Saturday, August 11, 2007

ஆயிரம் பெயரால் அழைப்பினும் ஆயிரம் உரு மாறினும் ...


சிவனையும் விஷ்ணுவையும் ஓருருவாகப் பாடும் ஒரு கர்நாடக இசைப் பாடல். திரு. பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. வார்த்தை விளையாட்டு இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது.

பல்லவி:

மா ரமணன் உமா ரமணன்
மலரடி பணி மனமே தினமே (மா ரமணன்)

அனுபல்லவி:


மார ஜனகன் குமார ஜனகன்
மலை மேல் உறைபவன் பாற்கடல்
அலை மேல் துயில்பவன் பாவன (மா ரமணன்)

சரணம்:

ஆயிரம் பெயரால் அழைப்பினும்
ஆயிரம் உரு மாறினும் உயர்
தாயினும் மிகு தயாபரன் பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும் (மா ரமணன்)

பல்லவி:

மா என்றால் திருமகள். மா ரமணன் என்றால் திருமகள் மணவாளன் திருமாலவன். உமா ரமணன் என்றால் உமையன்னையின் மணவாளன் சிவபெருமான். அவன்(அவர்கள்) மலரடி பணி மனமே. தினமே.

அனுபல்லவி:

மாரன் என்றால் மன்மதன். அவன் தந்தை கண்ணன். அதனால் மார ஜனகன் விஷ்ணு. குமார ஜனகன் குமரனின் தந்தையான நடராஜன். கைலாய மலை மேல் உறைபவன் முக்கண்ணன். பாற்கடல் அலை மேல் துயில்பவன் மாயவன். தூயவர்கள் இவர்கள்.

சரணம்:

ஆயிரம் பெயர் கொண்டு அழைத்தாலும், ஆயிரம் உருவங்களால் வழிபட்டாலும், உயர்ந்த தாயை விட கருணையுடைய தயாபரன் அவன். அவனுடைய திருவடிகளைத் தஞ்சம் என்று வந்தவர்களை அஞ்சேல் என்று அருளுபவன் அவன்.

பாடலை பிரியா சகோதரிகள் பாடி இங்கே கேட்கலாம்.

10 comments :

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவிசங்கர்!
அருமையான பாடல்!
இந்த ரமணன் எனும் வார்த்தையின் பொருள் இன்றே அறிந்தேன்
நன்றி

குமரன் (Kumaran) said...

நன்றி யோகன் ஐயா.

தமிழ்மணத்தில் இரவிசங்கரின் படத்தைப் பார்த்து இந்த இடுகை அவர் இட்டது என்று எண்ணியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். :-)

இந்த இடுகையில் 'ரமணன்' என்பதற்கு மணவாளன் என்று பொருள் தந்திருக்கிறேன். ஆனால் ரமணன் என்றால் மகிழ்ச்சியைக் கொடுப்பவன் என்பது நேரடிப் பொருள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யோகன் அண்ணா...இடுகை நம்ம குமரன் எழுதியது. ஆயிரம் பெயரால் அழைப்பினும், பெருமை குமரனையே சாரும்! :-))))

குமரன்
இந்த சொல் விளையாட்டுப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்!
"ஆயிரம் உரு மாறினும் உயர்
தாயினும் மிகு தயாபரன்" என்று பாடும் போது மிகவும் அழகு!

படம் என்ன குமரன்? ஏதோ திருப்பணிகள் நடக்கும் கோவில் கோபுரத்திலிருந்து எடுத்தாப் போல இருக்கு?

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான பாடல் குமரன். இப்பாடலை சந்தானம் பாடி கேட்டிருக்கிறேன் மதுரையில்.

குமரன் (Kumaran) said...

அப்படித்தான் தோன்றுகிறது இரவிசங்கர். இணையத்தில் சங்கர நாராயணரைத் தேடிய போது கிடைத்த படம். படத்தைப் பெரிதாக்கிப் பாருங்கள். நம்மாழ்வார் சொல்வது போல் பெருமாளின் திருமேனியில் வலப்பக்கம் அரன் இருக்கிறார். அப்பர் சொன்னது போல் பெருமானின் திருமேனியில் சக்தியின் இடத்தில் அரி இருக்கிறார்.

வாயில் காப்போரும் ஒரு பக்கம் சிவ சின்னங்கள் தாங்கியும் மறு பக்கம் விட்டுணு சின்னங்கள் தாங்கியும் இருக்கிறார்கள். :-)

குமரன் (Kumaran) said...

மதுரையிலேயே கேட்டிருக்கிறார்களா மௌலி. நான் சின்ன வயதில் அவ்வளவாக கருநாடகப் பாடல்களைக் கேட்டதில்லை. கல்லூரி காலத்தில் தான் முதன்முதலில் தமிழிசைப் பாடல்கள் அறிமுகம் ஆனது.

G.Ragavan said...

ரமணீய என்பதிலிருந்து ரமணன் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நல்ல பாடல். நல்ல பதிவு.

குமரன் (Kumaran) said...

இராகவன். ரமணீய என்பதற்கும் ரமண என்பதற்கும் ராம என்பதற்கும் ஏறக்குறைய ஒரே பொருள் தான். நீங்கள் சொல்வது சரி தான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

"மா ரமணன்" என்று மஹாலஷ்மியின் மணாளனும், மாறனென அழைக்கப்படும் மன்மதனின் தந்தையும், பாற்கடல் அலைமேல் அனந்தசயனத்திலிருப்பவனுமான விஷ்ணுவையும், "உமா ரமணன்" என்று உமையவளின் அன்பிர்க்குரியவனும்,குமரனென
அழைக்கப்படும் முருகனின் தந்தையும், கைலாய மலைமேல் உரைபவனுமான சிவபெருமானையும் அழகான வார்த்தை ஜாலம் கொண்டு ஒரே பாடலில் புகழ்ந்து பாடி சிதம்பரத்திலிருக்கும் காட்சியை அழகாக மனக்கண்முன் நிறுத்தி விடுகிறார்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் தி.ரா.ச. தில்லை திருச்சித்திரகூடத்தில் இருக்கும் காட்சியை மிக அழகாக இந்தப் பாடலில் காட்டுகிறார். நீங்கள் மிக அருமையாகத் தொகுத்துக் கூறிவிட்டீர்கள்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP