Saturday, April 07, 2007

42. புல்லாய்ப் பிறவி தரவேண்டும்!

யாராச்சும் புல்லாய், பூண்டாய் பிறக்க ஆசைப்படுவார்களா?
அதுவும் மற்றவர் காலின் கீழ் மிதிபட்டு அழிய?
ஆனால், இந்த ஊத்துக்காட்டுக் கவிஞர் அப்படி ஆசைப்படுகிறார்!

இதே போல், இவருக்கு முன்னர்,
"உன் கோவிலின் வாசல், படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே",
"திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே",
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே", என்று ஒரு கவிஞர் - குலசேகராழ்வார் பாடியுள்ளார்!

இதே போல், இவருக்குப் பின்னர்
"மண்ணானாலும் திருச்செந்தூர் மண்ணாவேன், ஒரு மரமானாலும் பழமுதிர்சோலையில் மரமாவேன்", என்று இன்னொரு கவிஞரும் பாடியுள்ளார்!

இப்படி ஒரு ஆசையா இவர்களுக்கு எல்லாம்?
ஏன் இவர்கள் எல்லாம் கல், மண், மரம், புல் ஆக ஆசைப்பட வேண்டும்?




பாடலை இங்கே கேட்டு மகிழலாம்!
Sowmya
Sudha Raghunathan
Bombay Sisters

புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - கண்ணா
புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - கண்ணா
புனிதமான பல கோடிபிறவி தந்தாலும்
பிருந்தாவனம் அதில் ஒரு

(புல்லாய்)

புல்லாகிலும் நெடுநாள் நில்லாது - ஆதலினால்
கல்லாய்ப் பிறவி தரவேண்டுமே - கண்ணா
கமலமலர் இணைகள் அணைய எனதுஉள்ளம்
புளகிதம் உற்றிடும் பவம அற்றிடுமே
(புல்லாய்)
(புளகிதம்=இன்பம்; பவம்=பிறவி)

ஒருகணம் உன்பதம் படும் என்மேலே
மறுகணம் நான் உயர்வேன் மென்மேலே
திருமேனி என்மேலே
அமர்ந்திடும் ஒருகாலே


திருமகள் எனமலர் பெயர்ந்தடி உன்னைத்
தொடர்ந்த ராதைக்கு இடம் தருவேனே
திசைதிசை எங்கணும் பரவிடும் குழலிசை
மயங்கி வரும் பல கோபியருடனே


சிறந்த ரசமிகு நடம் நீயாடவும்
சுருதியொடு லயமிக கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே
எனக்கிணை யாரென மகிழ்வேனே

தவமிகு சுரரொடு முனிவரும் விய நான்
தனித்த பெரும்பேர் அடைவேனே
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும் இறைவனே
யமுனைத் துறைவனே

(புல்லாய்)



வரிகள்: ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்
ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி

19 comments :

Subbiah Veerappan said...

அருமையான பாடல் மிஸ்டர் ரவிஷங்கர். பாடலாசிரியர் ஊத்துக்காடு சுப்பைய்யர் அவர்கள் பக்திப்பாடல்களை எழுதிய சென்ற தலைமுறைக் கவிஞர்களுக்கும் மூத்தவர்

"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்ற பாடலை எழுதியவர் கவிஞர் தமிழ் நம்பி.

அவர் சுப்பைய்யரின் பாடலைக்கேட்ட்
அதே தாக்கத்துட்ன், உணர்வுடன்தான் அந்தப் பாடலை எழுதியிருப்பார் போலிருக்கிற்து

நனறி நண்பரே!

VSK said...

புல்லை விட, கல்லே மேல் என எத்தனை அழகாக விள்க்கி இருக்கிறார் பாடலாசிரியர்!

ஒரு சுகமான ரயில் வண்டிப் பயணம், அல்லது குதிரைச் சவாரிபோல் இருக்கும் இப்பாட்டு!

அருமையான பாடலுக்கு மிக்க நன்றி, திரு.ரவி!

Radha Sriram said...

எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இது ரவி. ரொம்ப நாள் முன்னாடி இத பத்தி கூட உங்கள கேட்டிருந்தேன்!!
இந்த பாட்ட பத்தி எழுதினதுக்கு ரொம்ப நன்றி!!
நான் "ராதா" இல்லையா, கண்ணன் பாட்டுனா ஓடி வந்திருவேன் :):)

வல்லிசிம்ஹன் said...

மிக அருமையான பாட்டு ரவி.

ஏனோ 'நீதான் மெச்சிக் கொள்ளவேண்டும்'
மகராஜபுரம் பாடுவது காதில் வட்டம் போடுகிறது.
இத்தனை பக்திக்குக் கண்ணன் என்ன பதில் சொன்னானோ!!

உங்கள் பதிவில் மற்றவர்கள் பின்னூட்டங்களும் உயர்வான செய்திகளைச் சொல்லுகின்றன.
சத்சங்கம் இதுதான்.

இலவசக்கொத்தனார் said...

இதுவரை கேட்டிராத பாட்டு. கேட்டுப் பார்க்கிறேன். தந்தமைக்கு நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SP.VR. சுப்பையா said...
"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்ற பாடலை எழுதியவர் கவிஞர் தமிழ் நம்பி.
அவர் சுப்பைய்யரின் பாடலைக்கேட்ட்
அதே தாக்கத்துட்ன், உணர்வுடன்தான் அந்தப் பாடலை எழுதியிருப்பார் போலிருக்கிற்து//

ஓ, தமிழ்நம்பி அவர்கள் தான் இப்பாடலை எழுதியதா? அறியத் தந்தமைக்கு நன்றி வாத்தியார் ஐயா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
ஒரு சுகமான ரயில் வண்டிப் பயணம், அல்லது குதிரைச் சவாரிபோல் இருக்கும் இப்பாட்டு!//

ஆமாம் SK ஐயா.
ஒரு சிறந்த நாட்டியப் பாடலும் கூட. ஜதிகள் நிறைய வரும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha Sriram said...
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இது ரவி. ரொம்ப நாள் முன்னாடி இத பத்தி கூட உங்கள கேட்டிருந்தேன்!!//

வாங்க ராதா. ஆம் முன்பு கண்ணன் பாட்டில் நேயர் விருப்பம் தந்தீங்க! இனி, உங்க விருப்பங்களை எல்லாம் வரிசையா இட வேண்டியது தான்!

//நான் "ராதா" இல்லையா, கண்ணன் பாட்டுனா ஓடி வந்திருவேன் :):)//

ஆகா, உங்க கண்ணன் பாட்டு ஆர்வத்துக்கு மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
ஏனோ 'நீதான் மெச்சிக் கொள்ளவேண்டும்'
மகராஜபுரம் பாடுவது காதில் வட்டம் போடுகிறது//

அடுத்த நேயர் விருப்பமா? :-)
சரி இட்டு விடலாம வல்லியம்மா!

//உங்கள் பதிவில் மற்றவர்கள் பின்னூட்டங்களும் உயர்வான செய்திகளைச் சொல்லுகின்றன.
சத்சங்கம் இதுதான்//

எல்லாம் கண்ணன் அருள்! சன்மார்க்க சத்சங்கம் என்றும் கூட சொல்வேன்!

CVR said...

பதிவுக்கு மிக்க நன்றி!!
கேட்டேன்,படித்தேன்,ரசித்தேன்!!

வாழ்த்துக்கள்!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
இதுவரை கேட்டிராத பாட்டு. கேட்டுப் பார்க்கிறேன். தந்தமைக்கு நன்றி.//

கேட்டுப் பாருங்க, கொத்ஸ்
உங்களுக்கு மிகவும் பிடிக்கும். செஞ்சுருட்டி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// CVR said...
பதிவுக்கு மிக்க நன்றி!!
கேட்டேன்,படித்தேன்,ரசித்தேன்!!//

உங்களுக்குப் பாடல் பிடித்ததில் மகிழ்ச்சியே CVR.

Anonymous said...

Good song. Fast dance movemements in this song will be nice to watch.
Nandri
-Sailesh

பாரதிய நவீன இளவரசன் said...

ரொம்ப நாட்களாகவே நான் உங்கள் பதிவுப்பக்கம் வந்து வந்து போனாலும், இதுவரை comment எதுவும் சொன்னதில்லை. ரொம்பவும் மனநிறைவான பாடல்கள்...கண்ணன் படங்கள் ... எல்லாமே copy'n paste செய்து தெரிந்த அன்பர்களுக்கெல்லாம் அனுப்பி வருகிறேன்.

தங்கள் வாழ்வில் கண்ணன் பல நன்மைகளை உண்டாக்க பிரார்த்திக்கிறேன். தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
Good song. Fast dance movemements in this song will be nice to watch//

நன்றி சைலேஷ்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// Bharateeyamodernprince said...
ரொம்பவும் மனநிறைவான பாடல்கள்...கண்ணன் படங்கள் ... எல்லாமே copy'n paste செய்து தெரிந்த அன்பர்களுக்கெல்லாம் அனுப்பி வருகிறேன்.//

நன்றி திரு.வெங்கடேஷ் வரதராஜன்.
முன்பு ஒரு முறை மாதவிப் பந்தல் என்ற அடியேனின் மற்றொரு வலைப்பூவிற்கு வந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

இப்போத்தான் இந்த பதிவினைப் பார்க்க முடிந்தது. பித்துக்குளி முருகதாஸ் பாடியதைக் கேட்டே நான் இந்த பாடலை மனனம் செய்தேன்....

நன்றி ரவி...

குமரன் (Kumaran) said...

நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று இது இரவிசங்கர்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ரவி,

நல்ல பாடல்களைத் தந்ததற்கு நன்றி.

எழுத்தாளர் தமிழ்நம்பியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் இருக்கிறதா?

ஒரு நண்பர் அவர் பற்றிய தகவல்களை விரும்புகிறார்.

சுப்பையா சார் தந்தாலும் சரி.
நன்றி..

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP