியிடப்பட்ட இந்நூலை ஆக்கியோர்கள் டி.எஸ்.ஸ்ரீநிவாஸாச்சாரியர் மற்றும் அவரது புதல்வர் ராஜகோபாலன். தந்தையார் ஸ்ரீசௌரிராஜஸ்தவத்தை - வடமொழியை தமிழில் எழுதி அதற்கு தமிழில் கீழே பொழிவுரை கொடுத்துள்ளார். மைந்தர் அழகு தமிழில் சில செய்யுள்களை இயற்றியுள்ளார்.


திரு. ராஜகோபாலன் இயற்றிய பாடல்கள் இரண்டு.

பெருமாள் பெரிய பிராட்டியார்,பூமிப் பிராட்டியார், நீளை,கோதை, பத்மினிப் பிராட்டியர் இவர்களுடன் வீற்ற்ருக்கும் அழகு பற்றி எழுதப்பட்டுள்ள 10 பாடல்களில் முதலிரண்டு பாடல்கள்.


..விரையாரும் மென்மலர்மேல் வைகும் செல்வி
வில்சொரியும் மல்லகம் மகிழ்ந்து தோன்றப்,
பொறையாரும் பூமகளும் வானே யூரும்
பூபாலன் பொன்மகளும் வலத்தே சேரக்
கறையாரும் வேற்கண்ணாள் நீளை கோதை
கண்ணார எழில்பருகி இடத்தே நிற்க
மறையாரும் கலைமொழியார் பல்லாண் டேத்த
மணிவண்ணா ! வானமுதே ! ஆடி ரூசல்.

[திருமேனியின் சோதி]

சுருள்சேரும் நறுங்குஞ்சி கரிய மேனி
சேலுகளும் நெடுந்தடத்தின் செவ்வி காட்ட,
அருள்நோக்கும் அங்கியும் அடியும் வாயும்
அங்கமலச் செழுமலரின் அழகு காட்ட,
அருள்பொழியும் பொற்கொடியாள் மின்னே காட்ட,
அடலாழி ஒண்கதிரோன் சோதி காட்ட,
தெருள்காட்டும் வளைசங்கம் மதியே காட்டத்
தெவிட்டாத தெள்ளமுதே ! ஆடி ரூசல்..

வல்லிசிம்ஹன் said...

@வாசன்,
சௌரிராஜனும் அவன் பத்தினியரும் ஒன்று சேர வீற்றிருக்கும் காட்சி மிக அருமையாக இருக்கும்.
அதை இந்தப் பாசுரம் விளக்கமாக்க் கொடுக்கிறது.
மிகவும் நன்றி.

Anonymous said...

Who wrote this excellent song. I want to know about the lyricist name

Santhanam said...

RAM RAM pl.frnish Details of the raghams of the both song.

Anonymous said...

ram ram pl. Furnish the raghams of these songs if known by anybody

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP